எங்கே எந்தன் இதயம் 01

என்னுடைய இதயம் தான் 

ஆனாலும் ஏனோ

உன்னுடைய பெயரை சொல்லியே துடிக்கிறது!

அந்த அதிகாலை வேளையில் சென்னை விமான நிலையம் தனக்கே உரித்தான பரபரப்புடன் அழகாக இயங்கி கொண்டிருந்தது. ஆனால், இந்த பரபரப்புக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை போல் கண்களை மூடியபடி காத்திருப்போர் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தான் அவன்.

வெள்ளை வேட்டி, சட்டை. வலது கையில் ஒரு வேல் வடிவ தங்கக்காப்பு, கழுத்தில் தங்க சங்கிலி என்று பார்த்தவுடனே, “கிராமத்தான்என்று கண்டு கொள்ளும்படி தான் அமர்ந்திருந்தான் அவன்.

ஆனால், ‘யார் என்ன நினைப்பார்கள்என்று எந்த சஞ்சலமும் இல்லாமல் தோரணையாக தான் அமர்ந்திருந்தான். கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும், அவனது தோற்றம் சற்று ரசிக்கும்படியாகவே இருந்தது.

அவன் சட்டையின் கைப்பகுதி அவனது முழங்கைக்கு மேலாகவே முடிந்து போயிருக்க, முதல் பொத்தானை போடாமல் விட்டிருந்ததில் அவன் மார்பின் திண்மையும், அதில் உறவாடிக் கொண்டிருந்த வெள்ளி முகப்பு பதித்த ருத்ராட்ச மாலையும் என்று அழகாக காட்சி கொடுத்தான் சக்திவேல் பாண்டியன்.

அங்கிருந்த ஒருசிலரின் கண்கள் ரசனையாக அவன் மீது படிந்து மீண்டதே அதற்கு சாட்சி. சென்னையில் உடற்பயிற்சி நிலையங்களில் கட்டமைக்கப்பட்ட உடலமைப்பையே பார்த்து பழகிப் போனவர்களுக்கு, உழைத்து உழைத்தே உரமேறிப் போயிருந்த அவன் தோற்றம் புதிதாக தானே தெரியும்.

ஆனால், எதைக் குறித்தும் கவலையற்றவனாக நிச்சலனமாக கண்களை மூடிக் கொண்டிருந்தான் அவன். முகம் இயல்பாக இருப்பது போல் வெளிப்பார்வைக்கு தோன்றினாலும், அதையும் மீறி ஏதோ ஒரு இறுக்கம் அவனிடம்.

என் அனுமதியின்றி என்னை யாரும் நெருங்கிவிட முடியாது என்று அறிவிப்பது போல், இதழ்களையும் அழுத்தமாக மடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

இரவு இரண்டு மணி விமானத்தில் மதுரையில் இருந்து சென்னை வந்து சேர்ந்திருந்தான். அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரத்திற்கு மூன்று மணிக்கே கிளம்பியிருக்க வேண்டியவன். வானிலை மாற்றங்களால் விமானம் மூன்று மணிநேரம் தாமதமாகி இருக்க, நொடிகூட சோம்பி பழக்கமில்லாதவன் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறான்.

வெளிப்பார்வைக்கு வெகு நிதானமாக தெரிந்தாலும், அவனது பொறுமை உள்ளங்கையிலிருந்து வழுக்கி விழும் நீரின் அளவில் தான் இருந்தது. மூன்றாண்டுகள் தாங்கி கொண்டிருந்தவன் தான். ஆனால், இந்த மூன்று மணி நேரத்தின்  தவிப்பு, மூன்றாண்டுகளை மிஞ்சி விடும் போல் இருந்தது.

காலநிலை கூட அவளுக்கு சாதகமாக அமைந்து சதி செய்கிறதோ என்று எரிச்சலாக உணர்ந்தாலும், செய்த தப்புக்கு தண்டனை தானே என்று தன்னைத்தானே சரிகட்டியபடி அமர்ந்திருந்தான் அவன்.

அவனது பொறுமையை சோதிக்கும் விதமாக மேலும் ஒருமணி நேரம் கடந்தபிறகே அவன் செல்ல வேண்டிய விமானம் புறப்பட்டது. விமானத்தில் ஏறி அமர்ந்தபின்பும் அவன் நிலையில் எந்த மாற்றமுமில்லை. அமர்ந்திருந்த இருக்கையில் சாய்ந்தபடி கண்களை மூடிக் கொண்டிருந்தான்.

அந்த விமானத்தில் இருந்த பணிப்பெண்களும், அவனை கடந்து சென்ற சகபயணிகளும் அவன் உடையை ஏற இறங்க பார்த்துச் சென்றதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை அவன்.

அவன் மனம் முற்றிலும் வேறெங்கோ இருந்தது. உடல் விமானத்தில் இருக்க, அவனது மனம் எப்போதோ அவனது உயிரைத் தேடிச் சென்றிருந்தது.

ஆம்அவனது உயிர்தான். ஒருசில நொடிகளில் அவன் தொலைத்துவிட்ட அவனது வாழ்க்கை அவள். அவளைத் தேடித்தான் அவனது இந்த பயணம். பயணத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் எந்த தெளிவுமில்லை அவனிடம்.

ஆனால், என்னவோ தேடலும், தவிப்பும் சலித்துப் போனதில், இதற்குமேல் பொறுக்க முடியாது என்று தனது உயிரானவளை தேடி கிளம்பிவிட்டான் அவன்

உள்ளமெங்கும் அவளே உறைந்து போயிருக்க, கண்களை மூடும் நொடியெல்லாம் கனவாக வந்து அவனை ஆட்டி வைக்கிறாள் அவள். இதுநாள் வரை அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து விலகி நின்றவன் தான் அவனும்.

உண்மையில், மிகவும் நல்லவன் அவன். அதனால் தானோ என்னவோ, அவன் செய்த தவறு அவனை நிம்மதியில்லாமல் அலைய வைத்திருக்கிறது. செய்துவிட்ட பிழைக்கும், கொண்ட காதலுக்கும் இடையே போராடித் தோற்று போனவன் அவன்.

அவன் நினைத்து இருந்தால், என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அத்தனையும் அவனுக்கு சாதகமாகத் தான் இருந்தது. இத்தனை வருட தவிப்பும், தண்டனையும் அவனுக்கு அவனே கொடுத்துக் கொண்டது தான்.

இப்போதும் செய்தது தவறு என்ற எண்ணம் இருக்கிறதுதான். ஆனால், இதற்குமேல் முடியாது எனும் நிலைக்கு வந்துவிட்டிருந்தான் சக்திவேல் பாண்டியன். அதன்பொருட்டு தான் இந்த பயணம்

மதுரை மாவட்டம் மேலமடை கிராமத்தை சேர்ந்தவன் சக்திவேல் பாண்டியன். அவன் தந்தை ஊரின் பெரிய மனிதர். தாய்மாமன் அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர். வீடு, நிலம், நீர், தொழில் என்று அத்தனையும் கொண்டவர்கள். சொந்தமாக அவர்களுக்கே பல தொழில்கள் இருந்தாலும், தன் விருப்பத்திற்கு படித்து வழக்கறிஞராவனவன் சக்திவேல்.

அவன் துறையில் அவனை யாரும் வெற்றி கொள்ள முடியாது. பேச்சு சாதுர்யத்தில் அத்தனை வல்லமை கொண்டவன். அவன் பணியோடு, தந்தையின் தொழிலையும் சேர்த்தே கவனித்துக் கொண்டு வெகுவேகமாக அவன் ஓடிக் கொண்டிருந்த சமயம் அது.

இருபத்து நான்கு வயதில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தன் பெயர் நிலைத்து நிற்கும்படி சில பெரிய வழக்குகளை வெற்றிக்கொண்ட களிப்பில் இன்னும் இன்னும் என்று அவன் முன்னேற துடித்துக் கொண்டிருந்த நேரம் அது.

அவனது உயிருக்கு உயிரான தாய்மாமனின் மானம் காப்பதாக எண்ணி தன் வாழ்வை தானே அவன் பணயமாக வைத்தது அந்த நேரம் தான். அந்த நொடிகளில் அவன் மாமா முத்துவேல் பாண்டியனின் உயிர் பெரியதாக தெரிய, எதிரில் இருப்பவள் மனதை கொஞ்சமும் அறியாமல் அவளை கூறு போட்டு விட்டிருந்தான் சக்திவேல் பாண்டியன்.

மொத்தமும் முடிந்த நிலையில் இருந்தவள் இவன் செயலில் உயிர்ப்பே இல்லாமல் போக, அவள் உயிரை மட்டுமே காக்க முடிந்தது அவனால். இதற்குமேல் முடியாது எனும் நிலையில் அவளை அவள் விருப்பத்திற்கே விட்டு விட்டிருந்தான்.

என்றாவது ஒருநாள் என்னைத் தேடி வருவாள் என்று அவன் காத்திருக்க, ஆண்டுகள் மூன்றான பின்னும், அவள் வருவதாக இல்லை என்றாகவும் அவனே கிளம்பி விட்டான்.

ஆனால், அவள் பட்ட காயமும், அதன் வலியும் இவனைவிட பன்மடங்கு பெரியதாகிற்றே. அவள் என்ன மனநிலையில் இருக்கிறாளோ… 

ஒரு பக்கத்து நெஞ்சம் அவளுக்கு சாதகமாக யோசித்தாலும், மறுபக்கம் இனி இப்படி தனித்திருக்க முடியாது என்று அவனை படுத்திக் கொண்டிருந்தது.

இதோ, பதினைந்து மணிநேர காத்திருப்புக்கு பின் அவன் கான்பெரா விமான நிலையத்தை விட்டு வெளியே வர, கையில் ஒரே ஒரு ட்ராலி பேக் மட்டுமே. இன்னும் உடையைக்கூட மாற்றி இருக்கவில்லை. அந்த விமான நிலையமே அவனை அதிசயமாக பார்த்தாலும், எதையும் கண்டுகொள்ளாமல் ஒரு டாக்சியை அமர்த்திக்கொண்டு தான் செல்லவேண்டிய முகவரியை அழகான ஆங்கிலத்தில் கூறி முடித்தான் அவன்.

ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்து இருந்தவன் கண்கள் தூரத்தில் தெரிந்த தொடுவானத்தை வெறித்தபடி இருக்க, சோர்ந்து போனவனாக அவன் கண் மூட நினைத்த நொடியில் அந்த பெரிய குடியிருப்பு வளாகத்தின் வாயிலில் நின்றது கார்.

அந்த வளாகத்தின் பத்தாவது மாடியில் தான் அவன் குடும்பம் இருக்கிறது என்று நினைக்கையிலேயே ஏதோ ஒரு இதமான உணர்வு அவனிடம். ஆனால், இந்த வாயிலுக்கும், அவள் வீட்டிற்கும் இடையில் இருந்த இடைவெளி இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட தூரத்தை காட்டிலும் அதிக தூரமாக தெரிந்தது அவனுக்கு.

தன்னை அடக்கிக் கொண்டவனாக முயன்று அடியெடுத்து வைத்தவன் ஒருவழியாக பத்தாவது தளத்தை அடைந்து, அந்த வீட்டின் முன்பு நின்றுவிட்டான். மீண்டும் வழமைப்போல் ஏதோ தடுக்க, நீண்ட பெருமூச்சொன்றை வெளிப்படுத்தி, தன்னை திடமாக்கிக் கொண்டு மிக மென்மையாக அந்த வீட்டின் வாயில் மணியை அவன் ஒலிப்பிக்க, என்றுமில்லாமல் கைகள் நடுங்கியது அவனுக்கு.

மதுரையில் தினம் தினம் குற்றவியல் வழக்குகளையும், குற்றவாளிகளையும் பார்த்து பேசி பழகிப் போயிருந்தவன் அவன். ஒருநாளும் அவர்களில் யாரைக் கண்டும் லேசாக கூட அச்சப்பட்டு பழக்கமில்லாதவன். ஆனால், இந்த சில நொடி காத்திருப்பு அவனை அச்சப்படுத்தியது.

கதவிற்கு பின் இருக்கும் அவனது பிரபஞ்சம் அவனை என்ன செய்ய காத்திருக்கிறதோ என்ற அச்சம் அவனை முழுதாக ஆட்டி வைக்க, ஒரு நொடி கண்களை இறுக மூடித் திறந்தான் சக்திவேல்.

அவன் கண்திறப்பதற்கும், முன்பிருந்த கதவு திறப்பதற்கும் சரியாக இருக்க, வெகு இயல்பாக கதவைத் திறந்தாள் ஒரு காரிகை

கருப்புநிற பேண்ட், வெள்ளை நிற முழுக்கை சட்டையில் எங்கோ செல்வதற்கு தயாரானவள் போல் நின்றிருந்தாள் அவள். விரித்து விடப்பட்ட கூந்தல் அழகாக அவளது வலப்புறத்தை மறைத்திருக்க, இடப்பாகம் அவளின் அங்க வடிவை அழகாக எடுத்துக்காட்டி கொண்டிருந்தது.

எதிரில் நின்றவனை அவளும் எதிர்பார்த்து இருக்கவில்லையே. முழுதாக ஓர் நொடி அதிர்ந்து நின்றவள் மெல்ல தன்னை மீட்டுக்கொள்ள, தன் உணர்வுகளையும் தன்னோடு புதைத்துவிட்டாள். பாதி திறந்திருந்த கதவில் சாய்ந்தபடி நின்றிருந்தவள் மெல்ல நிமிர்ந்து நிற்க, அவள் கைகள் கதவின் சங்கிலியை நீக்கிக் கொண்டிருந்தது.

எதிரில் நின்றவன், ‘நல்லவேளை துரத்தலஎன்று ஆசுவாசம் கொள்ள, அவனை வாவென்று அழைக்கவும் தயாராக இல்லை அவள்

கதவின் தாழை நீக்கியவள் ஓரடி தள்ளி நிற்க, “உள்ளே வரவா? வேண்டாமா?” என்று கேள்வி கேட்டு நின்றான் சக்திவேல் பாண்டியன்.

ம்ஹூம்அழைக்க மனமில்லை பெண்ணுக்கு. பாதி திறந்திருந்த கதவை முழுதாக திறந்துவிட்டு, வீட்டினுள் சென்று விட்டாள். சக்திவேலனும் அதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை, “முனி ஐயாஇவளை எப்படியாவது என்கூட வர வச்சிடுஎன்று வேண்டியபடியே அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தான்.

அவன் வேண்டுதலையோ, அவன் வரவையோ உணராமல் நேரே தனது அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள் அவன் மனைவி வேதவல்லி.

அவளைத் தொடர்ந்து செல்ல மனம் விழைந்தாலும், எதுவோ அவனை தடுத்து நிறுத்தியதில் சத்திவேல் ஹாலில் தேங்கி நிற்க, மெல்லிய ரீங்காரமாக காதில் விழுந்த சிறுகுழந்தையின் அழுகை ஒலி தானாகவே அவனை அந்த அறைக்குள் இழுத்துச் சென்றது.

அந்த அறையின் வாயிலில் நின்றவன் வேகமாக கண்களை சுழற்ற, கட்டிலில் வெள்ளைநிற பருத்தி ஆடையில் அழகாக கையைக் காலை ஆட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து இருந்தாள் அவன் மகள். அவன் இதுவரை ஒரே முறை மட்டுமே பார்த்து சென்றிருந்த அவன் மகள்.

மகளின் அழகில் மயங்கிப் போனவனாக சக்திவேல் நின்றுவிட, அழுகையின் சத்தத்தைக் கூட்டி அவன் ரசிப்பை தடை செய்தாள் மகள்.

மகளின் அழுகையில் பதறியவனாக, அவன் வேகமாக மகளை நெருங்கஅந்த அறையின் மற்றொரு பக்கம் இருந்த மேசைமீது கையை ஊன்றி, அதில் முகத்தை புதைத்தபடி அமர்ந்திருந்தாள் அவனது சரிபாதி. ‘குழந்தையைக் கூட பார்க்க மாட்டாளாஎன்று முட்டாள்தனமாக அவன் மனம் கோபம் கொள்ள, ‘அவ பார்க்காமல் நீயா பார்த்தஎன்று சட்டென அவன் மண்டையில் கொட்டியது அவன் மனசாட்சி.

அதன் கேள்விக்கு பயந்தாலும், அந்த நிமிடம் மகள் முக்கியமாக தெரிய, வேகமாக மகளை கையில் தூக்கிக் கொண்டான். பழக்கமில்லாத அவன் முகத்திலும், அவன் தொடுகையிலும் இன்னும் சத்தமாக அழுது ஊரைக் கூட்டினாள் அவன் பெண்ணரசி.

வேதவல்லி அப்போதும் அசையாமல் இருக்க, குழந்தையின் சத்தத்தில் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தார் கண்ணம்மா. சக்திவேலைப் பார்த்து ஆனந்தமாக அதிர்ந்து போனார் அவர்.

தம்பிவாங்க தம்பி. எப்படி இருக்கீங்க?” என்று அவர் ஆர்ப்பரிக்க

முதல்ல இவளைப் பாருங்கஎன்று மகளை அவர் கையில் கொடுத்தான் சக்திவேல்.

என்னவாம் இவளுக்கு? அவ அம்மா வேலைக்கு புறப்படற நேரம் மட்டும் சரியா தெரியும் இந்த குட்டிக்கு. அதுக்குதான் இந்த அழுகை. அழாதடா செல்லம்உன் அப்பா வந்திருக்கார் பாரு. அப்பா பாருடாஎன்று அவர் பிள்ளைக்கு தந்தையை அறிமுகம் செய்த நொடி, வேதவல்லி அமர்ந்திருந்த மேசையின் மீது இருந்த அலங்கார பீங்கான் ஜாடி பட்டென்ற சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்து போனது.

அந்த பீங்கான் துண்டுகளைப் போல் தான் தன் வாழ்க்கையும் சில்லு சில்லாக சிதறிக் கிடக்கிறதோ என்று யோசிக்கையிலேயே ஓய்ந்து போனவனாக கட்டிலில் தோய்ந்து அமர்ந்துவிட்டான் சக்திவேல்.

கண்ணம்மா, “வேதாம்மா.” என்று அவளை நெருங்க, அவர் கையில் இருந்த தனது மகளை மட்டும் கையை நீட்டி வாங்கிக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் வேதவள்ளி.

இந்த இடைப்பட்ட நொடிகளில் தெளிந்தவனோ, “மறுபடியும் எங்கே போறாஎன்று பதறியவனாக எழுந்து அவளை தொடர, “கீழே பார்க்கு இருக்கு தம்பி. அங்கன தான் உட்கார்ந்திட்டு இருப்பாங்க.”  என்று செய்தி சொன்னார் கண்ணம்மா.

அவர் பேச்சைக் காதில் வாங்கியபடியே வேகமாக வீட்டை விட்டு அவன் வெளியேற, அதற்குள் அந்த தளத்தின் ஒருமுனையில் இருந்த மின்தூக்கியை நெருங்கி இருந்தாள் வேதவள்ளி

சக்திவேல் அவளைக் கண்ட நொடியில், மின்தூக்கியின் கதவு திறந்து கொள்ள, மூச்சிறைக்க ஓடிவந்து கடைசி நொடியில் தானும் மின்தூக்கிக்குள் நுழைந்து கொண்டான் அவன். அவனை ஆயாசமாகப் பார்த்தவள் மின்தூக்கியில் சாய்ந்து நின்றபடி கண்களை மூடிக்கொள்ள, அவளை நெருங்கி அவள் அருகில் நின்று கொண்டான் சக்திவேல்.

எதிரில் இருந்த கண்ணாடியில் இருவரின் பிம்பமும் அருகருகே தெரிந்தாலும், மருந்திற்கும் சிரிப்பில்லாத தங்கள் முகங்களை காணச் சகிக்காதவனாக தானும் கண்களை மூடிக் கொண்டான் அவன்.

எப்போதோ, தங்கள் ஊர்திருவிழாவில் தன் கையைப் பிடித்தபடி அவள் கிளுக்கி சிரித்த நொடிகள் அவன் கண்முன் கனவாக நிழலாட, அவள் சிரிப்பை மீட்கும் வழியறியாமல் நின்றான் கணவன்.