Advertisement
21
அவள் தூங்கிய பின் அறையின் ஏசியின் அளவை குறைத்தவன் ஸ்ரீக்கும் ஆதிராவுக்கும் போர்வையை போர்த்தி விட்டு இருவரின் நெற்றியிலும் அழுத்தமாக முத்தம் இட்டுவிட்டு மெல்ல அறையின் கதவை திறந்து வெளியேறி கீழே சென்றான்..
கீழே சென்று அங்கே விருந்தினர் அறையில் இருந்த அவனது ஷர்ட் ஒன்றை எடுத்து மாற்றியவன் ஆபிஸ் செல்வதற்காக வெளியேற பார்க்கவும் அவனை கண்ட மனோகர் அவனை அருகே அழைத்தார்..
மனோகரின் அருகே சென்று அமர்ந்த கவின் மௌனமாக இருக்கவும்
“என்ன சாருக்கு இன்னும் கோவம் போகல போல?” என்று வினவவும்
“அப்பிடியெல்லாம் எதுவுமில்ல” என்று முணுமுணுத்தான்..
“டேய் நான் உன் அப்பன் டா..உன்னை பற்றி எனக்கு தெரியாதா??” என்றவுடன் அவரை நிமிர்ந்து பார்த்தவன்
“தெரிஞ்ச மாதிரி நீங்க நடக்கல பா.. ஒரு வார்த்தை ஒரு வார்த்தை சொல்லி இருந்தீங்க நா..நான் ஆராவை இப்படி ட்ரீட் பண்ணி இருக்க மாட்டேன்..”
“என்ன கவின் எவ்வளவு வளர்ந்தும் சின்ன பிள்ள போல கேட்கிற? ஆதிரா பற்றி நீ தெரிய முற்படல..ஏன் ஒரு சின்ன முயற்சி கூட எடுக்கல.. அப்படி இருக்கிறப்போ நான் உன்னோட பொண்டாட்டியா வர போறவள பற்றி விசாரிச்சேன்னு எப்பிடி சொல்ல?
நீ தெரிவு செய்தது சரியா என்று பார்க்க யோசிச்சேன்..என் கண்முன்னால உன் வாழ்க்கை அழியுறத என்னால பார்க்க முடியாது..அந்த ஒரு காரணத்தினால தான்”
என்று கூறவும் அவரின் கூற்றில் இருந்த உண்மை உரைக்க
“ஸாரிப்பா” என்றான்..
“பரவாயில்ல டா..உன்னோட கோபம் நியாயமானது தான்..ஆனாலும்“
“அவசரப்பட்டிருக்க கூடாது” என மெல்லிய குரலில் கூறயவனின் தோளை தட்டியவர்
“ஆமா ஆதி இப்போ எப்படி இருக்கா?” என்று கேட்டார்..
அதுவரை குனிந்து அமர்ந்து இருந்த கவின் இந்த கேள்வியை கேட்டதும் நிமிர்ந்து அவரது விழிகளை நோக்கினான்..என்றூம் எதற்கும் கலங்கியிராத அவனது கண்கள் கலங்கியிருந்ததை கண்ட மனோகரும் மகாதேவரும் பதறி போய்
“ஹேய் கவின் என்ன ஆச்சு” என்று கேட்கவும் தனது முகத்தை அழுந்த துடைத்தவன்
“ஆரா..ரொம்ப டிஸ்டர்ப் ஆ இருக்கா..அவ அழுதத என்னால தாங்க முடியலை பா..அவளோட அழுகையை என்னால நிறுத்த முடியல..அவ கேட்டதை என்னால கொடுக்க முடியல.. இவ்வளவு நாள் அவ மறந்தத நியாபகப்படுத்தி அவளை மனாழுத்தத்துக்கு ஆளாக்கிட்டேனோ என்று கில்டியா இருக்குது பா.. நான்..நான்.. பழைய ஆதிராவை பார்க்கனும் பா.. அவளோட அப்பா அக்காவோட வாழ்ந்த ஆதிராவை திரும்ப கொண்டு வரனும்..வருவேன்” என்று வெறித்தனமாக கூறியவனை அமைதிப்படுத்திய மனோகர்
“நிச்சயமா உன்னால அது முடியும் கவின்..உன்னால மட்டும் தான் முடியும் ” என்றார்..பின் கவினை திசைதிருப்ப
அவனின் தோளைத்தட்டியவர் “ஆமா அது என்னடா ஆரா? புதுசா இருக்கு?” என்று கூறி மகாதேவனைப்பார்த்து பெருங்குரலெடுத்து சிரிக்கவும் முகம் சூடாக
“அது..அது..என்று திக்கியவன்
“எனக்கு ஆபிஸ் வரைக்கும் போகனும்..அப்புறம் பேசலாம் பா” என்று கூறிவிட்டு விடுவிடுவென எழுந்து சென்றான்..
ஆபிஸ் சென்றவன் சற்று ரிலாக்ஸ்டாக அமர்ந்து ஆதிராவை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தான்..அப்பொழுது அவனது அறைக்கதவை யாரோ தட்டவும் நிமிர்ந்து பார்த்தவன் பாவனாவும் கருணும் நிற்பதை கண்டு நிமிர்ந்து அமர்ந்து தலையை அசைத்து அவர்களை வர அனுமதி அளித்தான்..
வந்து அமர்ந்த இருவரும் மௌனமாக இருக்கவும் குழப்பமாக அவ்விருவரையும் நோக்கியவன் “என்னடா??ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க?? என்ன விஷயம் சொல்லுங்க?” என்று கேட்கவும் தொண்டையை செறுமிய கருண்
“கவின் என்னை மன்னிச்சிரு ” என்று கேட்டான்..
“என்னடா மன்னிப்பு அது இது என்று“
“இல்லடா.. நீ எனக்காக தான் இந்த திருமணத்திற்கே சம்மதிச்சு இருக்கிற..ஆனா நான் சுயநலமா என்னோட காதலுக்காக உண்மையை உன்கிட்ட இருந்து மறைச்சுட்டேன்“
“மறைச்சுட்டேன்னா?”
“ஹ்ம்ம்.. பாவனா என்கிட்ட ஆதி பத்தின உண்மையை முன்னாடியே சொல்லிட்டா..அதனால தான்“
“ஆதிக்கு திருமணம் முடிஞ்ச பிறகு உங்க திருமணம் என்று சொன்னீங்களாக்கும்“
“ஹ்ம்ம்ம்..சாரிடா“
“பச்..விடுடா.. முடிஞ்சதை மாத்த யாராலையும் முடியாது“
“இல்லைடா எங்களுக்காக தான் நீ ஆதியை“
“பச்..அதான் விடு என்றேன் ல”
“இல்லடா“
“போதும்..போதும்..உனக்காக நான் ஆதியை திருமணம் செய்ய நினைச்சது உண்மை தான்..ஆனா யாரையும் உனக்காக திருமணம் செய்து இருக்க மாட்டேன்..அது ஆதி என்ற ஒரு காரணம் தான் நான் அப்படி ஒரு முடிவு எடுக்க காரணம்..இப்போ அவ வேற நான் வேற இல்லை..இனி உனக்காக ஆதியை திருமணம் செய்தேன் என்ற டாபிக்க எடுக்காத பிளீஸ்” என்று ஓங்கி உரைத்தான்..
கவின் அப்படி பெருங்குரலெடுத்து கூறியதில் கருணும் பாவனாவும் திடுக்கிட்டு போனாலும் கவினின் மனது புரிந்ததால் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.பாவனாவின் கண்கள் கண்ணீரை சொரிய கருணோ எழுந்து சென்று கவினை இறுக்கி அணைத்துக்கொண்டான்..
அவன் அணைத்ததும் அவனை விலக்கிய கவின் “என்னடா இது?”என்று கேட்கவும் மீண்டும் ஒருமுறை அவனை அணைத்து விலக்கிய கருண் “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு கவின்.. நீ ஆதியை ஏத்துக்கிட்டதே ரொம்ப சந்தோஷம்” என்று கூறவும் கலங்கிய விழிகளை துடைத்தவாறு அவர்களின் அருகே வந்த பாவனா
“ஆமா அண்ணா. ஆதி அண்ணியை ஏத்துக்கிட்டதுக்கு எப்படி நன்றி சொல்றதென்றே தெரியல” என்று கூறினாள்..
அவர்கள் இருவரையும் விசித்திரமாக நோக்கியவன்“இப்போ எதுக்கு நான் ஆதியை ஏத்துக்கிட்டேன்..ஏத்துக்கிட்டேன் என்று திரும்ப திரும்ப சொல்றீங்க?? ரெண்டு பேரும் ஒன்றை புரிஞ்சுக்கங்க.. ஆதி எந்த விதத்துலயும் குறைஞ்ச பொண்ணு கிடையாது..
அவளுக்கு நான் தகுதியா என்ற சந்தேகம் தான் என்னில இப்போ இருக்கு.. என்னை தூக்கி காட்டுறதை விட்டுட்டு போய் ரெண்டு பேரும் வேர்க்க முடிச்சிட்டு வாங்க.. சீக்கிரம் வீட்ட போகனும்..” என்று அவர்கள் இருவரையும் விரட்டி அடித்தான்..
மாலையில் மூவரும் வீடு திரும்பியதும் காரிலிருந்து வேகமாக இறங்கிய கவின்
“அம்மா..அம்மா” என்று கூவியவாறே கிட்சனை நோக்கி சென்றவன் அவர் அங்கு இல்லை என்றதும் பூஜை அறையை நோக்கி சென்றான்..
அவனது குரல் கேட்டு அவனை எதிர்கொண்ட படி வந்த தனலக்ஷ்மியை பற்றி
“அம்மா..ஆதி எழுந்தாளா? சாப்பிட்டாளா? இப்போ எப்படி இருக்கா? இஸ் ஷீ ஆல்ரைட்” என்று கேள்விக்கணைகளை வீசவும் திகைத்துப்போன லக்ஷ்மி பின்னால் திரும்பி அவரை தொடர்ந்து வந்த சுமதியை பார்த்து சிரித்தார்..
இருவரும் மர்மமாக புன்னகைக்கவும் ஒன்றும் புரியாமல் விழித்தவன்
“அம்மா சொல்லுங்க” என்று மீண்டும் பதறவும் புருவம் உயர்த்தியவர்
“அதை உன் ஆதி பின்னால தான் நிற்கிறா,,அவ கிட்டயே கேளு” என்றவர் நமுட்டு சிரிப்புடன் அவனை தாண்டி சென்றார்..அவர் கூறியது உரைக்க விழிகளை சுருக்கி “ஷிட்” என்றவன் மெல்ல திரும்பி பின்னால் நோக்கினான்..
அங்கு கைகளில் ஸ்ரீயை ஏந்தியவாறு ஆதி நிற்கவும் அசடு வழிந்தவன்
“இல்ல.. அது” என்று திக்கினான்.. அவனை சலனமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்த ஆதியின் விழிகளை சிறீது நேரம் நோக்கி தன்னை நிலை செய்து கொண்டவன் “ப்பா” என்று அவனை நோக்கி தாவிய குழந்தையை ஆதியிடம் இருந்து வாங்கி கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, ஆதியையே காதலாக நோக்கினான்.
அதுவரை சலனமற்று இருந்த ஆதியின் மனது அவன் பார்வையில் அசைந்து தான் போனது..அது அவளின் கற்பனையில் பார்த்து மகிழ்ந்த கவினின் நினைவலைகளை தட்டி எழுப்ப மீண்டும் விழிநீர் நிறைய ஒரு கேவலுடன் படிகளில் ஏற தொடங்கினாள்..
அவள் அழுதவாறு செல்வதை கண்டு ஒன்றும் புரியாமல் விழித்த கவின் படிகளில் ஏற தொடங்கி விட்டு தயங்கி நின்று தன் தோள்களில் சாய்ந்து விழித்தபடி இருந்த குழந்தையை நோக்கினான்.. அவன் நோக்குவதை கண்டவுடன் கள்ளமில்லாமல் இதழ் விரித்தவளை கண்டு மனதினுள் பெரு வெள்ளமாக இனம்புரியாத அன்பு ஊற்றேடுக்க ஸ்ரீயின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்…
பின்னர் தாயை அழைத்து ஸ்ரீயை அவரிடம் ஒப்படைத்தவன் மீண்டும் படியேறி ஆதியின் அறைக்கு சென்றான். திறந்து இருந்த அறைக்கதவை பார்த்தபடியே உள்ளே சென்று கதவை தாளிட்டவன் சோபாவில் அமர்ந்து கைகளில் முகத்தை தாங்கியபடி இருந்த ஆதியை நெருங்கினான்..
நெருங்கி அவள் தோள்களில் கையை வைக்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்த ஆதி சட்டென்று எழுந்து அவனுக்கு முதுகு காட்டியவாறு நின்றாள்..
அவள் திரும்பும் போதே சிவந்திருந்த முகத்தை பார்த்தவன் அவள் அழுதிருப்பதை உறுதி செய்து கொண்டு மீண்டும் அவளை நெருங்கி அவள் தோளை பற்றி திருப்ப போக அவன் கைகளை தட்டி விட்டவள் அவனை திரும்பி பார்த்து உறுத்து விழித்தாள்..
அவளின் செய்கையில் குழம்பி போய் புருவம் சுருக்கியவன்
“என்ன ஆரா?? என்ன ஆச்சு உனக்கு?”
“எனக்கு ஒன்றும் ஆகல..உங்களுக்கு தான் என்னமோ ஆய்டுச்சு“
“என்ன?? எனக்கு என்ன?”
“ஆமா..உங்களுக்கு தான்..உங்களுக்கு தான் பைத்தியம் பிடிச்சிடுச்சு“
“ஹா..ஹா..ஆமா ஆமா..அது எனக்கும் தெரியுது” என்று கூறி மென் சிரிப்புடன் காதலாக அவளை நோக்கவும் விழிகளை இறுக மூடி முகத்தை திரும்பியவள்
“அப்பிடி பார்க்காதிங்க கவின்.” என்று கடித்த பற்களுக்கு இடையில் வார்த்தைகளை துப்பினாள்..
அவளை சீண்டி பார்க்க வேண்டி இன்னும் அவளை அதே பார்வையுடன் நெருங்கியவன் மெல்லிய குரலில்
“எப்படி ஆரா?” என்று கேட்கவும் அவணை திரும்பி பார்த்து முறைத்தவள்
“உங்க நடிப்பை இதோட நிறுத்துங்க” என்று பெருங்குரல் எடுத்து கத்தினாள்..
நடிப்பென்ற வார்த்தையிலையே முகத்தில் இருந்த புன்னகை உறைய ஆதியை புருவம் சுருக்கி பார்த்த கவின் “நடிப்பா??” என்று கேள்வியாக இழுக்கவும்..
அவன் முகத்தை உறுத்து விழித்தவள் “ஆமா நடிப்பு தான்.. நடிப்பு தான்.. ஏன்னா..ஏன்னா.. உங்களுக்கு என்னை பார்த்து பரிதாபம்.. அய்யோ இவ பாவம் என்று என்னை ஏத்துக்க பார்க்குறீங்க.. வேணாம்..உங்களோட பிச்சையில வாழனும் என்ற அவசியம் எனக்கு இல்லை” என்று கூறவும் சினம் தலைக்கு ஏற
“ஏய்” என்ற படி அறைய கை ஓங்கியவன் அவளது கன்னத்தில் மிச்சமிருந்த தடத்தை கண்டு விட்டு “ச்சே” என்ற படி கையை உதறினான்.. “ஏன் நிறுத்திட்டிங்க?? அடிங்க.. அடிச்சு கொல்லுங்க” என்று அவள் உரைக்கவும் வேதனை நிறைந்த விழிகளால் அவளை ஒரு நிமிடம் ஆழ நோக்கியவன்
“நீ என்னை எப்போவும் சரியா புரிஞ்சுக்கிட்டதே இல்லை ஆரா.. இனியும் இல்லை” என்றவன் அறைக்கதவை திறந்து வேகமாக வீட்டை விட்டு வெளியேறி காரை புயல் வேகத்தில் கிளப்பிக்கொண்டு சென்றான்.. பால்கனியில் இருந்து அவனின் வேகத்தை கண்டவள் அப்படியே மடிந்து அமர்ந்து எதிரில் இருந்த சுவற்றை வெறிக்க தொடங்கினாள்..
காரை எடுத்துக்கொண்டு இலக்கில்லாமல் சென்ற கவின் ஒரு மரத்தின் கீழ் இருந்த பார்க்கிங்க் இன் அருகில் காரை நிறுத்தி விட்டு சீட்டில் சாய்ந்து விழிகளை மூடினான்..
விழிகளின் உள்ளே ஆதியின் சிரித்த முகமும் அழுத முகமும் மாறி மாறி வலம் வர காரின் ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்தவன் “ஏன்டி இப்படி பண்ற?”
“பரிதாபம் பிச்சை..ச்சே .. இந்த வார்த்தை எல்லாம் என்னை எவ்வளவு காயப்படுத்துது தெரியுமா??”
“ஏன்டி நாக்காலயே என்னை அடிக்குற?”
“என்னமோ பண்ணுதே உள்ள..வலிக்குது.. ச்சே அவ்வளவு என்னை புரியலையா உனக்கு?” என்று எண்ணிக்கொண்டு இருந்தவனின் மனதினுள்
“புரியும்படி நீ என்ன செய்திருக்க?” என்ற கேள்வி எழவும் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தான்..
அதானே எதுவுமே பண்ணலையே.. அப்புறம் எப்படி அவளுக்கு புரியும்..அதுவும் இன்றைக்கு எவ்வளவு அதிர்ச்சி பார்த்துட்டா என்று எண்ணியவன் தன் பின்னந்தலையில் தட்டிக்கொண்டு மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து மீண்டும் வீட்டை நோக்கி விரைந்தான்..அவன் அந்த இடத்தை விட்டு அகலவும் மரத்தின் பின்னால் இருந்து ஒரு உருவம் வெளியே வந்து விகாரமாக சிரித்தது..
வீட்டிற்கு அவன் வரும் பொழுது அனைவருமே உறங்கி இருக்க உணவு மேஜையில் தலை வைத்து படுத்து ஆதி மட்டும் எஞ்சி இருந்தாள்..அவளை மென்புன்னகையுடன் நெருங்கியவன் அவள் முகத்தையே ஆழ்ந்து ரசித்தவாறு இருக்க ஏதோ உந்துதலில் விழித்த ஆதி எதிரில் நின்ற கவினை கண்டதும் பதறி எழுந்தாள்..
அவளின் தோளை அழுத்தி மீண்டும் இருத்தி “ரிலாக்ஸ்..ரிலாக்ஸ்” என்று அவளை அமைதிப்படுத்தியவன்..“ஏன் இன்னும் இங்க இருக்கிற? போ..போய் தூங்கு” என்று கூறி விட்டு விலக பார்க்கவும்
“இல்ல நீங்க சாப்பிடல” என்று தயங்கி தயங்கி கூறினாள்..
அவளின் வார்த்தைகளில் உள்ளம் துள்ள சட்டென்று அவளை திரும்பி பார்த்தவன்
“என்ன திடீர் அக்கறை” என்று சந்தேகமாக இழுக்கவும்
“இல்ல அம்மா தான்“
“ஓ..அம்மா சொன்னாங்களா?? யாருக்காகவும் நீ மாற தேவை இல்லை.. நீ போ.. நானே பார்த்துக்கிறேன்” என்று கூறினான்.. அவன் அப்படி கூறியதும் புருவம் சுருக்கி முறைத்தவள்
“இப்போ என் கையால சாப்பிட்டா என்ன குறைஞ்சிடுவிங்க?? மரியாதைய இருந்து சாப்பிடுங்க” என்று மிரட்டலாக கூறினாள்..
அவளின் ஆசிரிய தோரணையை அவனிடம் காட்டவும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன் “சரிங்க மேடம்” என்ற படி அமர்ந்து உண்ண தொடங்கினான்..
Advertisement