“சாரி ப்ரோ..! நீங்க போங்க” என்றவன் மேற்கொண்டு வெண்மொழியிடம் பேசிக் கொண்டிருக்க, அதாவது ஒரு முத்தத்திற்காக கெஞ்சிக் கொண்டிருக்க,
அவனின் தோள் மீது கை போட்டு அவனைத் தன் பக்கம் இழுத்த அந்த பீர் பாட்டில்காரன்,
“பாஸ்.. மயிலே மயிலேன்னா இறகு போடாது. அதுக்கு ஒரு வழிதான் இருக்கு. நமக்குத் தேவைன்னா இப்படி அசால்ட்டா இழுத்து, இப்படி வாயோட வாய வச்சு ஒரு டீப் கிஸ்ஸ அடிச்சுட்டு போயிட்டே இருக்கணும்” என்றவன் வெண்மொழி சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வார்த்தையில் சொன்னதை செயலில் செய்து முடித்திருந்தான்.
சட்டென்று நிகழ்ந்து விட்ட நிகழ்வில் தாரிக் அதிர்ந்து போய் நிற்க, வெண்மொழியோ அவனின் இறுகியப் பிடியில் இருந்து நகர முடியாமல் அவனின் இதழ் முத்தத்தில் அதிர்ந்து போய் நின்றிருந்தாள். சில வினாடிகள் அதிர்வுக்குப் பின் மீண்டவள், தன் முழு பலம் கொண்டு அவனைத் தள்ளி விட்டாள். அப்போது தான் தாரிக்கும் சுயத்திற்கு வந்தான்.
“யு ராஸ்கல்? உனக்கு எவ்வளோ தைரியம்டா? என் கண்ணு முன்னாடியே என் லவ்வரை கிஸ் பண்ற?” என்று அவனின் சட்டையைப் பிடித்திருந்தான் தாரிக்.
ஆனால் அவனின் கையை அசால்ட்டாய் எடுத்து விட்டவன், தன் டீ-ஷேர்ட்டை நீவி விட்டுக் கொண்டான். நிதானமாய் தாரிக்கை பார்த்தவன்,
“ஒரு விஷயத்தை எப்படி பண்றதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருந்திங்க. அதை இப்படித்தான் பண்ணனும்னு செயல் முறை விளக்கத்தோட செஞ்சு காட்டுனது தப்பா? இதுக்கு எதுக்கு சட்டையை எல்லாம் பிடிக்கிறிங்க? உங்களுக்கு உதவி தான பண்ணேன். நியாயமா பார்த்தா எனக்கு நீங்க நன்றி தான் சொல்லியிருக்கணும்” என்று கூலாய் சொன்னவனை ஆத்திரத்துடன் பார்த்திருந்தான் தாரிக்.
“பொறுக்கி..! இப்பவே நான் உன்னை கம்ளைன்ட் பண்றேன்” என்ற வெண்மொழி மீண்டும் மீண்டும் தன் இதழ்களை அழுந்த துடைத்துக் கொண்டே இருக்க, கண்கள் வேறு கலங்கிப் போனது.
“சும்மா சொல்லக் கூடாது, செம்ம சாப்ட் லிப்ஸ் உனக்கு” என்றவனை அறைவதற்காக கையை ஓங்கியிருந்தாள் வெண்மொழி. அவளின் ஓங்கிய கரம் இப்போது அவனின் கைப்பிடியில் இருந்தது.
“பேபி விடு, அவன் போதையில இருக்கான்” என்றான் தாரிக்.
“வாயை மூடு தாரிக். உன் கண்ணு முன்னாடி ஒருத்தன் இப்படி வல்கரா பிகேவ் பண்றான். நீ வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற? நியாயமா இந்த இடத்துல உனக்கு கோபம் வந்து நீதான் அவனை மிதிச்சிருக்கணும். இப்பவும் போதையில இருக்கான் அப்படி இப்படின்னு உளறிகிட்டு இருக்க?” என்றாள் கோபமாய்.
அதற்குள் அந்த பீர் பாட்டில்காரனைத் தேடி அவன் நண்பர்கள் வந்து விட்டிருந்தனர்.
“இப்போ என்ன பிரச்சனையை இழுத்து வச்சான்னு தெரியலையே?” என்று எண்ணிக் கொண்டவர்கள் வேகமாய் அவன் அருகில் வர, வெண்மொழி பேசியது அவர்களுக்கும் கேட்டிருந்தது.
“சாரி சிஸ்டர். அவனுக்கு சரக்கு உள்ள போயிட்டாலே என்ன பண்றான்னு அவனுக்கே தெரியாது. எக்ஸ்ட்ரீம்லி சாரி” என்றவர்கள்,
“அதி வா போகலாம்” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றனர். அவர்களுடன் சென்றாலும் அவனின் பார்வை என்னவோ வெண்மொழியைப் பார்த்தபடி தான் இருந்தது.
அவளுக்கோ ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை. தாரிக்கும் அவனை எதுவும் செய்யாமல் இருக்க அந்த கோபமும் சேர்ந்து கொண்டது.
‘பொறுக்கி இருக்குடா உனக்கு?’ என்று எண்ணியவள்,
“தாரிக் நாம பிரன்ட் டெஸ்க்ல போய் கம்ளைன்ட் பண்ணலாம்.எப்படியும் சிசி டிவி புட்டேஜ் இருக்கும். அவனை கப்பல் பிரிக்ல அடைக்காம விட மாட்டேன்” என்றாள் மீண்டும் இதழ்களை துடைத்தபடி.
“ரிலாக்ஸ் பேபி..! அதான் அவங்க பிரண்ட்ஸ் சாரி கேட்டுட்டாங்கல்ல. இப்போ கம்ளைன்ட் அது இதுன்னு போனா நம்ம நிம்மதியும் தான் சேர்ந்து போகும். அது மட்டுமில்லாம, அவனை நெக்ஸ்ட் போர்ட்ல லோக்கல் அத்தாரிட்டிஸ் கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிடுவாங்க. அப்பறம் அவன் லைப் லாங் கப்பல்ல ட்ராவல் பண்ண முடியாமையே போய்டும்” என்றான் தாரிக்.
“ரொம்ப நல்லது. முன்ன பின்ன தெரியாத பொண்ணுகிட்ட அத்து மீறினா என்ன நடக்கும்னு தெரிய வேண்டாம். அவனுக்கு நான் தெரிய வைக்கிறேன்” என்றாள் கொஞ்சமும் கோபம் குறையாமல்.
“பேபி, விஷயம் உங்க அப்பா வரைக்கும் போகும். அப்பறம் என்ன நடக்கும்னு யோசிச்சு பார்த்தியா? அந்த ஒரு ரீசனுக்காகத் தான் அமைதியா இருக்க சொல்றேன்” என்றான் தாரிக் பொறுமையாக.
அப்போது தான் தந்தையைப் பற்றிய ஞாபகமே வந்தது அவளுக்கு. தாரிக் சொன்னதைப் போல் அதற்கடுத்து நடப்பவைகள் அனைத்தும் அவள் கண் முன்னால் வந்து போக, சலிப்புடன் அவனைப் பார்த்தாள். தன்னிடம் முறை தவறி நடந்தவனை தண்டிக்க முடியாத சூழ்நிலையை அறவே வெறுத்தாள் வெண்மொழி.
“அழாத பேபி” என்று அவள் கன்னங்களைப் பிடித்தவனை பட்டென்று தள்ளி விட்டாள்.
“போடா” என்று அவள் ஆங்காரமாய் கத்த, எரிச்சலுடன் பார்த்திருந்தான் தாரிக்.
“என்னாச்சு? ஏன் வொயிட்டி அழுதுட்டு இருக்கா? என்னடா பண்ண அவளை?” என்ற படி வந்தாள் நந்திதா.
“அம்மா தாயே? நான் ஒன்னும் பண்ணலை. ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணிட்டு இருக்கா” என்றான்.
“எதுடா சின்ன விஷயம்? ஒருத்தன் என்னோட லிப்ஸ்ல கிஸ் பண்ணிட்டு போறான். இது உனக்கு சின்ன விஷயமா?” என்றாள் கோபமாய்.
“இதை ஏன் என்கிட்ட சொல்லிட்டு இருக்க? போய் அவன்கிட்டயே சொல்லிட்டு வாயேன். இன்னும் வசதியா இருக்கும்” என்றாள் வெண்மொழி.
“இது பாய்ண்ட்டு..! நான் போய் அவனைப் பத்தி விசாரிச்சுட்டு வரேன். எந்த கேபின்ல தங்கியிருக்கான்னு தெரிஞ்சுகிட்டா அவனைப் பத்தி தெரிஞ்சுக்கிறதும் ஈசியா இருக்கும்ல” என்றபடி நந்திதா ஓட்டமும் நடையுமாய் செல்ல, தலையில் அடித்துக் கொண்டாள் வெண்மொழி.
அன்று இரவு கப்பலின் மேல் தளத்தில் பிரம்மாண்ட மியூசிக் சிஸ்டம் மற்றும் லேசர் விளக்குகளுடன் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. நீச்சல் குளத்திற்கு அருகில் சர்வதேச டிஜேக்கள் பிளே செய்து கொண்டிருந்த பாடல்களுக்கு வெண்மொழியின் நண்பர்கள் அனைவரும் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
நீச்சல் குளத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்தபடி நண்பர்களின் கொண்டாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்மொழி. மூன்று பெண்கள் நான்கு ஆண்கள் என்று அவர்கள் குழுவில் ஏழு பேர் இருந்தனர். அனைவரும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே நல்ல நண்பர்கள்.
கண்கள் என்னவோ அவர்களை வேடிக்கைப் பார்த்தது. மனம் என்னவோ சற்று நேரத்திற்கு முன்னர் நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தது.
‘எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணியிருப்பான் ராஸ்கல்’ என்று மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாள். அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த பார்ட்டியில் ஏதோ சலசலப்பு.
“சரக்கு ஓவர் ஆகிடுச்சோ? இந்த தாரிக் எங்க ஆளைக் காணோம்?” என்று யோசித்தபடி எழுந்து அவர்கள் அருகில் சென்றாள். அங்கே இவளது பிரண்ட் டயானா கோபத்துடன் நிற்க, நந்திதா அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு எதிரில் ஒருவனைப் போட்டு துவைத்துக் கொண்டிருந்தான் பீர் பாட்டில்காரன்.
அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு கோபம் சுர்ரென்று தலைக்கு ஏற,
“என்னாச்சு டயானா? இவன் உன்கிட்ட ஏதும் மிஸ்பிகேவ் பண்ணானா?” என்றாள் அவனைக் காட்டி.
“என்ஜாய் பண்றது தப்பில்லை. அதுக்கு இந்த இடம் செட் ஆகாது. உங்க கூட வந்த பாய்ஸ் எல்லாம் மப்புல மட்டையாகிட்டாங்க. பெட்டர் நீங்க இங்க இருந்து கிளம்புறது தான்” என்றான் தெளிவான குரலில்.
“ஷ்யர் ப்ரோ” என்றவள்,
“வொயிட்டி, நந்தி வாங்க போகலாம்” என்றாள் டயானா.
“நீங்க போங்க! தாரிக்கை அப்படியே விட்டுட்டு வர முடியாது. நான் அவனைக் கூட்டிட்டு வர்றேன். இவனுக்கு இந்த பழக்கமெல்லாம் எப்படி வந்ததுன்னு தெரியலை” என்றாள் எரிச்சலுடன்.
“ஹேய் வொயிட்டி அவனுங்களே தெளிஞ்சு வரட்டும். உனக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலை. நாம சாப்பிட போகலாம் வா” என்ற நந்திதாவை முறைத்தாள் வெண்மொழி.
“ஓகே! அதுக்குமேல உன் இஷ்ட்டம். நாங்க டைனிங் ஏரியால இருக்கோம். நீ அங்க வந்துடு” என்றவள் டயானாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
“ஹேய் அதி கம்” என்ற நண்பர்களின் அழைப்பில் அவளைத் தாண்டி செல்ல முற்பட்டவனை தடுத்து நிறுத்தியிருந்தாள் வெண்மொழி. அவனோ அவளை இடுங்கிய பார்வையுடன் பார்க்க,
“உபதேசமெல்லாம் ஊருக்குத் தான் போல. ஒரு பொறுக்கி இன்னொருத்தனை பொறுக்கின்னு சொல்றதை இங்க தான் பார்க்குறேன். என் பிரண்ட் மாதிரி நானும் உன் மேல கம்பளைன்ட் பண்ணா என்ன ஆகும்னு தெரியும்ல?” என்றாள் கண்களில் கோபத்துடன்.
“வொய் நாட்? தாராளமா கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது தானே. நான் தான் ஏற்கனவே சொன்னேனே?” என்று நிறுத்தி அவள் இதழ்களைப் பார்த்தவன்,
“மேடம் என்னன்னு போய் கம்ளைன்ட் பண்ணுவிங்க? என் லவ்வர் என்னை கிஸ் பண்ண தயங்கித் தயங்கி பக்கத்துல வந்தான். அதைப் பார்த்த இந்த பொறுக்கி.. ஐ மீன் நான் உன்னை கிஸ் பண்ணி, கிஸ் பண்ணுவது எப்படின்னு உன்னோட லவ்வருக்கு கிளாஸ் எடுத்தேன்னு கம்ளைன்ட் ரைட் பண்ணுவியா?அப்படி பண்ணாத்தான் சரியா இருக்கும். எவிடன்ஸ்க்கு புட்டேஜ் இருக்கு. சோ நீ போய் கம்ளைன்ட் பண்ணு. நானும் இதையே தான் சொல்லுவேன்” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள் வெண்மொழி.
அவளின் விரிந்த கண்களைப் பார்த்தவன், சட்டென்று திரும்பி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். கலைந்த தலையை சரி செய்து கொண்டபடி திரும்பி செல்ல முயன்றவன் சட்டென்று அவள் முகத்தருகில் தன் முகத்தை கொண்டு செல்ல, பயந்து பின் வாங்கினாள் வெண்மொழி.
“வெம்மையும் மென்மையும் கலந்த இதழ்கள்னு படிச்சிருக்கேன். ஆனா இன்னைக்குத் தான் அதை பிராக்ட்டிகலா உணர்ந்திருக்கேன். வாட்ட பீல்..வாட்ட பீல்..யுவர் லிப்ஸ் கேவ் மி வொண்டர்புல் பீலிங்க்ஸ்” என்றவனின் அருகாமை அவளுக்கு ஒரு வித பயத்தைக் கொடுக்க, தன்னையறியாமல் மீண்டும் இரண்டு எட்டு பின்னே சென்றாள்.
“அதி” என்று நண்பர்கள் மீண்டும் அழைக்க,
“ஹியர் ஐ கம்” என்று உரக்கக் கூறியவன், அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு இரண்டெட்டு முன்னே சென்றவன் மீண்டும் திரும்பி அவளைப் பார்த்தான்.
‘நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது
நம்ம கோட்டையில் கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது”
என்று அவளைப் பார்த்தபடியே பாடிக் கொண்டு சென்றான். அவள் திகைத்தபடி நிற்க, அவனோ இப்போது ஆடிக் கொண்டும் சென்றான். அவன் தான் அதிதீரன்.