Advertisement

விஐபி கண்மணி ஜோடியும் வெற்றிகரமாக ஹனிமூன் முடித்துவிட்டு நாட்டுக்கு திரும்பி விட்டார்கள்..

 ஒரு பெட்டியுடன் சென்றவர்கள் கிட்டத்தட்ட ஐந்து பெட்டியை மீண்டும் எடுத்து வந்தார்கள்..

 ஒருவரையும் விடாமல் அனைவருக்கும் பார்த்து பார்த்து பிடித்தது

அனைத்தையும் வாங்கி வந்திருந்தார்கள்..

 காதல் கணவனுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்த அந்த பூரிப்பு கண்மணியின் முகத்தில் மிகவும் அதிகமாகவே இருந்தது..

 இரண்டு நாட்களில் வருவேன் என்று கூறிய சீதாராம் ஜோடி அன்று காலை நேரத்தில் எதிர்பாராத விதமாக உணவு நேரத்துக்கு வீட்டுக்கு முன் வந்து காரை நிறுத்தவும் வீட்டில் யாரும் இல்லை..

அவன் வீடு பூட்டி இருந்தது.. யமுனாவும் தந்தையும் துர்கா வீட்டில் இருப்பார்கள் என்று அவனுக்கு தெரியும்..

அவன் வீட்டின் முன்பு நின்று தந்தையின் கைபேசிக்கு அழைப்பு விடுத்தான்..

 அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும்.

“ ஹலோ.. அப்பா சாப்பிட்டீங்களா?. எங்க இருக்கீங்க?. சரியான நேரத்துக்கு மருந்து எல்லாம் சாப்பிடுறீங்களா?.. அத்தை மீரா அம்மா எல்லாரும் எப்படி இருக்காங்க?.. யமுனா எங்கப்பா பேச சொல்லுங்க..” என்றான்..

 கணேசனும் அவன் கேட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டு யமுனாவிடம் கொடுத்தார்..

“ ஹலோ அண்ணா.. சொல்லுங்க அண்ணா அண்ணி எங்க?.. எப்படி இருக்கீங்க?..” என்றாள்..

“ உன் அண்ணி எங்க?. நாங்க எப்படி இருக்கோம்னு நீ போன்ல கேக்கற கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது.. நீயே வந்து பார்த்து தெரிஞ்சுக்கோ..” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்..

“ ஏன் முத்து இப்படி பண்றீங்க?.. வீட்டில சொல்லலாமே எல்லாரும் வந்துருவாங்க.. அதை விட்டு சும்மா எல்லாரையும் டென்ஷன் படுத்துறீங்க?..” என்றாள்..

“ லக்ஷ்மி இங்கே எல்லாம் வெளில வச்சு புருஷனை பேர் சொல்லி கூப்பிட்டா உன்னை தவறாக பேசுவாங்க.. பேர் சொல்லிக் கூப்பிடுவதை நம்ம அறையோட விட்டுடுமா.. வெளிய கொஞ்சம் மரியாதையா கூப்பிட்டா நமக்கு நல்லது..” என்று கூறினான்..

“ சரி நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அப்படியே நடக்கட்டும்..” என்றாள்..

 அவள் கன்னத்தை தட்டி விட்டு சிரித்துக் கொண்டே தலையாட்டினான்..

“ அப்பா.. பாருங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்டதுக்கு வந்து பார்த்து தெரிஞ்சுக்கணும்னு சொல்லிட்டு அண்ணா செல் கட் பண்ணிடுச்சு..” என்றாள் யமுனா..

“ அப்படியா சொன்னான்?.. அவன் சும்மா இப்படி எல்லாம் விளையாட்டுக்கு பேசுற ஆள் இல்லையே.. எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு.. நீ கொஞ்சம் வெளியே போய் பாருமா நம்ம வீட்டுக்கு முன்னாடி வந்து நிற்கிறாங்களோ தெரியாது.. ” என்றார் கணேசன்..

“ ஆமாம் அப்பா இருக்கும்.. நம்ம வீடு பூட்டி இருக்கே.. ஊர்ல இருந்து வந்து வீடு பூட்டி இருக்கவும் அண்ணா விளையாடுதோ. இருங்க பார்த்துட்டு வர்றேன்..” என்று கூறிவிட்டு துர்காவின் வீட்டில் இருந்து வெளியேறி எட்டிப் பார்த்தாள்..

 அவன் வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்ததை பார்த்து யமுனா சிரித்துக் கொண்டே உள்ளே ஓடினாள்..

“ அத்தை மீராம்மா.. எல்லாரும் வாங்க..” என்று சத்தமாக அழைத்தாள்..

யமுனாவின் சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று அறையில் மாசகையால் வாமிட் பண்ணி விட்டு உறங்கிக் கொண்டிருந்த துர்கா, தாத்தா,பாட்டி, யசோதா, மீரா என அனைவரும் வந்து விட்டார்கள்..

“ என்ன யமுனா?.. ஏன் இப்படி சத்தமா அழைத்த?..” என்றார் யசோதா..

“ அதுவா அத்தை எல்லாம் சந்தோஷமான விஷயம் தான் வாங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு போகலாம்..” என்று அழைத்து கொண்டு வந்தாள்..

 அவர்களும் துர்கா வீட்டிலிருந்து வெளியே வந்ததும் சீதா ராம் ஜோடியை பார்த்து விட்டார்கள்..

 யசோதா மகளையும் மாப்பிள்ளையும் பார்த்ததும் சந்தோஷமாக வேகமாக அவர்கள் அருகே சென்றார்..

வெயிலில் நின்றதால் வேர்வை ஒத்துக் கொள்ளாமல் அவள் போட்டிருந்த சால் மூலம் முகத்தைத் துடைத்துக் கொண்டு நின்றாள் சீதா..

 வேகமாக அனைவரும் அங்கே வந்து கூடியதும் ராம் சீதாவின் கையை பிடித்து அவளை தோளோடு அணைத்துக் கொண்டு அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்..

 ராம் அணைபில் சீதா கட்டுண்டு நின்று அவளும் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்ததுமே பெரியவர்களுக்கு புரிந்து விட்டது இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ முடிவெடுத்து விட்டார்கள் என்று..

 யசோதாவினால் நம்பவே முடியவில்லை.. ஆனால் மகள் முகத்தில் இருக்கும் சிரிப்பு பொய்யில்லை என்பதை தெரிந்து கொண்டார்..

 அவர்களை அங்கேயே நிறுத்தி விட்டு தாத்தாவும் பாட்டியும் வீட்டுக்குள் சென்று யமுனாவின் உதவியோடு ஆரத்தி கரைத்து எடுத்து வந்து பாட்டி அவர்களுக்கு ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து சென்றார்கள்..

 மகள் வாழ்க்கை சிறந்து விட்டது என்று பூரிப்பு யசோதாவின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது..

 அதை மீராவிடம் கூறி மிகவும் சந்தோஷப்பட்டார் யசோதா.. மீராவும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்..

 சீதாராம் ஜோடி உள்ளே வந்ததும் அவர்கள் அறைக்கு சென்று பெட்டியை வைத்துவிட்டு ஹாலுக்கு வந்தார்கள்..

 யாரும் அவர்களிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

இருவரும் சந்தோஷமாக ஒன்று சேர்ந்ததே அவர்களுக்கு போதும்..

 கணேஷனுக்கும் இனி மகன் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்று நம்பிக்கை வந்தது..

 சீதாராம் ஜோடி ஒன்று சேர்ந்ததில் அவர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி..

 ராம் சீதாவை அழைத்துக் கொண்டு துர்கா வீட்டிற்கு சென்று அங்கே காலை உணவை முடித்துவிட்டு அவர்கள் அனைவரும் அங்கு இருக்கவும் ராம் சீதாவை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு வந்தான்..

“ லக்ஷ்மி கொஞ்ச நேரம் நீ படுத்து உறங்கு.. இரண்டு நாளா டென்ஷன் ஒழுங்கான தூக்கமில்லை முகம் ரொம்ப சோர்வா இருக்கு..” என்று கூறிக்கொண்டு அவன் அறையில் டேபிள் பேன் ஒன்றை வைத்து போட்டு விட்டான்..

“ எனக்கு மட்டுமா டென்ஷன். தூக்கம் இல்ல.. நீங்க நைட் ஃபுல்லா டிரைவ் பண்ணி வந்தீங்க தானே.. உங்களுக்கு தான் தூக்கம் அதிகம் தேவை.. வாங்க வந்து படுங்க..” என்று கூறி அவள் அருகே அவன் கையை பிடித்து இழுத்து படுக்க வைத்தாள்..

“ டேய்.. இங்க எல்லாம் இப்படி பகலில் படுக்க மாட்டாங்க டா.. நீ பயண களைப்பில் படுகிறது ஓகே.. நானும் சேர்ந்து படுத்தா தப்பா பேசுவாங்க..” என்றான்..

“ இது என்னங்க ரூல்ஸ்.. இது நம்ம வீடு, நம்ம பெட்ரூம். இங்கே நாம படுத்தா யார் நம்மளை கேள்வி கேட்க முடியும்.. சோர்வு களைப்பு இரண்டு பேருக்கும் தான்.. எனக்கு மட்டும் இல்லை.. இப்ப நீங்க என் கூட சேர்ந்து உறங்கியே ஆகணும்..” என்று கூறி அவனுடன் தர்க்கம் பண்ணி அவனையும் படுக்க வைத்து அவன் தோளில் சாய்ந்து சற்று நேரத்தில் உறங்கிப் போனாள்..

அவனுக்கும் உடல் அலுப்பில் தூக்கம் கண்களை சொருகவும் அவளை அணைத்துக் கொண்டு உறங்கி விட்டான்..

 ரெண்டு நாள் பிரச்சினை பயணக் களைப்பு, சோர்வு மற்றும் இருவருக்கும் கரணால் ஏற்பட்ட மனக்கஷ்டம் என அனைத்தையும் அனுபவித்து விட்டு தற்பொழுது சேர வேண்டிய இடம் வந்து சேர்ந்த சந்தோஷத்தில் நீண்ட நேரம் உறங்கினார்கள்..

 மதிய உணவிற்கும் கூட இருவரும் எழுந்து கொள்ளவில்லை.. அவர்களை யாரும் தொல்லை செய்யவும் இல்லை..

 இருவரும் எழுந்து வரும் போது மாலை ஐந்து மணி ஆகிவிட்டது..

 கிணற்றில் அவளுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தான்.. அங்க வேறு யாரும் இல்லாததால் அவளும் தைரியமாக குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக் கொண்டு வர அவளுக்கு காபி போட்டு கொடுத்தான் ராம்..

 சிரித்துக் கொண்டே அதை வாங்கி அங்கிருந்து பேசிக் கொண்டே காபி குடித்து அந்த நேரத்தை அனுபவித்தார்கள்..

அவனுடன் சேர்ந்து அந்த வீட்டில் இருந்து வெளியேறி அவர்கள் வீட்டை சுற்றி இருந்த இடங்களை சுற்றி பார்த்தாள்..

“ ஏங்க இந்த இடம் எல்லாம் நம்மளோடது தானே..” என்று சீதா கேட்கவும் அதற்கு ராம் “ஆமாடி..” என்று பதிலளித்தான்..

 அந்த இடங்களை பார்த்ததுமே அவர்கள் எதிர்கால திட்டத்தை தீர்மானித்து விட்டாள் சீதா..

 அதனைத் தொடர்ந்து அங்கிருந்து துர்கா வீட்டிற்கு சென்றார்கள்.. அங்கே அனைவரும் பேசி சிரித்துக்கொண்டிருந்து விட்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்து விட்டார்கள்..

 அன்றைய இரவு உறக்கம் வராததால் இருவரும் எதிர்கால திட்டத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்து விட்டு தூக்கம் வரவும் உறங்கி விட்டார்கள்..

 இங்கு விஐபி கண்மணி ஜோடி சென்னை ஏர்போர்ட் வந்து இறங்கியதும் விஐபி அங்கிருந்தே டிரைவர் மூலம் கண்மணியின் அம்மாவையும் ஏர்போர்ட் அழைத்து வரும்படி கூரியிருந்தான்..

மாப்பிள்ளை அழைத்ததால் மறுக்காமல் அவரும் வந்துவிட்டார்..

அவரும் அங்கே வந்து சேரவும் சற்று நேரத்தில் அவர்களுக்கு மதுரைக்குப் பிளைட் தயாராக இருந்தது..

 விமானத்தின் மூலம் மூவரும் மதுரைக்கு வந்த சேர்ந்தவர்கள்..

 ஏர்போர்ட் வெளியே ராம் கார் வைத்துக் கொண்டு காத்திருந்தான்..

 அவர்கள் வந்ததும் விஐபி முன்பக்கம் ராமின் அருகில் இருந்தான்.. பின்பக்கம் கண்மணி மற்றும் அவள் தாய் இருக்கவும் கார் அவர்கள் ஊரை நோக்கி பயணித்தது..

காரில் விஐ பி பாடிய பாடல் தான் ஒலித்துக் கொண்டிருந்தது..

 அவன் குரலுக்கே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவள் அருகே இருக்கும் போது வேறு என்ன வேண்டும்..

கணவன் குரலில் பாடல் கேட்டுக்கொண்டே கண்ணை மூடி சீட்டில் தலை சாய்த்து இருந்தாள் கண்மணி..

 சற்று நேரத்தில் அவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்..

துர்கா வீட்டுக்கு தான் வந்தார்கள்..

 மீரா யசோதா தாத்தா பாட்டி என அனைவரும் வெளியே வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள்..

 இரண்டு ஜோடியையும் இருக்க வைத்து வித விதமாக செய்த உணவு பதார்த்தங்களை பரிமாறி அவர்கள் திருப்தியாக சாப்பிட்டதும் பெரியவர்கள் அனைவரும் இருந்து சாப்பிட்டார்கள்..

 சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் ஹாலில் இருக்க தாத்தா பேசினார்..

“ விஜய் தம்பி நீங்களும் வெளிநாட்டில் இருந்து வரத்தான் நாங்க கத்திருந்தோம்.. இப்ப நான் என்ன சொல்ல போறேன்னா?..

 ராமுக்கு இது பிறந்த ஊர்.. அதே மாதிரி யசோதாவும் உங்க அப்பா கிருஷ்ணனும் இந்த ஊர்காரவங்க..

 அவங்க பிள்ளைகள் நீங்க ரெண்டு பேரும் நாள பின்ன நம்ம சொந்தங்களா ஊருக்கு வந்து போகணுமா இருந்தா இந்த ஊருக்கு நீங்க யார் என்று தெரியணும்.. அதனால நாளைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு.. இரண்டு ஜோடியும் சேர்ந்தே ஊர் மக்களை அழைத்து கல்யாண விருந்து வச்சிடுங்க..

எல்லாரையும் தனி தனியா போய் அழைக்க முடியாது நேரம் இல்லை .. அதனால தண்டோரா போடுற கந்தனை அழைத்து விசயத்தை சொல்லி தண்டோரா போட சொல்லிருங்க.. முக்கியமான பெரியவர்களுக்கு மட்டும் நாம போய் நேர்ல அழைத்தால் போதும்..

இப்பவே நேரம் ரொம்ப குறைவா இருக்கு நீங்க அதுக்குரிய வேலைகளை பாருங்க..” என்று கூறிவிட்டு அவர் கொஞ்ச நேரம் உறங்குவதற்காக அவர்கள் அறைக்கு சென்று விட்டார்..

 அதனை தொடர்ந்து பயணக் களைப்பினால் விஐபி ஜோடியும் சற்று நேரம் உறங்கி எழுந்து வந்தார்கள்..

 மாலை நேரம் அனைவரும் காபி குடித்ததும் மீரா,யசோதா, விஐபி, ராம், தாத்தா.. இவர்கள் ஐந்து பேரும் அந்த ஊரில் முக்கியமானவர்களை நேரில் அழைக்க சென்று விட்டார்கள்..

 மாலை நேரம் ஊருக்கே தண்டோரா கொட்டி விஷயம் கூறப்பட்டது..

‘ நம்ம ஊரை சேர்ந்த கணேசனின் மகன் முத்துராம். யசோதாவின் மகள் சீதா ஜோடியும்.. யசோதாவின் அண்ணன் கிருஷ்ணன் மீரா தம்பதியினரின் மகன் தமிழ் சினிமா உலகின் சிறந்த பாடகன் விஜய் இந்திர பிரகாஷ்.. அவர் மனைவி கண்மணி அந்த ஜோடியும். சேர்ந்து நாளை இந்த ஊரின் பொது மண்டபத்தில் கல்யாண விருந்தை தர உள்ளார்கள்.. அவர்கள் திடீரென்று எடுத்த இந்த முடிவால் யாரையும் நேரில் வந்து அழைப்பதற்குரிய நேரம் பற்றாக்குறை காரணமாக அனைவரும் கோவித்துக் கொள்ளாமல் நாளை கல்யாண விருந்துக்கு வந்து கலந்து கொள்ளுமாறு அவர்கள் சார்பாக கேட்டுக் கொண்டார்கள்.. ’ என்று அந்த ஊரில் இருக்கும் ஒவ்வொரு தெருவிற்கும் சென்று கந்தன் என்பவர் தண்டோரா போட்டார்..

முக்கியமான பெரியவர்களை அழைக்க சென்றுவிட்டு வந்ததும்

 தேவையான பொருட்களை வாங்க அவர்கள் கடைக்கு செல்லும் போது யசோதா ராமை அழைத்தார்..

“ மாப்பிள்ளை நான் ஒன்னு சொல்லுவேன் நீங்க தவறாக எடுத்துக் கொள்ள கூடாது.. உங்க கல்யாணம் ஊர் அழைத்து சிறப்பா பண்ணல.. யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று நடந்து போனது.. அதனால இந்த விருந்தை எங்க பொண்ணு சார்பா நாங்க சந்தோஷமா செய்ய ஆசைப்படுறோம்.. பிரித்து பேசுறேன் என்று தப்பா நினைக்க வேண்டாம்.. சீதாவுக்கு இதுவரைக்கும் கல்யாணத்துக்கு நாங்க எதுவும் பண்ணல அந்த குறை மனசுல எப்பவுமே இருக்கும்.. எங்களுக்கு ஒரே பொண்ணு சீதா பிளீஸ்..” என்றார்..

 யசோதா அப்படி கேட்டதும் அவன் சீதாவை அழைத்தான்..

அவளும் அவன் அருகே வந்து நிற்கவும். “ உங்க பொண்ணு வேற நான் வேற இல்ல அத்தை.. ” என்று மாமியாரிடம் கூறிவிட்டு மனைவியின் பக்கம் திரும்பினான்..

“ நீயே சொல்லு இதுக்கு என்ன பண்ணலாம்?..” என்று கேட்டான்..

“ இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு.. இனி என் பணம், உங்க பணம் என்று பிரிவு இல்லை.. எல்லாமே நம்ம பணம்.. நான் சொல்றது பணத்தில் மட்டும் இல்ல எல்லா விஷயத்திலும் சேரும்.. இப்ப அம்மா விருப்ப படியே பண்ணலாம்..” என்றாள் சீதா..

இரண்டு ஜோடியும் சேர்த்து விருந்து கொடுத்தாலும் எது யாருடைய செலவு என்று தனித்தனியாக பிரித்துக் கொண்டார்கள்..

அதன் பின் இரவு உணவை முடித்துக் கொண்டு ராம் அவன் நண்பன் மற்றும் விஐபி மூவரும் மதுரை சென்று அந்த கடையில் நாளை சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு வந்தார்கள்..

 அதைத்தவிர நான் வெஜ் ஆடு. கோழி. மீன். நண்டு. இறால்.. என அனைத்தையும் ஊரிலேயே வாங்கி கொண்டார்கள்..

 அடுத்த நாள் காலையிலேயே அனைத்தையும் எடுத்துக்கொண்டு பொதுமண்டவத்திற்கு வந்து விட்டார்கள்..

 ராமின் சொந்தக்காரர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என அனைவரும் ஒவ்வொரு வேலையாக செய்ய சீதாவின் விருப்பப்படி ராம் கைப்பக்குவத்தில் கல்யாண விருந்து அமோகமாக தயாராகியது..

 நண்பகல் 12:00 மணி அளவில் ஊர் மக்கள் வர ஆரம்பித்தார்கள்.. வர வர அவர்களை அழைத்துக் கொண்டு சென்று பந்தியில் அமர வைத்து விருந்து உணவு பரிமாறப்பட்டது..

 சந்தோஷமாக அனைவரும் குடும்பத்தோடு வந்து சாப்பிட்டு வாழ்த்தி விட்டு மொய் வைத்துவிட்டு என்றார்கள்..

 மாலை நேரம் வரை விருந்து நடந்தது அதை முடித்துக்கொண்டு அனைத்தையும் ஒழுங்குப்படுத்திவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்..

Advertisement