Advertisement

 வருவாயோ அன்பே..! 10..

 யோசியர் சொன்னது அனைத்தையும் கேட்டு இருந்தவன் எழுந்து காரை எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்..

ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த காரில் மூவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..

 ஹால் சோபாவில் அமர்ந்த மகன் முகத்தில் எந்த ஒரு சஞ்சலமோ தடுமாற்றமோ எதுவும் இல்லை..

 அப்படி என்றால் அவளின் ஆயுள் காலம் குறைவு என்பதை பற்றி அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம்..

 நிமிர்ந்து ஒரு முறை தாயையும் அத்தையும் பார்த்தவன் அவர்களுக்கு தான் பதில் சொல்லும் கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்து அவர்களுடன் பேச ஆரம்பித்தான்..

 வந்து இருந்ததிலிருந்து அவன் முகத்தையே இருவரும் பார்த்தபடி இருந்தார்கள்..

“ என்னம்மா அப்படி பார்க்கிறீங்க?.. உங்கள மதிக்காம உங்க பேச்சை மீறி நான் போய் யோசியரை பார்த்து இந்த உண்மையை தெரிஞ்சுக்கிட்டது உங்களுக்கு கோவமா?.. ” என்றான்..

“ என்ன கேள்வி விஜய் இது?.. உன் மேல எனக்கு எப்படி கோபம் வரும்?…

 நீ எடுத்த இந்த முடிவுல இருந்தே தெரியுது கண்மணியை நீ எவ்வளவு லவ் பண்றன்னு.. எங்களுக்கு வேற என்ன கவலை?.. அந்த பொண்ணுக்கு தான் உன்னோட காலம் முழுக்க வாழ கொடுத்து வைக்கலை.. என்னதான் நானும் காதலிச்சு கல்யாணம் பண்ணிருந்தாலும்.. இந்த ஜெனரேஷன் பசங்களோட உணர்வுகளை புரிந்து கொண்டாலும் நான் உன்னை பெத்த அம்மா விஜய்.. நீ எனக்கு ஒரே மகன்.. உன் வாழ்க்கை காலம் முழுக்க நீ சந்தோசமா வாழணும்னு தானே நான் ஆசைப்படுவேன்..” என்றார் மீரா..

 அவர் பேசும்போது மகன் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என நினைத்து கண்ணில் ஈரம் கசிந்தது.. அதை மகனுக்கு தெரியாமல் துடைத்து விட்டார்..

தாய் பேசியதை கேட்ட விஐபி அவருக்கு பதில் சொன்னான்..

“ கண்மணி என்னோட தீவிர ரசிகை என்று சொல்லும் போதும் சரி. ஒரு வாய்ப்பு என்னை கல்யாணம் பண்ணிக்க கிடைத்தால் அவதான் அதிர்ஷ்டசாலி ன்னு சொல்லும் போது அவ முகத்தை பார்க்கணுமே..! அதில் எவ்வளவு ஆசைகளும் கனவுகளும் இருந்ததுன்னு பார்த்த எனக்கு தான் தெரியும்.. அது மட்டும் இல்ல.. அவளை பார்த்த முதல் பார்வையிலே எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருச்சு.. ஒரு நாள் வாழ்ந்தாலும் அது என் கண்மணியோடு தான்.. அவ்ளோ சீக்கிரமா எல்லாம் அவ என்னை விட்டு போக நான் விட்டு விட மாட்டேன்..” என்று அவன் காதலை கூறிவிட்டு அவனுக்கே அவன் தைரியம் சொல்லிக் கொண்டானோ இல்லை தாய்க்கு சொன்னானோ தெரியாது..

 தாயும் மகனும் எமோஷனலாக பேசிய அந்த சூழ்நிலையை மாற்றுவதற்காக யசோதா “ என்ன அண்ணி இப்படியே பேசிக்கிட்டே இருந்தா சரியா?.. அடுத்த கட்ட வேலையை பார்க்கணுமே..! அந்த அம்மா வேற பணக்கார வீட்டு சம்பந்தமே வேண்டாம்ன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க.. இது அடுத்த சிக்கல் அவங்களை எப்படி சமாளிச்சு கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறது?..”

“ அது எல்லாம் நம்ம விஜயோட சமத்து அவன் மாமியாரை அவன் எப்படி சம்மதிக்க வச்சாலும் அது அவனோட சாமர்த்தியம்.. நம்ம கல்யாணத்துக்குரிய வேலைகளை பார்த்து பத்திரிக்கை அடிக்கிறது பத்திரிக்கை கொடுக்குறது பொண்ணு பாக்க போறது கல்யாணம் தாலி கட்டும்போது ஜோடியை ஆசிர்வாதம் பண்றது இது மட்டும் தான் நம்ம வேலை.. ” என்று கூறி அவன் மீது பெரிய பொறுப்பை சுமத்திவிட்டார்..

“ கண்மணி அம்மா என்ன சொன்னாங்க.. வரவங்க பெரிய பணக்காரன் என்று சொல்லுவாங்க அதனால் அதிகமான சீர் செய்ய முடியாது.. அது தானே அவங்க காரணம்.. நம்ம ஒன்னும் சீர் வேணாம்னு சொல்லி அவங்கள சங்கடப்படுத்த வேண்டாம்.. அவங்களால அவங்க பொண்ணுக்கு என்ன சீர் செய்ய முடியுமோ அதை செய்ய சொன்னால் போதும்.. இந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.. ” என்று கூறி அவன் முகத்தில் வந்து போன நாணத்தை ஒரு நொடியேனும் அதை தாய்க்கு தெரியாமல் மறைத்துக் கொண்டான்..

“ அப்புறம் என்ன அண்ணி விஜய் சொல்றதும் சரி தானே.. நம்மகிட்ட இல்லாத காசா? பணமா?.. நம்ம ஏன் அவங்கள கஷ்டப்படுத்தனும்?.. அவங்க எதுவும் செய்யாமல் கட்டின புடவையோட கண்மணியை அனுப்பினாலும் போதும்.. ஆனால் நாம அப்படி சொன்னா அது அவங்களை சங்கடப்படுத்துற மாதிரி ஆகிடும்.. அதனால என்ன சீர் செய்றதா இருந்தாலும் அவங்களோட விருப்பம்னு பெரியவங்க நாமலும் ஒரு வார்த்தை சொல்லிடலாம்.. அப்பதான் சந்தோஷமா கல்யாண ஏற்பாட்டை பார்ப்பாங்க.. என்ன நான் சொல்றது?..” என்றார் யசோதா..

“ நீ சொல்றதும் சரிதான் யசோ.. அப்படியே பண்ணிடலாம்.. நாளைக்கு நாள் நல்லா இருக்கு.. நாளைக்கே பொண்ணு பார்க்க வர்றோம் ன்னு தரகர் மூலம் தகவலை பொண்ணு வீட்ல சொல்ல சொல்லிடலாம்.. சீதா இதை கேட்டா வீட்ல அடுத்த கல்யாண விசேஷம்ன்னு ரொம்ப சந்தோஷப்படுவா.. சரி வா யசோ.. பேசிக்கிட்டே இருந்தா நேரம் போய்டும் நம்ம போய் லஞ்ச் பண்ணிடலாம்..” என்று கூறி யசோதாவை மீரா சமையல் அறைக்கு அழைத்து சென்றுவிட்டார்..

“ அப்புறம் அண்ணி நாளைக்கு எல்லாம் சரி வந்து பொண்ணு பார்க்க போறதா இருந்தா மாப்பிள்ளை வரணுமே..! அண்ணி சீதாவும் மாப்பிள்ளையும் தான் தட்டு மாத்தணும்.. என்ன சொல்றீங்க?..”

“ இதுல நான் சொல்றதுக்கு.. என்ன இருக்கு யசோ.. நடக்க வேண்டியது அதுதானே.. ராம் இங்க வர வைக்க தான் வேணும்.. வந்த தம்பி ரெண்டு மூணு நாளைக்கு சேர்ந்து தங்குற மாதிரி தான் வந்தது.. ஆனால் என்ன நடந்ததோ தெரியல உடனே போயிட்டு.. ஈவினிங் சீதா வந்ததும் நானே பேசி உடனே சீதா போன்ல இருந்து ராம்கு அழைச்சு வர வைக்கிறேன்… நீ கவலைப்படாத.. ஈவினிங் போல தரகரையும் வரவைத்து நம்ம முடிவை சொல்லி உடனே நாம இருக்கும்போதே கண்மணி அம்மா கிட்ட பேச வைக்கலாம்.. எப்படியும் விஜய் கல்யாணத்தை தள்ளி போட மாட்டான்.. வர்ற முகூர்த்தத்திலேயே தான் வைக்க பார்ப்பான்.. அப்படி ஒரு சூழ்நிலை இருக்கும்போது ராம கொஞ்ச நாளைக்கு இங்கே தங்க வச்சா தான் அவங்களுக்குள்ள ஒரு பிடிப்பு வரும்.. ராம் சொல்லிடான்னு சீதாவும் ராமும் அங்கேயும் இங்கயும் பிரிஞ்சி இருந்தா அவங்களோட பிரிவு ஒரு நேரம் நிரந்தரமாக கூட வாய்ப்பு இருக்கு.. நிரந்தரமாகிறதும் சேர்ந்து வாழ்வதும் சீதா கைல தான் இருக்கு..

மூன்று நாளைக்கு முன்னாடித்தான் சீதாராம் கல்யாணம் நடந்துச்சு.. ஆனா இன்னைக்கு நம்ம விஜயோட கல்யாணத்தை பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்.. இப்ப நம்ம வீட்ல விசேஷங்கள் நடந்துட்டு இருக்கு அதனால இனி எல்லாமே நல்லதா நடக்கும்னு நம்ம எடுத்துக்க வேண்டியதுதான்.. சீதா உனக்கு பொண்ணு ஆனா எனக்கு பொண்ணுக்கும் மேல.. அவங்க வாழ்க்கை மேல எனக்கும் ரொம்பவே அக்கறை இருக்கு.. நான் இருக்கும் வரைக்கும் சீதாராம் வாழ்க்கை பற்றி நீ எப்போதுமே கவலை பட கூடாது…” என்று சற்று வாடியிருந்த யசோவின் முகத்தை பார்த்து ஆறுதல் கூறினார் மீரா அதன் பின் சமையல் வேலையை தொடர்ந்தனர் இருவரும்..

 இங்கே விஐபி மதியநேர அவளின் வாழ்த்துக்காக காத்திருந்து கைபேசியை பார்த்திருந்தான்..

 இப்படியே நேரங்கள் விரைந்தோடி மாலை நேரமும் வந்தது..

 காலேஜ் முடித்து ஷாப்பிங் முடித்து சற்று தாமதமாகத்தான் சீதா வீடு வந்து சேர்ந்தாள்..

 தரகர் வந்துவிட்டார்.. விஐபி உட்பட அனைவரும் அவளுக்காக தான் காத்திருந்தார்கள்..

 காலையில் அவள் காலேஜ் செல்லும் போது வந்த அத்தையும் அத்தானும் இன்னும் வீடு செல்லவில்லை என்றால் ஏதோ முக்கியமான விஷயம் என புரிந்து கொண்டவள் இன்னும் தாமதிக்காமல் வேகமாக அவர்களை பார்த்து சிரித்து விட்டு அவளது அறைக்கு சென்று முகம் கழுவி விட்டு வர அவளுக்கு பிடித்த வகையில் யசோவும் காஃபி தயாரித்து கொடுத்தார்..

 அதை வாங்கி அங்கிருந்த சோபாவில் அத்தைக்கு அருகே அமர்ந்து ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள்..

 களைப்பு நீங்க சீதா காஃபி குடிப்பதை பார்த்திருந்த மீரா அவள் குடித்ததும் அவர் பேச ஆரம்பித்தார்..

“ சீதா வீட்ல அடுத்து விசேஷம் நடக்க போகுது.. நீயும் ராமும் தான் முன்னாடி நின்னு எல்லாத்தையும் நல்ல முறையில் நடத்தி வைக்கணும்.. ”

 அவள் முகத்தில் என்ன உணர்வு என்று கணிக்க முடியவில்லை.. விசேஷம் எனும் சந்தோசமா?. இல்லை அவனை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற கோவமா?..என்று தெரியவில்லை..

“ என்ன விசேஷம் அத்தை?.. ”

“ என்ன சீதா இப்படி கேக்குற?.. நீ கல்யாணம் பண்ணிட்ட.. அடுத்தது கல்யாணத்துக்கு இருக்கிறது நம்ம விஜய் தானே.. அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுமே.. அதுதான் நாளைக்கு பொண்ணு பார்க்க போறோம்.. ”

“ என்னது அத்தானுக்கு கல்யாணமா?.. ஓஹோ அத்தானுக்கு கல்யாணமா?.. ” முதல் டோன் அதிர்ச்சி.. அவள் திருமணமானவள் தன் அத்தான் தனக்கு இல்லை.. என்ற உணர்வு வந்ததும் தான் சாதாரணமாக கேட்டாள்..

“ இதுல ஷாக் ஆகுறதுக்கு என்ன இருக்கு சீதா.. அடுத்தடுத்து நடக்க வேண்டிய விசேஷம் தானே.. மாப்பிள்ளையை வரவழைச்சு நீயும் மாப்பிள்ளையும் முன்னாடி நின்று நாளைக்கு பொண்ணு பார்க்கும் போது தட்டு மாத்தி.. முகூர்த்த நாள் குறித்ததும் கல்யாணத்துக்குரிய வேலைகள் அனைத்தையும் இழுத்து போட்டு செய்து உன் அத்தானுக்கு நீதான் அம்மா அப்பா இடத்தில் இருந்து நல்ல படியா கல்யாணம் பண்ணி வைக்கணும்.. உன் வயசுக்கு இது கொஞ்சம் பெரிய பொறுப்பு தான்.. ஆனா இருந்தாலும் உங்களுக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாளில் ஒரு கல்யாணத்தை தலைமை தாங்கி நடத்துற பாக்கியம் எல்லாம் அவ்வளவு ஈஸியா யாருக்கும் கிடைக்காது.. உங்களுக்கு இப்பவே கிடைச்சிருக்கு.. மாப்பிள்ளையே எல்லாத்துலையும் உன்னை வச்சு சிறப்பா பண்ணிடுவார்.. நீ அதை பத்தி கவலைப்பட தேவையில்லை.. ” என்று மகளிடம் மாப்பிள்ளையை பெருமையாக பேசி ஒரு முறைப்பை வாங்கிக் கொண்டார் யசோதா..

 அதன் பின் அவர்களது நடைமுறையை பற்றி தரகரிடம் மீரா விளக்கமாக கூறினார்..

“ விஐபி வீட்டு கல்யாணம்.. விஐபி தான் மாப்பிள்ளை இது எதுவும் கண்மணிக்கு இப்போதைக்கு தெரியக்கூடாது.. அதை கல்யாணத்தப்ப சர்ப்ரைஸ் பண்ணி நான் சொல்லிப்பேன்..” என்றான்..

மகன் சொன்னதை கேட்ட மீரா “ தரகரே நாங்க சொன்னது எல்லாம் ஒன்று விடாமல் கேட்டீங்க தானே.. அப்படியே கண்மணி வீட்டுல இப்பவே அழைச்சு பேசிடுங்க.. அவங்க என்ன சொல்றாங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கணும்.. ” என்றார்..

 சரி என கூறிவிட்டு அவரும் கண்மணியின் அம்மாவுக்கு அழைப்பு விடுத்தார்..

 அந்தப் பக்கம் அவர் அழைப்பை ஏற்றதும் “ ஹலோ நான் தரகர் சண்முகம் பேசுறேன்.. ”

“ நீங்கன்னு தெரியும் அண்ணே சொல்லுங்க.. ”

“ அது வந்து மா நம்ம கண்மணி பாப்பாக்கு நல்ல இடத்துல இருந்து சம்பந்தம் வந்திருக்கு.. மாப்பிள்ளைக்கு பொண்ணுக்கும் ஜாதகம் நல்லபடியா பொருந்தி இருக்கு.. அவங்க வீட்லயும் சம்மதம் சொல்லிட்டாங்க.. இப்ப என்னன்னா நாளைக்கு பொண்ணு பார்க்க வருவோம்னு சொல்றாங்க..”

“ என்ன திடீரென்று.. காலைல தான் ஜாதகம் வாங்கினீங்க.. இப்ப எல்லாம் பொருத்தமா இருக்கு. நாளைக்கு பொண்ணு பார்க்க வாரங்களா? என்ன சொல்றீங்க?.. எனக்கு ஒன்னும் புரியல?..

“ அது வந்து நீங்க பயப்படற மாதிரி எதுவும் பிரச்சனையும் இல்ல.. வில்லங்கமும் இல்லை.. மாப்பிள்ளை ஜாதகத்தை என்கிட்ட நேரமாவே தந்து வச்சிருந்தாங்க.. அதுக்கு நம்ம கண்மணியோட ஜாதகம் பொருத்தமாக இருக்குமான்னு எனக்குள்ள ஒரு கேள்வி இருந்துச்சு… அதுக்கு தான் நான் ஜாதகத்தை வாங்கி மாப்பிள்ளை வீட்டோட போய் பொருத்தம் பார்த்தோம்.. எல்லாமே நல்ல பொருந்தி இருக்கு.. இவங்க ஜாதகத்துக்கு கூடிய சீக்கிரமே கல்யாணம் நடக்கணும்னு ஜோசியர் சொல்லி இருக்கார்.. அதுதான் மாப்பிள்ளையும் பொண்ணும் ரெடியா இருக்காங்களே..! அப்புறம் என்னத்துக்கு இன்னும் நாள் தள்ளிப் போடுவானே..! என்று அவங்க நாளைக்கு பொண்ணு பார்க்க வாரதா சொல்லி இருக்காங்க… அப்புறம் நீங்க சொன்ன கண்டிஷன் எல்லாம் நானும் அவங்க கிட்ட சொல்லிட்டேன்.. அவங்களுக்கு நம்ம கண்மணி கட்டின புடவையோடு வந்தாலும் சந்தோசமா ஏற்றுக் கொள்வார்களாம்.. ஆனால் தாய்க்கு பொண்ணுக்கு சீர் செய்யணும்னு ஆசை இருக்கும்.. அதை நாங்க தடுக்க மாட்டோம்.. அவங்களால அவங்க பொண்ணுக்கு என்ன செய்ய முடியுமோ அதை தாராளமாக செய்ய சொல்லுங்க அதையும் நாங்க சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறோம்.. அப்படின்னு உங்க விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து சொல்லி இருக்காங்க.. இவங்க கொஞ்சம் பெரிய இடம்தான்.. ஆனா நீங்க பயப்படற மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது.. நல்லபடியா கல்யாணம் நடக்கும்.. என்னம்மா சம்மதமா?.. மாப்பிள்ளை வீட்டுல சொல்லிடட்டுமா?.. நாளைக்கு வாங்கன்னு.. நீங்களும் கண்மணி பாப்பாவும் சம்மதம் சொன்னா சரி.. இந்த கல்யாணம் நடந்த மாதிரி தான்.. இப்ப நீங்க சொல்ற பதிலில் தான் கண்மணி பாப்பாவோட அம்சமான எதிர்கால வாழ்க்கை இருக்கு…” என்று நச்சுனு நங்கூரமாக கண்மணியின் தாய் மறுக்க முடியாத அளவு பேசி அவர் தரகர் என்பதை நிரூபித்தார்..

“ சரி அதெல்லாம் இருக்கட்டும்.. அவங்க வந்து பொண்ணு பார்க்கட்டும்.. அப்புறம் முடிவு பண்ணலாம் கல்யாணம் நடக்குமா?.. நடக்காதான்னு.. நாளைக்கு எப்ப எத்தனை மணிக்கு வருவாங்களாம்?..”

“ மாப்பிளையோட சொந்தக்காரங்க மதுரையில் இருந்து வரணுமாம்.. அவங்களும் வந்ததும் எல்லாரும் நாளைக்கு சாயங்காலம் 4:30 மணிக்கு வருவோம்.. ”

“ அப்ப சரி நாளைக்கு அவங்களை வரச் சொல்லுங்க அண்ணே.. நாங்களும் மதியத்தோட கடையை பூட்டிட்டு வந்து எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறோம்.. எதுவும் தேவை என்றால் நான் உங்களுக்கு கூப்பிடுறேன் சரி வச்சிரட்டுமா?..

“ சரி மா.. வை நல்லதே நடக்கும்.. கண்மணி பாப்பா கல்யாணம் நல்லபடியா நடக்கும்..” என கூறி அழைப்பை துண்டித்து விட்டு விஐபி வீட்டிலும் அனைத்தையும் சொல்லிவிட்டு தரகர் அங்கிருந்து சென்று விட்டார்…

“ என்ன யசோ இந்த அம்மா இவ்வளவு பயப்படுறாங்க.. எனக்கு என்னமோ நாளைக்கு எதுவும் வில்லங்கமா பேசிடுவாங்களோன்னு யோசனையா இருக்கு..”

“ அண்ணி பயப்படுற அளவுக்கு எதுவும் நடக்காது.. நீங்க கவலைப்படாதீங்க.. நம்ம விஜயை யாருக்கும் பிடிக்காம இருக்குமா என்ன?.. அந்த அம்மா சொன்னதை நம்ம கேட்டோமே..! நாளைக்கு அதுக்கு ஏத்த மாதிரி நம்ம பேசி நல்லபடியா முடிச்சிடலாம்.. அப்பா இல்லாம ஒத்த பொண்ணை தனியா வளர்த்தவங்க தானே.. அதுதான் பொண்ணு வாழ்க்கை போற இடத்துல நல்லபடியா இருக்கணும்னு அவங்களுக்கும் ஒரு சின்ன பதட்டம் இருக்கும்.. அதை நாம தவறா எடுத்துக் கொள்ளக்கூடாது.. ஏனென்றால் என்னோட நிலமையும் அது தானே.. அவர் இப்ப இல்லை.. சீதாவை நல்ல இடத்தில் கட்டி கொடுக்கணும் என்ற பயம் எனக்கும் இருந்துச்சு தானே.. அதனால அவங்கள என்னால புரிந்து கொள்ள முடியுது.. நீங்க எதுவும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காதீங்க.. இப்ப நம்ம ஆக வேண்டிய அடுத்த வேலையை பார்ப்போம்.. மாப்பிள்ளைக்கு அழைத்து நாளைக்கு பொண்ணு பார்க்க குடும்பத்தோட வரச் சொல்லணும் ஞாபகம் இருக்குதா அண்ணி?..” என்று சற்று நிதர்சனத்தை பேசி மீராவை கொஞ்சம் சமாதானப்படுத்தி வைத்தார் யசோதா..

 மாப்பிள்ளை என்று யசோ கூறியதும் சீதாவின் முகம் அஷ்ட கோணலாக மாறியது…

“ கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்தி வைக்க போறதே அவங்கதானே..! எப்படி ராம மறக்க முடியும்.. சீதா ராம் நம்பருக்கு போன் போட்டு குடும்மா நானும் யசோதாவும் பேசி குடும்பத்தோட அவங்களை கல்யாணத்துக்கு வரச்சொல்லி அழைக்கணும்..” என்றார் மீரா..

“ அவன் நம்பர் என்கிட்ட இல்ல..”

“ சீதா.. ” அவன் என்று அவள் சொன்னதை கேட்டு மீரா மற்றும் யசோதா இருவரும் சீதாவை என அதட்டினார்கள்..

“ என்ன பழக்கம் சீதா இது.. கணவனுக்கு மரியாதை கொடுக்காத பழக்கம்.. நீங்க புருஷன் பொண்டாட்டி உங்களுக்குள்ள செல்லம்மா வாடா போடான்னு பேசிக்கோங்க.. ஆனா அந்த அறையை விட்டு வெளிய வந்ததும் புருஷனை எப்பவுமே மரியாதையா தான் பேசணும்.. இதுவா நாங்க உனக்கு சொல்லிக் கொடுத்தது?.. இதுதான் கடைசியும் முதலுமா இருக்கணும்.. இனி எப்பவுமே மாப்பிள்ளையை மரியாதையா தான் பேசணும்.. ” என்று மீரா சீதாவை கண்டித்தார்..

“ சாரி.. ம்மா, அத்தை.. அவர் நம்பர் என்கிட்ட இல்ல.. ” என்றாள்..

 அவன் வரவையே பிடிக்காதவள் எப்படி இந்த கொஞ்ச நாட்களிலும் அவனோடு ஒன்றாக இணைந்து இந்த திருமணத்தை நல்லபடியாக நடத்திக் கொடுக்கப் போகிறாளோ தெரியாது..

Advertisement