Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 21

                                  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த துர்காவிற்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பியது. மெதுவாக கண் விழித்தவள் முதலில் கண்டது அருகில் அமர்ந்திருந்த திருவைத் தான். அவளுக்கு கோவிலில் நடந்தது நினைவு வர, கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது. இப்போது திரு அருகில் இருப்பதால் பயம் இல்லை என்றாலும், அவர்கள் கடத்தி போயிருந்தால் என்று நினைக்கும் போதே பிடிக்கவில்லை.

                                 திரு அவள் கண்ணீரை கண்டவன் “இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க… சொல்றது எதையுமே கேட்கமாட்ட.. அப்புறம் உட்கார்ந்து அழுவியா??” என்று அதட்ட, தன் தவறு பெரிதாக தெரிந்தது அவளுக்கு. அவர்கள் கையில் சிக்கி இருந்தால் தான் என்னவாகி இருப்போம் என்று நினைத்தவளுக்கு பயமே மிஞ்சியது.

                                கட்டிலில் இருந்த திருவின் கையை அவள் இறுக்கமாக பற்றிக் கொள்ள, அந்த கைகளின் நடுக்கம் திருவை பாதித்தது. பயந்து போயிருக்கிறாள் என்பது புரிய, எழுந்து கட்டிலில் அவள் அருகில் அமர்ந்தவன் “ஒன்னும் இல்லடி.. அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே… இப்போ ஏன் இவ்ளோ பயப்படற..” என்று கூறி அவளை தூக்கி அணைத்துக் கொண்டான்.

                                 எதுவுமே பேசாமல் அவனிடம் ஒண்டிக்கொண்டாள் அவன் மனைவி. அவன் கையில் இருந்த கட்டு இன்னமும் அவள் கண்களில் படவில்லை. திருவும் அப்போது அதை மறந்திருக்க, மனைவி மட்டுமே நினைவில் நின்றாள். அவளின் பயத்தை உணர்ந்தவன் “துர்கா… அவனை போலீஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்கடி.. இனி நீ நிம்மதியா இருப்ப ன்னு பார்த்தா உட்கார்ந்து அழுதிட்டு இருக்க.. நியாயமா நாம இப்போ சந்தோஷப்படணும்…” என்று அவனுக்கு தெரிந்த வகையில் அவன் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

                                 ஆனால் துர்காவின் மனமோ, எதுவும் நடந்திருந்தால்??? என்று அதிலேயே உழன்று கொண்டிருந்தது. திரு எத்தனை முறை எச்சரித்து இருந்தும் தனியாக சென்ற தன் மடத்தனம் இப்போது பெரிதாக தெரிந்தது. ஒரு பெண்ணாக அவளின் அந்த அலட்சியத்தால் நேரவிருந்த தவறை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

                                   திரு மட்டும் வராமல் போயிருந்தால் என்பதே மீண்டும் தோன்ற திருவை அணைத்திருந்த கைகளின் அழுத்தம் கூடியது. திருவும் அவளை உணர்ந்தவனாக இறுக்கி கொண்டாலும், “போதும்டி.. ஹாஸ்பிடல்ல இருக்கோம்..” என்று நினைவுபடுத்த, தன்நிலை உணர்ந்தவள் மெல்ல விலகி அமர்ந்தாள். திருவும் சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன் “என்னை மீறி எவனும் உன்னை தூக்க முடியாது… இந்த ஜென்மத்துக்கு நீ எனக்குதான்..” என்றவன் மீண்டும் அவளை அழுத்தமாக அணைத்து விடுவித்தான்.

                       துர்காவுக்கும் திருவின் இந்த செயல் அத்தனை பிடித்திருந்தது.. அவனின் உரிமையான பேச்சும், அதை உணர்த்தும் பார்வையும் என்று திருவை ரசித்துக் கொண்டிருந்தவள் அப்போதுதான் அவன் கையை கவனித்தாள். கையிலிருந்த கட்டை கண்டவள் பயந்து அவன் கையை பிடிக்க “சண்டையில கிழியாத சட்டை எங்கிருக்கு..” என்று அசால்ட்டாக சொன்னவன் கையை இழுத்துக் கொண்டான்.

                      துர்கா அவன் முகத்தை பார்த்தவள் “கவனமா இருக்க மாட்டிங்களா.. காயம் ரொம்ப பட்டுடுச்சா..” என்று பதற,

                      “பின்ன.. அவனுங்க ஆறு பேரு.. மாமன் ஒரே ஆளு.. சுழட்டி சுழட்டி அடிச்சாலும், ரத்தமே வராம எப்படி சண்டை போடறது..” என்று இலகுவாகவே கேட்டான்.

                                        துர்கா அவன் பேசியதை கேட்டாலும் அவன் கையையே பார்த்துக் கொண்டிருந்தாள். “அய்யய… விடுடி.. இது அவ்ளோ பெரிய காயம் எல்லாம் இல்ல.. இவனுங்க கட்டை பெருசா போட்டு கையை மூடிட்டானுங்க…” என்று அலுத்துக் கொண்டான். துர்கா அவனையே பார்க்க “வீட்டுக்கு போலாமா.. உனக்கு இப்போ பரவால்லையா.. ” என்று மீண்டும் கேட்டான் திரு.

                      துர்கா சம்மதமாக தலையசைக்கவும், திரு மருத்துவமனை பில்லை கட்ட சென்றான். துர்காவுக்கு திருவின் இந்த பல்வேறு பரிமாணங்கள் இன்னுமின்னும் பிடித்தது. தன் முகம் வாடவும் தான் இப்படி பேசி செல்கிறான் என்று புரிந்து கொண்டவள் இன்னும் அதிகமாக அவனை காதலிக்க வேண்டுமோ?? என்று நினைக்க ஆரம்பித்து விட்டாள்.

                      இவளின் யோசனையில் இவள் இருக்க, திரு மருத்துவமனை பில்லை கட்டிவிட்டு வந்துவிட்டான். இருவரும் வீடு வந்து சேர, திரு இரவு உணவு வாங்கி வருவதற்காக மீண்டும் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

                          அவனின் வண்டியை தேவாவை வைத்து எடுத்து வந்திருக்க, அவனுக்கும் அங்கு சென்றபிறகு தான் முழுதாக என்ன நடந்தது என்பதே தெரியும்.

                       அவன் பதறி திருவிற்கு அழைத்து விவரம் கேட்க, அவனிடம் நடந்ததைக் கூறியவன் வள்ளியிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடித்து விட்டான். வள்ளிக்கு இப்போது வரை நடந்த விஷயங்கள் எதுவுமே தெரியாது. சரத்திற்கும் தேவாவே விவரம் சொல்லிவிட,அவன் அழைத்தபோதும் கூட திரு தானே சமாளித்துக் கொள்வதாக கூறிவிட்டான்.

                         திரு உணவை வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழையும் நேரம் துர்கா கிச்சனில் இருந்தாள். திரு என்ன செய்கிறாள் என்று எட்டிப்பார்க்க, அடுப்பில் பால் காய்ந்து கொண்டிருந்தது.

                                கையில் இருந்த உணவுகளை சமையல் மேடையில் வைத்து விட்டவன் மனைவியை பின்னிருந்து இடையோடு அணைத்து கொண்டான்.

                        துர்காவும் அவனோடு இழைந்து கொண்டு நிற்கவும் உற்சாகமானவன் அவள் கழுத்தில் லேசாக முத்தமிட்டு “என்னடி பண்ணிட்டு இருக்க.. நான் வந்து செஞ்சி இருப்பேன்ல..” என்று கேட்க

                                     “எப்படி ஒரே கையில பால் காய்ச்சுவிங்களா..”  என்று நக்கலாக கேட்டவள் “போய் குளிச்சுட்டு வாங்க..” என்று அவனை துரத்த பார்க்க,

                       “ஏண்டி துரத்தி விடற.. குளிக்கலாம்..” என்று இழுக்க

                “ஹாஸ்பிடல் போயிட்டு வந்து குளிக்காம சுத்திட்டு இருக்கீங்க.. போய் குளிங்க முதல்ல.. கையில தண்ணி படக்கூடாது.. ஞாபகம் வச்சுக்கோங்க..”

               “தண்ணி படாம எப்படி குளிக்க முடியும்.. நீ வா என்னோட.. வந்து சொல்லிக்கொடு..” என்ற திரு அவளையும் சேர்த்தே இழுக்க

              அவனை விட்டு தள்ளி நின்றவள் “நான் இப்போதான் குளிச்சிட்டு வந்தேன்.. நீங்க தனியாவே போங்க..” என்று நக்கலாக சொல்ல

                     “கையில தண்ணி பட்டுட்டா என்னை கேட்க கூடாது பார்த்துக்கோ…” என்று திரு சொல்லிக்கொண்டே நிற்க, கிச்சனில் இருந்த ஒரு பாலிதீன் கவரை அவன் கையை சுற்றி கட்டி விட்டவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

                 “இப்போ எப்படி படும்” என்று அவனை கேட்க வேறு செய்ய, திரு அவளை முறைத்துக் கொண்டே வெளியேறினான். துர்கா புன்னகையுடன் நிற்க அவன் சென்று அடுத்த சில நொடிகளில் “துர்கா..” என்று சத்தமாக அழைத்தான் திரு.

                     இவள் அடுப்பை அணைத்து விட்டு வேகமாக உள்ளே நுழைய, திரு சாதாரணமாக நின்று  கொண்டிருந்தான். “எதுக்கு கத்தினார்” என்பது போல அவள் பார்க்க, திருவோ “இந்த பட்டனை கழட்டிவிடு..” என்று கூறினான்.

                      அவன் சட்டையின் பட்டன்களை பார்த்தவள் திருவை முறைக்க, அவனோ பாவமாக அவளை பார்த்தவன் “இங்கே பாருமா.. கையில காயம் எப்படி கழட்ட முடியும்..” என்று அசையாமல் நின்றான்.

                       துர்கா அவனை நெருங்கியவள் முறைப்புடனே அவன் சட்டையின் பட்டன்களை கழட்டிவிட, அவளின் வாசத்தை உணர்ந்து கொண்டு கண்மூடி கிரங்கித் தான் நின்றான் அவன்.

                    அவன் சட்டையை கழட்டி விட்டவள் அவன் கையை பிடித்து அவனை குளியலறைக்குள் இழுத்து விட்டாள்.. “இதுக்குமேல கூப்பிடுங்க.. அப்புறம் பேசிக்குறேன்..” என்றவள் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

                     அடுத்த சில நிமிடங்களில் திரு குளித்து வந்துவிட, துர்காவும் தன் வேலையை முடித்து விட்டாள். திரு வந்து அமரவும் அவனுக்கு உணவை எடுத்து வைத்தவள் அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

                        உணவை தன் கைகளில் எடுத்துக் கொண்டவள் பிசைந்து அவன் வாய்க்கு நேராக நீட்ட, உணர்ச்சிகரமான தருணம் தான் திருவுக்கு.

                     சிறு வயதில் அவன் அன்னை அவனுக்கு ஊட்டிவிட்ட தருணங்கள் ஏதோ மங்கலான கனவுபோல கண்முன் வந்து போக, கண்கள் கலங்கி விடுமோ என்று பயம் கூட வந்தது அவனுக்கு.

                         இத்தனை நேரம் அவளை வம்பிழுத்துக் கொண்டிருந்தவன் சட்டென அமைதியாகி விட்டான். துர்காவுக்கு அவனிடம் எதுவோ வித்யாசம் தெரிந்தாலும் சட்டென புரியவில்லை.

                         அவள் அமைதியாகி உணவை ஊட்டி முடிக்க, திரு எழுந்து கொண்டான். துர்கா அவனை நிமிர்ந்து பார்க்க, “சாப்பிட்டுட்டு வா…” என்றவன் சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டான் அமைதியாக.

                    ஏனோ மனம் பாரமானது போல் இருந்தது. முகம் கூட மறந்துவிட்ட அன்னையின் வரிவடிவம் எதிரே நிற்பது போல தோன்றியது அவனுக்கு

                            பெரிதாக உணர்ச்சி வசப்படுபவன் எல்லாம் இல்லை திரு. உணர்ச்சிகளையே முகத்தில் காட்டாதவன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இன்று மனைவியின் ஒரு சின்ன செய்கை அவனை தீண்டி விட்டிருந்தது.

                          அதுவும் அவள் எதையுமே உணராமல் இருக்க, அவளின் அறியாமை அவளை அழகாக காட்டியது திருவுக்கு.

                      எங்கோ ஒளித்து வைத்திருந்த அன்னையின் நினைவுகள் இன்று தலை தூக்கி இருக்க, திரு தலையை சோஃபாவில் சாய்த்து அமர்ந்துவிட்டான். அவன் நினைவுகள் எங்கோ பயணித்து கொண்டிருக்க, நிஜத்தில் துர்கா அவன் அருகில் வந்து அமர்ந்திருந்தாள்.

                          அவனுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டவள் அவன் முகத்தை பார்க்க, திருவால அவளை உணர முடிந்தது.

                      திரு கண்களை மூடியபடியே அவள் இடையில் கையை கொடுத்து தூக்கியவன் அவளை தன் மடியில் அமர்த்திக் கொள்ள, துர்காவும் விருப்பத்துடன் பொருந்திக் கொண்டாள் அவன் கைகளில்.

                               திரு பிளவுஸ் மறைக்காத அவளின் முதுகில் அழுத்தமாக முத்தமிட்டவன் அப்படியே அவள் முதுகில் முகம் புதைத்துக் கொண்டான்.

Advertisement