விடியற்காலையில் இவன் விழித்தான். குருமூர்த்தி எதுவும் பேசாமல் கைகளை கட்டிக்கொண்டு இவனை பார்த்திருந்தார்.
கசங்கிய முகம்! கலங்கிய கண்கள்! பரிதவித்த இதயம்! இந்த நொடி அவன் இப்படியாக தான் இருக்கிறான்! குருமூர்த்தி அவனை முழுதாக படித்தார்.
நீர் ஆகாரம் கிடைத்திருந்ததில் கண்கள் இப்போது நன்றாக திறந்து, தெளிந்தும் இருந்தான்.
“ம்ப்ச்” இவரை கண்டதும் ஏகத்துக்கும் சுருங்கியது அவன் முகம்.
“சாரோட உண்ணாவிரதம் நேத்தோட முடிஞ்சிருச்சு. இனியும் தொடர நினைச்சு கூட பார்க்காதீங்க” என்றார் குருமூர்த்தி.
சுயநினைவு இல்லாதப்போ கொடுத்திருப்பாங்க என்று புரிந்தது.
பதில் சொல்ல கூட அவனுக்கு விருப்பமில்லை. எத்தனை நாள்தான் போராடுவது?
“ஒரு வாரம் மட்டும் தான் உங்களுக்கான நேரம்” குருமூர்த்தி மேலும் சொல்ல,
“ஏன் அதுக்கு அப்புறம் என்னை கொன்னுடுவாங்களா?” என்று கரகர குரலில் கேட்டிருந்தான்.
“அப்போ உங்களுக்கு சண்டை செய்ய ஆசையில்லை, சாகத்தான் ஆசை” என்றார் குருமூர்த்தி.
மின்னல் வெட்டிச்சென்றது. “நான் ஜெயிச்சா என்னை என் வழியில விட்டுடணும்” என்றான் வேகமாக எழுந்தமர்ந்து.
“ஜெயிச்சா தானே? பார்ப்போம்” குருமூர்த்தி சொல்ல,
“கண்டிப்பா ஜெயிப்பேன்” அவ்வளவு உறுதி அவனிடம்.
நீண்ட நாள் போராட்டம் அவனுடையது. பல, பல வழிகளில் அவனுக்கான சுதந்திரத்தை தேடிவிட்டான். எதுவும் பலனளிக்கவில்லை.
ஓர் உயிர் பறிபோனதிற்கே துடிதுடிப்பவன், இவனால் பல உயிர்கள் அபாய நிலையை கடப்பதை எப்படி அனுமதிப்பான்?
“பணத்துக்காக செய்றாங்க. நீ இதை எல்லாம் கண்டுக்காத” என்றார்கள்.
“பணத்துக்காகன்னாலும் வேணாம். என்னை விட்டுடுங்க” என்று கத்தி கதறி தன்னை தானே துன்புறுத்தி கூட கொண்டான். ஆனால் அவன் காயத்திற்கு அதிகப்படியான காயங்கள் சுற்றியுள்ளவர்களுக்கு தான் கிடைத்தது.
இயலாமை இவ்வளவு கொடூரமானதா? எதையும் என்னால் தடுக்க முடியவில்லை. யாரையும் என்னால் காப்பாற்ற முடியவில்லை.
அந்த இயலாமையின் இறுதி தான் அவன் உணவை மறுத்தது.
“நினைச்சதை செய்ய முடியணும்? இல்லை ஒழிஞ்சு போகணும்” என்ற அவன் வைராக்கியம் மெல்ல மெல்ல அசைகிறது.
இதோ இவரால் ஏதோ, எங்கோ ஓர் வெளிச்சம் தெரிகிறது.
“நீங்க விட்டாலும் அவங்க என்னை விடமாட்டாங்க” என்றான்.
“நீங்க ஜெயிச்சா உங்களுக்கான முழு சுதந்திரம் கிடைக்கும். நீங்க செய்ய நினைக்கிறதை செய்யலாம். அதுக்கு நான் உத்திரவாதம் தரேன்” குருமூர்த்தி சொன்னவர், “தோத்துட்டா?” என்று கேட்டார்.
“என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறீங்க?”
“நான் என்ன சொன்னாலும் நீங்க கேட்கணும்” குருமூர்த்தி வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து உச்சரித்தார்.
“ஜெயிச்சா என் சுதந்திரம் என் கையில். தோத்துட்டா உங்க கையில். அவ்வளவு தானே. புரிஞ்சது. டன்” என்று கட்டை விரலை தூக்கி காண்பித்தான்.
“மனசு மட்டும் உறுதியா இருந்தா போதாது. உடம்பையும் ரெடி பண்ணிக்கோங்க” குருமூர்த்தி சொல்லி சென்றார்.
அவன் உடல்நிலை அவனுக்கும் தெரிந்து தான் இருந்தது என்பதால், காலை உணவை முழுதாக உண்டான். மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கொண்டான்.
கற்பகம் பாட்டி அவன் சமத்தாக உணவை உண்டதில், சம்யுக்தாவிடம் மகிழ்ந்து போனார்.
“இவ்வளவு நல்ல பிள்ளையா இருக்கான் தம்பி. கொடுக்கிற சாப்பாடு மொத்தமும் காலியாகிடுச்சு” என்று சொல்ல, சம்யுக்தாவிற்கு எதனால் இந்த திடீர் மாற்றம் என்று புரியவில்லை.
‘அப்பா பேசி புரிய வைச்சுட்டாரா என்ன? எப்படியோ நல்லா இருந்தா சரிதான்’ என்று நினைத்து கொண்டவளுக்கு அவனை திரும்ப சென்று பார்க்கும் எண்ணம் மட்டும் சிறிதும் இல்லை.
ரகசிய அறைக்குள் இவளை கண்டதும் குருமூர்த்தியிடம் தென்பட்ட கோவம் மகளை சற்று நிதானிக்க வைத்தது. ஆழ்ந்து யோசிக்க வைத்தது.
அந்த புதியவன் அழுதது மட்டும் தான் உனக்கு தெரியுது. மத்தபடி அவர் நல்லவரா? கெட்டவரான்னு உனக்கு எதுவும் தெரியாது சம்யு!
உன் கடந்தகாலத்தை அதுக்குள்ள மறந்திடாத! எச்சரிக்கை மணி அவளுக்குள் ஓங்கி ஒலித்ததில் பெண் தெளிந்துவிட்டாள்.
அவர் அங்கிருக்க வரை உன்னால அங்க போக முடியாது, அவ்வளவு தானே! பரவாயில்லை. அப்புறம் போயிக்கலாம். உனக்கான ரகசிய சந்தோசம் இன்னமும் உன்கிட்ட தான் இருக்கு சம்யு!
கல்லூரி, பயிற்சி, அவளின் சாம்ராஜ்யம் என்று மறுநாளே தன் வழமைக்கு திரும்பினாள்.
அன்று கல்லூரி முடிந்து வீடு வரும் போதே அவள் புருவம் சுருங்கியிருந்தது.
இரவு உணவின் போது குருமூர்த்தி, “எதாவது என்கிட்ட கேட்கணுமா?” என்று மகளிடம் கேட்டார்.
“இல்லைப்பா. எனக்கு புரிஞ்சது” என்றாள் சம்யுக்தா.
பாதுகாப்பின் தன்மை மாறியிருப்பதை மகள் ஒரு நாளிலே கவனித்துவிட்டாள் என்பதில் தந்தை கூடுதல் திடம் கொண்டார்.
“கண்ணு. அந்த தம்பிக்கு ட்ரை ப்ரூட்ஸ் மிக்ஸ் ரெடி பண்ணி கொடுக்கிறியா?” என்று கேட்டார் கற்பகம் பாட்டி.
சம்யுக்தா பதிலுக்கு தந்தையை தான் பார்த்தாள். “சரியென” அவர் தலையசைத்த பின்னே, சம்யுக்தா தயாரித்து கொடுத்தாள்.
“நல்லா இருக்கு” என்று அவன் முழுதும் குடித்து சொல்ல,
“பாப்பா தான் ரெடி பண்ணா” என்றார் கற்பகம் பாட்டி.
“பாப்பா?” அவன் புருவம் சுருங்க,
“சம்யுக்தா கண்ணு. அவதான் உங்களுக்கு நீர் ஆகாரம் கொடுக்க வைச்சா” என,
“என்ன பண்றீங்க?” என்று குருமூர்த்தி கோபத்துடன் வந்தார்.
அவனை பார்த்து செல்லலாம் என்று வந்தால், இவர் என் மகளை பற்றியல்லவா பேசி கொண்டிருக்கிறார்.
தந்தைக்கு முகம் உர்ரென ஆனது. “பாப்பா உங்க பொண்ணா?” அவன் சற்று சீண்டலாக வேறு கேட்டு வைக்க,