Advertisement

கோவிலில் இருந்து பதினொரு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விட்டார்கள். மதிய சாப்பாடு முடிந்ததும் களைப்பில் உறங்கிப் போனார்கள். மாலை நான்கு மணிக்கு “நான் வயலுக்கு போயிட்டு வரேன் மதி”, என்றான் சரவணன்.

“நானும் வறேனே பிளீஸ்”, என்று சொன்ன அவள் உதடுகளை பிடித்து இழுத்தவன் “நைட் எப்ப வரும்னு இருக்கு டி. இன்னைக்கு என்ன ஆனாலும் உன்னை விடுறதா இல்லை”, என்றான்.

“பேச்சை மாத்தாதீங்க. என்னையும் கூட்டிட்டு போங்க”, என்று அவள் சிணுங்க “சரி டி வா”, என்றான்.

“சரி நான் பூர்ணியையும் கூப்பிடுறேன்”, என்று சொல்லி கீழே வந்தவள் “பூர்ணி பூர்ணி, உங்க அண்ணா வயலுக்கு கூப்பிடுறாங்க டி. போகலாமா?”, என்று கேட்டாள். பூர்ணிமா வரேன் என்று சொல்லப் போகும் போது “அவளுக்கு இப்ப ஏழாவது மாசம் நடக்குது வெண்மதி. அதனால அவ அங்க எல்லாம் வர வேண்டாம். வரப்புல நடக்கும் போது கால் ஏதாவது பிசகிட்டுன்னா கஷ்டம். நீ மட்டும் சரவணன் கூட போயிட்டு வா”, என்றாள் வசந்தா.

“ஆமா டி, அங்க வந்தாலும் என்னால இந்த பெரிய வயிரை வச்சிட்டு எஞ்சாய் பண்ண முடியாது. நீ மட்டும் அண்ணா கூட போயிட்டு வா”, என்று கத்தி சொன்ன பூர்ணி அவள் காதில் “அங்க என்ன ரொமான்ஸ் நடந்துச்சுன்னு வந்து என் கிட்ட சொல்லணும்”, என்று முணுமுணுத்தாள். சிறு சிரிப்பும் வெட்கமும் கலந்த முகப் பாவத்துடன் அவனுடன் கிளம்பினாள் வெண்மதி.

வண்டியில் போகும் போது “பூர்ணி உன் காதுல என்ன டி சொன்னா? அவ சொன்னதைக் கேட்டதும் உன் முகம் அப்படியே டால் அடிச்சது?”, என்று கேட்டான் சரவணன்.

“வயல்ல ஏதாவது ரொமான்ஸ் நடந்தா அவ கிட்ட சொல்லணும்னு சொன்னா. என்ன உங்க அண்ணா அப்படி பண்ணினாங்க, இப்படி பண்ணினாங்கன்னு சொல்லவா?”, என்று சிரிப்புடன் கேட்டாள்.

“எங்க ரொமான்ஸ் பண்ணுறது? அப்பா சித்தப்பா ரெண்டு பேரும் தோப்புல தான் இருக்காங்க. ரொமான்ஸ் எல்லாம் நைட் தான். இன்னைக்கு உனக்கு தூக்கமே கிடையாது”, என்று சிரித்தான் சரவணன்.

அவன் சொன்னது போல அங்கே வெற்றிவேல், சக்திவேல் இருக்க சிரிப்புடனே இருவரும் சென்றார்கள். நான்கு ஆட்கள் தக்காளிச் செடிக்கு அருகே அமர்ந்து களை பறித்துக் கொண்டிருந்தார்கள். நெல் போட்டிருந்த வயல் மட்டும் அறுவடை முடிந்ததால் வெறுமையாக காட்சி அளித்தது. மற்ற இடம் எல்லாம் செழித்து பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

“வா மா வெண்மதி, இது தான் மா நம்ம தோப்பு. நல்லா இருக்கா?”, என்று கேட்டார் சக்திவேல்.

“நல்லா இருக்கு மாமா”, என்று அவள் சிறு சிரிப்புடன் சொல்ல “வெண்மதி, உள்ள போய் சுத்திப் பாரு மா. இங்க ஒரே வெயிலா இருக்கு. வெயில்ல நின்னா உனக்கு தலை வலிக்கும். மணி நாலரை ஆச்சு. ஆனா இன்னும் வெயில் போகலை”, என்றார் வெற்றிவேல்.

“சரி மாமா”, என்று சொன்னவள் சரவணனைப் பார்க்க “நீ போ”, என்னும் விதமாய் சைகை செய்தான்.

வெண்மதி வயலைத் தாண்டி இருந்த தோட்டத்தை ரசித்த படியே அந்த தோப்புக்குள் நடந்து கொண்டிருந்தாள்..

வயல் எல்லாம் சும்மா இருந்தாலும் தோட்டத்தில் பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் என காய்த்திருந்தது. தோப்பைச் சுற்றி தென்னை மரங்களும் மாமரங்களும் சூழ்ந்திருந்தது என்றால் ஒரு ஓரத்தில் பனை மரங்கள் மட்டும் நிறைந்திருந்தது.

எல்லாவற்றையும் கடந்து அந்த தோப்புக்குள் நுழைந்தால் அந்த இடமே குளுமையாக இருந்தது. வெண்மதிக்கும் தோப்பு இருக்கிறது தான். ஆனால் அவள் தந்தை அவளை அங்கே எல்லாம் செல்வதற்கு அனுமதிக்க மாட்டார் என்பதால் அவள் போனதே இல்லை.

அதனால் அவளுக்கு இந்த இடம் மிகவும் பிடித்தது. மாமரம், கொய்யா மரம், சப்போட்டா மரம், சீதா பழமரம், வாழை மரம், கப்பைக்கிழங்கு என இருந்ததை ஆசையாக ரசித்தாள். மாங்காய்கள் பாதி பழுத்தும் பழுக்காமலும் தொங்கிக் கொண்டிருக்க அதை பறித்து ரசித்து உண்டாள். ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அனைவரும் இருக்கும் இடம் வந்தவள் அவனைக் கண்டு திகைத்து நின்று விட்டாள்.

அவளால் அவனிடம் இருந்து பார்வையை திருப்பவே முடியவில்லை. உள் பனியனும், முக்கால் பேண்ட்டும் போட்டுக் கொண்டு மண்வெட்டியால் ஏதோ செய்து கொண்டிருந்தான். அவன் அருகே நின்றிருந்த சக்திவேல் அவனுக்கு வேலை சொல்லிக் கொண்டிருந்தார்.

அவனுடைய அந்த கோலத்தை அவளால் நேருக்கு நேர் பார்க்கவும் முடியவில்லை. அதே நேரம் அவனை விட்டு பார்வையை திருப்பவும் முடியவில்லை. அவளுடன் வந்த போது அவன் வேஷ்டி மற்றும் டீசர்ட் தான் போட்டிருந்தான்.. இதை எப்போது மாற்றினான் என்று திகைத்துப் போனாள். முதல் முறையாக அவனை இப்படிப் பார்க்கிறாள்.

அவர்கள் அறையில் அவள் அறைக்குள் இருப்பதாலோ என்னவோ அவன் உள் பனியனுடன் திரியவே மாட்டான். எப்போதும் லேசான டிசர்ட்டைப் போட்டிருப்பான்.

அது மட்டுமிலாமல் இத்தனை நாளும் அவன் உடை மாற்றும் போது அவள் அறையில் இருக்க மாட்டாள் என்பதால் இன்று தான் முதல் முறையாக அவனை இப்படி பார்க்கிறாள். அவனது அகன்ற தோள்களும், அதில் இருந்த வியர்வைத் துளிகளும், புஜங்களில் இருந்த சதைக் கோளங்களும் அவன் கம்பீரத்தைக் உயர்த்திக் காட்ட இமை சிமிட்டாமல் அவனைப் பார்த்தாள்.

“என்ன மா மருமகளே, நம்ம தோட்டத்தை சுத்திப் பாத்துட்டியா? ஏன் அங்கயே நின்னுட்ட? இங்க வா”, என்று வெற்றிவேல் அழைத்த பிறகு தான் நடப்புக்கு வந்தாள். ஆனாலும் படபடக்கும் மனதுடன் தான் அவர்கள் அருகே சென்றாள்.

அவளிடம் இருந்து சத்தம் வராததால் நிமிர்ந்து பார்த்தவன் அவள் முகத்தில் இருந்த நுண் உணர்வுகள் புரியாமல் என்ன ஆச்சு இவளுக்கு என்று தான் எண்ணினான். அவள் பார்வை தவிப்பும் ஆர்வமுமாக அவன் மேனியில் பதிய அவனுக்கு சட்டென்று விஷயம் புரிந்தது.

“என் பொண்டாட்டி என்னை சைட் அடிக்கிறா டா”, என்று கத்தி அவளை இழுத்து அணைக்க அவன் மனம் பரபரக்க இரண்டு தந்தைகள் இருக்கும் நினைவில் அதை அடக்கினான்.

ஐந்து மணி ஆனதும் வேலை முடிந்து மற்ற ஆட்கள் கிளம்பினார்கள். “அண்ணா நாமளும் போகலாமா?”, என்று கேட்டார் சக்திவேல்.

“போகலாம் சக்தி, சரவணா வா பா கிளம்பலாம்”

“நீங்க போங்க பா. கசகசன்னு இருக்கு. குளிச்சிட்டு வரேன்”, என்று மறுத்தான் சரவணன்.

“சரிப்பா, மோட்டார் போட்டேன்னா அப்படியே கத்திரிக்காய் செடிக்கு மட்டும் தண்ணி பாச்சிட்டு வந்துடு. மணி அஞ்சு ஆகிருச்சு. சீக்கிரம் வந்துருங்க. மருமகளுக்கு இளநீ வேணும்னா வெட்டிக் கொடு”

“சரிப்பா”, என்று அவன் சொன்னதும் இருவரும் கிளம்பி விட்டார்கள். அவர்கள் சென்றதும் மோட்டார் போட்டு விட்டு வந்தான் சரவணன். அவள் அவனை நேருக்கு நேர் பார்க்காமல் தப்பித்துக் கொண்டிருந்தாள்.

அவள் மனது புரியாமல் “மதி குளிக்கலாம் வரியா?”, என்று கேட்டான் சரவணன்.

“நானா? இங்கயா? நான் வரலைப்பா. நீங்க குளிங்க”, என்று மறுத்தாள்.

“ஏய் வா டி, சும்மா ஜாலியா இருக்கும்”

“அதெல்லாம் வேண்டாம், வாங்க வீட்டுக்கு போகலாம். ஆமா நீங்க எப்ப இந்த டிரஸ் போட்டீங்க? உங்க வேஷ்டி எங்க?”

“சித்தப்பா பாத்தி பிரிச்சு விடச் சொன்னாங்க. அதான் மோட்டார் ரூம்ல போய் மாத்துனேன். இந்த பேண்ட் இங்கயே தான் கிடக்கும். வேஷ்டி கட்டிட்டு வேலை செய்ய முடியாதுள்ள? அதான் இதைப் போட்டுருக்கேன். சரி வா குளிக்கலாம்”

“வேண்டாம் நான் வரலை. யாராவது வந்துட்டா?”, என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள்.

“யாரும் இங்க வர மாட்டாங்க டி. இங்க உன்னையும் என்னையும் தவிர வேற யாருமே கிடையாது. ஒழுங்கு மரியாதையா இன்னைக்கு இங்க குளிக்கிற. பூர்ணி எல்லாம் இங்க வந்தா என்ன ஆட்டம் போடுவா தெரியுமா? தொட்டிக்குள்ள இறங்கிட்டு வெளிய வரவே மாட்டா. இந்த சந்தோஷத்தை எல்லாம் வேற எப்ப அனுபவிக்க போற? அதோ அந்த ரூம்ல போய் உன் சேலையைக் கழட்டி வச்சிட்டு பாவாடையை கட்டிட்டு வா. நான் தண்ணி சரியா பாயுதான்னு பாத்துட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றான்.

அவளுக்கும் அவன் சொன்னதைக் கேட்டும் பாய்ந்தோடும் அந்த தண்ணீரைக் கண்டும் ஆசை வர அவன் சொன்ன படி சேலையை கழட்டி போட்டு விட்டு பாவாடையை ஏற்றிக் கட்டி விட்டு வந்தாள். தயக்கத்துடன் அந்த தொட்டிக்குள் காலைப் போட்டு அமர்ந்தாள்.

அந்த தொட்டி உயரமாக இருக்க இதற்குள் எப்படி இறங்க என்று விழித்தாள் வெண்மதி. ஆண்களாக இருந்தால் பயம் இல்லாமல் குதித்திருப்பார்கள். பழகியவர்களுக்கும் கஷ்டமாக இருக்காது. ஆனால் இவளுக்கு இது தானே முதல் முறை? அப்போது தொட்டிக்குள் இருந்த படிக்கட்டு அவளுக்கு தெரிந்தது. நிம்மதியுடன் அதில் கால் வைத்து உள்ளே இறங்கி நின்றாள். அவள் கழுத்துக்கும் மேலே தண்ணீர் இருந்தது.

அவளது நீண்ட பின்னலை விரித்து விட்டு அவள் தண்ணீருக்குள் மூழ்க அந்த ஜில்லென்ற தண்ணீர் பட்டதும் அவள் உடல் சிலிர்த்தது. இப்போது அவன் வந்தால் என்ன நினைப்பான் என்று சங்கடமாகவும் இருந்தது.

காதல் வெடிக்கும்….. 

Advertisement