Advertisement

ரகுராம் தள்ளியிருந்த பார்சல்களை காட்டி, “எல்லாம் ஆன்லைன் ஆர்டர்” என்றான்.

“தெரியும். பாப்பா நிறைய ஆர்டர் போடுவா” என்றார் பாரதி.

ரகுராம் விரல்கள் ஒரு நொடி நின்று வேலை செய்ய, “வீட்ல எல்லோருக்கும் எடுத்துட்டு போகணும்” என்று பாரதி சொல்ல, ரகுராமே பார்த்து எடுத்து கொண்டான்.

பாரதி நூறு ரூபாய் மட்டும் கொடுத்து எடுத்து கொண்டார். காரை வரவைத்து பார்சல்களை வைக்க, பாரதி மருமகனுடனே பைக்கில் வந்தார்.

எவ்வளவு பட்டாலும் இன்னும் இந்த ஆசை மட்டும் விடவில்லை. ரகுராம் மருமகனாக வர வேண்டும் என்பது. மகளுடன் சேர்ந்து அவரும் தான் போராடுகின்றார்.

மகள் மனதில் ரகுராம் இருப்பது தெரிந்த நாளில் இருந்து பாரதி மகள் பக்கம் தான். அவளின் விருப்பம் தான் என் முடிவு என்பதை தீவிரமாக பின் பற்றுகிறார்.

பாரதி மாலை போல் கிளம்பவும், ரகுராமும் சென்னை கிளம்பினான். பாரதி அவனை பஸ் ஸ்டாப்பில் விட கேட்க, “இல்லை. நான் சித்தப்பா கூட போறேன்” என்று மறுத்துவிட்டான் ரகுராம்.

அவர்கள் காரில் ஏற கூட அவன் விரும்பவில்லை என்று புரிய பாரதிக்கு முகம் வாடியது. சமாளித்து கிளம்பினார். மகள் மனது இவனிடம் உள்ளது. அதற்கு நான் தான் முக்கிய காரணம். எப்படி இதை சரி செய்ய?

தணிகைவேல் மூலம் தான் ரகுராம் அவரிடம் பேசியதே பாரதிக்கு தெரிந்தது. அதுவும் அப்பா, மகள் வாக்குவாதத்தில்.

ப்ரவீன் திருமணம் முடிந்த மூன்றாம் நாள் ஜனக்நந்தினி சென்னை செல்ல நின்றாள். “இன்னும் நாம பேசி முடிக்கலை பாப்பா. முடிவு தெரியாம நீ கிளம்பினா என்ன அர்த்தம்?” என்று அப்பா கேட்க,

“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்ப்பா. இது தான் என் முடிவு” என்றாள் மகள்.

“இப்போ கல்யாணம் வேணாமா, இல்லை இந்த மாப்பிள்ளை வேண்டாமா?

“இரண்டும் தான்”

“பாப்பா. என்னை உன்கிட்ட கோவப்பட வைக்காத. ஒரு பொண்ணுன்னு உனக்கு செல்லம் கொடுத்தா நீ என்னையே கஷ்டப்படுத்துற”

“நீங்க மட்டும் என்னப்பா? என்மேல இவ்வளவு பாசம் வைச்சிருந்தும் என்னை புரிஞ்சுக்கலை தானே”

“நீ சொல்றதை கேட்டா நாளைக்கு நீ தான் கஷ்டப்படணும் பாப்பா”

“நான் எதுவும் சொல்லலியேப்பா”

“எனக்கு தெரியும் நீ சொல்லணும்ன்னு இல்லை. அது மட்டும் கண்டிப்பா நடக்காது. ரகுராம்க்கு நான் இதை புரிய வைச்சுட்டேன். நீ தான் தேவையில்லாம பிடிவாதம் பிடிக்கிற”

“அவருக்கு புரிஞ்சா அது அவரோட, நான் எப்படின்னு நீங்களும், அவரும் முடிவெடுப்பீங்களாப்பா”

“நான் உன் அப்பா. நான் உனக்காக முடிவெடுக்காம?”

“அப்பான்றது உங்களுக்கு ஒரு கீ கார்ட் மாதிரி இல்லை. என்னை உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க”

“உனக்கு என்கிட்ட பயம் இல்லை பாப்பா. அதான் இப்படி எல்லாம் பேசுற” என்று தந்தை தளர,

“பாசம் நிறைய வைச்சிருக்கேன்ப்பா. ஆனா நீங்க பயத்தை தான் கேட்கிறீங்க இல்லை” மகள் குரல் கமறியது.

பாரதி தான் இருவரையும் சமாளிக்க, “நீ தான். நீ மட்டும் தான் இதுக்கெல்லாம் காரணம்” என்று மனைவியை குற்றம் சாட்டினார்.

“இதை தான் நான் முதல்ல இருந்து சொல்லிட்டிருக்கேன். இவ சுயநலத்துக்காக என் குடும்ப நிம்மதியை கெடுத்துட்டா” என்று ராஜேஸ்வரி பேச,

“ம்மா.. போதும்.. போதும். அவளை பேசுறேன்னு எந்தளவு இழுத்து விட்டிருக்கீங்கன்னு பாருங்க. இனியும் நீங்க அமைதியா இல்லைன்னா நான் தான் எங்கேயாவது ஓடிடணும்” என்றார் தணிகைவேல் குரல் உயர்த்தி.

“உன் பொண்டாட்டி பண்ணதை கேட்க முடியலன்னு என்னை தப்பு சொல்வியா வேலா” என்று ராஜேஸ்வரி மூக்கை உறிஞ்ச, நல்லவேளை வீட்டில் வேறு யாரும் இல்லை. ப்ரவீன் மனைவியுடன் வெளியே சென்றிருந்தான்.

ராஜேஸ்வரி பேத்தி கை பிடித்து கண்ணீர் வடிக்க, தணிகைவேல் முகம் தூக்கி வைத்திருந்தார். ஜனக்நந்தினியோ பாட்டியை சமாளித்து, சென்னை கிளம்பியும்விட்டாள்.

ஆயிற்று எட்டு மாதங்கள். யார் இறங்கி வருவது என்பதில் தான் போராட்டம்.

மகள் வருங்காலத்தில் கஷ்டப்பட கூடாது என்று மகளிடமே போராடுகிறார் தந்தை!

மகளுக்கோ அவளின் மனது ஒருவனிடம் இருக்க, வேறொருவனை கரம் பிடிப்பதா என்ற கேள்வி!

ஆரம்பித்து வைத்த பாரதி, தான் செய்ததை தானே சரி செய்ய போராடி கொண்டிருக்கின்றார். மகளுக்கு துணை நின்று கணவனின் மனஸ்தாபத்தை சம்பாதித்து கொண்டார்.

இன்னும் தான் சிக்கலை இழுத்து கொண்டார். டிரைவருக்கு தெரியாமல் வழிந்த கண்ணீரை துடைக்க, மகள் அழைத்து, அவரின் நலம் விசாரித்தவள், “பங்க்ஷன் எப்படி போச்சு?” என்று கேட்டாள்.

“நல்லா இருந்தது கண்ணு. வீடு அருமையா இருக்கு” என்றார்.

“ம்ம்”

“உன்னை எல்லாம் கேட்டாங்க கண்ணு. எப்போ ஊருக்கு வர நீ”

“எல்லாம் கேட்டாங்கன்னு சொல்லாதீங்கம்மா”

“ஊருக்கு வா கண்ணு. என்னால இனி சென்னை வர முடியுமா தெரியல”

“ஏன் ஏன் வர முடியாது”

“வளைகாப்பு வேலை. அடுத்து ஹாஸ்பிடல்ன்னு நாள் ஆகும் இல்லை”

“வளைகாப்பு முடிச்சுட்டு இங்க வரோம். ஹாஸ்பிடல் பார்த்தாச்சு”

“நீ என்னை தனியா சமாளிக்க முடியாது கண்ணு. நான் இங்கேயே பண்ணிக்கிறேன்”

“அங்க மட்டும் உங்களுக்கு யார் இருக்கா, பாட்டி செய்வாங்களா?”

“செய்வாங்க.. எனக்கு நீங்க பிறந்தப்போ அவங்க தான் செஞ்சாங்க”

“அது எங்களுக்காக. இப்போ செய்வாங்களான்னு தெரியாது. நீங்க இங்க வந்து சேருங்க. அவ்வளவு தான்” என்றவள், மேலும் பேசி வைத்தாள்.

ரகுராம் மாலை கிளம்பியதால், பத்து மணி போல ரூமுக்கு வந்துவிட்டான். குளியல் போட்டு வந்தவன், ப்ரவீனுக்கு அழைத்தான். இரண்டு ரிங்கிலே எடுத்துவிட்டான்.

“இப்போ தான் சென்னை வந்தேன். சொல்லுங்க” என்று ரகுராம் கேட்க,

“எங்க வீட்ல நடக்கிறது உங்களுக்கு தெரியும் தானே?” என்று கேட்டான்.

“ஜானு.. அவ மனசுல நீங்க இருக்கீங்கன்றதே எனக்கு இப்போ வரை ஷாக் தான். உங்களுக்கு அது தெரிஞ்சும் அவளை ஏன் தனியா விடுறீங்க?”

“நான் உங்க அப்பாகிட்ட பேசினேன், அவர் ஒத்துக்கலை”

“அதனால அவளை விட்டுடுவீங்களா?”

“உங்களுக்கு சில விஷயங்கள் சொன்னாலும் புரியாதுங்க”

“புரியலன்னா புரியற வரை சொல்ல மாட்டிங்களா?”

“உங்களுக்கா. உங்க அப்பாவுக்கா?”

“ஏன் இரண்டு பேருக்கும் தான். என் தங்கச்சி நிலைக்கு நீங்க தான் காரணம்ங்கும் போது பதில் சொல்லி தானே ஆகணும்”

“நான் காரணம் இல்லை. நீங்க..  உங்க திங்கிங் தான் காரணம். என்கிட்ட இல்லாத விஷயத்தை சொன்னா நான் என்ன பண்ண முடியும்?”

“அப்போ இதை என் தங்கச்சிகிட்ட சொல்ல வேண்டியது தானே?”

“என்ன சொல்லணும்?”

“அவளை அவ வாழ்க்கையை பார்த்துக்க சொல்லி”

“நீங்க சொல்லுங்க. கேட்பாங்க”

“கேட்கலைன்னு தானே உங்ககிட்ட கேட்கிறேன், யாரால பிரச்சனையோ அவங்க தான் அதை சரி செய்யணும்”

ரகுராம் நெற்றி நீவிவிட்டு கொண்டான். நான் அவகிட்ட சொல்றதா?

“என்ன சொல்லுவீங்க தானே?”

“இல்லைங்க.. முடியாது” என்றுவிட்டான்.

“ஏன் ஏன் முடியாது?”

“என்னால அவகிட்ட இதை சொல்ல முடியாது. இப்போ இல்லை எப்போவும் சொல்ல முடியாது. அவ முடிவு என்னவோ அதை நான் ஏத்துப்பேன் அவ்வளவு தான்”

“அப்போ என் தங்கச்சி என்ன முடிவு எடுத்தாலும் ஏத்துப்பீங்க தானே?”

“ஏத்துப்பேன்”

“அவ மூவ் ஆன் பண்ணா கேட்க மாட்டீங்க இல்லை”

“பண்ணா பார்த்துக்கலாம்”

“பண்ணிட்டா சொல்லுங்க”

“அதை அப்புறம் பார்ப்போம்” என்று வைத்துவிட்டான் ரகுராம்.

தலை கொதித்தது. என்ன பண்றாங்க இவங்க எல்லாம்? அறைக்குள்ளே கடுப்பாக நடந்தான். ஏதேதோ கோவம், ஆதங்கம்.

போன் ஒலிக்க, எடுத்து பார்த்தால் ஜனக்நந்தினி.

இப்போ ஏன் கூப்பிடுறா?

போன் எடுக்க, “என்ன சொன்னீங்க அண்ணாகிட்ட” என்று கேட்டாள் பெண்.

எட்டப்பன் ஏதோ வேலை பார்த்துட்டார்!

“நான் ஏதோ மூவ் ஆன் பண்ணனும்ன்னு சொல்லியிருக்கீங்க”

“நான் சொல்லலை”

“பண்ணா உங்களுக்கு ஓகேன்னு சொன்னீங்களா?”

“நீ பண்ண மாட்டேன்னு சொன்னேன்”

“உங்களுக்காகன்னு நீங்க நினைச்சா அழிச்சிடுங்க, எனக்காக மட்டும் தான்”

“அந்த எனக்குலே நானும் வருவேன்னு எனக்கு தெரியும்”

“நான் வைக்கிறேன்”

“ஹேய் இருடி”

“உன் அண்ணன் என் மூளையை சூடேத்திட்டான். நீ வெடிக்க வைக்க பார்க்கிறியா?”

ஜனக்நந்தினி  மௌனம் காத்தாள்.

“உன் அம்மா ரொம்ப வீக்கா இருக்காங்க. அவங்களை பார்த்துக்க மாட்டியா?”

“என்கிட்ட ஏன் கேட்கிறீங்க? போய் மிஸ்டர் தணிகைவேல்கிட்ட கேளுங்க”

“அத்தை பொண்ணுக்கிட்டேயும் கேட்கலாம்”

“அத்தை பொண்ணுக்கு பதில் சொல்ல இஷ்டமில்லை”

“அவங்களை கொஞ்சம் கேர் எடுத்து பாரு. ஊருக்கு போ”

“நான் வைக்கிறேன்”

“எப்படி இருக்க?”

“நல்லா இல்லன்னு சொன்னா நல்லா வைச்சுப்பீங்களா”

“உன் அப்பாவை உன்னை எனக்கு கொடுக்க சொல்லு, அருமையா வைச்சுகிறேன்”

“கொடுக்க மாட்டார்ன்னு தானே தைரியமா சொல்றீங்க” பெண்ணின் குரல் சோர்ந்தது.

“கொடுக்க வைக்கலாம். ஆனா அது தப்பு. நானும் நிறைய போராடுறேன். உழைக்கிறேன். என்னோடது லாங் டைம் ப்ராசஸ். நேரம் எடுக்கும். என்ன பண்ண?”

“உங்க ஆன்லைன் பிஸ்னஸ் நல்லா போகுதுன்னு எனக்கு தெரியும்”

“அது ஒரு பொண்ணு அவ சம்பளத்துல முக்கால்வாசி புடைவையே வாங்கிறதால இருக்கும்”

ஜனக்நந்தினி ஒற்றை கண் மூடி நுனி நாக்கு கடித்து கொண்டாள்.

“நீ பர்ஸ்ட் ஆர்டர் கொடுத்தப்போவே கண்டுபிடிச்சுட்டேன். சரி நம்ம மேடம் நமக்கு ஹெல்ப் பண்றாங்கன்னு விட்டேன். அதுக்காக நீ இவ்வளவு சேரி எடுக்காத”

“ஏன், நான் தினம் ஒன்னு கூட கட்டுவேன்”

“கட்டு. ஆனா இப்போ இல்லை”

“வேறெப்போ”

“என்கூட இருக்கும் போது”

ஜனக்நந்தினியிடம் குறும்பான புன்னகை.

“என்ன கட்ட மாட்டியா?”

“இதுக்கும் ஒன்னு சொல்வேன். ஆனா வேணாம்”

“எனக்கு புரிஞ்சது” ரகுராம் முகத்தில் ஒரு வசீகர புன்னகை.

“அதிசயம்” பெண் குரல் தாழ்ந்தே ஒலித்தது.

“அவ்வளவு நல்லவன் எல்லாம் நான் இல்லைடி”

“தெரிஞ்சுக்க வாய்ப்பு வரும் போது சொல்றேன்”

“தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம் சொல்ல முடியுமான்னு பாரேன்”

“ஆஹ்ன்” பெண்ணின் உதடுகள் லேசாக பிளந்து கொண்டது.

ரகுராம் குரலில், அந்த அர்த்தத்தில் பெண்ணின் மொத்தமும் சிவந்து போனது.

“என்ன பேச்சையே காணோம்”

“நான் வைக்கிறேன் போங்க”

“ஹேய் இருடி. ஊருக்கு போற தானே?”

“அண்ணி வளைக்காப்புக்கு போறேன்” என்று வைத்துவிட்டாள்.

Advertisement