Advertisement
காதல் வைபோகமே…….
சண்முகபிரியா
அத்தியாயம் 1
சென்னை அண்ணா நகரில் இருந்த அந்த வீடு ரணகளமாகிக் கொண்டிருந்தது. அங்கு நம் கதாநாயகி இனியா , தன்னிடம் இருக்கும் உடைகள் அனைத்தையும் கட்டில் மேல் கடை பரப்பிருந்தாள்.
கவிதா உள்ளே எட்டி பார்த்து விட்டு ஏதும் சொல்லாமல் நகர்ந்தாள்.
அம்மாவை மறித்து ,” பொண்ணு முதன்முதலில் பெரிய சேனலுக்கு வேலைக்கு போகிறாளே , கூட இருந்து அவளுக்கு டிரஸ் தேர்ந்தெடுத்து கொடுத்து , அழகாக ரெடியாக உதவுவோமே என இல்லாமல், எனக்கென்ன கண்டுக்காமல் போறியேம்மா…” என வம்பு வளர்த்தாள் .
அதை கேட்டுவிட்டு , அப்போது அங்கே வந்த கார்த்திகேயன் , “கவி உதவி செய்டா , குட்டிம்மா டென்ஷனாக இருக்கா பார்”
கவி பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன் , அவள் செல்லத் தங்கை காவியா (தற்போது பொறியியல் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள் ),
“ சம்மன் இல்லாமல் ஆஜராகதீர்கள் அப்பா” என்றாள்
கார்த்திகேயன் ,அதை கவனிக்காமல் , “ஏன்டா, அக்கா டென்ஷன் இருக்கிறாள் பார் “ என்றார்
“நீங்கள் இப்போதுதான் பாங்க ஆடிட்டிங் என பெங்களூர் போய் விட்டு வந்திருக்கிறீர்கள் அப்பா, ஒரு வாரமா இந்த கூத்து தான் நடக்குது”
கார்த்திகேயன் , டெபாசிட் இழந்த மந்திரி போல் பார்க்க, உஷாரான இனியா , ஒரு கெஞ்சும் பார்வையை வீசினாள்
“இல்லைடா , என்ன இருந்தாலும் முதல் அனுபவம் , முதல் நாள் இல்லையாடா ? “ எனச் சப்போர்ட் செய்ய,
ம்ம்ம் , சரி என்றாள்” காவியா.
புளூ கலரில் ஆடி தள்ளுபடியில் எடுத்தாயே அந்த சுடிதார் போடு , நன்றாக இருக்கும் .”
“சுடியெல்லாம் போட்டால் கொஞ்சம் பெரிய மனுசி போல் தெரியாதா?,” என இனியா இழுக்க ,
“எப்படியும் நான் சொல்லுவதைக் கேட்கப் போவது இல்லை, அப்பறம் எதுக்கு?” என ஜம்ப கட்ஸ் ஸ்டைலில் செய்தாள்
“ கருப்பு ஜீன்னும் , மஞ்சள் குர்த்தியும் , போடுடா , உனக்கு நல்ல சூட் ஆகும்” என்றார் .
அப்பா , “அது ரொம்ப சிம்பிளாக இருக்கும்” எனச் சிணுங்கினாள்.
இவை, அனைத்தையும் கதவில் சாய்ந்தபடி , நமட்டுச் சிரிப்போடு , பார்த்து விட்டு கவிதா நகர,
அம்மா….. , என இனியா இழுக்க ,
“ஏன், நானும் மொக்கை வாங்கவா , போடி … நான் பேராசிரியராக்கும்” எனக் கெத்து காட்டினார். “ஒழுங்காக இருபது நிமிடத்தில் ரெடியாகி வா , நான் கல்லூரி செல்ல வேண்டும்” என அறிவுறுத்திவிட்டு சென்றார்
அப்பா…. , என்று இனியா பார்க்க ,
அவரும் தலைக்குமேலே பெரிய கும்பிடு போட்டு , “கவி..….. “ என்றவாறே கீழே சென்றார்
“வருங்கால பிரபல வீஜேக்கு , இந்த வீட்டில் மரியாதை இல்லை , ஒரு நாள் நீங்க எல்லோரும் , இந்த வி.ஐ.பி. கிட்ட பேச காத்திருப்பீர்கள்” என அண்ணாமலை ஸ்டைலில் தொடையில் தட்டி வசனம் பேச ,
தலையில் அடித்தவாறு , “சிக்கிரம் வா லேட்டாகுது” என்றாள் காவியா.
பின் ஒருவாறு முடிவு செய்து , ப்ளாக் லாங் ஸகர்ட்டும், சின்ன வேலைப்பாடுகள் உடைய மெரூன் டாப் அணிந்து, அதற்கேற்றவாறு ப்ளாக் மெட்டலில் ஜிமிக்கி, அதற்கு இணையாக கழுத்துக்கு , கைக்கு அணிந்து கொண்டாள். தன் நீண்ட முடியை சின்ன கிளிப்புக்குள் அடக்க முயற்சித்து, அது அவளைப் போல் அடங்காமல் பறக்க , அதை ஒதுக்கி , கண்ணில் மைதீட்டி , நெற்றியில் சின்ன பொட்டிட்டு , லேசான உதட்டுச் சாயத்துடன் தயாரானாள்.
இனியா அசரடிக்கும் அழகியில்லை , ஆனால் கடந்து செல்பவர்களைத் திரும்பிப் பார்க்கும் வைக்கும் வகையில் , குறுகுறுகண்களோடு, துறுதுறுவென, சிரித்தால் கன்னத்தில் குழி விழ , உதட்டோரத்தில் எப்போதும் ஒரு சிரிப்போடு இருப்பாள்.
இனியாவிற்கு , சிறு வயதிலேயே மீடியாவில் திரைக்கு முன்னால் வேலை செய்ய வேண்டும் என்பது கனவு . (புகழ்பெற்ற வீஜேவாக ஆசை) .
பிரபலங்களை , பெரிய தலைவர்களைச் சந்திக்க வேண்டும் , பேட்டி காண வேண்டும் என்பது லட்சியம். (லட்சியம் , கனவு என்ற வார்த்தைகளைப் பார்த்து விட்டு , நம்மாளை சின்சியர் சிகாமணி என்று நினைத்து விடாதீர்கள்!! சரியான அறுந்த வாலு )
அக்கா தங்கைக்குள் அடிதடி நடக்கும் பொழுது, ஆண்பாவம் படத்தில் வருவது போல் இவள் உயிர் அவள் கையில் , அவள் உயிர் இவள் கையில தான்.
“ஆண் பிள்ளைகள் கூட இப்படி சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள் “என்று தலையில் அடித்துக் கொண்டு கவிதா பிரித்து விடும் நிகழ்வை அடிக்கடி காணலாம்.
இனியா பன்னிரெண்டு முடித்தவுடன் , விஸ்காம் படிக்க வேண்டுமென அடம்பிடிக்க , கவிதா பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்பாவிடம் சிபாரிசுக்குப் போக , கார்த்திகேயன் பஞ்சாயத்து தலைவராகி , “ஆசிரியராக இருந்து கொண்டு நீயே குழந்தைகளின் கனவை ஒடுக்கலாமா ?. அவள் இஷ்டத்துக்கு விடு நன்றாக வருவாள்” எனச் சொம்பில்லாமல் தீர்ப்பு அளித்தார்.
பின் ஒரு வழியாக அம்மாவிடம் கெஞ்சிக், கொஞ்சி முழு சம்மதத்தைப் பெற முயல ,
கவிதாவும் அந்த வேலையில் இருக்கும் ப்ளஸ்/ மைனஸ்களைப் பேசி , அத் தொழிலால் ஏற்படும் மன அழுத்தம் , சமூக அழுத்தத்தை விளக்கி ,
அதற்கு மேலும் இனியா தன் முடிவில் உறுதியாகவும் , தெளிவாகவும் இருக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட பின் சம்மதித்தார்.
சென்னையில் பிரபல கல்லூரியில் , அவள் மதிப்பெண்ணுக்கு இடம் கிடைத்தது.
இனியா இயல்பிலே, படபட பட்டாசு தான். அதனால் கல்லூரியில் அவளைச் சுற்றி ஆட்கள் இருப்பதோடு , அவள் இருக்கும் இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். கல்லூரி வாழ்க்கையை, தன் வீஜே கனவுக்கும் , அடித்தளமாக்கிக் கொண்டாள்.
பெரும்பாலான கல்லூரி நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளினியாக இருந்தாள். இறுதியாண்டில் ஒரு பிரபல யு – டுயுப் சேனலில் தன்னை இணைத்துக் கொண்டாள்
அங்கு அவள் செய்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது , அதைப் பார்த்துத் தான் பிரபல சேனல்”சி“ யில் வேலைக்கு அழைத்திருந்தார்கள்.
அந்த வேலைக்குத் தான் . மிகுந்த நம்பிக்கையோடு, ஆர்வத்தோடு கிளம்பிக் கொண்டிருக்கிறாள் .
ரெடி ஆகி , சாப்பிட வந்தாள் , “ ஓகேயா? “என வினவ,
“டபுள் ஓகே அக்கா” என்றாள் காவியா
“சரி சரி , சாமி கும்பிட்டு விட்டு , சாப்பிட வா” என்றார் கவிதா
பின் சாப்பிட்ட படி , “இன்று ஆக்டீவாவில் போக வேண்டாம் , கேப்பில் போ , அப்ப தான் ஃபரஷ் ஆக இருக்கும்” .
சரிம்மா என்றவள் , அனைவரின வாழ்த்தைப் பெற்றாள் பிறகு , நுங்கம்பாக்கம் நோக்கிப் புயல் புறப்பட்டது.
காதல் வைபோகமே…….
சண்முகபிரியா
அத்தியாயம் 2
அந்த பிரபல சேனலில் , இரண்டாவது தளம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
வரவேற்பாளரிடம் அழைப்பைக் காண்பிக்க , வரவேற்பாளரும் புன்னகையோடு,” இடது பக்கம் திரும்பிச் சென்றால் , சுரேஷ் (HR) பெயர் பலகை இருக்கும் ,அவரைச் சந்தியுங்கள்” என்றாள்.
இனியாவும் ஒரு சிநேகப் புன்னகையோடு , நன்றி நவிழ்ந்து விட்டு நடந்தாள்
கதவைத் தட்டிக் காத்திருக்க , “எஸ் …கமின்” எனக் குரல் கேட்டு உள்ளே சென்றாள். நாற்பது வயது மதிக்கதக்கவர் அமர்ந்திருந்தார்.
“இனியா..” என அறிமுகப்படுத்திக் கொண்டு கடிதத்தைத் தந்தாள்.
கடிதத்தைப் பெற்று கொண்டு , “உட்காரு இனியா…” என்றார் . அதன் பின் அங்கு சிலபல சம்பிரதாயங்களை முடித்துவிட்டு , “வாழ்த்துக்கள்…” எனக் கை கொடுத்தார் .
பின் உதவியாளரை அழைத்து , ”சாருமதி மேடத்திடம் கூட்டிச் செல்லுங்கள்” என்றார்.
உதவியாளருடன் நடக்க , “ஹாய் அண்ணா , நான் இனியா…” என்றாள் ,
ஒரு ஆச்சிரியப் பார்வையுடன் , “நான் ராஜேஷ்…” என்றார்.
“இங்கே வீஜேயாக , ஜாயின் பண்றேன்….” என அறிமுகப்படுத்திக் கொண்டாள் .
“ஓ…!” முகமெல்லாம் புன்னகையாக, “வாழ்த்துகள்….” என்றார். அந்த அலுவலகத்தில் தன் முதல் ரசிகரைப் பிடித்து விட்டாள்.
இனியா பேசியபடி நடக்க , மூன்றாவது தளம் வர , அறையை காட்டி விட்டு , அவர் நகர ,
“நன்றி அண்ணா , அப்புறம் பார்க்கலாம்…” எனக் கை அசைத்தாள்.
“புரோகிராம் ஹெட் “ என்று எழுதியிருக்க , கதவைத் தட்டி உள்ளே சென்றாள்.
கண்டிப்பான தலைமை ஆசிரியராக சாருமதி அமர்ந்திருந்தார். மீண்டும் அறிமுகப்படலம் ,
“ உன் புரோகிராம் பார்த்தேன் , நன்றாகச் செய்கிறாய்…” , எனப் பாராட்டினார்.
“நன்றி மேடம் “எனச் சிரித்தாள் .
“அப்புறம் ஒரு குழந்தைகள் புரோகிராம் புதுசா லான்ச் பண்றோம் . வீஜே புதுமுகமாக இருந்தால் , நன்றாக இருக்கும் எனத் தோன்றியது , அதனால் உன்னைத தேர்வு செய்துள்ளோம் . என் தேர்வை சரியென்று நீ நிரூபிக்க வேண்டும், புரிகிறதா?”
“கட்டாயமாக , நான் நன்றாகச் செய்வேன் மேம்“
அப்போது கதவைத் தட்டிக் கொண்டு , அர்ஜுன் உள்ளே வர , மீண்டும் அறிமுகப்படலம் . “(இப்பவே கண்ணைக்கட்டுதே.., முடியலை!!” என மைண்டு வாய்ஸ் ஓட!…) , ஆனால் வெளியே அக்மார்க் புன்னகையோடு இருந்தாள்
“இவர் தான் உன் நிகழ்ச்சி இயக்குனர்” என சாருமதி கூற , உடனே பவ்யமான மோடுக்கு மாறினாள்
அவள் முகமாற்றங்களை வைத்து , அனைத்தையும் அர்ஜுன் கண்டு கொண்டான். பின் சிரித்தபடி கை குலுக்கினான் .
“ அர்ஜுன் டேக் கேர் அஃப் ஹெர்” என்றார் சாருமதி
“ஓகே, மாம்.. . “
பின் இருவரும் வெளியேர , அர்ஜுன் சிரித்தபடி ‘முடியலை.. என நினைச்ச இல்ல” என்றான்.
இனியா ஆவென பார்க்க , “உன் மைண்டு வாய்ஸை காட்ச் பண்ணிட்டேனா?” எனச் சிரிக்க ,
இனியா அசடு வழிய , “உன் முகம் பயங்கர எக்பிரஸூவ் ஜாக்கிரதையா இரு , உன்னை தேர்ந்தெடுக்க காரணமும் அதான்” என்று பேசியபடி , அவர்கள் டிஸ்கஸன் ரூமை அடைந்தார்கள்.
“இது இனியா நம்ம புரோகிராமோட புது வீஜே… “, என அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான்,
அதைத் தொடர்ந்து , “ஹாய் , நான் அனு , இணைஇயக்குனர்..” எனக் கட்டிப்பிடிக்க , காமிராமேன் வசந்த் கை கொடுக்க… என அங்கு புதிய நட்பு மலர்ந்தது.
இவ்வாறு அவள் முதல் நாள் இனிமையாக முடிந்தது.
அத்தியாயம். 3
அடுத்தடுத்த நாட்களில் , அவளுக்கு டீமோடு நல்ல தோழமை ஏற்பட்டது. புதிய நிகழ்ச்சி என்பதால் நிறைய சுதந்திரமும் , நேரமும் இருந்தது.
அவளை “கொஞ்ச நாள் எல்லாவற்றையும் கவனி “,என்று அர்ஜுன் கூற , ஆக மொத்தம் வெட்டி ஆபிஸர் வேலைதான்.
இப்போது மெல்ல மெல்ல மற்ற டீம்களோடும் நட்பு பாராட்டிக் கொண்டிருந்தாள். இனியாவின் குறும்புத்தனமும் , பேச்சும் அனைவரையும் கவர்ந்தது.
வெள்ளி காலை இனியாவின் டீம் , பயங்கர பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
“என்ன?” என்று விசாரிக்க , கிரியேடிவ் ஹெட் வரப்போவது புரிந்தது.
அர்ஜுனுடன் பேச முயல, “இனியா , ஷ்ஷ் … பேசாம உட்கார் . உன்னுடைய சந்தேகங்களுக்கு , பின்னாடி பொழிப்புரை தருகிறேன் …”
என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவள், பின்பு ஐந்தாவது தளத்தில் நடக்கும் ஸ்டார் சிங்கர் படப்பிடிப்பிற்கு செல்ல நினைத்து , லிஃப்ட் பயன்படுத்தாமல், படிகளில் ஏறினாள்.
எங்கோ படித்த , “க்ராஸ் ஆக நடந்தால் ,ஏறுவது சுலபம்….” என்று மிகவும்( !!!)புத்திசாலித்தனமான யோசனையைப் பின்பற்றி ஏறினாள்.
நான்காவது தளத்தின் படியில் , நீண்ட கால்கள், இவள் படியில் இந்தப் பக்கம் சென்றால் இந்த பக்கம், அந்த பக்கம் போனால் அதே பக்கம் வந்தது.
அவள் மாறினாள் , என்றால் அந்த கால்களும் மாறின.
“யார்டா ? விளையாடுவது” என்று நிமிர்ந்து பார்க்க,
சுட்டெரிக்கும் பார்வையோடு நின்றிருந்தான் ஒரு நெடியவன் .
இனியா . “யாருடா இவன்?” என்று யோசிக்க ,ஒரு கோபப் பார்வையோடு , அவளைக் கடந்தான் .
“ஜெம் GEM (ginger eating monkey) “என்று மனதில் திட்டியவாறே , ஸ்டார் சிங்கர் செட்டிற்குச் சென்றாள்.
புயலடித்து ஓய்ந்த சென்னை மாதிரி இருந்தது தளம். என்னவென்று வினவ… , கிரியேடிவ் ஹெட் கைங்கர்யம் என்று புரிந்தது.
மேலும் கேள்விக்கணையைத் தொடுக்க வாயைத் திறக்க, அவள் கைபேசி மணி அடித்தது , “உடனே வா… “ என்றாள் அனு.
அங்கிருந்தவர்களுக்குக் கை அசைத்தவாறு தன் தளத்திற்கு ஓடினாள்.
“உன்னை இங்கே தானே இருக்க சொன்னேன்” என்று அர்ஜுன் கடிந்தான்.
“மன்னிச்சு.. மன்னிச்சு… “எனக் கையை வளைத்துத் தலை வணங்கினாள்.
“உன்னை..” என்று அர்ஜுன் சிரிக்க , அந்த நெடியவன் இந்த விளையாட்டைப் பார்த்தவாறு உள்ளே நுழைந்தான்.
“வெல்கம் சார்” என அர்ஜுன் அழைக்க , அந்த இடம் பரப்பரப்பாக, அவன் நடுநாயகமாக அமர்ந்தான்.
“தென், வாட் அபௌட் யுவர் நீயூ பிராஜக்ட்?” அதிகாரமாகக் கேட்டான் .
“ஏன் பேர் சொல்லிப் பேசமாட்டானோ , இந்த ஜெம் (GEM)” என மனதில் வசைபாடினாள்.
அர்ஜுன் “உடனே இந்நிகழ்ச்சியை மாலை 6 மணிக்கு ஒளிபரப்ப எண்ணம் உள்ளது . மாலை ஆரம்பித்தவுடன் , அழுகை , ஆர்ப்பாட்டம் , வில்லத்தனம் என இல்லாது மனதை வருடுவது போல் நிகழ்ச்சியை அமைக்க யோசனை…” என நிறுத்தினான்.
“மேலும் சொல்” எனப் பார்க்க ,
உற்சாகமாய் , “இது குழந்தைகள் நிகழ்ச்சி . ஆனால் அவர்களின் திறமைகளைக் காட்டும் நிகழ்ச்சி அல்ல , குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கும் நிகழ்ச்சி..” என்றான்.
“ஓகே , தென்..?”
“4 வயது முதல் 8 வயது வரை உள்ளவர்களே பங்கேற்பாளர்கள். அவர்களுடைய மழலை , அறியாமை தான் பிரதானமாக இருக்கும் .. “
“இனியா..” என்று அழைத்தான் , அவள் அருகில் வர,
“இந்நிகழ்ச்சிக்கு, புது வீஜே இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது , இனியா இதற்கு நன்றாக சூட்டாவாள்” என்று முடித்தான்.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு , அர்ஜுனிடம் திரும்பி , “உங்களை நம்புகிறேன், நீங்கள் வேலையைத் தொடங்குங்கள்” என்றான் . பின் “முதல் எபிஷோட் சூட் முடிந்தவுடன் எனக்கு அனுப்புங்கள். அப்புறம் நிகழ்ச்சிக்கு என்ன பெயர் ?”
“இன்னும் முடிவு செய்ய வில்லை ஸார்” என்றான் அர்ஜுன்.
“ஓகே… , எல்லாம் முடிந்தவுடன் எனக்குத் தெரிவியுங்கள்…” என்று கூறிவிட்டுச் சென்றான்.
அனைவருக்கும் மலையைப் புரட்டிய ஆசுவாசத்துடன் இருந்தாலும் , ஒருபுறம் உற்சாகமும் இருந்தது.
Advertisement