Advertisement

அத்தியாயம்…2

யமுனா, ரேவதி, கவிதா, நான்கு  பேரும் ஒரு ப்ராஜெக்ட்டில் இருக்க, இந்துமதியும், காவ்யாவும்  வேறு ப்ராஜெட்டில் இருப்பதால், எப்போதும் ஒன்றாக இருக்க மாட்டார்கள்.

லன்ச்,ப்ரேக் டைம், பின் ஈவினிங் என்று   தான் பார்த்து கொள்வர்.. அதனால் யமுனாவின்  சோர்ந்த தோற்றத்தை பற்றி கவிதா இந்துமதியிடம்.

“ ஒரு வாரமா யம்மீ  முகமே சரியில்ல இந்து. அதுவும் அவளுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆன இந்த ஒரு மாதமா அவளை அப்படி பார்த்து விட்டு, இப்போ பார்க்க என்னவோ போல் இருக்காள்.” என்ற கவிதாவின் பேச்சில் இந்துமதி.

“ அப்போ அவள் இப்படி இருக்க நான் தான் காரணம் என்று  நீ நினைக்கிறியா  கவி.? ” என்று இந்துமதியும் ஒரு வித குற்றவுணர்வோடு தான் கவிதாவிடம் கேட்டாள்.

இந்துமதி யமுனாவை எப்போதும் பார்க்கவில்லை என்றாலும், பார்த்த சமயத்தில் இருக்கும் அவளின் முக வேற்றுமையை  இந்துமதியாலும் கண்டு பிடிக்க முடிந்தது.

அதுவும் யமுனா சொன்னது போல், இந்த ஒரு மாதம் காலமாக அவளை அப்படி முகம் முழுவதும் புன்னகை என்று பார்த்தவளை, ஒரு வாரமாக சோகமாக இல்லை என்றாலும், அவள் மகிழ்ச்சி குறைந்து இருக்கிறது என்பதை அவளிடம் நெருங்கி பழகிய அவள் தோழிகளுக்கு நன்கு தெரிந்தது தான்.

இந்துமதி இப்போது நினைக்கிறாள். அவ்வளவு மகிழ்ச்சியாக, அவள் கல்யாணத்திற்க்கு என்று  நமக்கு ட்ரீட் கொடுத்தால், ஆனால் நாம் அவளுக்கு  திரும்ப என்ன கொடுத்தோம், மன குழப்பத்தை தானே.

ஆனால் இதுவும் நினைத்து கொண்டாள். நாம் அவள் மகிழ்ச்சியை கெடுக்க கூடாது என்று நினைத்து எதுவும் சொல்லாது விட்டு விட்டால், அவள் இப்போது அவள் வருங்கால கணவன் என்று அவளே வலிய சென்று பழகும் இந்த பழக்கத்தால்,  நாளை அவளுக்கு பிரச்சனை  ஏற்ப்பட்டால், அப்போது நாம் நினைக்க கூடாது தானே ‘ நாம் சொல்லி இருக்கலாமே..?’ என்று.  இந்துமதி அதை கவிதாவிடம் சொல்லவும் செய்தாள்.

“ உன் மீது தப்பு இல்ல  இந்து. நீ சொன்னது சரி தான். பின் என்ன இந்த ஒரு மாதமா  யம்மீ தான்   அவள் வுட்பிக்கு போன் செய்து இருக்கா.

அதுவும் இல்லாம இப்போ தான் அவள் முழுவதுமே சொன்னா. சில டைம் இவள் போன் செய்தாலும் எடுக்க  மாட்டாராம்.

சரி  அப்போ வேலையில்  ரொம்ப பிஸியா இருந்து இருப்பார் என்று விட்டாலும், இவள் மிஸ்கால் பார்த்து அவர் கூப்பிடனும் தானே. கூப்பிட மாட்டாராம். திரும்பவும் இவள் தான் அழைப்பா போல. இன்னும் என்ன என்னவோப்பா.

அவளே இப்போ தான் முழுவதும் உணர்ரான்னு எனக்கு தோனுது.அதனால் தான்  அவள் முகம் சரியில்ல. இன்னும் கல்யாணம் ஆகல பேசி தான்  வைத்து இருக்காங்க.

அவருக்கு பிடிக்கவில்லை என்றால் இப்போதே ப்ரேக்கப்  ஆகிடுறது என்னை பொறுத்தவரை நல்லது என்று தான் சொல்வேன்.

என் வீட்டின் அருகில் இருந்தவங்களுக்கு ஏழு வருடம்  முன்  இது நடந்தது. ஒரே பெண் வெளிநாட்டு மாப்பிள்ளை ஸ்வைப் மூலமே பார்த்து கல்யாணம் முடிவு செய்துட்டாங்க.

மாப்பிள்ளை மட்டும் தான் வெளிநாட்டில் இருந்தான்.  அவன் அப்பா அம்மா இங்கு தான்.  பெரியவங்க பார்த்து முடிவு செய்துட்டாங்க.. பெண் கொஞ்சம் நிறம் கம்மி தான்.

மாப்பிள்ளை நாளை நிச்சயம் என்றால், முன் நாள் தான் சென்னை வந்து இறங்கினான். அவனை அழைத்து வர பெண் வீட்டு சொந்தமும் போனது.

விமான நிலையத்தில் மாப்பிள்ளையை பார்த்துட்டு, இவங்களே இவருக்கு பெண் ஓகே தானே. ஒகே தானே என்று இரண்டு மூன்று தடவை கேட்டுட்டாங்கலாம். ஏன்னா மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து தான் வந்தார் என்று  பார்த்தால்,  நிறமும் வெளி நாட்டவனை போல் தான் அப்படி ஒரு வெள்ளை.

பின் நிச்சயம், அதன் பின் கல்யாணம் எல்லாம் நல்ல படியாக தான் முடிந்தது.ஆனால் முக்கியமானது நடக்க வேண்டியது மட்டும் முடியல கல்யாணம் ஆகி பல மாதம் கழித்தும்.

காரணம் மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடிக்கவில்லை. ஒரே பெண்  சொத்து நிறைய. அதனால மாப்பிள்ளையின் அம்மா மாப்பிள்ளையை  கன்வின்ஸ் செய்து தான் திருமணத்தை முடித்து இருக்காங்க.” என்று கவிதா சொல்லவும், இந்துமதி.

‘அப்போ பின்  என்ன ஆச்சி.?’ என்று பதட்டத்துடன் கேட்டாள்.

‘அப்புறம் என்ன.? விவாகரத்து தான். கட்டாயப்படுத்தி வாழ முடியுமா.? அதுவும் அவனுக்கு தன்னை பிடிக்கல என்று தெரிந்து எந்த மானமுள்ள பெண் வாழுவா.

பின்   எல்லோரும்   சொன்னாங்க. நிச்சயம் முன் நாள் மாப்பிள்ளை நிறத்தை பார்த்தே நினைத்தேன். எப்படி இந்த பெண்ணை ஒத்துக் கொண்டான் என்று. முன்னவே இந்த இடத்தை வேண்டாம் என்று இருந்தால், இப்போ விவாகரத்து வரை போய் இருந்து இருக்க வேண்டாம்.

 நம்மில்  அழகின் வரை முறை நிறம் தான் என்பது தானே கணக்கீடல். பாவம் அப்புறம் அந்த அக்கா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அதை வைத்து பார்க்கும் போது பிடிக்கவில்லை என்றால், இப்போதே வேண்டாம் என்று சொல்வது நல்லது தான்.” என்று  இந்துமதியிடம் கவிதா  சொல்வதை பாவம் பின்னால் இருந்து யமுனா அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருப்பதை அறியாது இந்துமதி.

 ‘இதை எல்லாம் யம்மீ கிட்ட சொல்லிட்டு இருக்காத கவி. பார்க்கலாம்.” என்று அவர்கள் இருவரும் தங்கள் பேச்சை முடித்துக் கொண்டனர்.

அனைத்தும் கேட்ட யமுனா தான் வந்தது தெரியாது மீண்டும் தன் இடத்திற்க்கு  வந்து  அமர்ந்தவளுக்கு, 

‘ஒரு சமயம் அப்படியும் இருக்குமோ.?’ என்ற அந்த நினைப்பு கூட யமுனாவுக்கு கசந்தது.

பின் அவளே.’ எப்படி ஒருவனை திருமணத்திற்க்கு கட்டாயப்படுத்த முடியும். அதுவும் ஒரு போலீஸ் அதிகாரியை. இருக்காது அப்படி எல்லாம் இருக்காது. அவர் வேலை அப்படி.’ என்று அவளுக்கு அவளே சமாதானம் படுத்திக் கொண்டாள்.

அவளுக்கு அவளே  செய்து கொண்ட  அந்த சமாதானம் ஒரு மாதக்காலம் வரை அப்படியே நீடித்தது. அந்த ஒரு மாதமும் யமுனா சாருகேசனை  போனில் அழைக்கவில்லை. அவன் அழைப்பான் என்ற நம்பிக்கையில்.

நாள்கள் வாரமாகவும், வாரங்கள்  மாதமாகவும் முடிவடைந்ததும் யமுனாவின் நம்பிக்கை மெல்ல ஆட்டம் காண தொடங்கியது.

அந்த ஆறு  பேர்களில் வசதி என்று பார்த்தால் யமுனா தான். அதனால் தான் அவள் தனக்கு  திருமணம் முடிவடைந்ததும், தன் தோழிகளுக்கு ஸ்டார் ஓட்டலில் விருந்து அளித்தாள்.  வீட்டுக்கும் ஒரே பெண்.

இவரும் பணத்துக்காக தான் என்னை திருமணம் செய்து கொள்கிறாரோ. என்று கண்ணாடி முன் நின்று  தன்னை பார்த்த வாறு கேட்டாள்.  கவி சொன்னது போல் நான் கருப்பு இல்லையே. அவர்  தானே கருப்பு என்று கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்து நினைத்துக் கொண்டவளுக்கு, அதில் தெரிந்த தன் உயரமான ஐந்தேகால் அடி உயரத்தை பார்த்து. அவர் ஆறடி உயரத்துக்கு நான் எப்படி  செட்டாவேன்.  கல்யாண கனவில் மூழ்கி இருந்தவளை கலவரத்தில் மூழ்க  வைத்த அவள் தோழிகள், யமுனாவின் திருமணத்திற்க்கு என்ன உடுத்துவது என்று அவர்கள் தயாராகி கொண்டு இருந்தார்கள்.

இங்கு  வீர ராகவ் சாருகேசனிடம். ‘என்னடா  மாப்பிள்ளை முகத்தில் ஏதோ கம்மியா இருப்பது போல இருக்கு.’ என்று கேட்டதற்க்கு,

சாருகேசன். “ ஒன்னும் இல்லையே. ஒரு விசாரணை. அதை பற்றி தான் நினைத்து கொண்டு இருந்தேன்.” என்று சொன்னவனை நம்ப முடியாது பார்த்த வீர ராகவன்.

‘ இருக்கும்.  எனக்கு இது பத்தி எல்லாம் ஒன்றும் தெரியாதுல, அதனால உன் ஒர்க் டென்ஷன் எனக்கு எப்படி தெரியும்.?’ என்று  கேட்டு விட்டு வீர ராகவன்  தன் நண்பனை  கூர்ந்து  பார்த்தான்.

அவன் பார்வையில் சாருகேசன் ‘என்னவோ தெரியல ராகவ் கொஞ்ச நாளா அவள் எனக்கு போன் போடுவது இல்ல.’ என்ற நண்பனின் பேச்சில், இது எல்லாம் ஒரு விசயமா என்பது போல் பார்த்த வீர ராகவ்.

‘சிஸ்டர் பண்ணலேன்னா என்ன.? நீ பண்ணு.” என்று வீர ராகவ்  விசத்தை மிக சிம்பிளாக முடித்தான்.

அவன் சொன்னது போல்   அவள் அழைக்கா விட்டால் என்ன.? நாம் அழைக்கலாம் என்று சாருகேசன் யமுனாவை அழைத்து இருந்தால், அடுத்து அவன் திருமண வாழ்க்கை சுபத்தில் முடிந்து இருக்கும்.

ஆனால் ஏதோ  ஒன்று அவர்கள் வாழ்க்கை  சுமுகமாக  போக கூடாது என்று இருப்பதாலோ என்னவோ.

இவன் அழைக்கலாம் எனும் போது, திடிர் என்று அவசர வேலை வந்து விடும், வேலை அனைத்தும் முடிந்து நேரத்தை பார்த்தால், அது நடுயிரவு என்று காட்டும்.

என்ன தான் இருந்தாலும், தங்களுக்கு  இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த  சமயத்தில்  அழைப்பது முறையா.? என்று தயங்கி அவளை  பேசியில் அழைக்காது விட்டு விடுவான். ஒரு சில விசயத்திற்க்கு நாகரிகம் பார்க்க்கூடாது. அதுவும் தன் வருங்கால மனைவியிடம் கூடவே கூடாது.

அதை தான்  சாருகேசன் இப்படி என்று சொன்னதும் வீர ராகவன் சொன்னதும்.

‘ அவள் கூப்பிடாது போகவும், ஒரு மாதம் கழித்து நான்  செய்தேன் ராகவ்.ஆனால் அவள் அட்டண் செய்யல.’ என்று  ஒரு வித சங்கடத்துடன் சொன்ன சாருகேசனை, இப்போது வீர ராகவ் யோசனையுடன் பார்த்தான்.

அவன் பார்வையில் என்ன என்பது போல் சாருகேசன் அவனை பார்க்க. ‘ பிரச்சனை  யமுனா போன் செய்யாதது மட்டும் இல்ல போல.” என்று தன் நண்பனை நன்கு தெரிந்தவன் நான் என்ற வகையாக சரியாக அவனை கணித்து கேட்டான்.

சாரிகேசனும். ஆம் என்று ஒத்துக் கொண்டவன் விசயம் இது தான் என்பது போல்.

 ‘இந்த கல்யாணத்தில்  அவளுக்கு விருப்பமா  என்று  எனக்கு தெரியல ராகவ்.” என்ற நண்பனின் பேச்சில் வீர ராகவுக்கு, கோபமும் எரிச்சலும் சேர்ந்தே வந்தது.

‘என்ன இந்த சமயத்தில் இப்படி பேசுற.? பெண் பார்க்கும் போது அந்த பெண் கிட்ட பேசினேன். என்று தானேடா சொன்ன.” என்று அதிர்ச்சியுடன்  வீர ராகவ் கேட்டான்.

பின் திருமணத்திற்க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் இந்த நிலையில், பெண்ணுக்கு என்னை பிடிக்கவில்லையோ என்று சந்தேகம் என்று சொன்னால், இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டு இருந்தாய் என்று தானே நினைக்க தோன்றும்.

வீர ராகவ் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு “ சரி எதை  வைத்து உன்னை பிடிக்கலேன்னு சொல்ற.?” என்ற கேள்வியில்

“அவளுக்கு என்னை பிடிக்கலேன்னு நான் எப்போடா சொன்னேன்.?” என்று சாருகேசன்  கேட்கவும்.

வீர ராகவ் “ வேண்டாம் டா.அடுத்த வாரம் கல்யாணம்.  முகத்தில் தையல்  விழுந்தா நல்லா இருக்காதுன்னு இருக்கேன். ஒழுங்கா பேசு.” என்று வீர ராகவன்  மிரட்டவும்.

‘நான் அவளுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலேன்னு சொன்னேன் டா. என்னை பிடித்து இருக்கு.  அதனால  தான் நான்  பேசலேன்னாலும், அவளே பேசினா.

பின்  நம்ம வேலை பத்தி கேள்வி பட்டு, என்னை கல்யாணம் செய்தா இதே தான் தொடரும் என்று நினைத்து இருப்பாளோ என்று தான்.’என்ற நண்பனின் பேச்சில், வீர ராகவனுக்கு அப்போது தான் இதுக்கா என்பது போல் ஆசுவாசம் அடைந்தவன்.

‘எல்லாம் பார்த்து தான் ஓகே   சொல்லி  இருப்பாங்க.’ என்ற நண்பனின் பேச்சில், 

‘ஆமாம்.  ஆனாலும் கல்யாணம் புடவை எடுக்க, நகை வாங்க என்று ஒவ்வொரு  முறையும் வீட்டில் வர்றேன் என்று சொல்லி போக முடியாது போயிடுச்சி.

என் தங்கை ஸ்வேதா கூட அண்ணி உங்களை எதிர் பார்த்தாங்க போல. நீங்க வரலேன்னதும் பாவம் அவங்க முகமே ஒரு மாதிரி ஆயிடுச்சி என்று சொன்னாடா.

ஒரு சமயம் என்னை கல்யாணம் செய்தா வாழ்நாள் முழுவதும் இது தான் தொடரும் என்று நினைத்து இருப்பாளோ.’ என்று சாருகேசன் தன் சந்தேகத்தை  வீர  ராகவனிடம் கேட்டான்.

வீர ராகவனுக்கு என்ன தான் இருந்தாலும், திருமணம் புடவை வாங்குவது என்பது எவ்வளவு  முக்கியமானது. இவன் போய் இருந்து இருக்கலாம் என்று நினைத்தாலுமே, அவனுக்கு இந்த வேலையில் எதுவும் திட்டமிட முடியாது. அவசரம் என்றால் போய் தான் ஆக  வேண்டும் என்பது தெரிந்ததால், தன்  நண்பனை தான் சமாதானம் செய்தான்.

‘நீ எதேதோ நினைத்து குழப்பிக்கிற என்று நினைக்கிறேன். விடு ப்ரீயா விடு. எல்லாம் நல்ல முறையில் நடக்கும். உன்னை பிடித்து விட்டது தானே,பின் என்ன.? பிடித்தம் இருந்தால் போதும் மச்சான். மத்ததில் ஏதாவது பிரச்சனை வந்தாலும், அது தன்னால் சரியாகி விடும்.’ என்று நண்பன் கொடுத்த தைரியத்தில் சாருகேசன்  தெளிந்தவனாக, பின்  வேறு பேச ஆரம்பித்து விட்டனர்.

இங்கு  யமுனாவோ தன் தோழிகளிடம்  தன் பேசியில் சாருகேசன் அழைத்த அழைப்பை காட்டியவள் இந்துமதியிடம் . ‘ நீ சொன்னது சரி தான் இந்து.  ஒரு மாதம் நான் கூப்பிடவே இல்ல. அவரும் கூப்பிடல. அதோட புடவை எடுக்க, நகை எடுக்க எதுக்கும் அவங்க வீட்டில் மாப்பிள்ளை வருவார் என்று சொல்வாங்க. அப்புறம் வேலை வந்துடுச்சின்னு சாக்கு.

எனக்கு கூட  அவருக்கு பிடிக்காது  தான் பெரியவங்க கட்டாயத்தில்  இந்த திருமணமோ என்று நினச்சிட்டு இருந்தேன்பா.

அப்புறம் பார் நம்ம போலீஸ் மாமூ.. போன் மேல போன். மெசஜ் மேல மெசஜ். நான் ஒன்றுக்கும்  ரிப்லே கொடுக்கலயே.” என்று  தன் கையில் உள்ள பேசியை ஆட்டிய வாறு சொன்னவளின் பேச்சில் இப்போது இந்துமதி  கதி கலங்கி போனாள்.

“ ஏய் லூசு. நான் நீ மட்டுமே கூப்பிட்டு இருக்கியே, அவர் கூப்பிடலேன்னா உன்னை பிடிக்குதா.? பிடிக்கலையோ.? அந்த சந்தேகத்தில் தான் அப்படி பேசினேன்.

ஆனா நீ அவங்க கூப்பிட்டும் அட்டண் செய்யலேன்னா  வேண்டாம் யம்மீ. எனக்கு என்னவோ நீ செய்யிறது   பிரச்சனையில் முடிய போகுதோன்னு பயமா இருக்கு.” என்ற தோழியை இப்போது யமுனா தைரியப்படுத்தினாள்.

‘பயப்படாதே, ஒன்னும் பிரச்சனை ஆகாது. தொடந்து இந்த போன் அழைப்பு என்ன சொல்லுது. அவருக்கு என்னை பிடிக்கும் என்று. அப்புறம் என்ன.?

இதோ முதல்ல எல்லாம் நான் தான் அவரை கூப்பிடுவேன். அவருக்கு வேலை அப்படி நேரம் இருக்குமோ இல்லையோன்னு. ஆனா நான் கூப்பிடலேன்னு ஆனதும், எத்தனை போன்.? எத்தனை  மெசஜ்.? 

 அப்போ இப்போ எப்படி நேரம் கிடைத்தது.  நீ சொன்னது சரி தான் இந்து. ஈசியா கிடச்சிட்டா அதுக்கு வேல்யூ இல்ல தான். ஒரு முத்ததிற்க்கே ஒரு மாதம் காத்து இருந்தால் தான் என் மதிப்பு அவருக்கு தெரியும்.” என்று சொன்னவளை இந்துமதி மட்டும் அல்லாது அவளின் மற்ற தோழிகளும் பயத்துடன் பார்த்தனர். இது எதில் முடியுமோ என்று.

பெண் ஒன்று நினைக்க. மாப்பிள்ளை மற்றொன்றை நினைக்க.  யார் நினைப்பது நடக்கும் பார்க்கலாம். 

Advertisement