Advertisement

அத்தியாயம்…11

இந்துமதி வீர ராகவை  தன் அலுவலகத்தில் எதிர் பார்க்கவே இல்லை. அதுவும் தன்னிடம் மிக இயல்பாக கேட்கும்  அந்த கேள்வியும், அந்த கேள்வியின் பொருளையும் உணர்ந்த உடன் அதிர்ந்தாலும், பின் தன்னை  சமாளித்து கொண்டவளாக.

“ அவர் என் டி.எல் தான்.” என்று அவன் கேட்டதற்க்கு பதில் சொல்லாது, வாசுதேவன் தனக்கு யார் என்பதை மட்டுமே இந்துமதி சொன்னாள்.

“ நான் அவன் யார் உனக்கு என்பது இல்லை என் கேள்வி. அவன் உனக்கு பிரச்சனை கொடுக்கிறானா.? அது தான் கேட்டேன்.” என்று வீர ராகவ் கேட்டான்.

இந்த இடை பட்ட நேரத்திற்க்குள்  தன்னை முழுமையாக சமாளித்து கொண்டவளாக. “ அது எல்லாம் இல்லையே. அவர் சொன்ன டைமுக்குள்ள அவர் சொன்ன வேலையை என்னால்  முடித்து கொடுக்க முடிய வில்லை. அது தான்.” என்று சொன்னவளின் பேச்சை வீர ராகவ் நம்பாத பாவனையை தான் காட்டினான்.

“ எதோ சொல்ற. இது என்ன ஸ்கூல ஓமர்க்கா  முடிக்க வில்லை என்றால் திட்ட. இப்போ அங்கேயே பசங்கள  ஒன்னும் சொல்ல முடியறது இல்ல. திட்டினா ஸ்ட்டைக். அடித்தா போலீஸ் கம்பிளையிண்ட் என்று எங்க கிட்ட வந்துடுறது. இதுல ஐடி பீல்டல. நீ வேலை முடித்து கொடுக்க வில்லை என்று அவன் திட்டுறான் என்று நீ சொன்னது  நான் நம்புவேன் என்று நீ எதிர் பார்க்குற பார்த்தியா.” என்ற வீர ராகவ் பேச்சுக்கு இந்துமதியிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லாது அமைதியாக இருப்பதை பார்த்து ஒரு பெரும் மூச்சை இழுத்து விட்டு.

“ ரொம்ப  பிரச்சனை   உன்னால் முடியாது என்ற பட்சத்திலாவது என்னிடம்  சொல்.” என்று சொன்னான்.

பின் அவனே. “ நாளை நான் காஞ்சிபுரம் போகும் வேலை இருக்கு. நீ வந்தால் அங்கேயே உனக்கு பிடித்தது போல்  கல்யாணத்திற்க்கு புடவை எடுத்து விடலாம். அப்படி டிசைன் பிடிக்க வில்லை என்றால் கூட,  எனக்கு தெரிந்த பட்டு நெசவர் இருக்கிறார்.

அவர் கிட்ட என்ன நிறத்தில். என்ன  டிசைன் என்று நீ  சொல்லி விட்டால் போதும்  அவர் நல்லா  பண்ணி கொடுப்பார்.” என்று வீர ராகவ் சொல்லவும் இந்துமதி.

“ இது போல் கல்யாண புடவை எல்லாம் பெரியவங்க தானே போய் வாங்கனும்.” என்று தடுமாறிக் கொண்டு சொன்னவளின், முன் அவளின்  பேச்சை கை நீட்டி தடுத்து நிறுத்தியவன்.

“ கட்ட போறது நீ. உன்னை பார்க்க போறது நான். நாம இரண்டு பேரும் போய் நம்ம கல்யாணத்திற்க்கு புடவை வாங்குவதில்  என்ன தப்பு இருக்கு.

அப்படி தப்பா நினைக்கனும் என்றால், என் அம்மா தான் நினைக்கனும். அவங்க கிட்ட  வேணா போன் பண்ணி தர்றேன் கேட்டுக்கோ. எங்க அம்மா எல்லாம் ப்ராட் மைன்ட்   தான்.” என்று சொல்லிக் கொண்டே தன் கை பேசியின் மூலம்   அவன் அம்மா யசோதாவை அழைக்க அவர் நம்பரை எடுக்கும் போதே கை பிடித்து தடுத்து நிறுத்திய இந்துமதி.

“ அய்யோ நான் ஒரு முறைக்கு தான் சொன்னேன்.” என்ன இது இப்படி வம்பு அடியாக செய்கிறானே இவன் என்று நினைத்த இந்துமதி. இவன் எல்லா  வற்றிற்க்கும் இப்படி தானா.? என்று இப்போது தான் இந்துமதி தன் வருங்கால கணவனின் இயல்பை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

அவளின்  யோசனையான முகத்தை  வேறு விதமாக புரிந்துக் கொண்ட வீர ராகவ். “  உங்க வீட்டில் ஏதாவது சொல்வாங்களா.? “ என்று கேட்டு  கொண்டே மீண்டும் அவன் தன் கை பேசியில் எண்ணை அழுத்துவதை பார்த்த இந்துமதி.

“ அய்யோ அப்படி எல்லாம் இல்லவே இல்ல.” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லவும் தான், வீர ராகவ் பேசியை தன் பேக்கிட்டில் வைத்து கொண்டான்.

ஆனால் அவனின் பேச்சை முடிக்காது. “ அப்போ பிரச்சனை நான்.” என்று இந்துமதியையே பார்த்து வீர ராகவ் கேட்ட கேள்வி அவளுக்கு புரியவில்லை.

“ நீங்களா.? நீங்க என்ன பிரச்சனை.?” என்ற இந்துமதியின் கேட்டதற்க்கு,

வீர ராகவ்  நேரிடையாகவே. “ என் கூட தனியா வர விருப்பம் இல்லாததால் கூட  இருக்கலாம். இல்ல பயமா இருக்கலாம்.” என்று வீர ராகவ் சொன்னதும் சிறிது யோசித்த இந்துமதி.

“ நீங்க சொல்ற வரை நிஜமா நான் அந்த  ஹாங்கிலில் யோசிக்கவே இல்லை. “ என்று இந்துமதியும் அவனை போலவே அவன் முகத்தையே பார்த்து கொண்டு சொன்ன விதத்தில், வீர ராகவுக்கு மெல்ல சிரிப்பு மலர்ந்தது.

“ நான் சொல்ற வரை யோசிக்கலேன்னா என்ன அர்த்தம் இப்போ யோசிக்கிறேன்னா.?” என்ற  இந்த கேள்வியை  வீர ராகவ் சிரித்துக் கொண்டே தான்  இந்துமதியை பார்த்து கேட்டான்.

அவனின் இந்த சிரிப்பை அதிசயத்து  பார்ப்பது போல் பார்த்துக் கொண்டே. “ அது என்னவோ தெரியல. இப்போ கூட  உங்க கூட தனியா வர்றதில் பயமோ , அந்த பிடித்த மின்மையோ தோன வில்லை. “ என்ற அவளின் பதில் வீர ராகவின் மனதை கொஞ்சம்  குளிர் வித்தது  என்று தான் சொல்ல வேண்டும்.

“ ம் அப்படியா சொல்ற.?” என்று வீர ராகவ்  கேட்கும்  போதே,  அவனின் மெல்லிய அந்த  சிரிப்பு கொஞ்சம் விரிந்து அவனின் நேர் வரிசை பற்கள் அனைத்தும் வெளியே தெரியும் படி இருந்தது.

அதில்  இன்னும் அதிசயத்து போய் பார்த்துக் கொண்டு இருந்த இந்துமதியின் மனது முன் இருந்த அந்த எரிச்சல், குழப்பம்,  அனைத்தும் மாயமாக மறைந்து மனது லேசாக உணர்ந்தாள்.

அவளின் அந்த அதிசயத்து தோற்றமும், தன்னையே அதுவும் தன் உதட்டையே பார்த்து கொண்டு இருந்த வீர ராகவுக்கும் இப்போது கூச்சமும், அவனுக்கும் ஏதோ புதிய உணர்வு மனது முழுவதும் சூழந்தது.

அவன் இது போல் குரலில் இது வரை பேசி இருப்பானா. தெரியாது.  ஆனால் மையில் இறகால் விசிரியது போல் மெல்ல அவள் அருகில்  ஓட்டினால் போல் நின்று  கொண்ட வீர ராகவ்.

“ என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு. நம்ம நிச்சயம் அன்னைக்கு கூட நீ என்னை இப்படி பார்க்க வில்லையே.” என்று அவன் மூச்சு காற்று அவள் கன்னத்தில் வந்து வீசும் படி அருகிலும்,  குனிந்து கொண்டும் , அவன் பேசிய   அந்த பேச்சில் இந்துமதியின் கழுத்து மயிர்கள்  எல்லாம் சிலிர்த்து எழும்பி நிற்க.

“ நீங்களும் நிச்சயத்தப்ப இப்படி சிரித்து வைக்கலையே.” என்ற அவள் பதில் கேள்வியில்,

“ அப்போ நான் சிரித்தால் போதும் உன்கிட்ட காரியம் சாதித்து விடலாம் என்று சொல்ற நீ.” என்று  வீர ராகவ் கேட்டான்.

“  உங்களுக்கு என் கிட்ட  காரியம் சாதிக்க என்ன இருக்கு.” என்ற அவள் கேள்வியில் ஆழ்ந்து அவளை பார்த்து கொண்டே.

“ அது இருக்கு ஏகப்பட்டது. கல்யாணத்திற்க்கு பின் ஒவ்வொன்னா சிரித்து கொண்டே  கேட்கிறேன். பார்க்கலாம் தட்டாது கொடுக்கிறியா என்ன என்று.”  என்ற  வீர ராகவின்  பேச்சு முதலில் இந்துமதிக்கு புரியவில்லை.  புரிந்த பின் முதன்  முதலாக  ஒரு பெண்ணாக அவள் உணர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

வீர ராகவை திருமணத்திற்க்கு பேசும் போது யமுனா பிரச்சனையில் இருந்தாள். பின் வீர ராகவ் சாருகேசன் பிரண்ட் எனும் போது, பயத்திலேயே அவள் நிச்சயம் வரை  என்ன நிச்சயத்துக்கு பின்னும், இதோ போன நொடி வரை அப்படி தானே அவள்  கடந்தாள்.

ஆனால் இப்போது அவனின் இந்த  மூச்சு காற்றிலும்,  அவனின் தனக்கு மட்டுமே ஆனா அந்த பிரத்தியோக பார்வையிலும், பேச்சிலும், அவள் முற்றிலுமாக வீர ராகவை தனக்கு உண்டானவன் என்ற உரிமையில்  பார்த்தாள். உணர்ந்தாள்.

அந்த உணர்வு கொடுத்த சுகத்துடனே. “ நாளை எந்த டைம் எங்கு வெயிட் பண்ணனும்.?” என்று  கேட்டு அவனுக்கு தான் வருக்கிறேன் என்ற சம்மதத்தை கொடுத்தாள். அவனோடு தனியே நேரத்தை செலவிட எண்ணி.

வீர ராகவ் சொன்னது போல் அவன் தன் வீட்டுக்கே சரியா எட்டு மணிக்கே  வந்து அழைத்து கொள்கிறேன் என்று சொன்னதற்க்கு ஏற்ப அரை மணி நேரம் முன்னவே ரெடியாகி ஹாலில்  அவன் வரவுக்காக காத்து  கொண்டு இருந்தாள் இந்துமதி.

அவள் அம்மா சாந்தி தன் மகளின் ஆர்வம் படிந்த முகத்தை, மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டே  வருங்கால மருமகனுக்கு என்று பிரத்தியோகமாக சமையலில் அசத்தி கொண்டு இருந்தார்.

தன் மகளை இப்படி மகிழ்ச்சியிடன் பார்த்ததும் தான் அந்த தாய்க்கு  கொஞ்சம் நிம்மதி கிட்டியது. இந்த இடம் முடிவானதில் இருந்து மகளின் முகத்தில் பழைப கல கலப்பு மறைந்து. எப்போதும் எதோ யோசனையுடன் இருப்பதை பார்த்து, அவருக்கு கொஞ்சம் பயமே வந்து விட்டது.

இவளிடம் கேட்டு தானே இந்த இடத்தை முடித்தோம். அதுவும் நிச்சயத்து அன்று மாப்பிள்ளைக்கு   பிடித்து தானே   இந்த திருமணம் ஏற்பாடு  நடக்கிறது என்று கேட்டு ஒரு புதிய புரலியை வேறு கிளப்பி விட்டு விட்டாள்.

நிச்சயத்து அன்றும் மணப்பெண்ணுக்கு  உண்டான மகிழ்ச்சி இல்லாது இருப்பதை பார்த்து,  ஒரு தாயாய் தன் மகள் வாழ்வு எப்படி இருக்குமோ என்ற பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.

நேற்று வீர ராகவ் தன்னை பேசியில் அழைத்து “ நான் நாளை மதியை அழைத்து கொண்டு  காஞ்சிபுரம் போகிறேன். அவளுக்கு பிடித்தது போல் புடவை எடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்.” என்று  மாப்பிள்ளை தன்னிடம் அனுமதி எல்லாம் கேட்கவில்லை. விசயம் தெரிவிப்பு என்று சாந்திக்கு தெரிந்தாலுமே,

சரி போய் வரட்டும். ஒன்றாக சென்றாலாவது பேசி கொஞ்சம் பிடிப்பு வருதா என்று பார்க்கலாம் என்று சாந்தி நினைத்தாலுமே, இந்த பெண் போக மாட்டேன் என்று  சொன்னால் என்ன செய்வது என்று கொஞ்சம் பயமாகவும் தான் இருந்தது.

அதை வீர ராகவிடம் காட்டாது. “ நாளைக்கு இந்துக்கு லீவ் கொடுப்பாங்கலா என்று அவள் கிட்ட கேட்டு சொல்லட்டுமாப்பா.?” என்ற சாந்தியின் கேள்விக்கு,

“ கொடுப்பாங்க என்று தான் மதி சொல்றா.” என்று வீர ராகவ் சொல்லவும், இவருக்கு எப்ப்டி தெரியும் என்று சாந்தி யோசிக்கும் போதே வீர ராகவ்…

“  நான் மதி ஆபிசில் இருந்து  தான் பேசுறேன் அத்தை. லீவு இருக்காம். நீங்க என்ன நினைப்பிங்க என்று தான் உங்க மகள் தயங்கி நிற்க்கிறா.. நீங்களே அவள் கிட்ட  சொல்லிடுங்க அப்ப தான் என் கூட வருவா.” என்று கை பேசியை இந்துமதியிடம்  கொடுத்தான்.அவனை முறைத்துக் கொண்டே செல்லமாக தான்.

 பின் இவள் “ நானே எப்படி அம்மாவிடம் உங்க கூட போவதை பற்றி சொல்வது.” என்று அவன் அருகில் நின்று  கொடுத்த தகிப்பில்,  அவன் முகம் பார்க்க முடியாது தலை குனிந்து கொண்டு சொல்லும் போதே,

தன் அன்னையிடம் அவன் பேசுவது கேட்டு அவனை நிமிர்ந்து பார்த்தால், அவன் பேசுவது பவ்யத்துடன் இருந்தாலுமே,  அவன் தன்னை பார்க்கும் அந்த அட்டகாச பார்வையில் இவனுக்கு ரொம்ப கொழுப்பு தான் என்று நினைக்க தோன்றியது.

இந்துமதிக்கு அவனின் இந்த அட்டகாசங்கள் எல்லாம் பிடித்தே இருந்தாலும், மேலுக்கு பிடிக்காதது போல் முறைத்துக் கொண்டே பேசியை வாங்கிய  இந்துமதி தன் அன்னை சொல்வதற்க்கு எல்லாம் தலையாட்டியவளின் அந்த குட்டி ஜிமிக்கையும் கூட இப்போது  வீர ராகவனுக்கு அழகாக தெரிய. அதை ரசனையாக பார்த்தான். அவனின் பார்வையில் இன்னும் இந்துமதிக்கு வெட்கம் சூழ்ந்தது.

 அதை அவனிடம் இருந்து மறைக்கும் பொருட்டு. கேன்டினை காட்டி. “ ஏதாவது சாப்பிட்டு போறிங்களா.?” என்று  இந்துமதி சும்மா பார்மாலிட்டிக்கு தான் அவனிடம் கேட்டாள்.

அவனோ. “ என்னை சாப்பிடாது நீ அனுப்பி விடுவாயா என்ன.? இப்போ என்ன டைம். நான் இன்னும் சாப்பிடல. வா சாப்பிடலாம்.” என்று சொல்லி உரிமையுடன் அவள் கை  பற்றிக் கொண்டு கேண்டினுக்குள் சென்றான்.

இந்துமதியின் நல்ல  நேரமா.? இல்லை கெட்ட நேரமா.? தெரியவில்லை. அவளுடன் வேலை பார்க்கும் யாரும் அங்கு இல்லாது போயினர்.

இருந்து இருந்தால், மற்றவர்களின் வம்புக்கு அலையும் சிலராவது   வீர ராகவை. “ யார்.?” என்று  கண்டிப்பாக கேட்டு இருப்பார்கள். இந்துமதியும்  மறைக்காது  இருக்கும் உறவை  தான் சொல்லி இருக்க போகிறாள்.

அதன் பின் இந்த செய்தி வாசுதேவன் காதுக்கும் சென்று இருக்கும். அதுவும் வீர ராகவின் பணியையும் சேர்த்து சொல்லி இருந்தால், கண்டிப்பாக  இந்துமதியின் தலை பக்கம் கூட அவன் திரும்பி  பார்த்து இருக்க மாட்டான் தான்.

ஆனால் விதி வேறு மாதிரி நடத்த திட்டம் இட்டு விட்டதில், யாரும் அங்கு இல்லாது, அந்த நொடி அவர்களுக்கு தனிமை கொடுத்து, இனிமை  சேர்த்தது என்றாலுமே,  வருங்காலத்திற்க்கு இந்துமதியின் இனிமை  கெட போவது என்பது உறுதியான ஒன்றானது.

வீர ராகவ்  இந்துமதியிடம். “முதன் முதலில் நாம் ஒன்றாக  சேர்ந்து சாப்பிட  போகிறோம்.  ஸ்வீட்டோடு ஆரம்பிக்கலாம்.” என்று அவன் சொன்னதுமே இந்துமதிக்கு நிச்சயம் அன்று கடமைக்கே என்று இருவரும் சேர்ந்து சாப்பிட்டது  ஏனோ அசந்தர்ப்பமாக நினைவுக்கு வந்தது தான்.

ஆனால் அதை நினைக்காதே,  இதோ உன் முன் இருப்பவன் உன் மனதுக்கு பிடித்தது போல் பேசுகிறான். நடந்து கொள்கிறான். அதை பார்.  பழையது நினைத்து இருக்கும் நிம்மதியை கெடுத்து கொள்ளாதே என்று அவளுக்கு அவளே சொல்லி கொண்டவளாக.

“ என்ன ஸ்வீட் உங்களுக்கு பிடிக்கும்.?” என்று  இந்துமதி கேட்கவும், அவன் பார்வை அவள் உதட்டின் மீது படிந்தது. அதை கவனித்த  இந்துமதி சிரித்து கொண்டே .

“அதை மட்டும் சொல்லிடாதிங்க. நான் இதை நிறைய படத்திலும், கதையிலும் படித்து படித்து போர் அடித்து போய் விட்டது. ஒரே டையலாக் அந்த பெண் அது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்று வெட்கப்பட்டுக் கொண்டே சொல்லுவாள். ஒரே போர்ப்பா.” என்று இந்துமதி சொன்ன பாவனையில் வீர ராகவ் சிரித்து விட்டான்.

“ சாரி  போராடிக்காது  ஒன்று செய்யட்டுமா.?” என்று கேட்டு கொண்டே அவள் இதழ் மீது மிக லேசாக தன் உதட்டை பதித்து விலகியவனின் செயலில், உண்மையாகவே  இந்துமதிக்கு போர் என்ன வேறு ஏதேதோ தான் வந்து போயின.

ஆனால் இந்துமதி மற்றவர்கள் சொல்வது  போல். “ சீ நீங்க ரொம்ப மோசம்.”   என்று  எல்லாம் சொல்லவில்லை.

“இப்படி அரக்க பறக்க மத்தவங்க பார்த்துடுவாங்களா என்று கொடுக்கும் இந்த முத்தத்தில்,  நீங்க என்ன பீல் பண்ணி இருப்பிங்க.?   நான் என்ன பீல் பண்ணி இருப்பேன்.?

நம்ம முதல் முத்தம் இப்படி தான் அவசர கதியில் தான் நீங்க எனக்கு கொடுக்கனுமா.?” என்று கேட்டு இந்துமதி வீர ராகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

 கண்டிப்பாக இது போல் ஒரு பேச்சை இந்துமதியிடம் இருந்து அவன் எதிர் பார்க்கவில்லை. ஆனாலுமே  பிடித்து இருந்தது.

அந்த இனிய நினைவுகளுடம் வீட்டுக்கு வந்தவள். இதோ  சொன்ன நேரத்துக்கு காத்திருக்க .  அதை சாந்தியும்  மகிழ்வோடு பார்த்திருந்தார்.

Advertisement