Advertisement
அத்தியாயம் 6
மனிதர்கள் வேண்டுமானால் சோம்பிப் போய் சில இடங்களில் தேங்கி நிற்கலாம்.. காலம் அப்படி அல்ல, அது போக்கில் ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. அப்படி தான் இவர்களின் வாழ்க்கையில் நாட்களும் நேரங்களும் கடந்து கொண்டே இருந்தது.
ஆஸ்திரேலியாவில் சித்தார்த்தின் வாழ்க்கை ஒரு சீரான நிலையில் போய்க்கொண்டிருந்தது.. மனம் மட்டும் அவனது மித்ராவை சுற்றிக் கொண்டே வந்தது.. அப்படித்தான் அவனது வாழ்க்கை அங்கு ஓடிக் கொண்டிருந்தது….
அங்கு அவன் வந்து சேர்ந்த நாட்களில் ஆரம்ப சமயங்களில் சற்று திணறித்தான் போனான்…. வீட்டில் எந்த வேலையும் செய்து பழக்கமில்லை, இங்கு வந்து அவர்களுக்கு உரிய தொழில்துறை நண்பர் மூலமாக அவனுக்கு தங்குவதற்கு வீடு மற்றும் தேவையான பொருட்கள் என்று அனைத்தும் ஏற்பாடு செய்திருந்தாலும்., தனியாக சமைத்து, வீட்டை சுத்தப்படுத்தி என்று ஒவ்வொன்றுக்கும் முதலில் திணறினாலும் போகப் போக பழகிக் கொண்டான்…
வெளிநாட்டில் பேச்சிலர் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தான்… அவளுக்கு சிகரெட் புகை ஆகாது என்று அறிந்த பின் தான் இவன் புகை பிடிப்பதை நிறுத்தினான்… மற்றபடி பெண்களுடன் சுற்றும் ஆள்களையும் இவளுக்கு பிடிக்காது என்பது தெரிந்ததால், எப்போதாவது இருந்த சிறுசிறு மற்ற பழக்கவழக்கங்களையும் விட்டான்…
வெளிநாட்டில் தொழில் துறையில் என்றாவது பிஸ்னஸ் டின்னர் லன்ச் இருக்கும் நேரங்களில் மற்றவர்கள் சிறிதளவு மது அருந்தும் பழக்கம் உண்டு., ஆனால் இவன் அதையும் தவிர்த்து விடுவான் எப்போதாவது வேறு வழி இல்லை என்றால் மிக சிறிதளவு எடுத்துக் கொள்வான்,மற்றவர்களை புண்படுத்த கூடாது என்பதற்காக… அங்கு உள்ளவர்களுக்கு கம்பெனி கொடுக்க வில்லை என்றால் அவர்களை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொள்வார்கள்… அதற்காக சிறிதளவு எப்போதாவது எடுத்துக் கொள்வான்… மற்றபடி அவன் அனைத்து பழக்க வழக்கங்களையும் இவளுக்காக மாற்றிக் கொண்டவன்….
ஆனால் அவள் தனக்கு கிடைப்பாளா மாட்டாளா.. என்றெல்லாம் யோசிக்கவே இல்லை… அவள் நினைவுகள் போதும் என்ற எண்ணம் இருந்தது. ஏன் மனதில் அப்படி பதிந்து போனால் என்று அடிக்கடி யோசித்துக் கொள்வான். தான் அவளுக்கு பொருத்தமில்லை என்று அவனே சொல்லிக் கொள்வான்….
இப்பொழுதெல்லாம் அவன் அடிக்கடி மனதிற்குள் நினைத்துக் கொள்வது ஏன் நான் அவளுக்கு பொருத்தம் இல்லை.. எந்த விதத்தில் குறைஞ்சிட்டேன் என்று தோன்றினாலும்,தன் மனசாட்சி இடம் தானே சண்டை போட்டுக் கொள்வான், மனசாட்சியோ இவனுக்கு விரோதமாகவே கேள்வி கேட்கும் எந்த வகையில் குறைந்து விட்டாய் ஏன் பொருத்தமில்லை என்று நீயே நினைக்கிறாய்… என்று இவனை குழப்பிக் கொண்டு இருப்பதே இந்த மனசாட்சிக்கு வேலையாகிப்போனது… மனசாட்சியிடம் எதிர்த்து சண்டை போட்டுக் கொண்டிருப்பதை இவனுக்கு வேலையாகிப்போனது…. அவள் நினைவுகளை மறக்கவே அவன் வந்தது, ஆனால் நினைவுகள் அவனை கொன்று கொண்டிருப்பது.. அவன் அறிந்த ஒரு விஷயம் தான்……
அன்று ஏனோ அதிகாலையிலே விழிப்பு வந்துவிட்டது, நமக்கு நடு இரவாக இருக்கும். போது அங்கு அதிகாலை தேனீர் தயாரித்துக் கொண்டு தன் படுக்கை அறை பால்கனியில் இருந்து பார்த்தால் தெரியும் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்… ஏனோ அவன் மனதில் அப்போது இந்த கடல் தாண்டி அதற்கும் அப்பால் போனால் இன்னொரு கரையில் அவள் இருப்பாள் என்று நினைத்துக் கொண்டான்….. ஒரு கரையில் நான் மறு கரையில் அவள் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு இருந்தான்…
சற்று நேரம் கழித்து கடற்கரையோரமாக அதிகாலை வாக்கிங் முடித்து விட்டு வந்தவன்…. செய்தி சேனல் ஒன்றை போட்டுக்கொண்டு டிவி முன் அமர்ந்தான்…
அவன் மட்டும் தானே என்ற எண்ணத்தில் மெதுவாக நிதானமாக கிளம்புவான் அவனுக்கு தேவையான உணவாக காலையில் எளிதாக செய்யும்படி பிரட் டோஸ்ட்,சான்விச் இது போல எதையாவது செய்து கொண்டு சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவான்…. மதியம் வெளியில் உணவு எடுத்துக் கொள்வான்…. இரவுக்கு அம்மா வரும்போதெல்லாம் கொண்டுவரும் ஏதாவது குழம்பு வகை ஊறுகாய், ரெடிமிக்ஸ் பொடி இதுபோல் வைத்து அவனுக்கு தேவையான உணவை சமைத்துக் கொள்வான்… மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரும் காமாட்சி மகனிடம் கடிந்து கொள்வார்…..
இப்படி வந்து இங்கு இருக்க வேண்டுமா என்று சத்தம் போடுவார்… வந்தால் பத்து நாள்களுக்கு மேல் இருக்க மாட்டார்….
அம்மாவும் அப்பாவுமாக வருபவர்கள் வந்து இவனுக்கு தேவையான விஷயங்களை எல்லாம் பார்த்துக் கொடுப்பதிலே அவன் அம்மா நேரத்தை போக்கி கொள்வாள்…
தொழில்துறை முறை பயணம் என்பதால் அவர்களுக்கு அவர்களுடைய தொழில் அங்கே இருந்ததால் அதற்கு தகுந்தார்போல் விசா எடுத்துக்கொள்வார்கள்…. வந்து போவது சிரமமாக இருந்தாலும் மகனுக்காக என்ற எண்ணத்தில் இருவரும் வந்து விட்டு செல்வர்…. இப்படியாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டு நடந்து கொண்டிருந்தது… அவனுக்கும் 29 வயது நடந்து கொண்டிருக்கிறது….
ஒவ்வொரு முறையும் இங்கு வந்து விட்டு செல்லும் பொழுதெல்லாம் காமாட்சி ஒவ்வொரு விதத்திலும் அவனுடைய மாற்றங்களை கண்டு கொள்வாள்…. ஆனால் அவனுடைய மாற்றம் அவளை மறக்கவில்லை என்பது தெளிவாக புரிந்து கொண்டாள்…. ஒரு தாயாக மகனின் மனமாற்றம் அவளுக்கு ஒரு வகையில் சந்தோஷம் தான் ஏனெனில் அவன் நல்ல குடும்பத் தலைவனாக இருப்பான்… என்பதில் எந்தவித ஐயமும் இல்லை வீட்டை கவனிப்பது ஆகட்டும் தொழில் துறையில் இறங்கி வேலை செய்வதாகட்டும் எல்லாவற்றிலும் நன்கு பார்த்துக் கொண்டாலும் அவனுடைய எண்ணம் மட்டும் மற்ற பெண்களிடம் துளிகூட திரும்பவில்லை…. ஒவ்வொரு முறை வரும்போதும் பரசுராம் மெதுவாக திருமணப் பேச்சை எடுப்பார் சமீபமாக வரும் சமயம் எல்லாம் ஏனோ இவன் பதில் சொல்வதே கிடையாது…. அவசரப்படாதீங்க பார்க்கலாம் இப்ப வேண்டாம் இப்ப வேண்டாம் என்ற பதிலைத் தவிர வேறு எந்த பதிலும் அவனிடம் வருவதில்லை….
அன்று அவனுக்கான காலை உணவைத் தயாரித்துக் கொண்டு மீண்டும் ஒரு கோப்பை தேநீரோடு அமர்ந்தவனுக்கு பாதி உணவு கூட உள்ளே செல்லவில்லை…. ஏனோ மனம் ஒருவித பாரமாக இருப்பதாக உணர்ந்தான்…. அந்நேரம் இந்தியாவில் விடிந்து இருக்காது என்ற ஒரே காரணத்திற்காக தான் அலுவல் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தான்…
அங்கு மதியம் மணி 12 தாண்ட அவன் இந்தியாவில் தான் எப்போதும் அடிக்கடி அழைத்து பேசும் தன் நண்பன் ஒருவனுக்கு அழைத்தான்…. அழைத்தது அவனுக்கு மட்டுமன்றி, அவன் சில ஏற்பாடுகள் செய்து விட்டு வந்திருந்ததால் அவர்களில் ஒருவருக்கு அழைத்தான்…
அழைத்து அங்கு ஏதும் பிரச்சனையா, எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தான்…
அவர்களோ இல்லை… எதுவும் தெரியல காலையில ஏழு மணி தான் கடந்து இருக்கு இனிமேல்தான் தெரியும்…. நாங்க பார்த்துட்டு சொல்றோம்…
ஆனா எந்த விஷயமா இருந்தாலும் எனக்கு உடனே சொல்லணும் பிரச்சினை வந்துவிடக் கூடாது பாத்துக்கோங்க என்றதோடு வைத்தாலும் மனம் மட்டும் ஒரு வித படபடப்போடு இருப்பதை உணர்ந்தான்….
அன்று மதியமும் ஏதோ வாழ்வதற்காக உண்ண வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே உணவை எடுத்துக் கொண்டவன்.. அவன் வேலைகளில் மூழ்கிப் போனான், அவன் தந்தையின் தொழிலில் இரும்பு ஏற்றுமதி உணவுப் பொருள் ஏற்றுமதி என்று அங்கிருந்து அனுப்ப அதை ஆஸ்திரேலியாவில் விரிவுபடுத்திக் கொண்டிருந்தான் அவரது மகன்….
அவனுக்கு சில சமயங்களில் தோன்றும் அவளிடம் சொல்லி விடுவோமா, என்று ஆனால் அவனை அவனே அடக்கிக் கொள்வான்…. எந்த சூழ்நிலையிலும் அவளிடம் சொல்லக்கூடாது என்று, அவளுக்கு தன்னை பிடிக்குமா என்று கூட தெரியாது, ஒரு சீனியர் என்ற அடிப்படையில் பேசியவள் பிறகு அவளுக்கான பாடம் சொல்லிக் கொடுத்ததால் தொடர்ந்து பேசினாள்… இதுவரை ஒருமுறை கூட அவளாக பேசியதில்லை…. அவளாக போன் பேசியது கூட ஏதாவது சந்தேகம் கேட்க மட்டுமே பேசியிருப்பாள்…. அப்படி இருக்கும்போது நானாக கற்பனை வளர்த்துக் கொண்டு அவளைப் பற்றிய யோசனைகளோடு இருப்பது தவறு என்று அடிக்கடி அவன் மனதை தேற்றி கொள்வான்…. ஒவ்வொரு முறையும் இப்படியான எண்ணங்கள் வரும் போது அவனுக்கு அன்று அதிகமான மன உளைச்சலோடு தான் இருப்பான்….
இன்று ஏனோ அது அதிகமாய் இருப்பது போலவே தோன்றியது… இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது தொழிலில் அவன் கவனம் இருந்தது….
Advertisement