Advertisement

மீராவும் விஐபியும் கண்மணியை கையில் வைத்து மட்டும்தான் தாங்கவில்லை அப்படி பார்த்துக் கொண்டார்கள்..

மூன்று மாத மாசக்கை காலத்தை அவள் அனுபவித்தளோ இல்லையோ ஒரு வாய் உணவு வைப்பதும் அதை அப்படியே வாமிட் பண்ணி விடுவாள்.. அவள் துடித்த துடிப்பை பார்த்து விஐபி தான் கலங்கி தவித்து போனான்..

மூன்று மாதம் முடிந்ததும் அவள் இவ்வளவு நாளும் சாப்பிடாமல் விட்டதற்கும் சேர்த்து சந்தோஷமாக அவளுக்கு தேவையான பழ வகைகள்.. நட்ஸ், ஆரோக்கியமான உணவு வகைகள் என பார்த்து பார்த்து மீரா செய்து கொடுத்து அவளை கொஞ்சம் உடலளவில் தேற்றினார்கள்..

கண்மணி அந்த வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்வதில்லை..

பொட்டிக்கில் அவள் செய்த வேலைக்கு என்று ஒரு பெண்ணை நியமித்தான் விஐபி..

தினமும் கண்மணியின் அம்மா வந்து அவளை பார்த்து விட்டு செல்வார்..

வரும்போது கையால் மகளுக்கு ஆசையாக சமைத்து எடுத்து வந்து கொடுப்பார்..

மீரா சந்தோஷமாகவே அவரை வரவேற்று உபசரித்து அனுப்பிவைப்பார்..

ஐந்தாவது மாதத்தை நெருங்கியதும் அவள் கொஞ்சம் சோர்ந்து இருக்கவும் அந்த முறை செக்கபிற்கு அழைத்து வந்த விஐபி மருத்துவரிடம் என்னவென்று கேட்டான்..

“ சார்.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அவங்க உடல் தேறிக்கிட்டு வருது.. அதனால் இடையில இடையில அப்படித்தான் இருக்கும்.. அவங்களுக்கு நல்லா ஆரோக்கியமான உணவை கொடுத்து பார்த்துக்கோங்க.. சின்ன சின்ன எக்சர்சைஸ் பண்ண விடுங்க.. கண்ணாடி பொம்மை மாதிரி அவங்களை பார்த்துக்கிட்டா ரொம்ப நல்லது..” என்று மருத்துவர் கூறிவிட்டு விஐபியை வெளியே போக சொல்லவும் அவனும் சென்றான்..

கண்மணியை தனியாக பிடித்து வைத்திருந்த மருத்துவர்

“ கண்மணி உங்க உடல்நிலை வர வர ரொம்ப மோசம் ஆகிட்டு இருக்கு.. குழந்தை வளர்ச்சியை கர்ப்பபை தாங்க முடியாம பல உடல் உபாதைகளை உங்களுக்கு குடுக்கும்.. இனிதான் நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்..

உங்க உடல் நிலையை பார்த்து எனக்கே பயமா இருக்கு.. நான் தான் ரிஸ்க் எடுத்துட்டேனோனு பீல் ஆகுது.. எப்ப உங்களுக்கு சின்ன பெயிண் மாதிரி இருந்தாலும் உடனே ஹாஸ்பிடல் வந்துடுங்க கண்மணி..

உங்களுக்கு நார்மல் பிரசவத்துக்கு கட்டாயம் வாய்ப்பே இல்லை.. சீசர் தான்.. இந்த மருந்து எல்லாம் ஒரு நாளும் மிஸ் ஆகாம எடுத்துக்கோங்க..” என்று கூறி அனுப்பினார்..

பல போராட்டங்களுக்கு மத்தியில் ஆறு மாதங்கள் கழித்து சீதாராம் ஜோடி அவர்கள் கனவு தொழிலை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்து முடித்தார்கள்..

நல்ல நாள் பார்த்து இனி ஹோட்டல் திறந்தால் சரி..

மீரா, கண்மணி விஜய் மூவரையும் அழைத்திருந்தார்கள்..

கண்மணியின் உடல்நிலை காரணமாக அவளால் வர முடியாது.. அதோடு அவளை தனியாக விட்டு மீராவும் வர முடியாது அதனால்..

ஹோட்டல் திறப்பு விழா அன்று காலையில் விமான மூலம் விஐபி சென்று மாலையில் திரும்புவதாக பிளான் பண்ணி சென்றான்..

சீதாவின் விருப்பப்படி விஐபி ஹோட்டலை திறந்து வைத்தான்..

சீதா விளக்கேற்றி பூஜை முடித்ததும் அனைவருக்கும் இலை போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது..

விஐபி சந்தோசமாக உணவை சாப்பிட்டுவிட்டு ராமுக்கும் சீதாவிற்கும் பரிசை கொடுத்துவிட்டு ஹோட்டல் திறப்பு விழாவுக்கு பாடல் ஒன்று பாடி அனைவரையும் சந்தோஷப்படுத்தி விட்டு அவன் திட்டப்படி மாலை நேரத்து விமானத்திற்கு சென்னைக்கு சென்று விட்டான்..

சீதாவின் விருப்பப்படி காலையில் எழுந்து காலை உணவுக்கான அனைத்து கைவேலைகளும் பெண்கள் செய்து வைப்பார்கள்..

இட்லி தோசை இடியாப்பம் பிட்டு சப்பாத்தி. போன்ற வகை வகையான உணவுகளும் அதற்கு தேவையான சட்னி. சாம்பார்.. அனைத்து ரெசிபியும் சரியாக பார்த்து பார்த்து ராம் கைப்பக்கத்தில் ருசியாக செய்து வைப்பான்..

அவனை நம்பி பள்ளிப் பிள்ளைகளை சவாரிக்கு அனுப்பும் பெற்றோர்களை ஏமாற்றாமல் பிள்ளைகளை காலையில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு ஃபிரஷ்ஷாக கிடைக்கும் காய்கறிகள் மீன் போன்ற நான் வெஜ் பொருட்களையும் வாங்கிக் கொண்டு வந்து மதிய உணவு தயாராகும்..

மதிய உணவு வேலை முடிந்ததும் இடையில் முக்கியமான சவாரிகள் வந்தால் ஏற்றிக்கொண்டு செல்வான்..

போய்வரும் வேளையில் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு வருவான்..

மாலை நேரம் டீ, காபி வடை பஜ்ஜி போண்டா இவைகளும் கிடைக்கும்..

இரவு வேலை இட்லியும் இடியாப்பமும் அங்கே கிடைக்கும்..

சரியாக இரவு 10 மணியளவில் ஹோட்டலை மூடி விடுவார்கள்..

வீட்டிற்கு அருகிலேயே ஹோட்டல் இருப்பதால் வீட்டில் சமைப்பதில்லை..

முன்பு காலை மதியம் என ராம் சமைத்து வைத்துவிட்டு வீட்டில் இருக்காமல் ஆட்டோ எடுத்துக் கொண்டு சென்று விடுவான்..

இப்பொழுது அதிக நேரம் வீட்டில் இருக்கிறான்..

சுட சுட அவன் கை பக்குவத்தில் சமைத்த உணவுகள் தந்தைக்கு,தங்கைக்கு, மனைவிக்கு உணவு கிடைக்கிறது..

அவர்களும் சந்தோசமாக ரசித்து ருசித்து உண்பார்கள்..

தோணும்போதெல்லாம் அவன் காதல் மனைவியை பார்த்து சைட் அடிப்பான்..

சீதா அன்றய நாட்களுக்கான கணக்கை அன்றே முடித்துவிட்டு வரவு செலவு கணக்கை பார்த்து அவர்கள் போட்ட முதல் பணத்தை அடுத்த நாள் தேவைக்காக எடுத்து வைத்துவிட்டு லாபத்தை எடுத்து தனியாக வைத்து விடுவாள்..

எப்படியும் இருவரும் உறங்குவதற்காக அறைக்கு வர நேரம் இரவு 11 மணியை தாண்டி விடும்..

ஞாயிற்றுக்கிழமை ஹோட்டலுக்கு விடுமுறை..

அன்று தாமதமாக எழுந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டு விட்டு மாலை நேரத்தில் சீதாராம் மற்றும் யமுனா மூவரும் அருகே இருக்கும் இடங்களுக்கு சுற்றி பார்க்க செல்வார்கள்..

ராம் மனதிற்குள் மிகவும் சந்தோசமாகவும் உற்சாகமாகவும் அவன் நாட்களை கடத்தினான்..

சீதாவும் யமுனாவும் மிகவும் நெருங்கிய தோழிகளாக பழகினார்கள்..

நேரம் கிடைக்கும் போது ராமே அவள் உடை தன்னுடை, தந்தையின் உடை என அனைத்தையும் துவைத்து போட்டு விடுவான்..

வீட்டில் சமைப்பதில்லை அதனால் வீட்டில் பாத்திரங்கள் பெரிதாக புழங்கப்படுவதில்லை.. அதனால் சாப்பிடும் தட்டு மற்ற சிறு சிறு பாத்திரங்களை யமுனா உடனே கழுவி வைத்து விடுவாள்..

இதுவரை காலமும் தங்கையை ராம் எந்த வேலையும் செய்ய வைத்ததில்லை ஆனால் கணேசன் அவர்களுக்கு அதிக கஷ்டத்தை கொடுக்காமல் மகளையும் சிறு சிறு வேலைகளை செய்ய கூறினார்..

சீதா பெரும்பாலான நேரங்களில் ஹோட்டலில் தான் இருப்பாள்..

சீதாவின் மேற்பார்வையில் ஹோட்டல் எப்பொழுதுமே சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்..

ஹோட்டலின் சுத்தம் மற்றும் உணவின் தரம் என மனதிற்கு திருப்தியை கொடுக்கவும் அந்த ஊரை கடந்து போவோர், வருவோர் ஊர் மக்கள் என அனைவரும் தினசரி வாடிக்கையாளர் ஆகிவிட்டார்கள்..

சீதாராமன் உழைப்பிற்கு பலனாக நல்லபடியாக அந்த ஓட்டல் தொடர்ந்து நடந்தது..

சில நாட்களாக செய்யும் உணவுக்கு பற்றாக்குறை வந்தது..

அந்த அளவிற்கு வாடிக்கையாளர் குவிந்தார்கள்..

இப்படியே அவர்கள் ஹோட்டல் வேலையில் பிஸியாக இருந்த நேரம் அது. அப்போது துர்கா பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்..

துர்கா வீடே மிகவும் சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் இருந்தது..

யமுனாவுக்கு குழந்தையோடு விளையாடவே நேரம் சரியாக இருந்தது..

பள்ளி முடிந்து வந்தால் இப்பொழுதெல்லாம் ஹோட்டலுக்கு யமுனா வருவதே இல்லை.. துர்காவின் வீட்டில் தான் கிடையாக கிடப்பாள்..

குழந்தை அப்படியே துர்காவின் சாயலில் இருக்கவும் அதைச் சொல்லி குழந்தையை தொட்டு முத்தமிட்டு என யமுனா விளையாடிக் கொண்டே இருப்பாள்..

இரவில் அந்த குழந்தையை விட்டு தங்கள் வீட்டிற்கு வருவது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..

அப்பொழுது தான் இப்படி தங்கள் வீட்டிலும் ஒரு குழந்தை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏக்கம் அவள் மனதில் வந்தது..

அதை ஒரு முறை தயங்கி தயங்கி சீதாவிடமும் கேட்டுவிட்டாள்..

“ அண்ணி..” என்று அவள் அழைக்கவும்

சீதா திரும்பி பார்க்கவும் யமுனா அவள் அருகே வந்து “ அண்ணி கொஞ்சம் கீழ குனிஞ்சு காதை காட்டுங்களேன். உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..” என்றாள்..

“ சொல்லுடா குட்டி.. என்ன பேசணும்..” என்றாள்..

“ அண்ணி நான் ஒன்னு கேட்டால் தப்பா நினைத்து திட்ட கூடாது..” என்றாள்..

“ என்ன பீடிகை ரொம்ப பெருசா இருக்கு.. சரி கேளு திட்ட மாட்டேன்..” என்றாள்..

“ துர்கா அண்ணி வீட்டுல இருக்க அவங்க பாப்பா போல எப்ப நம்ம வீட்டுக்கு பாப்பா வரும்?.. எனக்கு நைட்ல கூட பாப்பாவ விட்டுட்டு இங்க வர விருப்பமே இல்லை.. எப்பவுமே பாப்பா கூட இருக்கணும் போலவே இருக்கு.. அவங்க வீட்ல இருக்கிறதால இரவில் நான் இங்கே வரவேண்டிய சூழ்நிலை.. அதுவே நம்ம வீட்ல ஒரு பாப்பா இருந்தா நான் எங்கேயும் போக தேவையில்லை தானே.. எப்பவுமே எங்க பாப்பாவ நான் கொஞ்சிக்கிட்டு சந்தோசமா இருப்பேன்.. அதுதான் கேட்டேன் அண்ணி.. நம்ம வீட்டுக்கு எப்ப பாப்பா வரும்..” என்றாள்..

யமுனா என்னவோ சாதாரணமாக கேட்டுவிட்டாள்.. ஆனால் அதைக் கேட்டதும் சீதாவின் முகத்தில் வெட்கம் பூத்தது..

ஹோட்டல் நல்லபடியாக ஆரம்பித்ததும் எந்த தடையும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்..

அடுத்து என்ன இனி குழந்தை தான்..

“ கூடிய சீக்கிரம் வரும் யமுனா.. அப்போ நீ குழந்தைக்கு அத்தையா தூக்கி கொஞ்சலாம்.. குழந்தை வளர்ந்ததும் நீயே வச்சுக்கலாம்..” என்றாள்..

சீதா கூறியதைக் கேட்டதும் யமுனா முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது..

” ஹேய் ஜாலி அண்ணி.. அப்போ நான் சீக்கிரம் அத்தை ஆகணும்..” என்று சந்தோச கூச்சலிட்டு படிக்க சென்று விட்டாள்..

யமுனா அத்தை என்று பேசியது அந்த வழியாக வந்த ராம் காதில் விழுந்தது..

அது என்னவென்று தெரிந்து கொள்வதற்காக தனிமையில் மனைவியை சந்திக்க காத்திருந்தான்..

அதற்கு சரியான நேரம் வந்தது..

Advertisement