Advertisement
14
சற்றுநேரத்தில் தன்னை சமாளித்தவள்
“என்..என்ன?”
“என்ன என்ன?”
“இல்ல இப்போ ஏதோ சொன்னீங்களே?”
“அதுவா..அது இங்க மேட்ச் பார்க்கிறேன். அதான் பேட்டாலேயே ஓங்கி ஒன்று போட சொன்னேன்“ “ஓஹ்“
“ஓஹ் தான்..சீக்கிரம் ஸ்ரீகிட்ட ஃபோனை குடு..எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு“
“ஆஹ்..அதான் சார் மேட்ச் பாக்கிறதிலயே தெரியுதில்ல எவ்வளவு பிஸி என்று”
“அது உன்னோட கதைகிற நேரத்துல ஏதும் உருப்படியா செய்ய தான்..இப்ப நீ ஸ்ரீ கிட்ட ஃபோனை குடு“ என்றதும் க்கும் என்று நொடித்துக்கொண்டவள்
கதிரையில் அமர்ந்து சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு இருந்த ஸ்ரீயை நெருங்கி “அம்முக்குட்டி” என்று அழைத்தாள்.. தாய் அழைத்ததும் அண்ணாந்து பார்த்தவளை கண்டு புன்முறுவல் செய்தவள் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு ஸ்ரீயின் அருகே நீட்டியவாறே
“அம்முக்குட்டி உங்க அப்பா உங்க கிட்ட பேசனுமாம்” என்று கூறவும் பட்டென்று முகம் மலர “ப்பா” என்று அழைத்தாள்..
ஆதி ஸ்ரீயிடம் கூறியதையும் ஸ்ரீ ஆர்வமாக அப்பா என்று கூவியதையும் கேட்ட கவினுக்கு அன்றைய டென்ஷன் எல்லாம் வடிவது போல இருந்தது..மெல்ல மெல்ல அவர்கள் இருவரும் தன்னவர்கள் என்ற உரிமை உணர்வு அவனின் மனதில் அவனை அறியாமலே விதைக்கப்பட்டுக்கொண்டு இருந்தது.
“ஸ்ரீ குட்டி“
“ப்பா நான் கோவம் போ“
“அச்சோ அப்பா பாவம் ல“
“இத்த“
“ஸ்ரீ குட்டி கோவம் போட்டா அப்பா ஊஊ நு அழுவேன்“
“அய்யே..கெத்த பையன்“
“என்னதுதுதுது?” என்ற அவனின் குரலிலேயே அவன் ஸ்ரீயின் பேச்சு விளங்காமல் முகத்தை சுழித்திருப்பான் என்று கணித்த ஆதிரா சிரித்த படி
“நீங்க கெட்ட பையனாம்” என்று கூறினாள்..
“அடபாவிகளா..பிஸ்னஸ்புலி டெர்ரர் என்று பல பெயர் வாங்குன கவின் சக்கரவர்த்திக்கு கெட்ட பையன் என்று பட்ட பெயரா கொடுக்கிறீங்க?” என்று அவன் சிணுங்கலாக உரைக்கவும் அவனின் கதையில் கல கல வென ஆதிரா சிரிக்க தாயை பார்த்து ஸ்ரீயும் சிரிக்க தொடங்கினாள்..
அப்படியே சிறிது நேரம் பேசி ஸ்ரீயை சமாதானப்படுத்தி விட்டு காலையில் திட்டியவரை அழைத்து தன்மையாக சில விடயங்களை கூறி அனுப்பவும் அவரோ கவினை திரும்பி திரும்பி பார்த்தபடி வெளியேறினார்..
***********
இவ்வாறாக ஒரு ஜோடியின் ரொமான்ஸும் ஒரு ஜோடியின் கலகலப்பும் என நாட்கள் நகர திருமணநாளும் நெருங்கியது..அதற்கிடையில் ஆதிராவை இனி பாடசாலையை விட்டு விலக சொல்லி கூறிய கவின் கல்லூரியில் கற்பித்துக்கொண்டு மகாதேவனுக்கு துணையாகவும் செயற்பட சொல்லி அறிவுறுத்தினான்..
அதற்கும் சில பல விவாதங்களின் பின்னரே அவனின் யோசனையை ஆதரித்தாள் அவனின் வருங்கால பத்தினி..அத்துடன் ஸ்ரீயை நாடளாவிய ரீதியில் புகழ் பெற்ற பாடசாலை ஒன்றில் இணைக்க விருப்பம் தெரிவித்து ஆதிராவின் கருத்தை கேட்கவும் திருமணத்தின் பின்னர் பார்க்கலாம் என்று சம்மதித்தாள்..
பாவனாவின் கல்லூரிப்படிப்பு முடிந்து ப்ரொஜெக்ட் வேலைகள் மட்டும் இடம் பெறுவதால் கருணுடன் ஆபிஸில் இணையட்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால் ஆபிஸில் ஏதும் விளையாட்டை காட்ட கூடாது என்ற கவினின் ஆணையின் கீழே அந்த முடிவு எடுக்கப்பட்டது..அதற்கும் ஈஈஈ என்று கருண் வெட்கமே இல்லாமல் பல்லை காட்டியது தனிக்கதை.
திருமணத்திற்கான ஆடைகள் வாங்க திருமணத்திற்கு உறவினர் நண்பர்களுக்கு பத்திரிக்கை வைக்க மண்டபம் உணவு என அனைத்து வேலைகளும் குடும்ப உறுப்பினர்கள் சஞ்சயென அனைவருக்கும் பிரிக்கப்பட்டு விரைவாக நடபெற்றன.
இதற்கிடையில் பாவனா முழுவதுமாக கருணில் சார்ந்து இருக்க தொடங்க ஆதிரா,ஸ்ரீ தனிமையை உணராவண்ணம் கவினின் நடவடிக்கைகள் அமைந்தது.
ஆதிராவிற்கு பாவனாவின் நடவடிக்கைகளில் மனம் சற்று தளர்ந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் அவளது சந்தோஷத்தை எண்ணி சற்று விலகியே இருந்தாள்..
பாவனாவிடம் மரியாதை குறைவு இல்லை,ஒதுக்கம் என்று இல்லை ஆனால் இந்த திருமணத்துக்காக ஆதிராவின் பக்கம் நிற்க வேண்டியவள் கருணுடனே சுற்றி திரிந்தாள்..
ஏதோ தான் அந்த குடும்பத்தின் உறுப்பினராகவே மாறிவிட்டது போன்ற அவளது நடவடிக்கைகள் சிலநேரம் சிரிப்பை வரவழைக்கும் ஆதிக்கு. ஆனால் பாவனாவின் நடவடிக்கைகளை கவினும் அவதானித்து கொண்டுதான் இருக்கிறான் என்பது தெரியவில்லை ஆதிக்கு..
இப்படியே பல சந்தோஷங்கள் சில மனக்குறைகள் என்று தோன்றி மறைய திருமணநாளும் அவர்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேர்ந்தது.
அதிகாலையிலேயே மண்டபத்தை அடைந்துவிட்டனர் மணமகன்களினதும் மணமகள்களினதும் குடும்பங்கள்..மளமளவென வேலைகள் நடைபெற சுதாவின் குடும்பம் ஆதிராவின் பக்கத்தை பொறுப்பேற்க கவின் கருணின் குடும்பம் தமது கடமைகளை சிறப்பாக செய்தனர். சிறிது நேரத்திலேயே மண்டபம் மக்களால் நிறைய தொடங்க அதிர்ந்த இசையும் சிறுவள் இளைஞர்களின் துள்ளலும் என கல்யாணக்களை பொங்க தொடங்கியது.
இடப்பட்டிருந்த இரு மணமேடைகளில் இரு ஐயர்மார் வீற்றிருக்க அவர்களின் அருகே கம்பீரமாக பட்டுவேட்டி சட்டையுடன் ஓமகுண்டலத்தின் முன் அமர்ந்து பயபக்தியுடன் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தனர். கவினின் அருகில் ஸ்ரீ அமர்ந்து கொண்டு அங்கு நடைபெற்றுக்கொண்டு இருப்பவற்றை வாயைபிளந்து பார்த்தபடி இருந்தாள்..
ஓமப்புகை அவளின் பிஞ்சு கண்களில் எரிச்சலை வரவழைக்கவும் கண்ணை கசக்கியவளை திரும்பி பார்த்த கவின் தாயை அழைத்து ஸ்ரீயை அவரிடம் ஒப்படைத்தான்.
சிறிது நேரத்தில் மணமக்கள் அழைக்கப்படவும் ஓதும் மந்திரத்தில் ஒரு கவனமும் தமது துணை வர போகும் பாதையில் ஒரு கவனத்தையும் வைத்தவாறே செயற்ப்பட்டு கொண்டு இருந்தனர் கவினும் கருணும்.
கடும் ஊதா வண்ணத்திற்கு இளஞ்சிவப்பில் கரையிட்ட பட்டு புடவையில் முத்தாலான நகைகள் உடலை தழுவ மென்னடை இட்டு சிந்துவின் கரங்களின் வழிநடத்தலில் குனிந்த தலையுடன் நடந்து வந்தாள் பாவனா.
அவளின் பின்னே சுதாவின் கரங்களை பற்றி வருகை தந்து கொண்டிருந்த ஆதிராவை முதலில் கவினால் காணமுடியாமல் போனாலும் பாவனா இடப்புறமாக மண்டபத்திற்கு ஏறும் படியை நோக்கி திரும்ப தென்பட்ட ஆதிராவை கண்டவுடன் கூறிய மந்திரங்கள் மறக்க ஆஆ என்று வாயை திறந்தபடி அவளையே நோக்கியது கவினின் கண்கள்..
சிவப்புநிறத்திலான பட்டுப்புடவை அவளது நளினங்களை எடுத்துக்காட்ட குனிந்த தலையுடன் ஆனாலும் நிமிர்ந்தநடையுடன் உதட்டில் துலங்கிய புன்னகையுடன் காதில் குடம் போல தொங்கிய சிமிக்கிகளில் பட்டு தெறித்த ஒளி அவள் முகத்தை மேலும் மின்ன செய்ய கழுத்தில் அலங்கரித்த பொன்நகையின் ஒளிர்வை அவளின் சங்கு கழுத்து தோற்கடிக்க இடையின் அளவை காட்டிய ஒட்டியானம் தகதகக்க வானுலக நங்கை தானோ என்று வியக்கும் வகையில் அன்னமென நடைபயின்று வந்தவளை பார்க்க கோடி கண் தேவை பட்டது அவையோருக்கு.
ஆதிராவும் பாவனாவும் தமது வருங்கால துணையின் அருகே வந்து அமரமுன்னர் சபையோரை பார்த்து நமஸ்கரித்து பின்னரே மணையில் அமர்ந்தனர்..அவர்களின் அந்த செயலிலேயே அவையோர் மனம் குளிர வழங்கப்பட்ட தாலிச்சரடை மனம்நிறைய ஆசீர்வதிக்க அதை பெற்று தத்தம் துணைவியரின் கழுத்தில் மணமகன்கள் அணிவித்து மணமகள்களை தமது உரிமை ஆக்கி கொள்ள மணமேடைக்கு அவர்களை வழிநடத்தியோரே நாத்தனார் முடிச்சை இட மங்கள வாத்தியங்களின் ஒலியுடன் அரங்கம் முழுவதும் பூச்சொரிந்தது..
பின்னர் அம்மி மிதிக்கும் சடங்கின் போது மணமக்களை நோக்கிய குருக்கள்
“இங்கே யாருக்காச்சும் இந்த சடங்குக்கான அர்த்தம் தெரியுமோ?” என்று கேட்க சற்று நேர அமைதியின் பின்னர் விழி உயர்த்திய ஆதிரா
“தெரியும் சாமி” என்றாள்.
“எங்கே சொல்லுங்கோ பார்ப்போம்” என்று அவர் மீண்டும் வினவவும்
“ஒரு குடும்பத்துக்கு போற புதுப்பெண் கணவர்,மாமனார்,மாமியார்,நாத்தனார் என்றூ சந்திக்கும் உறவுகளை ஏற்கும் போது ஏற்படும் மனஸ்தாபங்களுக்குள் சிக்காமல் அம்மியை போன்ற வலிமையுடையதான மனவுறுதியோடு இருக்க வேண்டும்..அதனால தான் அம்மி மிதிக்கிறோம்.. அடுத்து அருந்ததியும் அவளுடைய கணவர் வஷிஷ்டரும் இருந்தது போல சபலம் இல்லாத மனதோடு கணவனை மட்டும் மனைவியும் மனைவியை மட்டும் கணவனும் ஏற்று வாழ வேண்டும்” என்று கூற
“சரியா சொன்ன கொழந்தே” என்று அவளை பாராட்டி விட்டு மணமக்களுக்கான சடங்குகளை செய்ய தொடங்கினார் குருக்கள்…
சடங்குகள் நிறைவுற மறுநாள் வரவேற்பு நிகழ்வு பெரிய அளவில் நடக்க இருந்தமையால் விருந்து முடிய கவினின் அரண்மணைக்கு இரு ஜோடிகளும் அழைத்து செல்லப்பட்டனர்.
கவின் ஸ்ரீயை கைகளில் அள்ளிக்கொண்டு ஆதிரா வலக்காலை பதிக்க உள்ளே ஜோடியாக நுழைய பாவனாவின் கரங்களை பற்றியபடி தான் எண்ணியது நிகழ்ந்த மகிழ்வுடன் கருண் நுழைந்தான்.
ஆதிராவும் பாவனாவும் குடும்பத்தினருடன் பூஜை அறையில் விளக்கேற்றி குடும்ப பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.பின்னர் மணமக்கள் ஹாலில் அமரவைக்க பட்டு பால் பழம் வழங்கி முடிய மகிழ்வாக அனைவரும் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர்.அப்பொழுது ஸ்ரீ அங்கும் இங்கும் ஓடியாடி திரியவும் அதை கண்ட ஆதிரா அவளை அழைக்க வாயை திறக்க பாவனா
“ஸ்ரீ குட்டி இங்கே வா” என்று அழைத்தாள்..பாவனா அழைக்கவும் புன்னகையுடன் அமைதியான ஆதிரா அருகிலிருந்த தனலக்ஷ்மியுடன் பேச தொடங்கினாள்..
அவள் தலையை ஆட்டி ஆட்டி பேசுவதை கண்டு ‘பாரு..மண்டையை என்ன ஆட்டு ஆட்டுறா..கிரைன்டரை போல‘ என்று எண்ணி சிரித்துக்கொண்டிருந்த கவினின் செவிகளில் பாவனா மீண்டும் அழைக்கும் ஒலி கேட்கவே தலையை திருப்பி அந்த புறம் பார்வையை வீசினான்.
பாவனா அழைத்ததும் திரும்பி பார்ப்பதும் பின் விளையாடுவதாகவும் இருந்த ஸ்ரீயை பார்த்தவனுக்கு குழந்தைகள் அனைத்தையும் அறிந்து செயற்படுபவர்கள் என்பது விளங்கியது..
தொண்டையை செறுமிய கவின் “ஸ்ரீ இங்க வா குட்டி” என்று அழைக்கவும்
கையில் இருந்த பொருளை அப்படியே போட்டுவிட்டு “ப்பா” என்றவாறு ஓடிவந்து அவன் மடிமேல் ஏறி அமர்ந்து கொண்டாள்..அவளை அணைத்து கன்னத்தில் முத்தம் பதித்தவன் பாவனாவை நோக்கி புன்னகைத்தவாறே
“அது..இப்போ இவங்கள விட கருண் கூட ஒட்டிக்கிட்ட இல்ல? அதான் அவ என் கூட ஒட்டிக்கிட்டா..இனி மேல் அவளை இல்ல கருணை மட்டும் கவனி” என்று புன்னகையோடு கூறவும் அனைவரும் இயல்பாக அதை எடுத்து புன்னகைத்தாலும் பாவனாவிற்கு இத்தனை நாள் தனது நடவடிக்கை பொட்டில் வந்து அறைந்தது..
“தான் கருணுடன் இணைகிறேன் என்ற பெயரில் அண்ணியையும் ஸ்ரீயையும் விலக்கிவிட்டோமோ?” என்ற எண்ணம் தோன்றி நேரத்துக்கு நேரம் அது வலுப்பெற தொடங்கியது..
அன்று இரவே இரு ஜோடிகளுக்கும் சாந்திமுகூர்த்தம் என்று பெரியவர்கள் முடிவு செய்ய பலமான எதிர்ப்பு கிளம்பியது கவினின் பக்கம் இருந்து..
“அம்மா இங்க பாருங்க இதெல்லாம் எனக்கு பிடிக்கல?”
“என்னடா பிடிக்கல?”
“நீங்க நல்ல நேரம் பார்த்தா போதாது..அது பற்றி நாங்களா முடிவெடுக்கனும்..இப்பிடி எல்லாருக்கும் தெரிய என் தாம்பத்திய வாழ்க்கையை காட்சிபொருள் ஆக்காதீங்க சொல்லிட்டேன்” என்றூ கவின் குதிக்கவும் சபா என்று பெருமூச்சு விட்ட தனலக்ஷ்மி
“உன்னை பெத்ததில இருந்து என்னை படுத்திறதே உனக்கு தொழிலா போய்ட்டுது கவின்..இப்போ என்ன தான் செய்யனும் என்ற?
“
“சாந்தி முகூர்த்தம் என்ற பெயரில என் ரூம்ல எந்த கூத்தையும் பண்ணிடாதீங்க..அப்புறம் ஸ்ரீயும் எங்க கூட தான் இருப்பா..அவளை தனியா கூட்டிடு போற வேலை எங்க கிட்ட இருந்து ஒதுக்கிற வேலை எல்லாம் வேணாம் ஆமா“
“டேய் சாந்தி முக்கூர்த்தம் வேணாம் என்றா அத சொல்லு,அதை விடுட்டு அந்த குழந்தை அவளை போய் நான் ஏன் டா ஒதுக்க போறேன்? அவ என் பேத்தி டா” என்று தனலக்ஷ்மி கண்ணை கசக்கவும் இவ்வளவு நேரமும் மகன் தாய் சண்டையில் அருகே செல்லாமல் விலகி நின்ற ஆதி தனலக்ஷ்மியை அணைத்து
“அய்யோ அத்தை..அவ உங்க பேத்தி தான்..இவர் இன்றைக்கு அப்பிடி செய்ய வேணாம் நு தான் சொன்னார்..அதை சொல்ல தெரியாம லூஸு தனமா சொல்லிட்டார்” என்று கூறி கவினை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கவும் அவன் இவளை கண்டு உக்கிரமாக முறைத்தான்..
அவனுடைய முறைப்பை கிடப்பில் போட்டவள் தனலக்ஷ்மியை பார்த்து
“உங்கள போல நல்ல மனசு படைச்சவங்க யார் இருப்பாங்க மா? ஒரு குழந்தையோட நின்றவளை உங்க மகனுக்கு மனைவியா ஏத்துக்க எவ்வளவு பெரிய மனசு வேணும் என்றது எனக்கு தெரியும் மா. அதனால எவ்வளவு கேள்விகள் சமூகத்தில வரும்..
ஆனா ஸ்ரீயை நீங்க வந்தவங்க கிட்ட எல்லாம் ஸ்ரீ கவினோட குழந்தை தான் என்று அறிமுகப்படுத்துனது எனக்கும் தெரியும் மா..ஸோ எதையும் யோசிக்காம அறை அலங்காரம் மட்டும் இல்லாம நீங்க ஏற்பாடுகளை பாருங்க மா..” என்று தனலக்ஷ்மியை அனுப்பி வைத்தவள்
கவின் ஏதோ கூற வரவும் கைகாட்டி தடுத்தவறே
“அப்புறம் பேசலாம் கவின்..நம்மை மீறி எதுவும் நடந்திடாது” என்று கூறிவிட்டு பாவனாவை காண சென்றாள்..
பாவனாவை சுமதி ஒரு அறையில் அலங்கரித்து கொண்டு இருக்க அவளது முகமோ எக்கச்சக்கமாக குழம்பி போய் இருந்தது..அறைக்குள் ஆதிரா வந்தவுடன் புன்னகையுடன் அவளை நெருங்கிய சுமதி
“வாம்மா ஆதிரா..எல்லா அலங்காரமும் முடிச்சாச்சு..பாவனாவை அவ ரூம் ல விட்ட பிறகு நீ கவினோட ரூமுக்கு போமா..ரூம் எங்கனா“
“தெரியும் மா” என்று புன்னகைத்தவளை பார்த்து தானும் புன்னகைத்தவர் விலகி போக மறித்தவள் பாவனாவை அவரிடம் ஆசீர்வாதம் வாங்க கூறி பணித்தாள்.
பணிந்து எழுந்த மருமகளை ஆசீர்வதித்த பின் சுமதி விலகி சென்றது தான் தாமதம் ஆதிராவை அணைத்து
“ஓஓ” என கண்ணீர் சொரிய தொடங்கினாள் பாவனா.
Advertisement