Advertisement

 அத்தியாயம் 11

 வி ஐ பி யின் தாய் மீரா முறைப்படி ராம் குடும்பத்தை திருமணத்திற்கு அழைப்பதற்காக சீதாவிடம் ராமின் நம்பரை கேட்டார்..

 ஆனால் சீதாவிடம் கணவன் ராம் கைபேசி எண் இல்லாததால் ராமின் தந்தை கணேசன் கைபேசிக்கு அழைப்பு விடுத்தார் மீரா..

 மாலை நேரம் என்பதால் யமுனா படித்துக் கொண்டிருந்தாள்..

அப்போது தான் ராம் ஆட்டோவைக் கொண்டு வந்து வீட்டில் நிறுத்தி விட்டு குளிக்க சென்றான்..

 கணேசனின் கைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டு யமுனா எழுந்து அதை எடுத்து தந்தையிடம் கொடுத்தாள்..

“ அப்பா மீரா ம்மா கூப்பிடுறாங்க.. பேசுங்க..” என்று கூறி பார்வை குறைபாடு இருப்பதால் யார் என்று தெரியாமல் கணேசன் தவிக்கக்கூடாது என்பதால் கைபேசியை ஸ்பீக்கரில் போட்டு கணேசனின் கையில் கொடுத்தாள்..

 மறு பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் மீரா கணேசனுடன் பேச ஆரம்பித்தார்..

“ ஹலோ அத்தான்.. நான் மீரா பேசுறேன் யார்னு தெரியுதா?.. ”

“ ஓ.. தெரியுதே..! அங்க நீங்க எல்லாரும் சௌக்கியமா?.. சொல்லும்மா என்ன விஷயம்..” என்றார்..

“ இங்க நாங்க எல்லாரும் நல்ல சுகம்.. நீங்க எப்படி இருக்கீங்க?.. பேச எடுத்தது நல்ல விஷயம் தான்..”

“ நாங்களும் சௌக்கியமா இருக்கோம்.. ராம் திடீர்னு வந்தது கோவமா?.. அவன் இல்லாட்டி எங்களுக்கு இங்க எதுவுமே ஓடாது.. அதனால எங்களுக்காக சீக்கிரமா வந்துட்டான்.. அதை பெருசா எடுத்துக்காதீங்க… ராம் வந்ததும் ஏன் சீக்கிரமா அங்க நிக்காம வந்தேன்னு நானும் திட்டிட்டேன்.. சரிம்மா நீ ஏதோ நல்ல விஷயம் சொல்ல வந்த என்னன்னு சொல்லு?..”

“ அது வந்து என்னன்னா நம்ம விஜய்க்கு கல்யாண யோகம் வந்துருச்சு.. ஒரு கல்யாணம் இப்பதான் முடிந்தது.. பாருங்க சீக்கிரமே அடுத்த கல்யாணமும் வரப்போகுது.. விஜய்க்கு ஒரு பொண்ண புடிச்சிருக்காம் நாளைக்கு அந்த பொண்ண பார்க்கறதுக்கு போகலாம்னு இருக்கோம்.. நீங்க மாப்பிள்ளை எல்லாரும் வந்து குடும்பத்தோட நல்லபடியா நடத்தி கொடுக்கணும்.. முடியாதுன்னு மட்டும் சொல்லாம கட்டாயம் நீங்க மூன்று பேரும் வந்துடனும்.. கல்யாணமும் கூடிய சீக்கிரமே வைக்கிற மாதிரி இருக்கும் பொண்ணு பாத்து முடிஞ்சதும் நீங்க இருந்து நல்லபடியா கல்யாணத்தையும் நடத்தி கொடுக்கனும்..” என்றார் மீரா..

“ சந்தோஷமான விஷயம் தான்.. வீட்டிலேயே எனக்கு உதவிக்கு ஒரு ஆள் வேணும்.. நான் அங்க வந்தா எனக்கும் கஷ்டம்.. எல்லாருக்கும் கஷ்டம்.. எனக்கு பின்னாடியே ஒரு ஆள் அலையனும்.. அப்புறம் எங்கம்மா நான் நிம்மதியா கல்யாணத்த பார்க்கிறது.. உங்க மாப்பிள்ளையை கட்டாயம் அனுப்பி வைப்பேன்.. அங்க இருந்து கல்யாணத்து நடத்திக் கொடுத்துட்டு வரட்டும்..”

 என்று கணேசன் பேசிக் கொண்டிருக்கும் போதே “ யார். ப்பா?..” என்று கேட்டபடி உள்ளே வந்தான் ராம்..

“ இதோ ராம் குளிச்சிட்டு வந்துட்டான்.. அவன் கிட்ட கொடுக்கிறேன் பேசுங்க..” என்றார் கணேசன்..

“ ஹெலோ மீரமா சொல்லுங்க..” என்று அவன் கேட்கவும் அவனிடமும் விஐபி திருமணத்துக்கு கட்டாயம் வந்து விடும்படி அழைப்பு விடுத்தார்..

 அவனுக்கும் மனைவியை பார்க்க வேண்டும் போல் இருந்தது.. இந்த முறை அவன் சொல்ல நினைத்ததை சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்.. என்ற நம்பிக்கையில் மறுபேச்சு இல்லாமல் அடுத்த நாளே மீண்டும் சென்னை பயணம் செய்வதற்கு சரி என்று சம்மதித்தான்..

“ சரிம்மா நாங்க நாலு பேரும் கட்டாயம் வந்துடுவோம்.. யமுனாக்கு இன்னும் மூணு நாளில் பள்ளி லீவு தான்.. நான்

அங்க வந்து வேலையா இருந்தாலும் அப்பாக்கு துணையா என்னோட பிரண்டையும் அழைச்சிட்டு வரேன்.. ”

“ ஓகே பா ராம். ரொம்ப சந்தோசம்.. அப்படியே உங்க நாலு பேருக்கும்.. அப்புறம் பெரியப்பா வீட்லயும் அவங்களால் வர முடியாதாம்.. அதனால புது கல்யாண ஜோடிக்கும் சேர்த்து பிளைட் டிக்கெட் போட்டு விடுறேன்.. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷமா நல்லபடியா வந்து சேர்ந்திடுங்க…” என்றார் மீரா..

“ இல்லம்மா எங்களுக்கு நாலு பிளைட் டிக்கெட் போட வேணாம்.. மூணு பிளைட் டிக்கெட் மட்டும் போடுங்க.. அப்பா யமுனா என்னோட ஃப்ரெண்ட்.. மூணு பேருமே பிளைட்ல வருவாங்க நான் பஸ்ல வந்துடுவேன்.. ” என்றான்..

“ ஏன்பா ராம் நீ மட்டும் தனியே பஸ்ல வரணும்?.. ”

“ அது பெருசா ஒன்னும் இல்லம்மா.. உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன?.. இப்பவே பழகிக்கணும்.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சா அவளுக்கு பிளைட் ஒத்துக்கொள்ளாது அப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் போது எப்படி அவளை மட்டும் நான் தனியா அனுப்புறது.. தனியா ஒருமுறை அனுப்பி பட்டதே போதும்.. நான் இதுவரை பிளைட்ல போனதே இல்லை.. அதனால கடைசி வரைக்கும் போகாமலே இருந்திடுறேன்.. ” என்றான்..

“ அது உங்க விருப்பம்.. அப்ப நீ இன்னைக்கு நைட் பாஸ்க்கு கிளம்பனும்.. நீ நாளைக்கு வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தால் தான் நாலு மணிக்கு நம்ம பொண்ணு பார்க்க போறதுக்கு சரியா இருக்கும்.. இன்னைக்கு ஏர்லி மார்னிங் தான் நீ ஊருக்கே போய் சேர்ந்து இருப்ப.. உங்க அவசர புத்தியால திரும்பவும் உடனே வர கூடிய மாதிரி ஒரு சூழ்நிலை வந்துட்டு.. என்னவோ பண்ணுங்க. உன் அத்தை கிட்ட கொடுக்குறேன் பேசு..” என்றார் மீரா..

 அதன் பின் யசோதா ஒரு முறை அனைவருடனும் பேசி திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்..

 விஐபியும் ஒரு முறை அனைவருடனும் பேசி அழைப்பு விடுத்தான்..

 அதன் பின் கைபேசி சீதாவின் கையில் வந்து சேர்ந்தது..

 யசோதா சொன்னால் ஏதாவது தட்டிக் கழிப்பால் என தெரிந்தே மீராவே கைபேசியை சீதாவிடம் கொடுத்தார்..

“ இந்தா சீதா ராம் கிட்ட பேசு.. உன் செல்ல குடு?.. ” என அதை வாங்கி.. கையில் எடுத்துக்கொண்டு யசோதாவிடம் வந்து சேர்ந்தார்..

“ நீ வா யசோ.. அவங்க இப்பதான் கல்யாணம் ஆன புது ஜோடி.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள பேசிக்க ஆயிரம் இருக்கும்.. நம்ம இருந்தா சங்கோஜப்பட்டு ஒழுங்கா பேசிக்க மாட்டாங்க.. நம்ம இரவுக்கு தேவையான சாப்பாடு செய்ய போகலாம்.. அவங்க பேசிக்கட்டும்..” என நேரடியாக யசோதாவிடம் கூறிவிட்டு.. மறைமுகமாக ராமிடம் சந்தோசமாக பேசித்தான் ஆக வேண்டும் என சீதாவிற்கும் குறிப்பாக உணர்த்திவிட்டு சென்றார் மீரா..

அவளும் மீராவின் கைபேசியை எடுத்துக் கொண்டு அவர்களது அறைக்கு சென்று விட்டாள்..

‘ இவனோட நான் சந்தோசமா பேசணுமா?.. அது இந்த ஜென்மத்துல நடக்காது..’ என அவள் மனதில் சூளுரைத்துக் கொண்டு அலைபேசியை காதில் வைத்தாள்..

“ ஹலோ நான் சீதா பேசுறேன்.. குறுக்க ஏதும் பேசாம நான் சொல்றதை மட்டும் நல்லா கேட்டுக்கோ.. எனக்கும் அத்தானுக்கும் அப்பா இல்ல.. அதனால அத்தையும் அம்மாவும் ஜோடியாக நின்னு கல்யாணம் பண்ணி வைக்க முடியாத சூழ்நிலை..

இப்ப நாம மட்டும் ஜோடியா இருக்கிறதால நம்மளை கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்தி கொடுக்க சொல்றாங்க.. அது மட்டும் தான் நான் சம்மதிக்க ஒரே காரணம்..

எனக்கு எங்க விஜய் அத்தான் என்றால் எல்லாரையும் விட. ஏன் எங்க அப்பா அம்மாவை விட ஒரு படி மேல விருப்பம்..

நானும் அதை காதல்னு நினைத்தேன்.. ஆனா அத்தான் அப்படி இல்லனு எனக்கு தெரியப்படுத்திட்டாங்க..

நான் எங்க அத்தான் மேல வச்ச விருப்பம் இனி யார் மேலயும் வருமானு கூட எனக்கு தெரியாது.. அப்படிப்பட்ட அத்தானோட கல்யாணம் எந்த குளறுபடியும் இல்லாமல் நல்லபடியா நடக்கணும்.. அதனால நான் இதுக்கு சம்மதிச்சிருக்கேன்…

நீ வர்றதும் தெரிய கூடாது.. போறதும் தெரிய கூடாது.. வந்து ஜோடியா நின்னு தாலியை எடுத்து கொடுத்து கல்யாணம் முடிந்ததும் இருக்கிற இடம் தெரியாம ஊருக்கு போய் சேர்ந்திடனும்…

அப்புறம் மார்னிங் திருமணம் ஈவினிங் ரிசப்ஷன்.. அப்படித்தான் வைப்பாங்க.. என்னோட காலேஜ் மீட் பிரண்ட்ஸ் எல்லாம் ஈவினிங் ரிஷப்ஷனுக்கு தான் வர சொல்லனும்.. மார்னிங் வந்தா நான் கல்யாணம் பண்ணிட்டேன்.. அதுதான் ஜோடியா நின்னு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சுடும்..

 இந்த விஷயம் அவங்களுக்கு தெரிய கூடாது.. ஈவினிங் வருவாங்க. நீ எங்கயாவது ஏதாவது வேலையா என்னை விட்டு தனியாக போய்டு.. அப்போதான் நான் அவங்களை அழைச்சு வந்து அத்தானுக்கு அறிமுக படுத்தி அப்புறம் சாப்பிட வைச்சு அவங்களை அனுப்பி வைக்க முடியும்.. கல்யாணத்துக்கு அவங்களுக்கு சொல்லாம விட்டுடலாம்.. ஆனா ரொம்ப தொல்லை பண்ணுவாங்க… அதனால அவங்களையும் அழைக்க வேண்டிய கட்டாயம்..

அப்புறம் பாரு உலகமே அறிந்த எங்க அத்தான் விஐபி கல்யாணத்தை ஏதோ ஒரு கிராமத்துல ஆட்டோ ஓட்டுற நீ வந்து நடத்தி கொடுக்க வேண்டிய சூழ்நிலை.. இப்படிப்பட்ட இந்த காலத்தை நான் அடியோடு வெறுக்கிறேன்.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. சொன்னதை கேட்டு வந்து எந்த பிரச்சனையும் உன்னால வராம பார்த்து இருந்துட்டு ஊர் போய் சேர்ந்தா சரி தான்.. சரி நான் வைக்கிறேன்.. உன்னை போல வெட்டியா ஆட்டோ ஓட்டுறேன்னு பேர் பண்ணி ஊரா சுத்துறேன்?.. நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு படிக்கணும் வைக்கிறேன் டா.. டால்டா மண்டை..”

 என்று கணவனுடன் அன்பாகவும் பாசமாகவும் மீரா சொன்னது போல் பேசிவிட்டு வைத்து விட்டாள்..

‘ நீ இப்படி பேசாமல் அன்பா பேசி இருந்தால் தான்டி எனக்கு ஆச்சரியம்.. உன் இயல்பு மாறாமல் எப்பவும் என்னோட கடு கடுன்னு கடுப்பா இருந்தாலும் நீ எனக்கு பொண்டாட்டியா வேணும். என் மனசுக்கும் எனக்கும் எப்பவும் நீ தான்டி ராணி…’ என மனதில் பொண்டாட்டியை செல்லமாக கொஞ்சி விட்டு..

 நண்பனை அழைத்து மீண்டும் சென்னை செல்ல இருப்பதை பற்றி சொல்லி வீட்டுக்கு வருமாறு கூறினான்..

 அதன் பின் ஜெட் வேகத்தில் அனைத்தையும் செய்து விட்டு அவனும் நைட் சென்னை பஸ்ஸிற்கு கிளம்பிவிட்டான்..

 இதோ மீண்டும் அவனது மஞ்சக்காட்டு மைனா வை பார்க்க ஓர் அழகிய பயணம்..

 அவர்கள் 5 பேருக்கும் டிக்கெட்டை ஆன்லைனில் புக்கிங் செய்து விட்டார் மீரா..

  இதோ காலையில் அவர்களும் சென்னையை பார்க்க சென்று விட்டார்கள்..

இவர்கள் ஐவருக்கும் சென்னை பயணம் புதிது..

 இங்கே இன்று விஐபிக்கு பெண் பார்க்க போக இருப்பதால் யசோதா இத்தோடு பத்து முறையாவது காலேஜுக்கு போக வேண்டாம் என மகளை தடுத்திருப்பார்..

 எங்கே அந்த ராங்கி காரி கேட்கப் போகிறாள்.. அரை நேரத்தோடு எக்ஸாம் முடிந்ததும் வேகமாக வந்து விடுவதாக கூறிவிட்டு சென்றுவிட்டாள்..

 சீதாவை யசோதா என்றும் இந்தளவுக்கு போக வேண்டாம் என தடுத்ததில்லை..

ஒருவர் மீது உண்மையான அன்பும் பாசமும் அக்கறையும் வைத்திருப்பவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே அவர்களுக்கு ஆபத்து என்றால் உள்ளுணர்வு மூலம் சில அறிகுறிகள் தெரியும்..

அண்ணன் மகனுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம்.. ஆனால் யாருக்கோ ஏதோ ஆபத்து வர இருப்பது போல் யசோதாவிற்கு மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது..

 அதனால் தான் யசோதா சீதாவை காலேஜுக்கு இன்று போக விடாமல் தடுத்தார்.. ஆனால் அவளோ அவர் சொல்லும் எதையும் கேட்காமல் சென்று விட்டாள்..

 நேரங்கள் விரைந்து ஓடிச் சென்றது..

 இதோ ராம் சீதாவின் வீட்டிற்கு வந்து விட்டான்..

 அவன் வீட்டுக்கு வந்த நேரம் சரியாக அவர்களும் சென்னை ஏர்போர்ட் வந்து விட்டார்கள்..

 அவனுக்கு யசோதா வீட்டில் இருந்து கார் அனுப்பி இருந்தார்.. அவர்களுக்கு மீரா வீட்டிலிருந்து மீரா காரை அனுப்பி இருந்தார்..

 அவர்கள் அனைவரும் நேரடியாக மீரா வீட்டிற்கு வந்துவிட்டார்கள்..

ராம் யசோதா வீட்டுக்கு வந்து அவனது பெட்டியை வைத்துவிட்டு அவர்களுடன் அங்கிருந்து மீரா வீட்டிற்கு செல்வதாக திட்டமிட்டு இருந்தான்..

 யசோதாவை மீரா இன்று நேரத்தோடு வரும்படி அழைத்திருந்தார்.. ஆனால் அவர் அங்கு சென்று விட்டால் இங்கே சீதா உடனடியாக வீட்டுக்கு வந்தாலும் அங்கே வருவதற்கு தாமதப்படுத்துவாள் என்று மகளை பற்றி நன்கு தெரியும்..

 அதனால் அங்கு சென்று விட்டு இன்னும் அவளை காணவில்லையே என தவிப்பதற்கு வீட்டில் இருந்தே அவளை அழைத்துக்கொண்டு சரியான நேரத்துக்கு செல்லலாம் என காத்திருந்தார்..

 ராம் வந்ததும் யசோ அவனுடன் பேசி விட்டு அவனுக்கு காலை உணவை கொடுத்து சற்று நேரம் அவனை ஓய்வெடுக்கும் படி அவர்களது அறைக்கு அனுப்பி வைத்தார்..

 அவனும் சென்று அவன் மனைவியின் பஞ்சு மெத்தையில் தலை வைத்து உறங்க ஆரம்பித்தான்..

 அவளை பார்க்கும் வரை அவனுக்கு உறக்கம் வராது.. ஆனாலும் இரண்டு நாள் தொடர் பயணம் என்பதால் களைப்பில் உறங்க ஆரம்பித்தான்..

இதோ நேரம் யாருக்கும் காத்திருக்காமல் மாலை மூன்று மணி ஆகியது..

 மதியத்தோடு வந்து விடுவதாக கூறி சென்ற சீதா இன்னும் வீடு வரவில்லை..

 யசோதா ராமை போய் சீதாவை அழைத்து வருமாறு கூறியும் ராம் மறுத்துவிட்டான்..

“ இன்னும் பத்து நிமிஷத்துல சீதா வீட்டுக்கு வந்துடுவா.. அத்தை நீங்க கவலைப்படாம மீராம்மா வீட்டுக்கு போறதுக்கு எல்லாம் ஆயத்தப்படுத்துங்க..” என்றான் கூலாக..

“ எல்லாம் ரெடியா தான் மாப்பிள்ளை இருக்கு அவ வந்தா கிளம்ப வேண்டியது தான்.. ” என்றார்..

 யசோதா பயந்த மாதிரி எந்த வித ஆபத்தும் இல்லாமல் அவன் சொன்னது போல் பத்து நிமிஷத்தில் சீதா வந்துவிட்டாள்..

 அவள் வந்ததும் வேகமாக பிரஷ் ஆகி ரெடி ஆகி நான்கு மணிக்கு முதல் மீராவின் வீட்டிற்கு இவர்கள் மூவரும் அவர்களது காரில் சென்று விட்டார்கள்..

 ராம் கார் ஓட்ட அவன் அருகே சீதா பின் சீட்டில் யசோதா என மூவரும் வந்து சேர்ந்தார்கள் மீரா வீட்டிற்கு..

“ என்ன யசோ நீ இப்படித்தான் ஆடி அசஞ்சி வருவியா?.. ஏன்மா சீதா அவ்வளவு சொல்லியும் இன்னைக்கு நீ காலேஜுக்கு போய் தான் ஆகனுமா என்ன?.. சரி சரி பேசிட்டு இருக்க நேரமில்லை ரொம்பவே லேட் ஆயிடுச்சு எல்லாரும் கிளம்புங்க..” என்றார் மீரா..

“ ஒரு நிமிஷம்.. நான் சிங்கர் விஐபி.. என்று அந்த வீட்டில் யாருக்கும் தெரிய கூடாது.. கண்மணிக்கு நானே கல்யாணம் அன்னைக்கு சர்ப்ரைஸா சொல்லுவேன்.. திரும்பவும் சொல்றேன் மறந்தும் யாரும் விஐபி னு சொல்லிடாதீங்க… மாப்பிள்ளை பேர் என்னனு கேட்டா விஜய்.. என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டால் இப்ப நான் அப்பாவோட பிசினஸ் பண்ணுறேன்.. இந்த தகவல் மட்டும் சொன்னா போதும்.. நாம பொய் சொல்லல உண்மையைத்தான் சொல்றோம்.. ஆனா ஒரு சின்ன விஷயத்தை அவங்க கிட்ட இருந்து மறைக்கிறோம்.. அவ்வளவுதான் யாருக்கும் எந்த வித குற்ற உணர்ச்சியும் வேண்டாம்.. சரி வாங்க..”

 என்று கூறி விஐபி அவனது காரை ஓட்டிச் செல்ல.. அருகில் மீரா.. பின்பக்கம் துர்காவும் அவள் கணவனும் இருக்க அந்த கார் முன்னே சென்றது..

 அடுத்த காரில் அங்கிருந்து வந்தது போன்று ராம் கார் ஓட்ட அருகில் சீதா.. பின் இருக்கையில் யசோதா மற்றும் யமுனா இருந்தார்கள்..

 அண்ணா இருக்கானே என்று யமுனாக்கு பயமில்லை.. அதனால் சீதாவுடன் கலகலப்பாக பேசிக் கொண்டு வந்தாள்..

 அடுத்த காரில் டிரைவர் கார் ஓட்ட பின் சீட்டில் கணேசனும் ராமின் நண்பனும் வந்தார்கள்..

 ஒரு வழியாக கண்மணியின் வீட்டிற்கு முன்பு வரிசையாக மூன்று காரும் வந்து நின்றது..

 அந்தக் காரே கூறியது அவர்களின் வசதி வாய்ப்பை..

 விஐபி முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கினான்..

 தரகரும் கண்மணியின் தாயும் அருகில் இருக்கும் சிலரும் வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள்..

 சிறிய வீடாக இருந்தாலும் ரொம்பவும் சுத்தமாக நேர்த்தியாக கலை நயத்தோடு இருந்தது..

 அனைவரும் வந்து அங்கிருந்த பாயில் அமர்ந்தார்கள்..

சீதாராம் அருகருகே அமர்ந்ததும் அவர்களுக்கு அருகில் தாம்பூல தட்டு வைக்கப்பட்டது..

 மீராவையும் யசோதாவையும் பார்த்த பின் தான் கண்மணியின் தாய்க்கு கொஞ்சம் மனம் அமைதியாக இருந்தது.. ஏனென்றால் பொட்டிக் வரும்பொழுது கண்மணியுடன் அவர்கள் பேசுவதை பார்த்திருக்கிறார்..

 அப்படி என்றால் அவர்களுக்குத்தான் கண்மணியை பிடித்து தரகர் மூலம் பேசி இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டார்..

“ சரி நல்ல நேரம் முடியறதுக்கு முன்ன பொண்ணை அழைச்சிட்டு வாங்க.. பொண்ணை பார்த்துட்டு அப்புறம் பேச வேண்டியதை எல்லாம் பேசிக்கலாம்..” என்றார் தரகர்..

 அதன் பின் கண்மணியின் தோழிகள் இருவர் அவளை அழைத்து வந்தார்கள்..

 விஜய் அவளை நேரில் சந்தித்து பேசியதிலிருந்து அவளிடம் இருந்து வரும் விஷ் கூட அதன் பின் வரவில்லை.. அந்த நம்பரை பிளாக் பண்ணி வைத்து விட்டாள் கண்மணி..

 அது தெரிந்தும் கூட சிரித்தானே தவிர வேறு எதுவும் அவன் நினைக்கவில்லை..

 அழகிய பட்டு சேலையில் அழகு பதுமையாக நடந்து வந்தாள் கண்மணி..

 தாய் சொன்னபடி அங்கிருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்து.. தலை நிமிர்ந்ததும் எதிரே மீராவை பார்த்ததும் சற்று அதிர்ச்சி அடைத்தாள்..

அன்று பார்த்தது போன்று இன்றும் அவன் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததால் அன்று வந்து தன்னிடம் பேசியது மீராவின் மகன் என இன்று தெரிந்து கொண்டாள்..

“ வாம்மா கண்மணி வந்து இப்படி எங்க பக்கத்துல இரு..” என்றார் மீரா..

“ முதல் பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி அவங்களுக்குள்ள பிடிச்சிருக்கா என்று தெரிஞ்சிக்கிட்டு அதுக்கப்புறம் நம்ம பேச வேண்டியதை பேசலாம்..” என்றார் கண்மணியின் அம்மா..

“ அதுவும் சரிதான்.. இந்த காலத்தில் ஒருவர் ஒருவர் பார்த்து பேசிக்கிறது நல்ல விஷயம் தான்.. போ விஜய்.. போய் பொண்ணு கிட்ட பேசி.. பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுகிட்டு வா…” என்று கூறி மீரா அனுப்பிவைதார்..

 அவளாக மாப்பிள்ளையிடம் பேச வேண்டும் என கேட்டால் கட்டாயம் தாயிடம் திட்டு வாங்க வேண்டி வரும் என்று தெரியும்.. யாராவது இதை சொல்ல மாட்டார்களா என ஏங்கி தவித்து போய் இருந்தாள் கண்மணி..

 அதற்கு அவளது தாயே வழி செய்து கொடுப்பார் என அவள் நினைக்கவில்லை..

 இதற்காக தானே காத்திருந்தாள்.. அவன் எழும் முன்பே அவள் எழுந்து நின்றாள்..

 வந்ததிலிருந்து அவளது நடவடிக்கைகளையும் முகத்தில் வந்து போகும் பதட்டம் கோவம் என பல உணர்வுகளையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் விஐபி..

 அவர்களது வீட்டிற்கு பின்பக்கம் இருக்கும் தோட்டத்திற்கு இருவரும் வந்ததும்..

“ ஏங்க அன்னைக்கு தானே சொன்னேன்..இந்த கல்யாணம் எல்லாம் சரிப்பட்டு வராது.. எனக்கு உங்களை பிடிக்கவில்லைன்னு.. அப்படி இருந்தும் இன்னைக்கு பொண்ணு பார்க்க எல்லாரும் அழைச்சிட்டு வந்து நிக்கிறீங்க.. உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?.. மீரா ஆண்டி பையன்னு பார்க்குறேன்.. இல்லன்னா இப்ப நடக்கிறதே வேற..”

“ இல்லன்னா என்ன நடக்கும்.. ம்ம்ம் சொல்லுங்க மேடம்..”

“ விஐபி சார் தான் எனக்கு பிடிக்கும் என்று சொல்லியும் நீங்க இப்படி வந்து நிற்கிறது உங்களுக்கே சரியா இருக்கா?.. ஓப்பனா என் மனசுல யாரு இருக்கான்னு நான் சொல்லிட்டேன்.. அது தெரிஞ்சும் இப்படி பண்றீங்கன்னா எனக்கு இது சரியா படல..” என்றாள்..

 அவளோடு இன்னும் கொஞ்சம் விளையாடி பார்க்க ஆசை வந்தது விஐபிக்கு..

“ ஏங்க நீங்க சொல்ற விஐபி எவ்வளவு பெரிய ஆள்.. அவர போய் எப்படிங்க நீங்க கல்யாணம் பண்ணிக்க முடியும்?.. இதெல்லாம் நடக்கிற காரியமா என்ன?.. அவர பார்க்குறதுக்கு எவ்வளவு கஷ்டப்படணும்.. அப்படி இருக்கும் போது அவருக்கு நீங்க ஆயிரத்தில் ஒரு ரசிகை… நீங்க இப்படி அவரை நினைச்சுகிட்டு உங்க வாழ்க்கையை கெடுக்குறீங்கன்னு அவருக்கு தெரிஞ்சா உடனே ஓடி வந்து உங்களுக்கு வாழ்க்கையா கொடுக்க போறார்?.. சும்மா போங்க நடக்காத வெட்டி கதை பேசாம.. உங்க மனச மாத்திட்டு கல்யாணத்துக்கு ரெடி ஆகுங்க.. பெருசா விஐபி பெரிய அவன் இவன்னு வந்து யாரைப் பற்றியும் என்கிட்ட பேசாதீங்க… உங்களை நெனச்சிட்டு இருக்க என்னை பாருங்க..” என்றான்..

அவன் இப்படி பேசும் போது அவளது முக ரியாக்ஷனை பார்த்து அவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது.. ஆனாலும் சிரித்து காரியத்தை கெடுக்க கூடாது என கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்..

“ ஹெலோ சார்.. மரியாதையா பேசுங்க.. அவர் வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் ஆசை ப்பட்டதில்லை.. எனக்கு அவரை பிடிக்கும்.. அது லவ்வா இல்ல கிரஷ்ஷா எதுவா வேணா இருக்கட்டும்.. இந்த உலகத்துல எவ்வளவு மேஜிக் நடக்குது .. அப்படி ஒரு மேஜிக் நடந்து எனக்கும் அவருக்கும் கல்யாணம் நடந்தால் அது சந்தோசம் தான்.. அப்படி எதுவும் நடக்காமல் எங்களுக்கு கல்யாணம் நடக்காட்டியும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. காலம் முழுக்க நான் வாழும் வரைக்கும் அவர மனசுல நினைச்சுக்கிட்டே வாழ்ந்துட்டு போயிடுவேன்..

 ஒருத்தர பார்த்து ரசிக்கவோ இல்ல நினைக்கவோ.. அந்த ஆளுக்கு தெரிஞ்சி டிஸ்டர்ப் பண்ணாம நினைக்க உரிமை இருக்கு.. அது போதும் எனக்கு.. ஒரு முறையாவது அவரை நேரில் பார்க்காமல் போய்டுவேனா?.. நான் அவர் மேல வச்சிருக்க லவ் உண்மை என்றால் காலமே எங்களை சந்திக்க வைக்கும்..

 எங்க அப்பா இல்லாம எங்க அம்மா என்னை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க.. அவங்களுக்கு இந்த சினிமா நடிகர் பாடகர் அவர்களை எல்லாம் ரசிக்கிறது புகழ்வது எல்லாம் பிடிக்காது.. ஆனா அதையும் மீறி நான் விஐபி சார் மனசுல நினைக்கிறேன்னா எனக்கு அவர் மேல் எவ்வளவு விருப்பம் என்று நீங்க தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.. எங்க அம்மா வார்த்தை மீறி என்னால இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது..

அதனால நீங்களே போய் இந்த கல்யாணம் வேணாம்.. பொண்ணு பிடிக்கலைன்னு மரியாதையா சொல்லிடுங்க.. அப்படி இல்ல இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்னா நீங்க ஒரு பொண்ணுக்கு தாலி கட்ட மாட்டீங்க.. ஒரு பொணத்துக்கு தான் தாலி கட்டுவீங்க.. அப்புறம் உங்க இஷ்டம்…” என்றாள் கண்மணி..

 அவளுக்கு ஆயுள் குறைவு என ஜோசியர் சொன்னதில் இருந்து அவனுக்கு மனதுக்குள் மிகுந்த வலியாக இருந்தது.. இப்போது அவளே பொணமாகத்தான் இருப்பேன்.. என கூறிய அந்த வார்த்தை அவனை முரடனாக மாற்றியது..

 அவள் பேசி முடித்ததும் அவனுக்கு வந்த கோபத்து ஓங்கி அறைந்து விட்டான்…

 அவள் அழகு முகத்தில் வந்து போகும் அபிநயத்தை ரசிக்க வந்தவன்.. இன்று அவனே அவளை அடித்து அழ வைத்துவிட்டான்..

அவள் கன்னம் சிவந்து போய் அவள் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது..

 அப்போதே முடிவெடுத்து விட்டான்..எங்கே தான் விஐபி என்று சொல்லாமல் சென்று விட்டால் விபரீதமாக இந்த முட்டாள் பெண் ஏதாவது முடிவெடுத்து விடுவாளோ என பயம் வந்தது..

 விளையாட்டு வினையாக வேண்டாம். என நினைத்து முகத்தில் இருக்கும் மாஸ்க் கழட்டி தூக்கி வீசிவிட்டு அவளை இழுத்து மார்பில் அணைத்துக் கொண்டான்..

“ சாரிடி கண்ணம்மா.. உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு தெரிஞ்சும் நீ இப்படி ஒரு வார்த்தை சொன்னது எனக்கு பிடிக்கல..என்னால தாங்கிக்க முடியல.. அந்த கோவத்துல அடிச்சிட்டேன்.. ரியலி சாரிடி.. இப்ப நீ வந்து என் முகத்தையும் என் கண்ணையும் பார்த்து நீ என்னை பிடிக்கவில்லை என்று சொன்னால் நானே இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு போயிடுறேன்.. இப்ப சொல்லு என்னை பிடிச்சிருக்கா?. இல்லையா?..” என்றான்..

 அவனில் இருந்து அவளை சற்று தள்ளி நிறுத்தி அவன் முகத்தை பார்க்க வைத்து கேட்டான்..

 உரிமை இல்லாத பெண்ணை கை நீட்டி அடித்தது.. அவள் பிடிக்கவில்லை என்று கூறிய பின்பும் அவள் எதிர்பாராத நேரத்தில் அணைத்தது என அவளுக்கு பிடிக்காத காரியங்களை அவன் செய்ததால் அவனை நிமிர்ந்து முகத்தை பார்க்க ஒரு நிமிடமும் அவளுக்கு விருப்பமில்லை..

  அவனைப் பார்க்காமலே “ இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. இல்லாட்டி கட்டாயம் நான் சொன்னதுதான் நடக்கும்.. ” என்று கூறி அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்..

‘ இவளை.. என்ன பண்ணலாம்.. பாருடின்னு சொல்லுறேன்.. பார்க்க மாட்டேன்னு போறளே கண்ணம்மா..’ என்று சிறந்த பாடகனை புலம்பி தவிக்க விட்டு சென்று விட்டாள் கண்மணி..

 அவளுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தும் அவள் அதை தவற விட்டு விட்டாள் கண்மணி..

 இனி திருமணத்திற்கு இடையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்களா?. இல்லையா?. என்று தெரியவில்லை..

 அவன் உள்ளே வந்து பொண்ணை பிடிச்சிருக்கு என கூறியதும். மீரா கண்மணியிடம் ஒரு வார்த்தை கேட்கும் படி கூறினார்..

“ என் பொண்ணுக்கு என்ன தெரியும்?.. அவ சின்ன பொண்ணு.. நான் பார்க்கிற மாப்பிள்ளையை தான் அவ கல்யாணம் பண்ணிப்பா.. எங்களுக்கு மனப்பூர்வமான சம்மதம்.. நம்ம மேற்கொண்டு பேச வேண்டியதை பேசி தட்டை மாத்திக்கலாம்.. ” என்றார்..

“ இனி பேசுறதுக்கு என்ன இருக்குது சம்மந்தி.. நாங்க சொல்ல வேண்டியது எல்லாம் நேரத்தோடு தரகரிடம் சொல்லிட்டோம்.. இருந்தாலும் சபையில் வச்சு சொல்லுறோம்.. நம்ம பசங்க சந்தோசமா வாழனும் அதுக்கு அவங்களுக்கு நல்ல படியா கல்யாணம் பண்ணி வைக்கணும்.. உங்க பொண்ணு கண்மணிக்கு உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சு எங்க வீட்டு மருமகளா அனுப்பி வைங்க.. எதுவுமே நாங்க கேட்க மாட்டோம்.. அவ்வளவுதான் இனி தட்ட மாத்திக்கலாம்.. ” என்றார் யசோதா..

“ எழும்புங்க ராம் சீதா முறைப்படி தட்டை மாத்திக்கோங்க.. ” என்றார் மீரா..

 மகனும் மருமகளும் ஜோடியாக நின்று தட்டை மாற்றியதை பார்த்து தெரிந்து கொண்டதும் கணேசனுக்கு அப்படி ஒரு சந்தோசமும் பூரிப்பும்..

 அவள் அவனை பார்க்கவில்லை.. பிடித்திருக்கு என சொல்லவில்லை.. என்பதை தவிர எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக தட்டை மாற்றி கண்மணியின் தலையில் சீதா பூ வைத்து திருமணத்தை உறுதி செய்து கொண்டார்கள்..

துர்காவின் திருமணத்தன்று சீதாவை பட்டுச்சேலையில் பார்த்தது.. அதன் பின்பு இன்று தான் பட்டுச்சேலை உடுத்தி பூ வைத்து சீதா அழகாக இருந்தாள்..

 நிமிடத்துக்கு ஒருமுறை அவளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ராம்..

 அதைப் பார்த்தவள் பல்லை கடித்துக் கொண்டு அவன் வீட்டிற்கு வரும்வரை காத்திருந்தாள்..

“ சரிங்க சம்மந்தி கூடிய சீக்கிரமே வரும் முகூர்த்தத்தில் கல்யாணத்தை வச்சுக்கலாம்.. கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலையை பாருங்க.. அப்போ நாங்க கிளம்புறோம்.. ” என்று கூறி மீராவும் மற்றவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றார்கள்..

 அவள் முகத்தை பார்க்காமல் சென்றதும் மீண்டும் மாஸ்க் அணிந்து கொண்டுதான் கண்மணியின் வீட்டுக்குள் வந்தான் விஐபி..

 திருமணத்துக்கு இடையில் அவள் ஏதாவது விபரீதமாக முடிவெடுக்கும் முன்பு அவளை நேரில் சந்தித்து நான் தான் விஐபி எனக் கூறி விட வேண்டும் என நினைத்துக் கொண்டான்..

 அவன் நினைப்பது எதுவும் நடக்காது என்பது அவனுக்கு தெரியவில்லை..

Advertisement