Advertisement
சித்திரை வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்லாது செடி கொடிகளையும் வாடி வதங்க செய்ய, வியர்வை வழிய கல்லூரியை வலம் வந்த வளர்மதி வகுப்பறைக்குள் நுழைய முற்பட்ட மாணவியை அழைத்தாள்.
“திவ்யா மேமை எங்கயாவது பாத்தியா?” என்று கேட்க,
“ஆமா மேம் ஆடிட்டோரியம் பக்கத்துல தனியா உக்காந்துட்டு இருந்தாங்க“என்றதும்,
“தனியாவா?” என்று யோசனை செய்தவாறே வார்த்தைகளை இழுத்தவள், “சரி நீ போ” என்று விட்டு கலையரங்கம் நோக்கி சென்றாள் வளர்மதி.
யோசனை பலம் தான் ஆனால் அதை கூட சரியாய் செய்யாது புல்லின் காம்பினை விரல் நுனியில் வைத்து விளையாடி கொண்டிருந்தாள் திவ்யபாரதி.
மரத்தடி நிழலும் நிழலை தொட்டதும், உடலை தழுவிய காற்றும் வியர்வையின் குளிப்பில் சிலிர்ப்பை உண்டாக்க, சிலிர்த்து கொண்டவள்.முசுமுசுவென மூச்சு காற்றை வெளியிட்டபிடி திவ்யபாரதியின் அருகில் சென்றாள்.
“மேடம் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க“, கடுப்பின் காரம் குறையாமல் வார்த்தைகள் வந்து விழ,
திடீர் குரலில் விரல்கள் செயலை நிறுத்த, திரும்பி பார்த்தவள் “என்ன வளர்” என்றாள் அயர்வான குரலில்.
முகத்தில் சோர்வை மீறிய கவலை நிறைந்திருந்தது. மற்றவர்களை போல அனாவசியமாய் பேசி அர்த்தமற்று சிரிப்பவள் அல்ல என்று வளர்மதிக்கு தெரியும். வணக்கம் என்றால் பதிலுக்கு புன்னையுடன் கூடிய வணக்கத்தை வைத்து, பார்க்கும் போது சிநேகமாய் புன்னகைத்து கடந்து செல்பவளுக்கு இன்று என்னவாயிற்று மூளை எழுப்பிய கேள்விக்கு விடை அறிந்து கொள்ள திவ்யாவின் அருகில் அமர்ந்தாள்.
“இங்க என்னடி பண்ணிட்டு இருக்க உன்னை காணோம்னு கேம்பஸ் முழுக்க தேடிட்டு வறேன், வேகாத வெயில்ல இப்டி வெக்கு வெக்குன்னு வியர்வை வழிய நடக்க வச்சுட்டு சாவகசாமா புல்லை பிடிங்கி விளையாடிட்டு இருக்க” என்று திவ்யாவின் தோளில் இடிக்க,
“ப்ச் என்னை எதுக்கு தேடுன ஸ்டாப் ரூம்ல இல்லைன்னா இங்க தான் இருப்பேன்னு உனக்கு தெரியாதா?”, அசட்டையாக பதில் சொன்னாள்.
“ம் நீ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துல இருக்க நேத்து கேண்டீன்ல இருந்த இன்னைக்கு இங்க இருக்க நாளையில இருந்து டைரி போட்டு குறிச்சு வச்சுகனும்“.
“என்னனு?”.
“இந்த கிழமையில இன்ன விசேஷம் மாதிரி இந்த கிழமையில இங்க இருப்பா இங்க போவா அப்டின்னு” என்று சிரிக்காமல் கிண்டல் செய்தாள் வளர்மதி.
மெலிதாய் இதழ் விரித்து சிரித்தவள் “சரி என்னை எதுக்கு தீவிரவாதி மாதிரி வலைவீசி தேடுன“,புருவம் உயர்த்தி கேட்க,
“ஹெச்ஓடி சார் உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு, என்ன விஷயம்னு என்கிட்ட கேட்காத ஏன்னா, எனக்கே தெரியாது” என்று உதட்டை பிதுக்கி கைவிரித்து சொன்னாள் வளர்மதி.
“எனக்கென்னமோ நாளைக்கு செமினார் கிளாஸ் அட்டன் பண்றதை பத்தி பேசுறதுக்கு தான் வர சொல்லிருப்பாருன்னு நினைக்கிறேன்” என்று வளர்மதி சொல்ல, எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள் திவ்யா.
“என்னடி நாளைக்கு போற தானே?” என்று சந்தேகமாய் கேட்க,
“இல்லை வளர் என்னால முடியாது நீ போய் அட்டன் பண்ணிட்டு வா” என்றாள் காரணத்தை கூறாமல்.
“நானா?”,வியப்பில் வளர்மதியின் விழிகள் விரிந்தன.”என்ன விளையாடுறியா டிப்பார்ட்மெண்ட்ல ‘நா அட்டன் பண்றேன்னு‘ நீ தானே சொன்ன?”.
“சொன்னேன் ஆனா இப்போ என்னால முடியாதுடி செமினாருக்கு இன்னும் பிரிப்பர் பண்ணவே இல்லை, பிரிப்பர் பண்ணவும் முடியாது” என்றாள் திவ்யா.
“ஏன் முடியாது கலெக்டர் மாதிரி கால நேரம், கடமை, பொறுப்பு பருப்புன்னு பேசுவியே இப்போ என்னாச்சு?, பிரிப்பர் பண்றதுக்கு நா உதவி செய்யிறேன் நீ நாளைக்கு போற” என்று கட்டளையாய் சொல்ல,
“ப்ச் புரிஞ்சுக்கோ வளர் ‘செய்வதை திருந்த செய்!’. பிரிப்பர் பண்ணாலும் அதை சரியா செய்து முடிக்க முடியாது இங்க வேற ஒரு பிரச்சனை பூதம் மாதிரி வந்து பயமுறுத்திட்டு இருக்கு, எப்டி அதை சமாளிச்சு வெளிய வர போறேன்னு தெரியாம நானே தவிச்சிட்டு இருக்கேன்” என்று அழுத்தமாய் சொல்லி அலுத்து கொள்ள,
“என்னாச்சு திவி வீட்டுல எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டாள் வளர்மதி. முன்பை விட குரலில் அதீத மென்மை குடி கொண்டது.
அதுவரை வார்த்தைகளை உதிர்த்தவள் அமைதியாகிட,
“என்னடி வாய் திறந்து பதில் சொல்லு? என்ன குழப்பதுல இருக்க” என்று அதட்டி பேச,
“வெள்ளிக்கிழமை பொண்ணு பாக்க வர்றாங்க” என்றாள் வாடிய குரலில்.
“வந்துட்டு போகட்டும் அதனால உனக்கென்ன பிரச்சனை?”.
“என்ன வளர் புரியாம பேசுற வந்தவங்களுக்கு என்னை பிடிச்சு போச்சுன்னா அடுத்து கல்யாணம் தான்” என்றாள் திவ்யா. பயத்தின் ரேகைகள் முகத்தில் படர்ந்து பதட்டத்தை கொடுப்பது தெளிவாய் தெரிந்தது.
“நல்ல விஷயம் தானே திவி கல்யாணம் பண்ணிக்கோடி இன்னும் எத்தனை நாளைக்கு தான் உப்பு சப்பு இல்லாத காரணத்தை சொல்லியே சமாளிப்ப“.
“எல்லாம் தெரிஞ்சும் இப்டி பேசுறியே வளர்” என்று கமரிய குரலில் நியாயம் கேட்டாள் திவ்யா.
அவளின் கையை தன் கைக்குள் ஆறுத்தலாய் அடக்கி கொண்ட வளர்மதி,
“எப்பவும் வாழ்க்கை ஒரே மாதிரி ஒரே நேரத்துல பயணிக்காது திவி, மாற்றம் வரும் போது அத்துக்கேத்த மாதிரி நாம மாறிக்கணும் இல்லைன்னா நமக்கும் கஷ்டம் நம்மளை சுத்தி இருக்குறவங்களுக்கும் கஷ்டம். இங்க யாருக்கும் வாழ்க்கை நிச்சயம் இல்லை நாம பிறக்கும் போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுருக்கும்,
இறந்து போனவரை நினைச்சு இருக்குறவங்களை கஷ்டப்படுத்தாத உன்னோட வலிய என்னால புரிஞ்சிக்க முடியிது ஆனா அதையே தாங்கிட்டு இருக்க வேணாம்னு சொல்றேன், உன்னோட ஆழமான காயத்துக்கு மருந்து தடவ ஒருத்தர் வந்தா அது நல்லது தானே?” என்றாள்.
முடிவை மறுபரிசீலனை செய்வதில் தவறில்லை ஆனால் அதுவும் தவறான முடிவாய் எடுத்து விட கூடாது என்ற எண்ணத்தில் புரியும் வகையில் எடுத்துரைக்க, விழிகள் பனிக்க பேசா மடந்தையாய் இருந்தாள் திவ்யா.
“அவசரம் இல்லை, இடையில ஒரு நாள் இருக்கு நிதானமா யோசி திவி சந்தர்ப்பம்ன்றது ஒரு முறை தான் அமையும் அதை சரியா பயன்படுத்திக்கிறதும் பிடிவாதமா விலக்கி வைக்கிறதும் நீ எடுக்குற முடிவுல தான் இருக்கு. நா சார்கிட்ட பேசிக்கிறேன்“என்று கூறிவிட்டு சென்று விட்டாள் வளர்மதி.
அவரவர் தரப்பு நியாயத்தை சொல்லிவிட்டு முடிவெடுக்கும் பொறுப்பை மட்டும் அவளிடம் ஒப்படைத்து ஒதுங்கி கொண்டனர். எடுத்த முடிவில் இருந்து சற்றும் தளர போவதில்லை பிறகு யோசனை எதற்கு?. எத்தனை சமாதானம் சொல்லி கொண்டாலும்,
கல்லெறிந்து கலைக்கப்பட்ட தேனீக்களை போல மனம் அமைதி இழந்து தவிக்க, விடுப்பு எடுத்து கொண்டு கோவில் வரை சென்று வரலாம் என்று இயற்பியல் துறை தலைமை பேராசிரியாரிடம் அனுமதி வேண்டி, அவளது துறையை நோக்கி நடந்தாள் திவ்யபாரதி.
திக்கற்றவருக்கு தெய்வமே துணை கைகளை நீட்டி மகளின் வாழ்வை சீர்படுத்த நல்வழி காட்ட வேண்டும் என்று கண்ணீர் சிந்தியபடி பூஜை அறையில் அமர்ந்து வேண்டிக் கொண்டிருந்தார் அம்பிகா.
“அவ வாழ்க்கை நல்லா இருக்கணும் அதுக்கு நீ தான் அருள் புரியணும். அவளுக்கு அமைய இருந்த வாழ்க்கைய மொத்தமா பறிச்சிட்ட அது போதாதா உனக்கு இன்னும் எவ்ளோ கஷ்டத்தை தான் கொடுப்ப. அவ வயசுக்கு பிந்தின பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் காட்சி முடிச்சு புருஷன் பிள்ளையோட சந்தோஷமா இருக்காங்க இவளுக்கு மட்டும் ஏன் இப்டி ஒரு விதிய எழுதுன?.
உன்கிட்ட சொத்து சொகம் கேட்டதில்லை சொந்தமில்லாத எனக்கு நல்ல உறவை கொடுத்த அந்த புண்ணியவதி மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வழிய காட்டுன்னு தான் சொல்றேன்” என்று வெளியே சொல்ல முடியாத, மனதில் இருந்த அழுத்தத்தை எல்லாம் குமுறலாக பழநி பெரியாண்டவரின் பாதத்தில் சமர்ப்பித்தார் அம்பிகா.
சற்று நேரம் சாந்தமாய் ‘நானிருக்கிறேன் கவலை கொள்ளாதே‘ என்று நம்பிக்கை அளிக்கும் அருள் சிரிப்புடன், ஓவியமாய் காட்சியளித்த ஒவ்வொரு கடவுளின் முகத்தையும் பார்த்து பார்த்து கண்ணீர் வடித்தவர் மனம் சற்று லேசானதை போல இருக்க எழுந்து வெளியே வந்தார்.
அதிகாலையே சிவநேசனும் நேசமணியும் ஈரோடு வரை சென்று விட, அவர்கள் சென்றதும் உள்ளே சென்று கதவை அடைத்து கொண்ட ஜெயசித்ரா காலை உணவையும் தவிர்த்துவிட்டு அறைக்குள்ளேயே முடங்கி இருப்பதை கண்டு,
“ஜெயா ஜெயா என்னமா பண்ற?”என்று கதவை தட்டினார் அம்பிகா.
மெல்ல கதவை திறந்தவர் “என்ன மதிணி“என்று அயர்வான குரலில் கேட்க,
“என்னாச்சு இவ்ளோ நேரமா உள்ளேயே இருக்க சாப்டவா சாதம் வடிச்சுட்டேன் உனக்கு பிடிச்ச பருப்பு கீரையில சிறு பருப்பு போட்டு கூட்டு மாதிரி வச்சுருக்கேன்” என்று ஆசையாய் செய்த உணவின், பக்குவத்தை சொல்லி அழைக்க,
“இல்ல மதிணி எனக்கு எதுவும் வேணாம்” என்றார் தரையை பார்த்தபடி.
“வேணாமா! நேத்து நைட்டும் சாப்டலை காலையிலயும் வேணாம்னு சொல்லிட்ட ரெண்டுவேளை வயித்தை பட்னி போட்டதுக்கே முகமெல்லாம் வாடி வதங்கி போச்சு எதுவும் பேசாமா வந்து சாப்ட்டு நெய்யை உருக்கி வச்சுருக்கேன். சூடான சாதத்துல நெய்விட்டு பருப்பு கீரையை சேர்த்து ஆசையா சாப்டுவியே இப்போ என்ன வேணாம்னு சொல்ற வா “என்றவர் கைபிடித்து இழுக்க,
“இல்லை மதிணி திவ்யா விஷயத்துல ஒரு முடிவு தெரியாம நா சாப்டுறதா இல்லை அவளுக்கு மட்டும் தான் வீம்பு பிடிக்க தெரியுமா? என்ன நடந்தாலும் சரி எடுத்த முடிவுல இருந்து நா மாற போறது இல்லை” என்றார் அழுத்தமாக.
“ஆப்ரேஷன் பண்ண உடம்பு இப்டி சாப்பிடாம இருந்தா என்னத்துக்கு ஆகும் பிடிவாதம் பண்ணாம வந்து சாப்டுட்டு மருந்தை குடி அவளை மாதிரியே நீயும் அடம்பிடிக்காத ஜெயா” என்று கண்டிப்பு காட்டி பேச,
“நா அடம்பிடிக்கலை மதிணி அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னு என்னை நானே வறுத்திகிறேன். அப்டியாவது அந்த கடவுள் நல்ல வழி காட்ட மாட்டானான்னு, நீங்க போய் சாப்டுங்க எத்தனை நாள் ஆனாலும் சரி நா மாற போறதில்லை” என்று கதவை சாத்தி கொண்டார் ஜெயசித்ரா.
யாருக்கு புத்திமதி சொல்வது என தெரியமால் விழிபிதுங்கி நின்றார் அம்பிகா. இருபதும் நாற்பதும் ஒன்றா? இருவரின் பிடிவாதமும் எதில் போய் முடியுமோ என்ற அச்சம் எழ, சிவநேசனிடம் விஷயத்தை சொல்ல கைபேசியை நாடி வேகமாக சென்றார்.
Advertisement