Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 25

                             துர்காவிற்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பு முடிந்திருக்க, வயிறு சற்றே பெரியதாக காணப்பட்டது. தன் வீட்டு சோஃபாவில் கால்களை நீட்டி கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். டீவியை பார்த்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, வள்ளி உள்ளே சமையல் அறையில் இருந்தார்.

                               துர்கா அவள் பாட்டிற்கு சேனலை மாற்றிக் கொண்டே அமர்ந்திருக்க, டிவியில் பிரேக்கிங் நியூஸ் போய்க் கொண்டிருந்தது. பக்கவாட்டில் சண்முகநாதனின் படம் தெரிய கீழே ட்ரோல் ஓடிக் கொண்டிருந்தது. விஷயம் என்னவென்றால் சண்முகநாதன் கூவத்தின் கரையோரம் பிணமாக கிடந்தான் என்பதே.

                             அடையாளம் தெரியாமல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவன் முகம் தெளிவாக இருந்தது. அவனை கொன்றவர்களுக்கு அவன் அடையாளம் தெரிவது தேவையாக இருந்ததோ என்னவோ. ஆனால் முகம் தெரிந்தது என்று ஆறுதல் பட்டுக் கொள்ள முடியாத அளவுக்கு கொடூரமான மரணம் அவனுடையது.

                              அவன் இடுப்பு பகுதி முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டு இருக்க, அவன் பிறப்புறுப்புக்கள் அறுத்து எறியப்பட்டு இருந்தன. அதோடு விடாமல் அவன் கை, கால்கள் என்று அத்தனையும் சொல்ல முடியாத அளவிற்கு சின்னா பின்னமாகி இருந்தது. சமூக ஆர்வலர்கள் சிலர் இறந்து போன அவனுக்காக பரிதாபப்பட்டு தொலைக்காட்சியில் மனிதம் எங்கே போகிறது என்று பேசிக் கொண்டிருக்க, பார்த்துக் கொண்டிருந்த துர்காவுக்கு எரிச்சலாக இருந்தது.

                          அவன் இறப்புக்காக துளி கூட கவலைப்பட வில்லை அவள். திருவின் மூலம் அவனை பற்றிய செய்திகளை முழுதாக அறிந்திருந்தவள் என்பதால் எத்தனை பேரை படுகுழியில் தள்ளி இருப்பான்?? என்றே எண்ணமிட்டாள் அவள்.

                       அவளுக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை. சண்முகநாதனை போலீசார் கைது செய்ததாக திரு சொல்லி இருக்க, அவன் எப்படி கொலை செய்யப்பட்டிருப்பான் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது, தொலைக்காட்சியில் எஸ்பி ருத்ரா கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.

                     அப்போது தான் சண்முகநாதனை முதல்முறை பார்ப்பவள் போல் கவனமாக பார்த்துக் கொண்டவள் தன்னுடன் வந்த அதிகாரிகளுடன் ஏதோ பேசிக் கொண்டே நிற்க, பத்திரிக்கைகளும், தொலைக்காட்சியும் அவளை கேள்வி கேட்க துடித்துக் கொண்டிருந்தனர். பொறுமையாக தன் ஆலோசனையை முடித்துக் கொண்டவள் அங்கிருந்து சற்றே நகர்ந்து வந்து அதன் பிறகே நிருபர்களை சந்தித்தாள்.

                         நிருபர்கள் அவளிடம் இறந்தவனை பற்றிக் கேட்க “நாங்களே தேடிட்டு இருந்த ஒரு குற்றவாளிதான் அவன்.. அவனோட தொழில் எதிரிங்க யாராவது செஞ்சிருக்கலாம்..” என்று சாதாரணமாகி கூறினாள் ருத்ரா.

                        இன்னொருவர் “அது எப்படி மேடம் அவ்ளோ சாதாரணமா சொல்றிங்க… ஒரு உயிர் போயிருக்கு… நீங்க சட்டம் ஒழுங்க பாதுகாக்கிற ஒரு அதிகாரி.. நீங்க எப்படி இத்தனை அலட்சியமா பதில் சொல்லலாம்” என்று கொதிக்க

                         ருத்ரா அந்த நபரை கூர்மையாக பார்த்தவள் “உங்களுக்கு தெரிஞ்ச போதை பொருட்கள் ஒரு நாலு சொல்லுங்க..” என்று கேள்வி கேட்டாள். அவர் திருப்தியாக பார்க்க “சும்மா சொல்லுங்க.. உங்க கேள்விக்கு பதில் சொல்லத்தான் கேட்கிறேன்..” என்றாள்.

                         அவர் “கஞ்சா, குட்கா, ஹெராயின்..” என்று ஆரம்பிக்க

           கைநீட்டி தடுத்தவள் “ரோஹிப்னால்,கேட்டமைன்,கிரிஸ்டல் மெத்,MDMA,ஸ்பீட்பால்.. இதெல்லாம் என்ன ன்னு தெரியுமா?? என்று கேள்வி எழுப்ப, யாரிடமும் பதில் இல்லை.

                  அவர்களை ஒரு பார்வை பார்த்தவள் “இதெல்லாம் மெடிக்கல் ட்ரக்ஸ்.. பல நாடுகள்ல தடை பண்ணிட்டாங்க.. ஆனா இதெல்லாம் சென்னையில ஈஸியா கிடைக்குறதுக்கு இவனும் ஒரு காரணம். நீங்க வழக்கமா கேள்விப்படற ஹெராயின், கோகைன் இது எல்லாம் சும்மா ஜுஜுபி…

                  “நான் மேல சொன்ன ட்ரக்ஸ் எல்லாம் கொஞ்ச நாள்ல உயிரையே குடிச்சிடும். அதுவும் போதைக்காக தேடி போறவனுங்களுக்கு இதை கொடுத்தா கூட பரவால்ல. அப்பாவி பொண்ணுங்க படிக்கிறதுக்காக, வேலைக்காக ன்னு சென்னைக்கு வர பொண்ணுங்களை ஆசை வார்த்தை பேசி, மசியலைன்னா கடத்திட்டு வந்து வலுக்கட்டாயமா இந்த கருமத்தை எல்லாம் கொடுத்து பல பணக்கார நாய்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இரையாக்கிட்டு இருந்து இருக்கான்.

                   போன வாரம் நடந்த நாலு என்கவுண்டரும் இந்த கேஸ் சம்பந்தப்பட்டது தான். இவனை நானே தேடிட்டு இருந்தேன்.. யாரோ முடிச்சிட்டாங்க. அவன் வாயைத் திறந்தா தான் மாட்டிக்குவோம் ன்னு நெனச்சு கூட செஞ்சிருக்கலாம்.. விசாரணையை தொடங்கிட்டோம்..

                       குற்றவாளியை பிடிச்சதும் உங்களை மீட் பண்றேன்.” என்றுவிட்டு நகர்ந்து விட்டாள் அவள்.

                                 இங்கே துர்கா தொலைக்காட்சியை ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பேச்சும்,பேசிய தோரணையும் லேசான அச்சத்தை கொடுத்தது நிஜம். அவள் கண்களில் தெரிந்த நேர்மையையும், தீட்சண்யத்தையும் சிலாகித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் துர்கா.

                             அவள் அன்னை உணவுடன் வரவே சிந்தனை கலைந்தவள் அவரிடம் விஷயத்தை கூற வள்ளிக்கு நிம்மதியாக இருந்தது. இனி தன் பெண் வாழ்வில் எந்த சங்கடமும் வராது என்று நினைத்துக் கொண்டவராக உணவை பிசைந்து அவளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார் வள்ளி.

                            அவள் உண்டு முடிக்கும் நேரம் திரு வீட்டிற்கு வர,  அவனுக்கு உணவை எடுத்து வைக்க சென்றாள் துர்கா. அவனே வேண்டாம் என்று சொல்லியும் கூட இந்த பழக்கத்தை துர்கா விடுவதாக இல்லை. சரியாக அவன் வரும் நேரம் அவனுக்கு உணவை எடுத்து வைப்பவன் அவன் அருகே அமர்ந்து கொள்வாள்.

                          வள்ளியும் திரு வரும் நேரங்களில் மேல் வீட்டிற்கு சென்று விடுவதால், வசதியாக போகும் துர்காவுக்கு. திருவை ஒட்டிக் கொள்பவள் அந்த ஒரு மணி நேரமும் அவனுடன் தான். அவன் சாப்பிட்டு முடிக்கும் போது அவளுக்கும் இரண்டு வாயாவது ஊட்டி இருப்பான் திரு. சலித்துக் கொண்டே என்றாலும் அவன் ஊட்டிவிடுவதை ஆசையாக வாங்கி கொள்வாள் துர்கா.

                           இன்றும் அதுபோலவே திரு ஊட்டி முடிக்க, வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சோர்ந்திருக்கிறாள் என்பது முதல் பார்வையிலேயே புரிந்தது திருவுக்கு. ஆனாலும் முகம் பொலிவாக இருக்க அறிந்து கொள்ளும் ஆவலில் தான் “என்னடி விஷயம்.. முகம் மின்னுது” என்று அவன் கேட்க

                      “ஆமாம்.. இன்னிக்கு நியூஸ் பார்த்திங்களா.. அந்த சண்முகநாதன் செத்துட்டான்..” என்று அவள் சொல்லும்போதே “தெரியும் துர்கா.. மார்க்கெட்ல பேசிகிட்டாங்க. ஆனா அதுக்கு நீ ஏன் இவ்ளோ சந்தோஷமா இருக்கணும்…”

                      “அவன் எப்படி போனா எனக்கென்ன.. அந்த எஸ்பி பேசினாங்க பாருங்க டீவில. நெஜமாவே சூப்பர் திரு. என் பொண்ணை அப்படிதான் வளர்க்கணும்.. என்னை மாதிரி பயந்தாங்கொள்ளியா வளர்க்கவே மாட்டேன். அவ்ளோ பேர் முன்ன எத்தனை தைரியமா பேசுச்சு தெரியுமாங்க..” என்று அவள் சிலாகித்துக் கொண்டிருக்க, திரு அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

                  அவனுக்கு தான் அந்த எஸ்பியை சந்தித்த முதல் நாள் “இந்தம்மா எப்படி அவனை பிடிக்கும்” என்று நினைத்தது அசந்தர்ப்பமாக இப்போது நினைவு வந்தது திருவுக்கு. ஆனால் அவன் எண்ணம் தவறு என்று அடுத்த ஒரே வாரத்தில் அந்த அதிகாரி நிரூபித்து இருக்க, சென்னையின் பெரிய தலைகள் என்று கூறப்பட்டவர்கள் அத்தனை பெரும் பம்மிக் கொண்டிருந்தனர் அவள் முன்னால்.

                  இப்போது தன் மனைவியும் அவளை பற்றியே பேச, நல்ல போலீஸ் என்றுதான் திருவும் நினைத்தான். என்னவோ அன்று துர்காவை விட்டுச் செல்லும் எண்ணமே இல்லாதவன் போல் திரு அமர்ந்து இருக்க, அவன் தரையில் கால் நீட்டி அமர்ந்திருக்கவும், துர்கா அவன் காலில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

                   வள்ளி கீழிறங்கி வந்தவர் இவர்களை பார்த்துவிட்டு மீண்டும் மேலே சென்றுவிட, நல்ல உறக்கம் துர்காவுக்கு. அவள் எப்போதாவது தான் இப்படி அசந்து தூங்குவதால் திருவும் அவளை எழுப்பாமல் அமர்ந்து கொள்ள இரண்டு மணிநேரம் கழித்தே எழுந்து கொண்டாள் அவள்.

                   எழும்போதே ஏதோ மாற்றம் தெரிய, லேசாக வலிப்பது போலவும் இருந்தது துர்காவுக்கு.. சமாளித்துக் கொண்டு அவள் மெதுவாக நடமாடிக் கொண்டு இருக்க, அன்று மாலையே முழு வீரியத்துடன் வலி எடுக்கவும் மருத்துவமனையில் அனுமதித்து விட்டான் திரு.

                    உள்ளே அவள் வலியில் துடித்துக் கொண்டிருக்க, வெளியே திரு கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தான். மிகவும் கடினமான இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களின் செல்லமகன் பூமிக்கு வர, துர்கா மயங்கி இருந்தாள்.

                    அங்கிருந்த செவிலி குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து திருவிடம் கொடுக்க, ம்ஹும் வாங்கவே முடியவில்லை அவனால். கைகளின் நடுக்கம் நிற்கவே இல்லை. அந்த செவிலி சிரித்துக் கொண்டே குழந்தையை நீட்ட, வள்ளி வாங்கி கொண்டார்.

                      அவர் கையில் இருந்த குழந்தையை அத்தனை மெதுவாக திரு தொட்டு பார்க்க, பஞ்சுப்பொதி போல அழுந்தியது அவன் கன்னம். கண்களில் கண்ணீருடன் தன் குழந்தையை அவன் பார்த்துக் கொண்டே நிற்க, வள்ளியும் நெகிழ்ந்து தான் இருந்தார்.

                       குழந்தை அப்படியே துர்காவை கொண்டிருக்க, திருவுக்கு அந்த கண்களை பார்த்ததுமே புரிந்துவிட்டது அவன் குட்டி துர்கா என்று. கண்ணை சிமிட்டி கொண்டிருந்த மகனின் அழகில் அவர்கள் லயித்து போயிருக்க, அந்த செவிலி மீண்டும் குழந்தையை வாங்கி கொண்டு சென்றுவிட்டார்.

                          அடுத்த இரண்டுமணி நேரத்தில் துர்காவை அறைக்கு மாற்றிவிட, குழந்தையும் அவள் அருகே தொட்டிலில் கிடத்தப்பட்டு இருந்தது. திரு துர்காவின் அருகில் அமர்ந்திருக்க, வள்ளி துர்காவை ஏற்கனவே பார்த்திருந்தவர் வீட்டிற்கு சென்றிருந்தார். துர்காவிற்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதற்காக அவர் கிளம்பி இருக்க திரு மட்டும் துர்காவுடன்.

                          துர்கா மெதுவாக கண்விழிக்க, அருகே திரு கண்களில் கண்ணீருடன்… சட்டென என்ன தோன்றும் அவளுக்கு. குழந்தையின் சத்தத்தை கேட்டு இருந்தாலும் கூட, அவன் கண்ணீரில் பதறிப் போனாள் பெண். அவள் வேகமாக எழ முற்பட, திரு அவளை பிடித்துக் கொண்டவன் “எதுக்குடி இப்படி வேகமா..” என்று கேட்க

                    துர்கா “என் குழந்தை.. குழந்தை எங்க ” என்று திருவையே கேட்டு வைத்தாள். அப்போதுதான் அவளை புரிந்து கொண்டவன் அருகில் இருந்த தொட்டிலை காண்பிக்க, அப்போதுதான் சரியாக மூச்சு வந்தது துர்காவுக்கு. தளர்ந்து அவள் கட்டிலில் விழ, திரு அவள் உட்காருவதற்கு ஏதுவாக அந்த கட்டிலை நிமிர்த்தி வைத்தவன் துர்காவின் அருகில் அமர்ந்து கொண்டான்.

                           துர்கா அவனை முறைத்தவள் “அறிவிருக்கா.. எதுக்கு அழுதுட்டு இருந்திங்க..” என்று அடிக்குரலில் அவனை திட்ட, உரைக்கவே இல்லை திருவுக்கு. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் உதடுகள் சிரிக்க, கண்கள் மீண்டும் குளமாக தொடங்கவும் துர்கா அவன் கன்னத்தை தாங்கியவள் “என்னங்க என்ன ஆச்சு.. ” என்று இதமாக கேட்க

                      “உனக்கு வலிக்காது இல்ல..” என்று சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்டான். துர்கா அவனை புரிந்தவளாக கையை விரிக்க, அவளை முழுவதுமாக அணைத்துக் கொண்டவன் அவள் கன்னத்தில் முத்தமிட, துர்காவுக்கும் கண்கள் கலங்கி போனது.

                        திருவின் தோளில் தட்டிக் கொடுத்த துர்கா விலகி அமர்ந்து “என்ன சொல்றான் உங்க பையன்..” என்று கேட்க

                       “அவனா.. அவன் என்ன சொன்னான்.. அம்மாவை மாதிரியே முறைக்கிறான் இப்போவே..” என்று திரு சொல்லவும்

                    “எனக்கு பார்க்கணும் திரு.. தூக்கி காட்டுங்களேன்..” என்று பாவமாக கேட்டாள் துர்கா..

                   “ஹேய்.. எனக்கு தூக்கவே தெரியலடி.. பயமா இருக்கு..” என்று திரு பயத்தோடு கூற

               “அதெல்லாம் தூக்கலாம்..போங்க. நான் சொல்றேன்.. அப்படியே தூக்குங்க..” என்று கூறியவள் அவன் தொட்டில் அருகே செல்லவும், குழந்தையை எப்படி தூக்குவது என்று அவனுக்கு பாடம் எடுக்க, அவள் கூறியது போல் முதலில் கழுத்திற்கு அடியில் கையை கொடுத்து பிடித்துக் கொண்டவன் அப்படியே குழந்தையை வாகாக தூக்கி கொள்ள அந்த பஞ்சுப்பொதியை நோக்கி கையை நீட்டினாள் துர்கா.

                  திரு குழந்தையை அவள் கையில் கொடுக்க, பழக்கப்பட்டவள் போல் இயல்பாக வாங்கி கொண்டவள் மார்போடு அணைத்து பிடித்துக் கொண்டாள். அதன் நெற்றியில் முத்தமிட்டு “குட்டி திரு தான்.. ” என்று திருவை பார்த்து கூற, திரு அவள் நெற்றியில் முத்தமிட்டு தானும் புன்னகைத்தான்.

                       இருவருமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்க அவர்கள் மகன் சத்தம் எழுப்பி தன் இருப்பை காட்டிக் கொண்டான். துர்கா அவனை கவனித்தவள் “என்னடா குட்டி பசி வந்துடுச்சா…” என்று குழந்தையை கொஞ்சி கொண்டிருக்க, திரு ஆசையாக அவர்களை பார்த்துக் கொண்டே நின்றான்.

                      திரு அவளையே பார்ப்பதை உணர்ந்தவள் “அட.. திரு சார், இங்கே வாங்க… உங்க மொத்த பீலிங்சையும் இப்போவே கொட்டிட்டா எப்படி.. இன்னும் அஞ்சு இருக்குல நம்ம லிஸ்ட்ல..” என்று கண்ணை சிமிட்ட

                      திரு அதிர்ந்து போய் எழுந்தவன் ஓரடி தள்ளி நின்றுவிட்டான். ‘ஹேய்.. உனக்குலாம் பயமே இல்லையாடி… இதுக்கே எனக்கு அரை உசுரு போயிருச்சு.. இவனே போதும்.. இதுக்குமேல எல்லாம் என்னால தாங்க முடியாது..” என்று அவன் தீவிரமான குரலில் கூற

                      “யோவ்.. பெத்துக்கற நானே கவலைப்படல… நீ ஏன்ய்யா இப்படி இருக்க..” என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள் துர்கா.

                     “அடிப்பாவி..” என்பது போல் திரு வாயில் கையை வைத்து “என்னை அந்த பாடு படுத்திட்டு இப்போ கேள்வியா கேட்கிற.. நீ கேட்படி.. ” என்று அவளை முறைத்தான் திரு.

                 துர்கா அவனை பார்த்து சிரித்தவள் “பாப்பா வேண்டாமா..” என்று மீண்டும் கேட்க, திரு அவளை முறைத்து பார்க்கவும் “இவனை கேட்டேங்க..” என்று கண்ணை சிமிட்டினாள் மனைவி.

                        திரு அவள் அருகில் அமரவும் அவன் மடியில் குழந்தையை படுக்க வைத்தவள் அவனை தொட்டுப் பார்த்து விளையாடிக் கொண்டிருந்தாள். துர்காவை பார்த்தால் குழந்தை பெற்ற பெண் போலவே தோன்றாது அத்தனை இயல்பாக இருந்தாள் அவள்.

                      முகத்தில் லேசாக தெரிந்த சோர்வை தவிர, அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த இரண்டு நாட்களில் மருத்துவர்கள் அவளை வீட்டிற்கு அனுப்பிவிட, குழந்தை நாள் முழுவதும் வள்ளியிடம் தான். தன் பேரனை கொஞ்சி கொஞ்சியே மாய்ந்து போனார் வள்ளி.

                    சில சமயம் “அப்படியே திருதான் துர்கா.. எவ்ளோ சமத்து பாரேன் என் பேரன்..” என்று கொஞ்சி கொள்பவர், சில சமயங்களில் அவன் அழுகையோடு படுத்தி வைக்கும்போது “அப்படியே உன் அம்மாவை கொண்டு பிறந்து இருக்கடா நீ.. கொஞ்சமாவது அடங்குறியா..” என்று அதட்டவும் செய்வார்.

                  அந்த நேரங்களில் திரு சிரித்துக் கொண்டே பார்க்க, துர்கா அன்னையை முறைத்து கொண்டே சுற்றுவாள்.

Advertisement