Advertisement

Chapter 35

   உள்ளே நுழைந்து உடை மாற்றியவுடன் ஓய்வாகப் படுக்கையில் சாய்ந்த ஜெய், அறையை ஒழுங்குபடுத்திக் கொண்டிடுந்த தீபாவைப் பார்த்தான்.

முன்பு ரொம்பவே ஒல்லியாக இருந்த தீபா, இப்போது சற்று எடை கூடி திட்டமாக இருந்தாள். எப்போதும் போல நீளமான கூந்தலைப் பின்னி, மல்லிகையோடு அவனுக்குப் பிடித்த ரோஜாவையும் காதோரத்தில் வைத்திருந்தாள்.

சந்தனக் கலரில், மெரூன் வண்ண ரோஜாப் பூக்கள் எம்பிராய்டரி செய்த டிசைனர் புடவைக்குப் பொருத்தமாக, ரோஜாப்பூவும் அந்தக் கலரிலேயே இருந்தது. மாநிறமாக இருந்தாலும், இப்போது சரியான உணவு, போதிய ஓய்வு, இளம்வயது அதற்கும் மேலே நிறைவான வாழ்வு என அவள் முகம் வெகு அழகாக இருந்தது. எப்போதுமே இலட்சணமாக இருக்கும் அவள் முகம் இப்போது மேலும் மெருகேறி இருந்தது.

திருமணத்திற்கு முன் அவள் காது, கழுத்து கைகளில் ப்ளாஸ்டிக் அணிமணிகள்தான் இருக்கும். இப்போது காதில் குட்டியாகத் தங்க ஜிமிக்கி ஒன்றை அணிந்திருந்தாள். கழுத்தில் தாலிச்சரடுடன், மெல்லிய தங்கச்சங்கிலியும் தொங்கியது. கைகளில் இரண்டு தங்க வளையல்கள்  போட்டிருந்தாள்.

         எளிமையான அலங்காரம் தான் என்றாலும், அதிலுமே அவள் அவனை

வெகுவாகக் கவர்ந்தாள். அவளுடைய தோற்றம் ஒரு காரணமாக இருந்தாலும், அவளுடைய எளிமை, எல்லோரையும் நட்புடன் அணுகும் முறை கடும் உழைப்பு… என அவளுடைய குணங்கள்தான் முக்கியக் கரரணமாக இருந்தது.

  அதுவரை தன் பாட்டில் வேலை செய்து கொண்டிருந்த தீபா, சற்று நேரமாக ஜெய் தன்னையே கவனித்துக் கொண்டிருப்பதைப் உணர்ந்து, திரும்பி அவனைப் பார்த்தாள். என்ன என்பது போல் புருவம் உயர்த்தி, பார்வையாலேயே கேட்டாள். ஜெய் தன் வலது கையை நீட்டி, அருகில் வரும்படி தலையை அசைத்து அழைத்தான்.

அவன் மனதில் ஒடிய எண்ணங்களை அறியாமல் அவன் அழைத்தவுடன் அருகில் வந்து, அவன் கைகளில் தன் கையை வைத்து, மீண்டும் “என்ன?” என்று கேட்டாள். பற்றியிருந்த அவள் கையை இழுத்து, அவளைத் தன் அருகிலேயே அமர வைத்தான்.

   தீபா! உனக்கு ஏதாவது ஆசையிருக்கா? இருந்தாச் சொல்லு.”

“என்ன திடீர்னு கேக்கறீங்க மாமா? எனக்கு அப்படில்லாம் ஒண்ணும் இல்ல.நான் ரொம்பச் சந்தோஷமாவே தான் இருக்கேன்.”

         “இல்ல தீபா. இதுவரைக்கும் நான் உனக்கு வாங்கிக் கொடுத்ததோ…, இல்ல,ஃபாரின் டூரோ…,  நானா உனக்கு விருப்பப்பட்டு வாங்கித் தந்தது தான். நீயா விரும்பி, எதுவும் கேட்டது இல்ல. நானும் இதுவரைக்கும் கேட்டதில்ல.

இப்ப நீ ப்ரெக்னண்டா இருக்க. பொதுவா, கர்ப்பமா இருக்கற பொண்ணோட

ஆசையை நிறைவேத்தணும்னு சொல்வாங்க. அதனால, இப்பயாவது சொல்லேன்! இப்ப எதுவும் இல்லேன்னாலும், உன்னோட சின்ன வயசுல

இருந்து, எத்தனையோ நிறைவேறாத ஆசைகள் இருக்கலாம் இல்ல? அதுல

ஏதாவது இருந்தா, இப்ப அவுத்துவுடுடா செல்லம்.”

அவன் கேட்டவுடன் சற்று நேரம் யோசிப்பவள் போல் பாவனை செய்துவிட்டு பிறகு உற்சாகமாக, “சொல்லட்டுமா?” என்றாள்.

அவன் தலையாட்டவும்,  “எனக்குப் பஞ்சு மிட்டாய் ரொம்பப் பிடிக்கும். ரோட்ல வண்டில வர குச்சி ஐஸ் பிடிக்கும். அப்புறம், சாக்லேட்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் பார் சாக்லேட்னா, ரொம்ப இஷ்டம். ஆனா, சின்ன வயசுல அப்பா எங்க கூட இருந்தப்ப, எப்பவாவது வாங்கிட்டு வருவார். ஆனா, ஒண்ணுதான் வாங்கிட்டு வருவார்.அதை எங்க மூணு பேரையும் ஷேர் பண்ணிக்கச் சொல்லுவார். சபா எப்பயும் அவன் பங்கைச் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, இன்னும் வேணும்னு அழுவான். சுபாவும் தர மாட்டாள். அதனால, அம்மா என்னைத் தான் விட்டுக்கொடுக்கச் சொல்லுவாங்க. எப்பயாவது அப்பா கடைக்குக் கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வாங்கித் தருவாங்க. அதையும் இப்படித் தான் தம்பி, தங்கைக்கு விட்டுக் குடுத்திருக்கேன். என் டிரஸ்கூட எனக்கு ரொம்பப் புடிச்சதாயிருந்தாலும், சுபாவுக்கு விட்டுக் கொடுத்துடுவேன்.”

    அவள்  தனது ஆசைகளைச் சொல்வதற்குப்  பதிலாக, அவளுக்குக் கிடைக்காத இளமைப் பருவத்தின் ஏக்கங்களைச் சொல்வது போல இருந்தது.

அவள் தலையை ஆதரவாகத் தடவியபடி, அவளைப் பேச விட்டு விட்டு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் ஜெய்.

   எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு…, லைட் ரோஸ் கலர்ல, டார்க் பச்சைல

டிசைன் போட்டு ஒரு பாவாடை. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, சுபா

அதுதான் வேணும்னு அழுததுல, அவளுக்கு ஜுரமே வந்துடுச்சு. அப்ப, அம்மா

என்னை அந்தப் பாவாடையை அவளுக்கு விட்டுக் கொடுக்கச் சொல்லிட்டாங்க.

எனக்கு எப்பவுமே, எதுத்துப் பேசிப் பழக்கமேயில்லை. அதனால, அதைச் சுபாகிட்ட கொடுத்துட்டேன். ஆனா, அதை நினைச்சி நைட்ல ரெண்டு நாள் அழுதேன். அதுக்கப்புறம் நான் எதற்கும் ஆசையே படறதில்ல. சுபா எடுத்துக்கிட்டது போக, மத்ததைத்  தான்  அதுக்கப்புறம் நான் எடுத்துப்பேன்.

    அவனுக்கே நினைவிருக்கிறதே! அவர்கள் இங்கே வந்த பிறகு, எத்தனையோ முறை தீபா மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு ஒதுங்கிப் போயிருக்கிறாளே. சின்ன விஷயங்களில் இருந்து பெரிய முடிவுகள் வரை, எதையுமே அவளுடைய விருப்பத்தைக் கேட்டு நடக்கவில்லையே! படிப்பு, திருமணம்… ஏன் மாப்பிள்ளையைக்  கூட அவள் தேர்ந்தெடுக்க முடியவில்லையே! ஆனாலும் அவள் ஒரு முறை கூட தன்னிரக்கத்துடன் இல்லையே! எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு…! எல்லோரையும் நேசித்துக் கொண்டு!  என்ன மாதிரியான                     பெண் இவள்! அவன் மனம் அவளுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்ததில் கனத்துப் போனது.  அதனால், அவள் மேற்கொண்டு பேசியதை அவன் கவனிக்கவில்லை.

         எனக்கு இதெல்லாம் பெரிய ஆசையில்லை. எனக்குப் பிறகு, உடனே சுபாவும், அதற்குப் பிறகு உடனே சபாவும் பிறந்ததனால…  என்னை அப்பாவும் அம்மாவும் கொஞ்சினதாகவே ஞாபகமேயில்லை. அம்மாவோ, அப்பாவோ அவங்களைக் கொஞ்சும்போது, எனக்கு ஏக்கமாயிருக்கும் அதுக்கப்புறம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை வந்ததும்… வீட்ல ஒரே அடி உதைதான். அம்மா அழுதுட்டேயிருப்பாங்க. அதனால, என்னோட ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, அம்மாவை நல்லா வச்சுக்கணும்ற ஒரே ஆசைதான்.

         அங்கேயிருந்து நாங்க இங்க வந்ததும், அதனாலதான் அம்மாவோட வேலையையெல்லாம் நானும் ஷேர் பண்ணிச் செய்ய ஆரம்பிச்சுட்டேன். எப்பவாவது  நீங்க சபாவை உப்பு மூட்டை தூக்கி விளையாடுவீங்கயில்ல. அப்ப எனக்கும் ஆசையாயிருக்கும்… சுபா அவளே ஓடி வந்து, மாமா! நானுன்னு கேப்பா.

நீங்க அவளையும் தூக்கி உப்பு வாங்கலியோ என்று விளையாடிட்டு இறக்கி விடுவீங்க. எனக்கும் ஆசையாயிருக்கும். அடுத்ததா என்னையும் நீங்க தூக்குவீங்கன்னு எதிர்பாத்துட்டேயிருப்பேன். ஆனா, நீங்க என்னோட கன்னத்துல தட்டிட்டுப் போயிடுவீங்க.

   அவள் சொல்லி முடித்ததும், அவள் சொன்ன விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்தது. சின்னக் குழந்தை போல கண்களைப் பெரிதாக உருட்டியும், இரண்டு கைகளையும் ஆட்டியும் அவள் பேசியது ஒரு புறம்… அவள் சொன்ன சின்னச்சின்ன ஆசைகள் மறுபுறம்… என இரண்டுமே சிரிப்பாக இருக்க, வாய்விட்டுச் சிரித்தான்.

    “தீபா! நான் உன் ஆசைகள் என்னென்னு  கேட்டப்போ, ஒரு அஞ்சு லட்ச

ரூபாய்க்காவது குறைஞ்சது வேட்டு வெப்பேன்னு நினைச்சேன். வைர நெக்லஸ்க்கு மாட்சா, வைர வளையல் இல்லன்னோ…  வேர்ல்ட்டூர்-னு

பெரிசா கேட்பேன்னு நினைச்சேன். ஆனா, நீ சொல்ற ஆசைகளுக்கு வெறும் ஐம்பது ரூபாய் கூட ஆகாது போலருக்கே! உனக்குப் பிழைக்கவே தெரியலியே! சான்ஸை யூஸ் பண்ணிக்கறதை விட்டுட்டு, இப்படி ஏமாளியா இருக்கியே!”என்று சோகமாகச் சொல்வது போல் சொன்னான்.

பின்பு, குரலைச் சிவாஜி போல மாற்றிக்கொண்டு, “ஆனாம்மா! மாமா சொல்றென்! என் தலையை அடமானம் வெச்சாவது, உன்  ஆசைகளை நிறைவேத்தறேம்மா! இது சத்தியம்! என்று அவள் கையில் அடித்துச் சத்தியம் செய்தான். அவன் பேசிய தோரணையில் இருவருக்கும் சிரிப்பு வர, இரண்டு பேரும் வெகுநேரம் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்.

   சிரிப்பு அடங்கியவுடன், “தீபா! நீ சொன்னதுலயே, உன்னோட கடைசி இரண்டு ஆசைகள் தான்  எனக்கும் ரொம்பப் புடிச்சிருக்கு.  ஐயம் ரெடி. இனிமே அந்த ரெண்டு

ஆசைகளையும் நான் தினமும் நிறைவேத்தறதா முடிவெடுத்திருக்கேன். கம்

க்ளோசர்  டார்லிங்!” என்றவன், உப்பு மூட்டையாக அவளைத் தூக்க வசதியாக எழுந்து நின்று கொண்டு அவளை வரச் சொன்னான். தீபா வெட்கப்பட்டுக் கொண்டு எவ்வளவோ மறுத்தும் விடவில்லை. அவன் சொன்னதைச் செய்துவிட்டுதான் ஓய்ந்தான்.

Advertisement