Advertisement
18 அவனது பார்வை மாற்றத்தை அறியாமல் சிரித்தபடியே புருவம் தூக்கியவளை பார்த்து தானும் புன்னகைத்தவன் தலையை உலுக்கியபடி மெல்ல நடந்து சென்றான்..அவன் வெளியே வரவும் அவனை கட்டிலில் அமர செய்தவள்
“கவின் ப்ரஷ் பணிட்டிங்களா?” என்றூ கேட்ட்க
“ஹ்ம்ம்..இப்போ தான்” என்றூ சோர்வாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்..
“கவின் லைட்டா பொடி வாஷ் பணிடலாமே? கொஞ்சம் சோர்வு இல்லாம இருக்கும்” என்று கூற அவனுக்கும் அது சரி என்று பட
“ஹ்ம்ம் சரி.அம்மாவை கூப்பிடு” என்றான்..அவனை இடுப்பில் கைவைத்து முறைத்தவள்
“நம்மள பொறுத்தவரையும் தான் நமக்குள்ள எதுவுமில்லை கவின்..ஆனா இப்போ அம்மாவை கூப்பிட்டு அதை அம்பலப்படுத்தனுமா?? நானே பார்த்துக்கிறேன்”
“பச்..இல்ல வேணாம்..நான் தூங்க போறேன்“
“இப்போ என்ன பிரச்சனை?? நான் தான் சொல்ல்றேன் ல?? என்னை ஒரு நர்ஸ் ஆ யோசிங்க..ப்ரொப்ளம் சால்வ்ட்” என்று கூற அவன் மௌனமாக இருந்தான்..
அதையே சம்மதமாக எடுத்தவள் அவனை டீஷர்ட்டை கழற்ற சொல்லிவிட்டு இளஞ்சூடான வெந்நீரால் அவனது முகம் உடல் கைகளை துடைத்து விட்டாள்..
துடைக்கும் போது அவளின் விரல்கள் தீண்டியதில் உடலுக்குள் ஒருவித உணர்வு எழ பல்லை கடித்தபடி பார்வையை வேறுதிக்கில் அலையவிட்டவாறு அமர்ந்து இருந்தான் கவின்..
அவள் துடைத்துமுடித்ததும் டீ–ஷர்ட்டை அவசரமாக அணிந்துகொண்டவனை பார்த்து சிரித்தவள் “பெரிய கற்புக்கரசர்..க்கும்.. சரி..சரி.. பொறுங்க அம்மா வைச்சுட்டு போன சூப் ஆறிட்டுது போல..நான் லைட்டா சூடு பண்ணி கொண்டு வருகிறேன்” என்றபடி திரும்பியவள்
“ஆதிரா” என்று அழைத்தான்..
“ம்ம்?” என்று கேள்வியாக அவள் நோக்கவும்
“ஸ்ரீ எங்க?”
“சிந்து இன்றைக்கு காலேஜ் போகல. அவளோட விளையாடி கொண்டு இருக்கிறா?” என்று கூறிவிட்டு விரைந்து வந்தவள் சூப்பை அவனுக்கு கரண்டியால் கொடுக்க போக அவளை தடுத்தபடி தானே வாங்கி பருகினான்..
அவனுக்கு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தவள் ஸ்வெட்டர் ஒன்றை பிண்ணியபடி “கவின் உங்கள ஒன்று கேட்கவா?”
சூப்பை கரண்டியால் கலக்கியபடி இருந்தவன் “ஹ்ம்ம்ம் கேளு” என்றான்..
“இல்ல..நம்ம கல்யாணம் பண்ணது ஒருவித கட்டாயத்தினால தானே“ அவள் கேட்க வருவது புரியாமல் அவளை நிமிர்ந்து பார்த்தவன்
“ம்ம்..அதுக்கு?” என்று கேள்வியாக இழுத்தான்.
“இல்ல அப்புறம் எப்பிடி ஸ்ரீயை உங்களால இவ்வளவு இயல்பா ஏற்க முடிஞ்சுது?” என்று வினவவும் “ஆதிரா” என்று கோபத்தில் கத்தியவன் அவள் திடுக்கிட்டு பார்க்கவும் ஆழ மூச்சு எடுத்து தன்னை சமன் செய்து கொண்டான்..
“இதுவே நமக்குள்ள இது பத்தின கடைசி பேச்சா இருக்கனும்..ஸ்ரீயை நான் பார்க்கும் போது எனக்குள்ள ஏதோ ஒன்று உடையும்..அவளோட ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்..அவளோட குழந்தை முகம் எனக்கு பரிச்சயமானது போல தோன்றும்..ஏதோ ஒரு பாச பிணைப்பு இருக்கு..எல்லா குழந்தையையும் போல பத்தோட பதினொன்றா என்னால அவளை எடுக்க முடியல” என்று கூறியவனை விசித்திரமாக நோக்கியவள்
“ஸ்ரீயை எந்த காலத்துலயும் உங்க குழந்தை“
“போதும்..அவ என் பொண்ணு..இதுக்கு மேல எதுவும் கேட்காத” என்று கூறிவிட்டு கட்டிலில் படுத்து விழிகளை மூடிக்கொண்டான்..
அவன் விழிகளை மூடியது ஆதியின் விழிகளில் கண்ணிரும் உதட்டில் புன்னகையும் பிறந்தது..இரண்டும் ஏன்?? அவளுக்கே வெளிச்சம்..
பின்பு கவினுக்கு வேண்டியவற்றை பார்த்து பார்த்து செய்தாலும் ஆதிரா கவினுடம் மீண்டும் பேச முற்படவில்லை..அமைதியாக சிந்தித்தபடியே இருந்தாள்..கவினுக்கும் என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாக அவளின் பின் விழிகளை அலைய விட்டு கொண்டு இருந்தான்..
கவினின் அருகில் ஸ்ரீ தூங்க வேண்டாம் என்று எண்ணியதால் சிந்துவே ஸ்ரீயை அறைக்கு கொண்டு செல்ல ஆதிரா சோபாவில் அமர்ந்து மெல்லிய ஒலியில் பாடலொன்றை ஒலிக்கவிட்டு தனது கைவேலையை பார்த்துக்கொண்டு இருக்க கவின் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
சிறிது நேரத்தில் தூக்கத்திலேயே தலையை பிடித்து முணகியவாறு அவன் மல்லாந்து படுக்கவும் அருகில் இருந்த தைலத்துடன் அவனருகில் சென்றவள் அவனது தலைக்கருகில் அமர்ந்து தலையில் இதமாக தேய்த்து விட்டாள்..பின்னர் உடலை முறுக்கி முறுக்கி அவன் முணகவும் தனம் சொல்லியது நியாபகம் வர புன்னகைத்தவள் கை கால்களையும் பிடித்து விட்டாள்..
இப்படி இரவில் இடையிடையே எழுந்து கவினின் டெம்பரேசர் செக் செய்து கொண்டிருந்தவள் துக்க கலக்கத்தில் கட்டிலின் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்து அவனது தலையணைக்கு அருகில் தலைவைத்து அப்படியே தூங்கினாள்..
காலையில் கவினுக்கு உடல் நன்றாக இருப்பது போல தோன்றியது..புத்துணர்ச்சியுடன் உடலை முறுக்கியபடி எழுந்தவன் தனது தலையினருகே ஏதோ தட்டுபடவும் பட்டென்று எழுந்து பார்த்தான்..ஆதிரா தான்..புன்னகையுடன் கூடிய பெருமூச்சொன்றை வெளியேற்றியவன்,சிறிது நேரம் அன்பாக அவளை பார்த்தவாறு இருந்தான்..இரவில் உறக்கத்தில் பதிந்து விலகிய கரம் இவள் தானா?? அவனுள்ளே மெல்ல மெல்ல ஏதோ ஒன்று பூத்தது..
அவளையே சிறிது நேரம் பார்த்தவன் ‘எனக்காக ரொம்ப கஷ்டப்படுறியா ஆரா?? உன்னோட இந்த தவிப்பு இதற்காக நான் எதுவுமே செய்தது இல்லையே.. ஏன் ஒரு நிபந்தனையா இந்த கல்யாணம் பண்ணேன் என்று தோணுது ஆரா.. ஹா.ஹா.. நீ மட்டும் இதை கேட்டால் அவ்வளோ தான் என் தலை தப்பாது ல?? என்னை மயக்குறடி.. எந்த இடத்துல என்று தெரியல..ஆனா உன்னை பிடிக்குது..
நீயும் என்னை இப்படி ஒரு எண்ணத்தோட பார்க்கும் வரையும் நானும் உன்னை சீண்டிக்கிட்டு இப்பிடியே இருப்பேன்..ஆனா சீக்கிரம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும் டியர்” என்று மனதினுள் எண்ணியவன் காதலாக அவளை கண்ணுற்றான்..
இவ்வளவு நாள் இருந்த கண்ணியம் போக இவள் என்னவள் என்னுரிமை என்ற எண்ணத்துடன் பார்வையிட்டான்..மெல்ல அவளது தலை கோத எழுந்த கரத்தை அடக்கியவன் சத்தமில்லாமல் எழுந்து அவளை தூக்கி கட்டிலில் கிடத்திவிட்டு புன்னகையுடன் தயாராக சென்றான்..
விசிலடித்தவாறு இறங்கி வந்த மகனை பார்த்த தனம் “என்னடா இன்றைக்கே ஆபிஸ் போகனுமா?” என்று தாங்கலாக கேட்கவும்
“ஆமாமா..போய் ஒருக்கா நிலமையை பார்க்கனும்..ஆமா கருணும் பாவனாவும் எங்க?”
“அதுங்க ரெண்டும் உன்னை மிஞ்சிடும் போல..எழுந்ததுமே ஓடிட்டாங்க” என்று அவர் கூறி கொண்டிருக்கவும்
“ப்பா” என்று அழைத்தபடி தனது பிஞ்சு கால்களால் அவனை நோக்கி ஓடிவந்தாள் ஸ்ரீ..
அவளை வேகமாக எதிர்கொண்டு தூக்கி உயர சுற்றியவன் அவள் சிரிக்கவும் தன் தோளில் சாய்த்து கொண்டான்.. தோளில் ஒயிலாக சாய்ந்தபடி“ப்பா..பீபர் போச்சா“
என்று கேட்கவும் அவளது நெற்றியில் முட்டியவன்
“ஆமாடா குட்டி” என்றான்..
“ம்மா உங்கதுக்கு மருந்து தந்தாவா?? அதான் போச்சா?” என்று வினவவும் ஆதியின் நினைவில் முகம் கனிய மேலே தன் அறை நோக்கி பார்வையை செலுத்தியவன்
“ஆமாடா” என்றுவிட்டு அவளுக்கு முத்தம் கொடுத்து இறக்கி விட்டவன் உணவை உண்டுவிட்டு
“ஆமா அவ நல்லா தூங்குறா..தூங்கட்டும்..யாரும் எழுப்ப வேண்டாம்” என்றவன் மீண்டும் அறைக்கு சென்று ஆதியை கண்களால் நிறைத்துவிட்டு ஸ்ரீயின் விபரங்கள் அடங்கிய ஃபைலையுல் தேடி எடுத்துக்கொண்டு கீழே இறங்கி ஆபிஸுக்கு சென்றான்..
ஆபிஸில் அறைக்குள் நுழைந்த கவினை வந்ததும் வராததுமாக
“கங்ராட்ஸ் டா” என்றபடி தாவி அணைத்தான் கருண்..சஞ்சயும் அவனுக்கு கைகொடுக்க புன்னகையோடு குலுக்கியவன்
‘ஒருவேளை நான் ஆதியை விரும்பிறது தெரிஞ்சிடுச்சோ?ஆங் .. எனக்கே இப்போ தான் கன்பார்ம் ஆச்சு‘ என்று தனக்குள் யோசித்தவன் கருண் சொன்ன செய்தியில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான்..
“டேய் உன் ப்ரொஜெக்ட் சக்ஸஸ்டா மச்சான்” என்று கருண் கூறியதை ஆச்சர்யமாக பார்த்தவன்
“எப்பிடிடா??நான் தான் ஆபிஸ் பக்கமே வரலையே?”
“நீ வராட்டி என்ன? அதான் சிஸ்டர் வந்தாங்களே?”
“யாரு ஆதியா?”
“ஹ்ம்ம்ம்..என்ன கிழி தெரியுமா?? அப்பிடியே நீ செய்தா எப்பிடி எல்லாரும் வாயை பிளந்துகிட்டு பார்ப்பாங்களோ அப்பிடி பார்த்தாங்க“
“விளயாடதா கன்ஸ்ட்ரக்ஷன பத்தி ஆதிக்கு எப்பிடி“
“நம்பலனா வீடியோவ பாரு” என்றபடி சஞ்சய் வீடியோவை காட்டவும் ஆச்சர்யமானவன் ஆதி அவர்கள் செல்ல போகிறார்கள் என்றதும் விழுந்தடித்து காரில் வந்ததையும் சொன்னார்கள்..
“ஓ” என்று கேட்டுவிட்டு தலைவலிப்பதாக கூறி அவனது அறைக்குள் நுழைந்தவன் கையிலிருந்த ஃபைலை தூக்கி மேசையில் போட்டுவிட்டு தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்..
‘எப்படி அது சாத்தியம்..அப்படியானால் நிச்சயம் ஆதிக்கு கன்ஸ்ட்ரக்ஷன் பிஸ்னஸுடன் தொடர்பு இருந்துள்ளது..அதுவும் பெரிய போஸ்ட்டில் இருந்திருந்தால் ஒழிய இது சாத்தியமில்லை..இன்னும் என்னவெல்லாம் என்கிட்ட சொல்லாம மறைச்சு வைச்சிருக்கடி? பச்..உன்னை இப்போ நான் விரும்பிறன்..என்னால இதை ஜஸ்ட் லைக் தட் என்று எடுக்க முடியாது ஆரா‘ என்று சிந்தித்தவனின் விழிகளில் விழுந்தது ஸ்ரீயின் விபரங்கள் அடங்கிய ஃபைல்..
ஏதோ தோன்ற அதை எடுத்து படித்து பார்த்தவன் அதிர்ந்து போய் அந்த ஃபைலை கீழே போட்டான்..மீண்டும் மீண்டும் அந்த வரிகளை படித்தவன் தந்தை பெயர் : விஷால் புண்ணியமூர்த்தி, தாயின் பெயர் : அபிராமி விஷால் என்று இருந்ததை பார்த்துவிட்டு கருணை அழைத்து பாவனாவை கூட்டி கொண்டு வீட்டிற்கு உடனே வர பணித்தவன் மின்னல் வேகத்தில் விரைந்தான் வீடு நோக்கி..
விரைந்து வந்த கவின் வந்ததும் வராததுமாக ஹாலில் நின்று “ஆதிரா..ஆதிரா” என்று கத்தவும் சமையலறையில் ஏதோ வேலையில் இருந்தவள் முந்தானையில் கைகளை துடைத்தவாறே “என்ன கவின்” என்றவாறு வெளியே வந்தாள்..
அங்கே இருந்த சிந்துவை “சிந்து ஸ்ரீயை தூக்கிட்டு உள்ள போ” என்று பணித்தவன் அவள் உள்ளே சென்றதும் அருகே வந்த ஆதிராவை பளார் என்று ஓங்கி அறைந்தான்..
அவன் அறைந்தவீச்சில் சோபாவில் சென்று விழுந்தவளை ஓடிவந்து தாங்கிய தனம் கவினை பார்த்து “என்னடா?? உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்று கத்தினார்..
“ஆமா அது ஒன்று தான் இன்னும் எனக்கு பிடிக்கல..” என்று அவருக்கு மேலாக கத்தியவன் ஸ்ரீயின் ஃபைலை தூக்கி ஆதியின் முன்னால் வீசிவிட்டு “என்னடி இது?? ஸ்ரீ உன்னோட பொண்ணு இல்ல அப்போ?? இல்லனா நீ வேற பெயரில இங்க வந்திருக்கிறியா?? என்ன வேணும் உனக்கு?எதை சுருட்டிகிட்டு போக வந்திருக்க?” என்று இரைந்தான்..அவனது காதலி பொய்த்து போன கோவம் அவனுக்கு..
கவின் ஃபைலை காட்டியதுமே அனைத்தும் விளங்கிவிட்டது ஆதிக்கு..இனி தன்னிடம் மறைக்க எதுவுமில்லை என்று தோன்றவும் நிமிர்ந்து கவினின் கண்களை தாங்கி நின்றாள்.. அப்பொழுது வந்த பாவனா அண்ணி என்று அவளின் அருகில் போகவும் தடுத்த கருண் விழிகளை மூடி திறந்தான்..
எனவே பாவனாவும் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்..
ஆதிரா பிழையே செய்யாதது போல தன்னை நிமிர்ந்து பார்க்கவும் “என்னடி நல்லவள போல பார்வை?? என்னை ஏமாத்திட்டடி நீ. என் நம்பிக்கையை குலைச்சு..ச்சே” என்று உதறவும் பாய்ந்து அவனின் சட்டையை பற்றி உலுக்கியவள்
“என்ன நம்பிக்கையை குலைச்சேன்?? சொல்லுங்க என்ன நம்பிக்கையை குலைச்சேன்?? நான் யார் தெரியுமா?? நான் ஏன் இங்க வந்தேன் தெரியுமா? நம்பிக்கை அதுக்காக அந்த ஒரு வார்த்தைக்காக தான் வந்தேன்..அது என் மேல என் குடும்பம் வைச்ச நம்பிக்கை..என் மேல என் அக்..அக்கா வைச்ச நம்பிக்கை…” என்று கத்தியவள் அவனை விட்டு விலகி சென்று ஆழ மூச்சை இழுத்து விட்டவாறு தனது கடந்த காலத்தை கூற தொடங்கினாள்..
“அம்மா ஆதிரா..ஆதிரா” என்ற தந்தையின் குரலை கேட்டு புன்னகையுடன் படிகளில் துள்ளி துள்ளி இறங்கி வந்தாள் ஆதிரா..அவள் அருகில் வந்ததும் புன்னகையுடன் தலையை கோதிக்கொடுத்தவர் “உன்னோட அக்கா பூஜை அறையில இருக்கா மா..உன்னோட பிறந்த நாளுக்காக காலையிலேயே தொடங்கிட்டா..வா மா..போகலாம்” என்றபடி அழைத்த தன் தந்தை தேவனின் தோளில் சாய்ந்துகொண்டவள்,
“வாங்கபா..லேட் ஆனா அக்கா கத்துவா” என்றபடி தந்தையுடன் பூஜை அறையை நோக்கி சென்றாள்..
அங்கே பூஜை அறையில் மங்களகரமாக அமர்ந்து பூஜை செய்து கொண்டு விழி மூடி இருந்த தமக்கையின் அருகே சென்றவள் அவளையே ஆசையாக நோக்கி கொண்டு இருந்தாள்..
அபிராமி..அழகான தமிழ் பெண்..அமைதியும் அடக்கமும் நாணமும் நளினமும் பரவிக்கிடக்கும் அற்புதம்..இவள் தான் ஆதிராவிற்கு தாய் ஸ்தானத்தில் இருப்பவள்..நினைவு தெரிந்த நாளில் இருந்து அக்காவை தான் அம்மாவாக பார்த்து வாழும் ஆதிராவிற்கு தந்தையும் அக்காவும் தான் உலகம்..
ஆதிராவின் தந்தை பிஸ்னஸில் ஒரு பெரும் புள்ளி..ஆதிராவும் அப்பனுக்கு தப்பாமல் பிறந்தவள் என்று கன்ஸ்ட்ரக்ஷன் பிஸ்னஸில் புகுந்து விளையாடிக்கொண்டு இருப்பவள்..தந்தைக்கு ஆண்பிள்ளை இல்லை என்ற குறையை தீர்த்துக்கொண்டு இருப்பவள்..அவளது அக்கா அபிராமிக்கு அவளை நினைத்து மிகவும் பெருமை. ஆனால் அபிராமிக்கு பிஸ்னஸ் உலகம் என்றாலே அலர்ஜி..அதனால் மென்மையான அவளுக்கு பொருத்தமான ஆசிரியை தொழிலில் இறங்கியுள்ளாள்..
கடவுளை வணங்கி விட்டு எழுந்த அபிராமி கடவுளை வணங்காமல் தன்னையே நோக்கி கொண்டிருந்த ஆதியை செல்லமாக முறைத்தவள் எழுந்து ஆதியின் அருகே வந்து“பூஜை அறைக்கு வந்தா சாமி நினைப்பு தான் இருக்கனும் என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ஆதி..கும்பிடு“ என்று கூறவும் சட்டென்று அபியின் கால்களில் விழுந்து வணங்கினாள்..
“ஹேய் ஆதி” என்று பதறியபடி எழுப்பியவளை கண்ணீருடன் நோக்கிய ஆதி
“எனக்கு சாமியை விட நீ தான் பெருசு கா” என்றாள்.. மகிழ்வாக அவளை தோளை சாய்த்து கொண்ட அபியையும் புன்னகையுடன் அவள் தோளில் சாய்ந்து இருந்த ஆதியையும் பார்த்து கொண்டிருந்த தேவன் பனித்த கண்களை மகள்களுக்கு தெரியாமல் துடைத்து கொண்டார்..
பின்னர் ஆதியின் பிறந்தநாளுக்காக சிறப்பாக அபியால் தயார் செய்யப்பட்டிருந்த விருந்தை அனைவரும் உண்டு முடித்து அவரவர் வேலைகளுக்காக கிளம்ப வழமையான புராணத்தை தேவன் படிக்க தொடங்கினார்..
“ஏம்மா அபி..ஏன்மா உனக்கு இந்த வேலை? பேசாம ஆபிஸுக்கே வந்திடேன்” என்று கூறவும் நமுட்டு சிரிப்புடன் தமக்கையை நோக்கினாள் ஆதி..
‘ஆஹா‘ என்று மனதினுள் அலுத்துக்கொண்டு “அப்பா எனக்கு அங்க அமைதி கிடைக்குது..அது போதும்” என்றாள்..
“இப்போ உன் அமைதிக்கு என்ன குறை?”
“அப்பா யரோட அமைதியையும் மத்தவங்க எடுத்து குடுக்க முடியாது..எனக்கு எனக்கு வேண்டியது அங்க கிடைக்குது விடுங்க” என்றவளை மூறைத்த படி“என்னமோ பண்ணு” என்ற முணுமுணுப்புடன் அங்கிருந்து நகர்ந்தார் தேவன்..
அதை வருத்தமாக நோக்கி கொண்டிருந்த அபியை அணைத்த ஆதி“விடுக்கா..அவருக்கு ஸ்டேடஸ் மேல இருக்கிற விருப்பம் நமக்கு தெரிஞ்சது தானே? போக போக சரி ஆகிடுவார்..வயசாயிடுச்சுல அதான் புலம்புறார்” என்று கூறி கண்ணடிக்கவும் சிரித்த படி அவளது தலையில் கொட்டினாள்..
தலையை தேய்த்து விட்டவாறே அக்காவை பார்த்து சிரித்த ஆதிக்கு தெரியாது அன்றிலிருந்து சிரிப்பு தங்களை விட்டு நிரந்தரமாக போக போகிறது என..
Advertisement