Advertisement

                       அத்தியாயம் –  2
 
இருவருமே இந்த முத்தத்தை எதிர்பார்க்கவில்லை… குழந்தையின் மெத்தென்ற கன்னத்தை எதிர்பார்த்து நிரஞ்சனா அழுத்தமாய் முத்தமிட இங்கு கடினமுகம்.. சொர சொரவென்ற சிறிதாய் அரும்பியிருந்த அவன் தாடி அவள் உதட்டை பதம் பார்த்திருந்தது…
                                                 
நாளை ராஜிக்கு பிறந்தநாள் தங்கைக்காக சேலை எடுக்க நினைத்தவன் வேலையின் நடுவில் சிறிது ஓய்வு கிடைக்கவும் அதற்குள் எடுத்துவிடலாம், வேகமாய் அந்த எக்ஸ்லேட்டரின் படிகளில் ஏறிக்கொண்டிருந்தவனுக்கு சடாரென இவ்வளவு அழுத்தமாய் ஒரு முத்தம்… ஜில்லென்ற பனிக்கட்டியை தன் கன்னத்தில் வைத்து எடுத்தது போலிருக்க பார்த்திருந்த அனைவரும் அதிர்ச்சியில்…!!!
 
விளையாட்டாய் ஆரம்பித்திருந்த செயல்.. யாராவது வயதானவர்களோ, குழந்தையோ வருவார்கள் என்று நினைத்திருக்க போலிஸ் உடையில் இருந்த கௌதமை பார்க்கவும் தோழிகள் அனைவரும் வெலவெலத்திருந்தனர்..  
 
முத்தமென்பதை உணர்ந்து ச்சீ என்பது போல முகம் சுழித்தவன் எக்ஸ்லேட்டர் மேலே சென்று கொண்டிருப்பதை உணர்ந்து கோபத்தில் சட்டென எட்டி நிரஞ்சனாவின் கையை பிடிக்க அதற்குள் பாதிக்கு மேல் சென்றிருந்தான்.. இவளும் பதறி தன் கையை உதற அவள் கையில் அணிந்திருந்த வளையல் மாடலில் இருக்கும் அவளுடைய பிரேஸ்லெட் அவன் கைகளில்..!!
 
அவளை முறைத்துக்கொண்டே அவன் மேலே சென்று கொண்டிருக்க அவனை பார்த்தபடி இவள் கீழே..  தீபா வேகமாக பந்தய பணத்தை நிரஞ்சனாவின் கையில் திணித்தவள்,
 
ஏய் வாங்கடி அந்த போலிஸ்காரர் திரும்பி வர்றதுக்குள்ள நாம ஓடிருவோம்…??” பேசியபடியே நிரஞ்சனாவின் கையை இழுத்துக் கொண்டு வாசல்பக்கம் நடக்க..
 
எதே…!!!! போறதா…???? காலை அழுத்தமாக ஊன்றி தன்னை நிதானித்தவள்… அடியே அவன் கையில என்னோட பிரேஸ்லெட் இருக்கு..?? 2 பவுன்..!! எங்க அண்ணே போன பர்த்டேக்கு வாங்கி கொடுத்தது.. அதைவிட்டுட்டு வரச் சொல்றியா..??”
 
என்னடி பொசுக்குன்னு அவன் இவன்னு சொல்ற…?? அவர் ஹைட் என்ன..? வெயிட் என்ன.. ? சும்மா பார்த்தாலே கை ,கால் உதறுது.. அதுலயும் உன்னை முறைக்கும்போது எனக்கு ஹார்ட் பீட் அதிகமாயிருச்சு..!! இருந்தாலும் நீ அவருக்கு முத்தம் கொடுத்ததெல்லாம் ஓவர்..!!”
 
தர்ஷினியும் தீபாவுடன் சேர்ந்து கொண்டவள் ஆமா நிரஞ் சும்மாவே பிரின்ஸி நாம செஞ்ச வேலையால நேத்துல இருந்து செம கோபத்துல இருக்கு… இப்ப இந்த ஏழரை வேற…?? அதுக்கு மட்டும் தெரிஞ்சுச்சு காலுல சலங்கை இல்லாம ஜங்கு ஜங்குன்னு குதிக்கும்.. வா ஓடிருவோம்..
 
அடியே எட்டப்பிகளா ஆரம்பிச்சு விட்டுட்டு இப்ப ரிவர்ஸ் கியர் போடுறிங்களா..?? அதெல்லாம் முடியாது  எனக்கு என் பிரேஸ்லெட் வேணும்…
 
ஏய் லூசு பிரேஸ்லெட் தானடி போனா போகுது ..!! உங்க வீட்ல என்ன வசதிக்கா குறைச்சல் உங்க அண்ணாக்கிட்ட சொல்லி வேற வாங்கி தரச் சொல்லு..?? வா அந்த ஆளு திரும்பி வர்றதுக்குள்ள நாம ஓடிரலாம்..!!” மற்றவர்களும் அதே சொல்லி நிரஞ்சனாவின் கையை பிடித்து இழுக்க..
 
முடியாதுடி அது எங்க அண்ணன் வாங்கி கொடுத்தது.. அப்படியெல்லாம் எவனுக்கோ தூக்கி கொடுக்க முடியாது.. நான் குழந்தைக்குதான முத்தம் கொடுக்க போனேன் நடுவுல வந்தது அவன் தப்பு.. முத்தமும் வாங்கிட்டு என் பிரேஸ்லெட் என்ன அதுக்கு லஞ்சமா …?? எல்லாரும் ஒழுங்கு மரியாதையா என்கூட வாங்க போய் அந்த ஆளுக்கிட்ட பிரேஸ்லெட்ட வாங்கிட்டு வந்திருவோம்..
 
ஆத்தி.. !!!” கோரஸாய் ராகம் இழுத்தவர்கள்,
 
நாங்களாம் வரலப்பா.. அவர் முறைச்ச முறைப்புக்கு நம்மள புடிச்சு ஜெயில்ல போட்டாக்கூட ஆச்சர்யம் இல்ல.. அவர் போடாட்டாலும் இந்த பிரின்ஸியே போட சொல்லும்.. உனக்கு வேணுனா நீயே போய் கேட்டு வாங்கு..
 
அனைவரையும் முறைத்தவள் தீபா, தர்ஷினி இருவரையும் இருகையில் பிடித்து  இழுக்க வரமாட்டேன் முரண்டு பிடித்தவர்களை தரதரவென இழுத்து சென்றாள்.. மீண்டும் மேலே ஏறிச்செல்ல கையை உதறிய தீபா ,
 
ஏய் பிசாசே … கையை விடு வந்து தொலைக்கிறேன்..?? ஆனா ஒன்னு மேல வர்ற வரைக்கும்தான் துணைக்கு வருவோம்.. அங்க போனதும் நாங்க டிரஸ் எடுக்கிறமாதிரி வேற இடத்துல நின்னுக்குறோம்.. நீ அவர்கிட்ட வாங்கிட்டு போன் பண்ணு வந்து ஜாயின் பண்ணிக்கிறோம்..
 
ஒரு ஆணியும் வேணாம் நீதான பந்தயத்தை ஆரம்பிச்ச கூடவே வர்ற …??”
 
டி நிரஞ் உனக்கே தெரியும் எனக்கு பில்டிங் மட்டும்தான் ஸ்டிராங்குன்னு.. அந்த போலிஸ்காரரை பார்த்து பயத்துல எனக்கு ஏதாச்சும் ஆச்சு வீணா ஒரு பச்ச புள்ளைய கொன்ன பாவம் உனக்கு சேரும் … நான் ஒரு இடத்துல ஒளிஞ்சு நின்னு உன்னையே பார்த்துட்டு இருக்கேன்.. நீ அவர்கிட்ட உன் பிரேஸ்லெட்ட வாங்கிட்டு மிஸ்ட்கால் மட்டும் குடுத்தா போதும்டி..!!” கெஞ்ச..
 
சரி போய் தொலை நீ என்னடி…??? தர்ஷினியை கேட்க..
 
 இரு கையெடுத்து கும்பிட்டவள், வரும்போதே எங்க வீட்ல படிச்சு படிச்சு சொல்லிவிட்டாங்க உன்கூட சேரக்கூடாதுன்னு..!! இதுல நேத்துநைட் பிரின்ஸி குளிக்க வைச்சிருந்த சுடுதண்ணியில ஐஸ்பாரை கொட்டி அதுக்கு ஜன்னி வரவைச்சதுல எனக்குத்தான் முக்கியபங்குன்னு உன்கூட என்பேரையும் அது லிஸ்ட்ல வைச்சிருக்கு..!! இப்ப இதுவும் சேர்ந்தா என் கிரைம் ரேட் அதிகமாகிட்டே போகும்… அதுனால நான் என்ன சொல்ல வர்றேன்னா நான் ஒரு சுடிடாப் பார்த்தேன் அதை வாங்கிட்டு வருவேனாம் செல்லக்குட்டி நீ ஸோலோவா அந்த போலிஸ்காரரை டீல் பண்ணுவியாம்…!!”
 
அப்ப ரெண்டு பேரும் துணைக்கு வரலைன்னு சொல்றிங்க..?? பயந்தாங்கோளி.. தொடைநடுங்கின்னு ஒத்துக்கிறிங்க..??”
 
இருவரும் தோளை உலுக்கியவர்கள் அப்சலூட்லி.. இதுல என்ன வெட்கம்..!!”
 
இருவரையும் பார்த்து காறிதுப்புவது போல சைகை செய்ய அதை துடைத்தவர்கள் அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா…??” ஹைபை கொடுத்துக் கொண்டார்கள் ..
  
டி.. வேணுன்னா இன்னொரு பந்தயம் போடுவோம்..?? நான் சொல்றேன் உன் பிரேஸ்லெட்ட அவர் தரமாட்டருன்னு..?? நீ என்ன சொல்ற…??” தீபா எப்போதும் போல பந்தயம் கட்ட..
 
நிரஞ்சனாவும் தர்ஷினியும் பாசமாய் அவள் தோளில் கைப்போட்டு அவள் கழுத்தை நெறித்தார்கள்..
 
மறுபடியும் பந்தயமா..!!!”
 
அச்சோ… கொலை கொலை ஒரு பச்சப்புள்ளைய ரெண்டு ரத்தக்காட்டேரிக கொல்லுதுகளே…??” மூவரும் ஜாலியாய் அரட்டை அடித்தபடி மேலே வந்து ஆளுக்கு ஒரு திசையாய் பிரிந்திருந்தார்கள்..
 
தர்ஷினி சுடிதார் செக்சனுக்குள் நுழைய தீபாவோ நிரஞ் நான் உன்னை கொஞ்சம் தள்ளி பாலோ பண்றேன்.. நீ பிரேஸ்லெட் வாங்கவும் மிஸ்ட்கால் கொடு உன் முன்ன நிப்பேன்..
 
பார்வையாலேயே கௌதமை தேட அவனை காணாமல் நான் இந்த பக்கம் தேடுறேன்.. நீ அந்த பக்கம் போ…??” இருவரும் எதிர் எதிர்திசையில்..
 
இந்த வளர்ந்து கெட்டவன் எங்க போனான்..?? லூசுப்பய..!! தெரியாமத்தான முத்தம் கொடுத்தேன் அத வாங்கினோமா போனமான்னு இல்லாம இப்படி என் பிரேஸ்லெட்ட பிடுங்கிட்டானே..?? மெண்டல்..!!” சேலைப்பிரிவில் அவனும் அவன் உடையும் தனியாய் தெரிய தீபாவுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்பதை மறந்தவள் அவனை நோக்கி வேகமாக நடக்கத்துவங்கினாள்..
 
விறுவிறுவென அவன் முன்னால் வந்து கையை நீட்ட,
 
நிதானமாய் அவளை ஏறிட்டவன் தன் பர்ஸை திறந்து அதிலிருந்து 5 ரூபாய் நாணயத்தை அவள் கையில் வைத்தான்..
 
கிறுக்குப்பயலே பல்லை கடித்தவள் …தன்னை மீறி பேசத்துடித்த நாவை கட்டுப்படுத்தி நிரஞ் நமக்கு இப்போ பிரேஸ்லெட்தான் முக்கியம்… கோபமுகத்தை சாந்த மோடுக்கு மாற்றியவள் லேசாக சிரித்து ஸார்.. என்ன பார்த்தா பிச்சைகாரி மாதிரியா இருக்கு..??”
 
அதுவரை அவளையும் தங்கைக்காக சேலையையும் பார்த்துக்கொண்டிருந்தவன் இப்போது நன்றாக அவளை பார்க்க.. ஜீன்ஸ் பேண்ட்.. ஆகாய நீலநிற டாப்.. கைகாதில் சிறுசிறு நகைகள் இருந்தாலும் அத்தனையும் வைரம் போல தெரிந்தது.. முகத்தில் கொஞ்சம் கூட பயம் தெரியவில்லை.. தன் முன்னால் தெனாவெட்டாகவே நின்றிருந்தாள்..
 
உன்னை பார்த்தா பிச்சைக்காரி மாதிரி தெரியல..?? லூசு மாதிரி தெரியுது..!!”
 
கோபத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவள் என்ன பார்த்தா …?? என்ன பார்த்தா லூசு மாதிரி இருக்கா..?? போலிஸ் டிரஸ்ல இருக்கிங்கன்னு பார்க்கிறேன்.. இல்ல..??”
 
இல்லன்னா என்ன பண்ணியிருப்ப..?? நானும் அதனாலதான் பொறுமையா இருக்கேன்..??”
 
இடுப்பில் கைவைத்து அவனை நெருங்கியவள் இப்போதுதான் அவன் முகத்தை நன்றாக பார்த்தாள்.. ஆறடி உயரம் உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடற்கட்டு அவனை போலவே அடங்காத தலைமுடி.. மாநிறம் திருத்தமுகம்.. சிரிக்கவே மாட்டேன் என்பது போல முகம் இறுகியிருக்க அவள் கண்ணை உறுத்தியது அவன் முகத்தில் அரும்பியிருந்த லேசான தாடிதான் இதுதான நம்ம உதட்ட குத்துச்சு..  
 
அடியே நிரஞ் நீ இவன சைட் அடிக்கவா இப்ப வந்த..?? இதுலாம் அப்பாருக்கு தெரிஞ்சுச்சு திருக்கவாறால ரெண்டு அடி கிடைக்கும்.. ஆம்பள பசங்ககிட்ட சினேகிதமே கூடாதுன்னாங்க நீ என்னடான்னா முத்தம் கொடுத்திட்டு இருக்க..?? ஹேய்ய்ய்ய்ய் ஸ்டாப்…’ தன் மனசாட்சியை அதட்டி நிறுத்தியவள் அவன் பேசியதை ரீவெயின்ட் செய்து பார்க்க….. மீண்டும் கோபம் தலைதூக்கியது..
 
பொறுமையா இல்லாம அப்படி என்ன பண்ணுவிங்களாம்..?? அப்படி நான் என்னயா தப்பு பண்ணினேன்..?? குழந்தைக்கு முத்தம் கொடுக்க வந்தேன் உங்கள யாரு அவ்வளவு வேகமா அந்த குழந்தை இருந்த இடத்துக்கு வரச்சொன்னது .. வந்திங்களா முத்தம் வாங்குனிங்களா போனிங்களான்னு இருக்காம ஏன் என்னோட பிரேஸ்லெட்ட பிடுங்கினிங்க… மரியாதையா கொடுத்திருங்க அது என்னோட ராசியான பிரேஸ்லெட்..!!”
 
ஏய் பேசமா போறியா.. இல்ல பப்ளிக் நியூசென்ஸ் கேஸ்ல உள்ள புடிச்சு போடவா..??”
 
என்னது…?? என்னை ஜெயில்லயா…?? எங்க தைரியமான ஆளா இருந்தா போடுய்யா பார்ப்போம்.. ஜெயில்ல புடிச்சு போடுவாராம்ல..?? ஜெயில்ல..?? நான் யாரு எங்க அப்பாரு யாருன்னு தெரிஞ்சா நீ இப்படி எல்லாம் பேசவே மாட்ட..?? நான் வேணா உன்னை மன்னிச்சுட்டேன் மரியாதையா என் பிரேஸ்லெட்ட கொடுத்திட்டு போ..??” கௌதம் இவள் என்ன லூசா என்பது போல பார்க்க,
 
அவனுக்கு அதை வைத்து கொள்ளும் எண்ணமெல்லாம் இல்லை.. முத்தம் வாங்கியபோது கோபமாக இருந்தாலும் அந்த பெண்ணின் முகத்தை வைத்தே இது எதிர்பாராமல் நடந்த தவறு என்பதை உணர்ந்தவன் இனி இப்படி செய்யக்கூடாது வார்ன் செய்து அவளிடம் கொடுக்கவேண்டும் எண்ணத்தில் இவன் இறங்க வர.. அப்போதுதான் நிரஞ்சனாவும் அவள் தோழிகளும் மேலே வருவதை உணர்ந்தவன் தன்னிடம்தான் வருகிறார்கள் வரட்டும் பேசிக்கலாம் தங்கைக்காக சேலை எடுக்க சென்றிருந்தான்.. ஆனால் இவன் எண்ணியதற்கு மாறாக நிரஞ்சனா பேசிக் கொண்டேயிருக்க மற்றவர்களும் தங்களையே பார்ப்பதை உணர்ந்து தான் எடுத்த சேலையை பில் போட கொடுத்தவன்..
 
இதோ பார் எனக்கு இருக்க கோபத்துக்கு பளார்ன்னு ஒன்னு வைக்கலாம்னு தோனுது…?? இதுவரை தேவையில்லாம பொண்ணுகள நான் கைத்தொட்டு அடிச்சது இல்ல.. பார்த்தா ஏதோ பட்டிக்காட்டு பொண்ணு போல தெரியிற…  இதுமாதிரி பொது இடத்துல இப்படி நடந்துக்க மாட்டேன்னு மன்னிப்பு கேளு அத விட்டுட்டு கடுகு மாதிரி பொறிஞ்ச…?? இந்த பிரேஸ்லெட்ட மறக்க வேண்டியதுதான்..!!” அவன் பில் கௌண்டரை நோக்கி நடக்க,
 
என்னது அத மறக்கிறதா…!! நிரஞ்சனாவுக்கு அழுகை வரும்போல இருந்தது.. அண்ணன் கடைகடையாய் ஏறி தங்கைக்காக வாங்கி கொடுத்தது..
 
வேகமாய் ஓடி அவன் கையை எட்டிப்பிடித்தவள் இதோ பாருங்க ஒழுங்கு மரியாதையா கொடுத்திருங்க..?? இல்ல போலிஸ்ல கம்பிளைண்ட் கொடுத்திருவேன்…??”
 
இவ சரியான மென்ட்ல்தான்..
 
அங்கு பிரின்ஸ்பால் நிரஞ்சனாவின் தோழிகளை திட்டி தீர்த்திருக்க இன்னும் பத்து நிமிசத்துல எல்லாரும் இங்க வரனும்.. போங்க அவங்கள கூட்டிட்டு வாங்க..??”
 
அவர்கள் தீபாவுக்கு போன் செய்ய போன் முழுவதும் அடித்து ஓய்ந்தது.. அடுத்து தர்ஷினிக்கு…!!
 
ஏய் என்ன பண்ணிட்டு இருக்க..?? பப்ளிக் பிளேஸ்ல எப்படி நடந்துக்கனும்னு உங்க வீட்ல சொல்லிதரலையா கையை விடு..??” பல்லை கடித்தபடி வார்த்தைகளை மென்று துப்பினான்..
 
அதெல்லாம் கத்துக் கொடுத்திருக்காங்க..?? நீங்க  பிரேஸ்லெட்ட கொடுங்க..??” அவனை ஒருகையில் இறுக்கிப்பிடித்தபடி மறுகையை அவன் முன்னால் நீட்ட,
 
தர்ஷினி அழுதபடி அங்கு வந்திருந்தாள்.. ஏய் நிரஞ் தீபாவ காணோம்டி… ரொம்ப நேரமா போன் டிரை பண்றேன் அவ போன் கீழகிடந்துச்சு..??”
 
நிரஞ்சனா கௌதமை மறந்தவள் தர்ஷினியிடம் ஓடிச்சென்று ஏய் அழாத இங்கதான் எங்காச்சும் இருப்பா..??” அவளுக்கும் உள்ளுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தது.. தீபா போனை இப்படி தவறவிடுபவள் அல்ல.. கொஞ்சம் பயந்த சுபாவம் உடையவள் மட்டுமே..!!
 
தர்ஷினியின் அழுகையை பார்க்கவும் கௌதமின் கால்கள் தானாகவே அங்கு வந்திருக்க என்ன ஆச்சு..??” தர்ஷினியிடம் கேட்க,
 
வேகமாக கண்களை துடைத்தவள் அண்ணா எங்க ப்ரண்ட் எங்க கூடத்தான் வந்தா..?? இப்போ அவ போன் மட்டும்கிடக்கு அவள காணோம்.. நான் கடை முழுசும் சுத்தி பார்த்துட்டு வந்துட்டேன்.. அவள எங்கையும் காணோம்.. எங்க பிரின்ஸ்பால் வேற ரொம்ப நேரமா போன் செஞ்சுட்டு இருக்காங்க..??”
 
அழதாம்மா இங்கதான் இருப்பாங்க..??” வீல் என்ற அலறல் கேட்க அதை அடுத்து நிறைய அலறல்கள் ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்தவன் வேகமாக அங்கு செல்ல கூடவே நிரஞ்சனாவும் தர்ஷினியும்…
 
டிரையல் ரூம் முன்னால் ஒரே கூட்டம்.. அனைவரின் முகத்திலும் பதட்டமும் பீதியும்.. கௌதமையும் அவன் உடையையும் பார்த்து அவர்கள் தானாகவே வழிவிட,
 
அங்கு டிரையல் ரூமின் கதவை கௌதம் திறக்க உள்ளே தீபா தூக்கில் தொங்கியபடி.. அவள் போட்டிருந்த ஷால் அவள் கழுத்தை இறுக்கியிருந்தது.. என்னவோ ஏதோவென வந்தவர்கள் தீபாவை பார்க்கவும் அதிர்ச்சியில் மூளை செயல் இழந்திருக்க கழுத்து இறுகி நாக்கு வெளியில் வந்து கோரமாய் இறந்திருந்த தீபாவின் முகத்தை பார்த்து பயந்து அலறியபடி இருவரும் மயங்கி சரிந்திருந்தனர்…!!
 
                                                   இனி……………….?????

Advertisement