Advertisement
“ஏம்மா ஜெயா வந்தவங்களுக்கு எதுவும் குடிக்க சாப்ட கொடுத்தியா?” என்று நேசமணி கேட்க,
“இதோ” என்று அம்பிகா நகர்ந்து செல்ல,
“அதெல்லாம் இருக்கட்டும் முதல திவ்யாவை வர சொல்லுங்க அதுக்கு தானே வந்துருக்கோம்” என்று உபசரிப்பை ஒத்தி வைத்தார் அபிராமி.
அம்பிகா பார்வையை கணவனின் புறம் திருப்ப, இரு என்று பார்வை காட்டியவர் “ஜெயா போய் திவிய கூட்டிட்டு வாம்மா” என்று கூறவும்,
“ஒரு நிமிஷம் மாமா” என்றவனை என்னவென பெண்வீட்டினர் நால்வரும் பார்த்தனர்.
“உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றான் ஜீவானந்தம்.
ஜீவாவின் கூற்றில் ஒருவரை ஒருவர் புரியாத வண்ணமாய் பார்த்து கொள்ள,
“பொண்ணுகிட்ட பேசணும்னு தானே சொன்னேன் அதுக்கெதுக்கு இப்டி ஒரு ரியாக்சன் கொடுக்குறீங்க தப்பா ஏதாவது கேட்டுட்டேன்னா” என்றான் அனைவரின் முகத்தையும் பார்த்தபடி.
“இல்லைங்க மாப்பிள்ளை நாம பேசிட்டு அப்றமா திவ்யா கிட்ட தனியா பேசலாமே” என்று சிவநேசன் தயங்க,
“நாம பேசுறதை விட நானும் உங்க பொண்ணும் பேசுறது தான் முக்கியம் மாமா. யார் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு முடிவெடுக்குறது தானே சரி” என்று சிவநேசனின் வாயை அடைத்தான் ஜீவானந்தம்.
“கட்டிக்க போறது அவங்க, தனியா பேசட்டுமே ண்ணா” என்று ஜெயாசித்ரா பரிந்துரை செய்ய,
தங்கையை பார்த்தவர் அவரின் கண் அமர்த்தலில் மேற்கொண்டு மறுத்து பேசாது “சரிங்க மாப்பிள்ளை. ஜெயா திவ்யாவை கூட்டிட்டு வா ம்மா” என்றார்.
இதற்காகவே காத்திருந்தவள் போல “அக்கா! சொன்னது ஞாபகம் இருக்கட்டும். ஈயம் பூசி மொழுக்காம பட்டுன்னு மனசுல உள்ளதை சொல்லிரு” என்று போருக்கு செல்லும் வீரனுக்கு அறிவுரை கூறுவது போல எச்சரிக்கை நிறைந்த குரலில் சொல்ல,
“திவிம்மா..!” என்று உள்ளே நுழைந்தார் ஜெயசித்ரா.
“மாப்பிள்ளை உன்கிட்ட ஏதோ பேசணுமாம் போய் என்ன எதுன்னு பேசிட்டு வா கண்ணு இப்டி ஒரு மாப்பிள்ளை கிடைக்க உண்மையிலேயே நாங்க கொடுத்து வச்சுருக்கணும் எவ்ளோ உரிமையா உண்மையா பேசுறாரு தெரியுமா?” என்று புகழாரம் சூட்ட,
“அர்னால்டை புகழ்ந்தது போதும் அத்தை” என்றவளை அடிக்க கை ஓங்கினார் ஜெயசித்ரா.
“என்னடி பேச்சு இது யார்கிட்ட எப்டி பேசணும்னு தெரியாது. ரொம்ப வாய் நீழுது கவி பொம்பளை பிள்ளைக்கு இவ்ளோ துடுக்கு தனம் ஆகாது” என்று கண்டித்தார் ஜெயசித்ரா.
“அப்போ ஆம்பளை பிள்ளை துடுக்கா பேசலாமா?, போங்க அத்தை எந்த காலத்துல இருக்கீங்க, யார் என்னனு பாக்க கூடாது நல்லா வாய் பேசணும். வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்னு சொல்லுவாங்களே உங்களுக்கு தெரியாதா” என்று பதில் பேச,
“கவி” என்று அடக்கினாள் திவ்யபாரதி.
“போ க்கா எப்ப பாரு என்னையவே அடக்கு அவங்க பேசுறது சரியா?, அது என்ன ஆம்பளை பொம்பளைன்னு பிரிச்சு பேசுறது எல்லாரும் மனுஷ பிறவி தானே” என்று விதண்டாவாதம் பேசினாள் கவிபாரதி.
“அம்மா தாயே உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா உனக்கு அம்பிகா தான் சரி. அவ தான் செமத்தியா கொடுப்பா என்னை விட்டுறு” என்று சரணடைந்தவர் “திவிம்மா நீ வாடா” என்று வெளியே அழைத்து வந்தார்.
அபிராமியும் ராகவேந்திரனும் ஜீவாவிற்கு மனைவியாக போகிறவளை பெருமிதத்தோடு பார்க்க,
“திவிம்மா வந்தவங்களுக்கு காஃபி கொடுடா” என்று டம்ளர்கள் அடங்கிய தட்டை அவள் கையில் திணித்தார் அம்பிகா.
வெறும் சம்பிரதாயம் தானே என எண்ணி கொண்டு காஃபி தட்டை இருவருக்கும் நடுவில் நீட்ட,
“ஜீவா பின்னாடி இருக்கான் ம்மா உனக்காக தான் காத்திட்டு இருக்கான் போய் பேசிட்டு வா” என்று புன்சிரிப்புடன் டம்ளரை எடுத்து கணவரிடம் கொடுத்தவர் தனக்கொன்றை எடுத்து கொள்ள,
தயக்கத்துடன் சிவநேசனையும் அம்பிகாவையும் பார்த்தாள் திவ்யபாரதி.
“போ ம்மா பேசிட்டு வா” என்று குடும்பம் மொத்தமும் அனுமதி அளிக்க, தயக்கத்தை சுமந்து கொண்டு வீட்டின் பின் புறம் சென்றாள் திவ்யா.
மல்லிகை பந்தலின் அடியில் அமர்ந்து மலர்ந்து உதிர்ந்த மல்லிகையை எடுத்து முகர்வதும் அதன் மணத்தை உள்ளிழுத்து அனுபவிப்பதுமாய் இருந்தான் ஜீவானந்தம். அவன் செயல்கள் அவனுக்கே புதிதாய் இருந்தன.
இருப்பிடம் உணராது வெட்க புன்னகை சிந்தியவன்,
கொலுசொலியின் மெல்லிசையில் நாணம் விடுத்து கவனம் கலைத்து நிமிர்ந்து பார்த்தான் ஜீவானந்தம்.
பூமி அதிராது பாதம் அழுத்தாது தயக்கத்தை சுமந்தபடி நடந்து வந்தவள் டம்ளரை அவன் முன் நீட்டினாள் திவ்யபாரதி.
புன்னகை இழையோட, “தங்க்ஸ்” என்று பெற்று கொண்டவன் “உக்காரு” என்று எதிரே போட பட்டிருந்தது நாற்காலியை காட்ட,
“பரவாயில்லை உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்“, தயக்கத்துடனே வார்த்தைகள் வந்தன.
“ம் அதை உக்காந்துட்டே சொல்லலாமே கால் வலிக்க போகுது” என்றான் அக்கறை நிறைந்து.
“இல்லை” என்று மறுப்பாய் தலையசைத்தவள் மல்லிகை பந்தலை தங்கியிருந்த இரும்பு கம்பியில் சாய்ந்து கொண்டாள்.
தயக்கம் சதுரங்க ஆட,”ஏதோ பேசணும்னு சொன்னிங்களாம் அதுக்கு முன்னாடி நா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். உங்க மனசை காயப்படுத்தனுமன்றது என்னோட எண்ணம் இல்லை ஆனா.. இப்ப விட்டா விஷயத்தை சொல்ல சரியான சந்தர்ப்பம் கிடைக்காது.
நீங்க எவ்ளோ எதிர்பார்போட வந்துருப்பீங்கன்றதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது, ஆனா அது எதுவுமே நடக்காது. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமும் இல்லை, வீட்டுல உள்ளவங்க கிட்ட சொன்னேன் யாரும் புரிஞ்சிக்கலை.
உங்களை வர வச்சு அவமானபடுத்துறதா நினைக்க வேணாம் தயவுசெய்து, இந்த சம்பந்தம் வேணாம் பொண்ணை பிடிக்கலைன்னு நீங்களே சொல்லிருங்க அப்பா அம்மாகிட்ட பேசி புரியவைக்க என்னால முடியலை,
கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாகிரும்னு நினைக்காதிங்க நீங்க நினைக்கிற மாதிரியான வாழ்க்கைய என்னால கொடுக்க முடியாது அந்த நிலையில நா இல்லை” என்று அவனை பார்ப்பதும் பின் தலை தாழ்த்தி தயங்குவதுமாய் சொல்ல நினைத்ததை சொல்லி முடித்தாள்.
அவள் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தவன் வெற்று டம்ளரை ஓரமாய் வைத்து விட்டு “ரொம்ப நல்லது நா எதிர்பார்த்த பதிலை தான் நீ சொல்லிருக்க ஆனா என்னால பொய் சொல்ல முடியாது” என்று இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.
மனதில் உள்ளதை வெளிப்படுத்திய பின்பும் அவன் வாக்கியத்தை ஏற்று கொள்ள முடியாமல் பார்வை மிரள அவனை பார்த்தவள் அமைதியாய் நிற்க,
பேண்ட் பாக்கெட்டில் கையை புகுத்தி அவள் அருகே வந்த ஜீவா, “இவ்ளோ வெளிப்படையா பேசுற உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எப்பவும் ஒரே மாதிரியான மனநிலை இருக்காது திவ்யபாரதி” என்று பெயரில் அதீத அழுத்தம் கொடுத்தவன்,
“எப்ப வேணாலும் சட்டுன்னு மாற்றம் வரலாம் அந்த மாற்றம் நமக்கு பிடிச்சதா மாறலாம் அதை ஏத்துக்க தான் மனசு வேணும். கடந்து போறது தானே வாழ்க்கை” என்று பாவனை எதுவும் காட்டாது சாதாரணாமாய் இயம்பி விட்டு உள்ளே சென்றுவிட்டான் ஜீவானந்தம்.
எதிர்பார்ப்போடு எண்ணியவை, இறுதியில் ஏமாற்றத்தை கொடுக்க, நடை துவள உள்ளே சென்றாள் திவ்யபாரதி.
“உங்க பொண்ணை பிடிச்சிருக்கு மாமா” என்று உள்ளே நுழைந்தவளை பார்த்து கொண்டே சொல்ல,
ஜீவாவின் வாய்மொழியில் பெரியவர்கள் முகத்தில் அத்தனை சந்தோஷம். உள்ளே வந்த திவ்யாவை அதிர்ச்சி நிறைந்து பார்த்தாள் கவிபாரதி. அவளின் நிலையை காணவே அத்தனை கடினமாய் இருந்தது அவளுக்கு.
“அக்கா” என்று முணுமுணுத்தபடி திவ்யாவின் அருகில் சென்று கையை பற்றி கொள்ள, திரையிட்ட விழிநீரை எவரும் அறியமால் வடிய விட்டாள் பெண்ணவள்.
நற்காரியம் ஈடேறிய மகிழ்ச்சியில் அனைவரும் திளைத்து கொண்டிருக்க, “யாரை கேட்டு பொண்ணு பாக்க வந்திங்க” என்ற கோப குரலில் திடுக்கிட்டு முன் வாசல் புறம் பார்த்தனர் அனைவரும்.
ஆவேசமாக உள்ளே நுழைந்த கௌரியை கண்டு அபிராமிக்கு உள்ளே தகிக்க, “அமைதியா இரு அபிராமி பையன் முன்னாடி எதுவும் வார்த்தைய விட்டுறாத” என்று யாருக்கும் தெரியாத விதமாய் கைப்பற்றி அழுத்தினார் ராகவேந்திரன்.
“பெத்தவ நா உயிரோட இருக்கும் போது என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம பொண்ணு பாக்க வந்துருக்கீங்க. என்னோட பையனுக்கு எவ்ளோ பெரிய சம்பந்தம் பாத்து வச்சுருக்கேன்னு தெரியுமா?” என்று நடு வீட்டில் நின்று கத்த,
கௌரியின் வரவை எதிர்பாராதவன் கோபத்தை அடக்கி நிதானத்தை பிரதானமாக்கினான். பெண் வீட்டினரின் திகைப்பையும் மனநிலையையும் பொருட்படுத்தாது,
“மாமா உங்க பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு. வர்ற மூகூர்த்ததுலயே கல்யாண தேதிய ஃபிக்ஸ் பண்ணிருங்க நல்லதை தள்ளி போட வேணாம்” என்று பெற்றவளை பரிகசமாய் பார்த்து கொண்டே உரைத்திட்டவன் “பெரியம்மா தட்டை மாத்திறலாம் தானே” என்று சொல்ல,
“அதுக்கு தானே வந்துருக்கோம் ஜீவா” என்ற அபிராமி, “நல்ல நேரம் முடியிறதுக்குள்ள நிச்சயம் பண்ணிக்கலாங்க ண்ணே” என்று தாம்பூல தட்டை கணவன் மனைவி இருவருமாய் நீட்டினர்.
தயக்கத்தில் தடுமாறிய சிவநேசனிடம் “வாங்கிக்கோங்க ண்ணா நல்லதை எதுக்கு தள்ளி போட்டுக்கிட்டு” என்று ஜெயசித்ரா ஊக்க,
“எனக்கு வேண்டபட்டவங்க இவங்க ரெண்டு பேர் தான்” என்று அபிராமி ராகவேந்திரனை கைகாட்டியவன் “இவங்க சம்மதம் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் மாமா, யாரோ ஏதோ சொல்றாங்கன்னு தயங்காதீங்க” என்று ஜீவாவும் தன் பங்கிற்கு சொல்ல,
வந்த வரனை விட்டுவிட மனமில்லாமல் தாம்பூல தட்டை கணவன் மனைவி சகிதமாய் இருவரும் மகிழ்வுடன் பெற்று கொண்டனர்.
மூவரை தவிர்த்து, சந்தோஷ மிகுதியில் அனைவரின் வதனத்திலும் புன்னகை மிளிர்ந்தது.
“பொண்ணு ரொம்ப அழகா இருக்கா மதிணி நைட்டு சுத்தி போட்டுடுங்க கண்டவங்க கண்ணெல்லாம் எம் பொண்ணுமேல பட்டுருக்கும்” என்று கௌரியை பார்த்து பூடகமாய் உரைத்தார் அபிராமி.
கௌரியின் முகம் அவமானத்தில் கன்றி சிவக்க உறுத்து விழித்தவர் “என்னை மீறி இந்த கல்யாணம் எப்டி நடக்குதுன்னு நானும் பாக்குறேன் ஏ பையனை எனக்கு எதிரா திருப்பிட்டீங்கள இதுக்கான பலனை அனுபவிப்பீங்க” என்று அபிராமியை பார்த்து மிரட்டி விட்டு, திரும்பி பார்க்காமல் வந்ததை போலவே கோபத்தை சுமந்து கொண்டு சென்று விட்டார் கௌரி.
புயல் ஓய்ந்ததை போல அவர் சென்றதும் அத்தனை அமைதியாய் இருந்தது இல்லம்.
“அவங்க சொல்லிட்டு போறதை பெருசா எடுத்துக்காதீங்க மாமா என்னை நம்புங்க உங்க பொண்ணை பத்திரமா பாத்துப்பேன்” என்று நம்பிக்கை அளித்தவன் சிவநேசனின் கையை பற்றி அழுத்தினான்.
கண் முன்னே நடக்கும் கைமீறும் நிகழ்வை தடுத்த நிறுத்த திறனில்லாது மனம் ஒடிந்து சுவரில் சாய்ந்தவள், ஊமையாய் சமைந்தாள் திவ்யபாரதி.
மணம் வீசும்…
Advertisement