அத்தியாயம் 5

“அவங்க ஹஸ்பண்ட் ஹரிகார்த்திக் சுப்ரமணியன் ஒரு பக்கா வுமனைசராம் பாஸ். முதல் குழந்தைக்குத் தாயான பின்னாலதான் இவங்க கல்யாணமே நடந்துச்சாம்…அது மட்டுமில்ல பாஸ்” குரலை நன்றாகத் தணித்துக் கொண்டவள் “அந்தாளுக்கு எய்ட்ஸ் இருந்து அதுனாலதான் இறந்ததாகவும் ஒரு ரூமர் சுத்துது…நான் நெட்லல்லாம் போய் சர்ச் செய்து பார்த்துட்டேன்… அப்போதான் இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சுது”

கடந்த மூன்று நாட்களில் நீலாயதாட்சியின் நடவடிக்கைகள் பற்றித்தான் அலுவலகம், தொழிற்சாலை என எல்லா இடங்களிலும் ஒரே பேச்சாக இருந்தது. முறையாக அறிமுகப்படுத்தி வைக்கும் வாய்ப்பை அவனுக்குக் கொடுக்கா விட்டாலும் ப்ரதீபாவுடன் மற்ற இடங்களுக்குச் சென்று வந்ததில் நிறுவனத்தில் அவள் இடம் என்ன என்பது அனைவருக்கும் சொல்லாமலே புரிந்தது

கறாரான பெண்மணி…எதிலும் நீக்கு போக்கு கிடையாது… நறுக்குத் தெறித்தாற்போல் பேசுகிறார்…தடாலடியாக நடவடிக்கைகள் எடுக்கிறார் என அவன் போகுமிடமெல்லாம் மற்றவர் பேசுவது அவன் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருந்தது.

அத்தனை திறமையாக இருப்பவள் திருமண விஷயத்தில் ஏமாந்தது ஏன்? ஒருவேளை திருமணமான பின் எய்ட்ஸ் வந்ததா?

தானே யோசித்துக் குழப்பிக் கொண்டிருந்தவனைக் கண்ட ப்ரதீபா “என்ன பாஸ் அப்படியே நின்னுட்டீங்க?” என்று கேட்டதில் தன்னிலையடைந்து

“இல்ல தீபா திறமையான பொன்ணா இருக்காங்களே… இவங்க போய் எப்படி அப்படி ஒருத்தனை…சரி…எய்ட்ஸ்னா… அப்போ இவங்க?”

“அவர் இறந்து ஆறு வருஷம் ஆச்சு பாஸ்… இப்ப வரை இவங்க நல்லா இருக்காங்க…அதுவும் எப்பிடி… ராணி மாதிரி…அப்பா… நிக்கிற, நடக்கிற, தோரணை எல்லாம் செம பாஸ்… சான்ஸே இல்ல”

அவன் என்னத்தைக் கண்டான்…அவள் புகழ்ந்து கொண்டே போக அவன் கடுப்பானான்.

“போதும் நிப்பாட்டு… உங்க மேடம் புராணத்தை”

“உங்க மேடமா…பாஸ்…என்ன பொறாமையா?”

“நான் பொறாமைப்படுற அளவுக்குப் பெரிய ஆளால்லாம் தோனல… ஆனாலும் லைட்டா…”

“லைட்டா…”

“பொறாமையாதான் இருக்கு…இவ்வளவு நாள் எங்கிட்ட இருந்த ஒரே கேர்ல் ஃப்ரெண்டை இப்படி வந்ததும் அவங்க பக்கம் இழுத்துகிட்டாங்களேன்னு…”

கலகலவென நகைத்தவள் “அவங்களைப் பத்தி விஷயங்களைப் பீராயத்தான் பாஸ் அங்கயே சுத்திகிட்டு இருந்தேன். மத்தபடி நான் உங்க ஃப்ரெண்ட்தான்”

“நீ பீராய்வியோ இல்ல ரம்மாய்வியோ… நாளை காலைல இருந்து இங்க வந்துடு”

“எஸ் பாஸ்…அட் யுவர் சர்வீஸ் பாஸ்”

மேஜை ஓரத்தில் ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றியபடி அவன் அமர்ந்திருக்க, மேஜைக்கு முன்னிருந்த நாற்காலியில் ப்ரதீபா அமர்ந்திருக்க, அமர்ந்திருந்த நிலையிலேயே இடைவரை குனிந்து ஒற்றைக் கையை மடித்து நெஞ்சில் வைத்து மற்றொரு கையைப் பக்கவாட்டில் நீட்டிச் சொல்ல, அவள் தலையில் செல்லமாக அவன் தட்ட, அந்த நேரம் கதவைத் தட்டி விட்டு தட்சணா உள்ளே நுழைந்தாள்.

“வாங்க தட்சணா! உக்காருங்க! என்ன விஷயம்?”

அவனை ஆச்சர்யமாக அவள் பார்க்க “என்னாச்சு?” என்றானவன்.

“நீங்களும் எங்க மேடம் போலவே செகரட்டரியை மரியாதையா நடத்துறீங்க!” 

மென்மையாய்ச் சிரித்தவன் “சொல்லுங்க! என்ன விஷயம்?” என்றான்.

“மேடம் இந்த ரெண்டு டாக்குமெண்டையும் உங்ககிட்டக் காட்டி சரி பார்த்து வாங்கிட்டு வரச் சொன்னாங்க”

கையை நீட்டி தட்சிணா கொடுத்தவற்றை வாங்கி கொண்டே எழுந்து சென்று தன்னிருக்கையில் அமர்ந்தான். இடது கையை ப்ரதீபாவின் பக்கத்து இருக்கை நோக்கிக் காட்ட தட்சணா வந்து அங்கு அமர்ந்தாள்.  

சில நிமிடங்கள் அவள் கொடுத்த பத்திரங்களைப் படித்து பார்த்தவன் தன் மேஜையின் பேனாக்கள் வைக்கும் ஸ்டாண்டில் இருந்த பென்சிலை எடுத்து மெல்லியதாக அங்கங்கே திருத்தங்கள் செய்தான்.

பின் அவற்றை தட்சணாவிடம் நீட்டி விட்டு “சில இடங்கள் இன்னும் பெட்டரா இருக்கும்னு தோனினதை மாற்றி இருக்கேன். உங்க மேடத்தை ஓகேவான்னு செக் பண்ணிக்கச் சொல்லுங்க”

“ஓகே சார்!”

அவள் வெளியேறவும் “அப்போ நீலாவுக்கோ இல்ல அவங்க குழந்தைகளுக்கோ எதுவும் பிரச்சனை இருக்காதுன்னு சொல்றியா தீபா?” என்று தங்கள் முன்னர் பேசிக் கொண்டிருந்த பேச்சைத் தொடர்ந்தான்

“அப்படித்தான் தோணுது பாஸ். அவங்க பிள்ளைகள் இங்க ஏதோ ஸ்கூல்ல சேர்க்கறது பத்தி யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருந்தாங்க. எதுவும் பிராப்ளம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியல”

“சில நேரம் ஜெர்மனில இருந்து கால் வரும் பாஸ். யாரோ வின்னின்னு பேசுவாரு… அவர்கிட்ட நல்லா சிரிச்சுப் பேசினாங்க. நான் இருந்த நேரமே நாலைஞ்சு தடவை கால் வந்துட்டுது… அவங்க பிரென்ட் போல”

அவன் முகம் யோசனையுடன் சுருங்கியது

“ஆக ஆண் நண்பர்கள் உண்டுன்னு சொல்றே! பின்ன ஆண்களையே பிடிக்காதுன்னு சொன்னே?”

“தெரியல பாஸ்…முதல்ல இந்த வின்னி ஆணா பெண்ணான்னு தெரியலை…ஏன்னா அவர் குரலை நான் கேட்டது இல்ல…பேரை வச்சு ஆணா இருக்கலாம்னு ஒரு கெஸ்தான்…அடுத்து இந்த வின்னி தவிர வேற யார் கூடயும் அப்பிடி சிரிச்சுப் பேசி நான் கேட்கலை. ஜெர்மன்ல பேசிகிட்டனால என்ன பேசினாங்கன்னு புரியல பாஸ்”

“சரி! மத்தவங்க விஷயத்தை விடு. நம்ம விஷயத்துக்கு வா! இன்னிக்கு வெட்னஸ்டேதானே… டிநகர்தானே விசிட்க்கு”

“யெஸ் பாஸ்”

அவன் மதன் டெக்ஸ்டைல்சில் வேலைக்கு சேரும் போது சென்ட்ரலில் அலுவலகமும், சிறிய அளவிலான தொழிற்சாலையும், பொன்னேரியில் பெரிய தொழிற்சாலையும் மற்றும் குடோனும் மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் இப்போதோ நகரின் முக்கியமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அவர்களின் ஆயத்த ஆடைகளுக்கான கடைகள் இருந்தன. இந்த யோசனையைக் கொடுத்து அதைச் செயல்படுத்தி வெற்றிகரமாக நடக்க வைத்தது விக்னேஷ்தான். 

முன்னர் மொத்தமாகத் துணிகள் தயார் செய்து அதைப் பிற கடைகளுக்கு விநியோகம் செய்வதும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் மட்டுமே நடந்து வந்த நிலையில் ‘அதே துணிகளைப் பயன்படுத்தி ஆயத்த ஆடைகள் தயார் செய்து நாமே கடைகளில் விற்கலாமே’ என்று அவன் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட மதனகோபால் பொன்னேரியிலேயே ஒரு பகுதியை ஒதுக்கி கட்டிடம் எழுப்பச் செய்து ஆடை வடிவமைப்பாளர்களையும் தையல் கலை வல்லுநர்களையம் வேலைக்கமர்த்தி ஆடைகள் தயார் செய்ய ஏற்பாடு செய்தார்.

முதலில் பிற கடைகளுக்கு விநியோகம் செய்து அவர்களது மதன் ரெடிமேட் தயாரிப்புக்களுக்கு நல்ல சந்தை விலை கிடைக்க ஆரம்பித்ததும் கடைகளை வாடகைக்கு எடுத்து விற்பனையைப் பெருக்க ஆரம்பித்தனர். இன்று வரை கடைகள் லாபத்துடன்தான் இயங்கி வருகின்றன

அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் உள்ள கடைகளுக்குச் சென்று அங்கு கணக்கு வழக்குகள் பார்த்து,  பிரச்சினைகளை கேட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தான் விக்னேஷ்.

திடுமென, இந்த மாதிரிக் கடைகளை எல்லாம் நீலாயதாட்சி வந்து பார்ப்பது குறித்து இன்னும் எதுவும் பேசவில்லையே என நினைத்தவன் ‘எப்படியும் அதற்கும் தனியாகத்தான் போக போகிறாள் நமக்கேன் வம்பு’ என நினைத்துத் தோளை குலுக்கி விட்டுக் கிளம்ப ஆயத்தமானான்.

அங்கே நீலாயதாட்சியின் அறைக்குள் நுழைந்த தட்சணாவின் முகத்தில் இருந்த மென்புன்னகையைப் பார்த்த நீலா தானும் புன்னகைத்தவாறே “என்ன தட்சணா வரும் போதே ஸ்மைலோட வர்றே?”

“இல்ல மேம்…நான் சார் ரூமுக்குப் போனப்போ…” என ஆரம்பித்து ப்ரதீபா குனிந்து இருந்ததையும் புன்னகையோடு செல்லமாக விக்னேஷ் அவள் தலையில் தட்டியதையும் அதன் பின் நடந்த விஷயங்களையும் விவரிக்க நீலாவின் முகம் மாறியது.

“ஓ! ரெண்டு பேரும் ஃப்ரென்ட்சோ?”

“அப்படித்தான் தெரியுது மேம்…பாஸ் செக்ரெட்டரிங்கிறதைத் தாண்டி அவங்க ரெண்டு பேருக்குள்ள ஹெல்தி ரிலேஷன்ஷிப் இருக்கு”

தட்சணாவை நீலாயதாட்சிக்கு நன்றாகத் தெரியும்…தேவை இல்லாமல் புறணி பேச மாட்டாள்…யாரையும் அவதூறு பேச மாட்டாள்…யாருடைய சொந்த விவகாரங்களிலும் மூக்கை நுழைக்க மாட்டாள்.தேவையான விஷயங்களைத் தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் பேசுவதில் கெட்டிக்காரி…மிகச் சில நேரங்களில் மட்டுமே இவ்வாறு இலகுவாகப் பேசுவாள்.

நீலாவின் பார்வையில் வேறுபாட்டை உணர்ந்தவள் “என்னாச்சு மேம்?” எனவும் “இல்ல நீ வழக்கமா இப்பிடிலாம் பேச மாட்டியேன்னு யோசிச்சேன்”

“இல்ல மேம்…அவங்க ரெண்டு பேர் ஃப்ரெண்ட்ஷிப் பார்க்க அத்தனை அழகா இருந்தது…அதான் சொல்லணும்னு தோனுச்சு”

“ஓ…ஓகே நீ போய் மத்த வேலையைப் பாரு”

புருவங்கள் நெரித்திருக்க யோசனையில் ஆழ்ந்தவள் விக்னேஷ் அதன்பின் அவளை வந்து பார்க்க முயற்சி எதுவும் செய்யாதது மனதில் பட்டது.

அன்று அவர்களுக்குள் நடந்த அலைபேசிப் பேச்சுக்குப் பின் விக்னேஷாக அவளைப் பார்க்க முயற்சி செய்யவில்லை. அப்போது வரை உறுத்தாத அந்த விஷயம் இப்போது ஏனோ உறுத்தியது அவளுக்கு…

எத்தனை நாட்கள் நிறுவனப் பங்குதாரனாக இருப்பவனை ஒதுக்கி வைக்க முடியும் அவளால்… சீக்கிரம் அவனை ஒருமுறை அறைக்கு நேரில் அழைத்துப் பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

அவள் முடிவு அப்படி இருக்க விக்னேஷுக்கோ அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் குறைய ஆரம்பித்திருந்தது. எட்டாத பழம் என்று மனது முடிவு செய்ததா… அல்லது தன்மானத்துக்கு இழுக்கில்லாமல் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற எண்ணமா… அவன் அதை ஆராய முயற்சிக்கவில்லை.

அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட உணர்வை இனம் பிரிக்கத் தெரியாமல் தடுமாறியவனுக்கு அவளது அலட்சியம் உதவி செய்ய, இன்டெர்காமிலோ அலைபேசியிலோ உரையாடியும் சில விஷயங்களை ப்ரதீபாவின் வாயிலாகச் செய்தும் முடித்துக் கொண்டான். மற்றபடி அவளைத் தானாகச் சென்று பார்க்க அவன் முயற்சிக்கவில்லை. குறிப்பாக அவன் தன்மானம் அதற்கு இடம் தரவில்லை.

அன்றுடன் நீலாயதாட்சி அந்த அலுவலகம் வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.

அன்று மாலை தன் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தவன் அவளும் வாசலின் அருகே நிற்பது கண்டு தயங்கி நின்றான்.

அவள் பிள்ளைகளைச் சேத்துப்பட்டில் உள்ள ஒரு பெயர் பெற்ற பள்ளியில் சேர்த்திருப்பதாகவும் அவர்கள் பின்மதிய வேளையில் பள்ளியில் இருந்து திரும்புவதால் எப்போதும் மூன்று மணிக்கு அலுவலகத்தில் இருந்து அவள் கிளம்புவதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பதாகவும் ப்ரதீபா அவனுக்குத் தெரியப்படுத்தியிருந்தாள்.

ஆனால் நாலரை மணிக்கு அவள் வாசலில் நிற்கவும் அவனுக்கு என்னவோ ஏதோ என்று தோன்றியது.

ஏதாவது ப்ரச்சனையா என்று தெரியவில்லை…அருகே சென்று கேட்பதை அவள் விரும்புவாளா…மற்ற ஆண்களைப் போல் அவன் வாய்ப்புக் கிடைத்ததும் மேலே வந்து விழுகிறான் என்று நினைத்து விட்டால் என அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் அவனிருக்கும் திசை நோக்கித் திரும்பி விட்டாள்…

நல்ல ரத்தச்சிவப்பு நிறத்தில் காலர் வைத்த சட்டையும் ஆஃப்வைட் நிறத்தில் ஓவர் கோட்டும் சட்டையின் அதே ரத்த நிறத்தில் ஸ்கர்ட்டும் அதிலிருந்து கீழே காலணி வரை நீளும் கருப்பு ஸ்டாக்கிங்க்ஸும் அணிந்திருந்தவள் கண்களில் வழமையாக அணிந்திருக்கும் அந்த நீல டின்ட் கொண்ட கண்ணாடியினூடாக அவனையும் பார்த்து விட்டாள்.

அவள் பார்த்து விட்டதைக் கண்டு கொண்டவன் ‘பெரிய கவச குண்டலம் மாதிரி எப்பப் பாரு இது ஒன்னை மாட்டிகிட்டு’ என மனதுள் அவளை வசை பாடி விட்டு முயன்று புன்னகையை வரவழைத்துக் கொண்டு “ஹலோ மிஸஸ் நீலா!” என்றபடி அவளருகே சென்றான்.

“என்ன இன்னிக்கு லேட்டாக் கிளம்புறீங்க போல… வழக்கமா த்ரீக்கெல்லாம் கிளம்பிருவீங்கன்னு தீபா சொல்வாளே…எனி ப்ராப்ளம்?”

அவளருகே செல்லச் செல்ல அடிவயிற்றில் ஏற்படும் குறுகுறுப்பை மறைத்த வண்ணம் சாதாரணம் போல் அவன் வினவ அவளும் பெரிதாக எதையும் காட்டிக் கொள்ளாமல் இத்தனை நாட்கள் ஏதோ தினமும் காரிடரில் சந்தித்து ‘ஹலோ’ ‘ஹாய்’ சொல்லிக் கொள்பவர்கள் போல் இயல்பாகவே பேசலானாள்.

“எஸ் மிஸ்டர் விக்னேஷ்! என் கார் ட்ரைவர் கமலி இன்னிக்கு திடீர்னு ஏதோ டெத் ந்யூஸ் வந்தனால லீவ் கேட்டுக் கிளம்பிட்டாங்க. நான் வேலையா இருந்தாலும் அவங்கதான் த்ரீ ஆனதும் ரிமைண்ட் செய்வாங்க… இன்னிக்கு அவங்களும் இல்லாம நானும் நேரத்தை கவனிக்காம இவ்வளவு நேரம் ஆகிடுச்சு”

“தட்சணா கூட இல்லையா?”

“தட்சணாவுக்கு ஒரு வர்க் கொடுத்திருந்தேன்…அவ நான் கிளம்பிட்டேன்னு நினைச்சு வேலை செய்துட்டே இருந்திருக்கா”

“ஓகே! இப்ப என்ன செய்யப் போறீங்க?”

“நானே ட்ரைவ் பண்ணிட்டுப் போய்டலாம்னு இருக்கேன்”

“நோ! நோ! டோன்ட் டேக் ரிஸ்க்”

அவள் உடல்மொழி சட்டென மாறியது. சாதாரணமாக நின்றிருந்தவள் கொஞ்சம் விறைப்பாக…

“ஏன் லேடீஸ் ட்ரைவ் செய்தா ரிஸ்கா?”

“சேச்சே! யூ ஆர் மிஸ்டேக்கன்…உங்க ஊர் ட்ரைவிங்குக்கும் இங்க ட்ரைவிங்குக்கும் நிறைய டிஃபெரென்ஸ் உண்டு… திடீர்னு இங்க உள்ள ட்ராஃபிக் உங்களுக்கு செட் ஆகாதுன்றனால சொன்னேன்…இந்த இடத்துல ஒரு ஆண் இருந்தாலும் நான் இதேதான் சொல்லி இருப்பேன்”

“ஓ” என்று தளர்ந்தவள் “இட்ஸ் ஓகே…என்னிக்கு இருந்தாலும் நானே ஓட்டணும்னுதான் நினைச்சுருக்கேன்… வை நாட் டுடே…லெட் மீ கிவ் இட் அ ட்ரை (ஏன் இன்னிக்கே பண்ணக் கூடாது…முயற்சி செய்து பார்க்கிறேனே)”

அவனுக்கு அவளை அப்படி அனுப்ப மனமில்லை.

“ஒன்னு செய்யலாம்…ஆக்சுவலி என் கார் சர்வீஸ்கு விட்டுருக்கேன். சோ நான் கேப்தான் புக் பண்ணணும். உங்களை உங்க வீட்ல ட்ராப் பண்ணிட்டு நான் அங்கே இருந்து கேப் எடுத்துக்கிறேன்.

சட்டென மறுபடி விறைப்பானவள் “அவசியமில்ல…நீங்க கிளம்புங்க…நான் பார்த்துக்கிறேன்”

அவனுக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது. அவள் ஏதோ உலக அழகி போலவும் அவன் ஏதோ டீனேஜ் பையன் போலவும் அவள் அவனைக் கத்தரித்த விதம் கண்டு கடுப்பானது அவனுக்கு…

எதுவும் பேசாமல் தன் அலைபேசியை எடுத்து வாடகை வண்டிக்குச் சொல்வதற்குத் தயாரானான்.

அலைபேசியைக் காதுக்குக் கொடுத்துக் கொண்டே கொஞ்சம் தள்ளி நிறுத்தியிருந்த வண்டியை நோக்கி அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏனோ மனது கேட்கவில்லை.

அலைபேசியை அணைத்துப் பாக்கெட்டில் போட்டவன் “மிஸஸ் நீலா! ஒன் மினிட்” என்றபடி அவளை நோக்கி நடந்தான்.

அதற்குள் தன் வண்டியின் அருகே சென்றிருந்தவள் நின்று திரும்பிப் பார்த்தாள்.

“நீங்களே ட்ரைவ் பண்ணுங்க…நீங்க ஷெனாய் நகர்தானே போகணும்… என்னை வழியில சேட்பட்ல ட்ராப் பண்ணிருங்க”

அவள் எப்படி வண்டி ஓட்டுகிறாள் என்று பார்த்து அதற்கு மேல் முடிவை எடுக்கலாம் என்று யோசித்தவன் அவளுக்கு உதவியாக வருவது போல் சொல்லாமல் தனக்கு உதவி வேண்டுமெனக் கேட்க இப்போது அவளால் மறுக்க முடியவில்லை.

வேறு வழியில்லாமல் “கெட் இன்” என்று விட்டு அவளும் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தாள்.

வண்டியைச் சுற்றிக் கொண்டு சென்று அவனும் பக்கத்து இருக்கையில் அமர அவர்களே அறியாமல் அவர்கள் வாழ்க்கையைத் திருப்பிப் போடப் போகும் அந்தப் பயணம் தொடங்கியது.

மொழி தெரியா பாடலிலும்
அா்த்தங்கள் இன்று புரிகிறதே
வழி துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே

என் நெஞ்சோடு வீசும்
இந்த பெண்ணோட பாசம்
இவள் கண்ணோடு பூக்கும்
பல விண்மீன்கள் பேசும்

 என் காதல் சொல்ல
ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே
இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்