Advertisement

வருவாயோ அன்பே..!

 இருக்கும் இடத்தில் இருந்தால் தான் அனைவருக்கும் மதிப்பு என்பது விஐபிக்கு நன்றாகவே பொருந்தும்..

 சென்னையில் அவனை ஒரு முறை பார்க்க முடியாதா?. அவனுடன் ஒரு போட்டோ எடுக்க முடியாதா?. என ஏங்கும் அவன் ரசிகர்களுக்கு மத்தியில் இங்கே மதுரையில் அவன் மாஸ்க் அணியாமல் எவ்வளவு நேரம் அதே இடத்தில் இருக்கிறான்.. ஆனால் ஒரு மனிதர் கூட அவனிடம் வந்து பேசவில்லை..

 விஐபி பெரிதாக பேட்டிகள் போட்டோக்கள் எதுவும் போஸ் கொடுப்பதில்லை எப்போதாவது ஒரு முறை தான் கொடுப்பான்..

அதனால் அவனை இங்கே அடையாளம் தெரியவில்லை போல்..

 அத்தான் என்று உருகிய சீதா கூட இதுவரையும் ஒரு வார்த்தை அவனுடன் பேசவில்லை வந்ததற்கு..

 சீதாவிடம் அவளை நெருங்கி என்ன நடந்தது என்று கேட்க முத்து அனுமதிக்கவில்லை விஐபியை..

 மீரா மட்டும் இடை இடையே வந்து மகனுடன் பேசிவிட்டு அவனுக்கு மதிய உணவு மற்றும் டீ காபி ஜூஸ் என கொடுத்து கவனித்துக் கொண்டார்..

 துர்காவின் கணவனுக்கு குடும்பம் யாரும் இல்லாததால் அவன் அங்கேயே அந்த வீட்டிலேயே திருமணத்தின் பின் இருக்க முடிவெடுத்திருந்தார்கள்..

 திருமண மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வந்ததும் நடத்தும் சடங்குகளை பார்த்து முத்துவும் யசோதா மற்றும் மீராவை அழைத்து பேசினான்..

 அதன்படி முத்துவையும் சீதாவையும் முத்துவின் வீட்டிற்கு முறைப்படி அழைத்து சென்று சீதாவை அங்கே பூஜை அறையில் விளக்கேற்றி பால் பழம் கொடுத்து சடங்குகள் செய்து முடித்தார்கள்..

 அதோ இதோ என்று நேரம் விரைந்தோடி மாலை நேரமும் நெருங்கியது..

 விஐபி தாயை அழைத்து நாளை அவன் சென்னையில் இருக்க வேண்டும் ஒரு மீட்டிங் மற்றும் ரெக்கார்டிங்கும் இருக்கிறது திடீரென இங்கே வந்ததால் அதை நிறுத்த முடியாது என கூறினான்..

“ அம்மா நாளைக்கு மார்னிங் நான் சென்னையில் இருக்கணும்.. சீதா என்ன முடிவு எடுத்திருக்கா?. நீங்க எப்படி வருவீங்க?..” என்றான்..

அப்போது யசோதாவும் அங்கே வந்து சேர்ந்தார்..

தன் சொந்த அண்ணன் மகனை மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை என்பதை தவிர வேறு எந்த குறையும் இல்லை..

 யசோதாவிற்கு கணேசனும் அண்ணன் முறை தான்..

 இந்த கிராமம்தான் யசோதா மற்றும் கல்யாணராமன் கிருஷ்ணன் மூவருக்கும் சொந்த ஊர்..

 யசோதாவுக்கு தன் சொந்த ஊரிலேயே சொந்தங்கள் மத்தியில் மகள் சந்தோஷமாக வாழபோகிறாள் என்று அதுவே அவர் சந்தோஷமாக இருக்க போதுமானதாக இருந்தது..

 ஆனால் மகள் இங்கே வாழ முடியாது என்று கூறி மீண்டும் சென்னைக்கு வந்து விடுவாளோ என்று பயமும் இருந்தது..

“ என்ன அண்ணி..?. ” என்றார் யசோதா.

“ அத்தை இந்த கல்யாணத்தை நீங்க ஏற்றுக் கொள்றீங்களா?. ” என்றான் விஐபி..

“ முத்துவை மாப்பிள்ளையா ஏற்றுக் கொள்றதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை தம்பி.. ஏன்னா தங்கமான பையன்.. கணேஷ் அண்ணா பற்றி எனக்கு நல்லா தெரியும்.. அப்படி ஒரு குடும்பத்தில் என் பொண்ணு வாக்கப்பட்டிருக்கிறது. எனக்கு சந்தோசம் தான்.. நம்ம முடிவு முக்கியமில்லை.. சீதா என்ன முடிவு எடுக்கப் போறாளோ அது தான் இப்ப முக்கியமே.. நூத்துல ஒரு வீதமா சீதா ஏற்றுக் கொண்டு இங்க வாழப் போறேன்னு சொன்னா எனக்கு ரொம்ப சந்தோஷம்.. ” என்றார் யசோதா..

இங்கே மகள் இருந்தால் கட்டாயம் அவர் எதிர்பார்த்தது போல முத்து அவளைக் குடும்ப பாங்கான பெண்ணாக மாற்றி விடுவான் என்று அவருக்கு அதிக நம்பிக்கை இருந்தது..

 அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருப்பதை அவளுக்கு மருந்து போட்டு விட்டு அறையில் இருந்து வெளியே வந்த முத்து பார்த்தான்..

 அவர்களை நோக்கி வந்து அவனும் ஒரு சேர் எடுத்து அவர்கள் அருகில் போட்டு அதில் இருந்து கொண்டு

“ என்ன ம்மா ஏதாவது பிரச்சினையா?.. ” என்றான் மீராவை பார்த்து..

 தன் அம்மாவை புதிதாக அவன் அம்மா என்று கூறவும் சிறுபிள்ளையாக கோபம் கொண்டான் விஐபி..

“ இவங்க என்னோட அம்மா எனக்கு மட்டும்தான் அம்மா.. ” என்றான் மீராவை தோளோடு அணைத்துக் கொண்டு..

“ யாரு இப்ப இல்லன்னு சொன்னா?.. அவங்க உனக்கு அம்மா தான்.. இருந்தாலும் அவங்க இன்னிலிருந்து எனக்கும் அம்மா தான்.. சித்தியோ பெரியம்மாவோ ஒரு உறவு முறை வரப்போகுது.. அப்படி கூப்பிடாம நான் இனி அம்மான்னே கூப்பிட போறேன்.. உனக்கு அப்பா இல்ல நீ எங்க அப்பாவை அப்பானு கூப்பிடு நான் கோவிச்சுக்க மாட்டேன்.. எனக்கு அம்மா இல்லை இவங்களை நான் அம்மான்னு கூப்பிடுறேன் அதே மாதிரி நீயும் கோவிச்சிக்காத..” என்று 30 வயது தடிமாடுகள் இரண்டும் டீல் பேசியது..

“ சரி சரி அடிச்சுக்காதீங்க விடுங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்க போறோம்.. அதுவும் சீதா என்ன முடிவு எடுக்கிறாளோ?.. அது தெரிகிற வரைக்கும் தான்.. அதுக்குள்ள ஏன் அடிச்சிக்கிறீங்க.. ” என்று மீரா அவர்களுக்கிடையே புகுந்து சமாதானம் செய்தார்..

“ நாளைக்கு விஜய் சென்னையில் கட்டாயம் இருக்கணும்.. அதனால இன்னைக்கு நைட்டு அவன் போக போறேன்னு சொல்றான்.. ஆனா எங்களால கார்ல அவ்வளவு தூரம் போக முடியாது.. அதனால தான் நாங்க பிளைட்ல வந்தோம்.. விஜய் போயிட்டா நாங்க இங்க இருந்து கார்ல போக முடியாது.. சீக்கிரமா சீதாவோட முடிவை தெரிஞ்சுக்கணும்.. ” என்றார் மீரா..

“ ஆமாம் தம்பி சீதா பிளைட்ல வரமாட்டா அவங்க அப்பாவும் மாமாவும் பிளைட் ஆக்சிடென்ட்ல தான் இறந்து போய்டாங்க.. அவளுக்கு பிளைட்ன்னா பயம் அந்த சத்தம் கேட்டா காத பொத்திகிட்டு கத்தி அழுவா.. அதனாலதான் தனியே இவ்வளவு தூரம் கல்யாணத்துக்கு கார்ல வந்தா.. ” என்றார் யாசோதா..

“ சரி அத்தை நான் போய் உங்க பொண்ணோட முடிவு என்னன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து தனியே வந்தான்..

‘ அட தக்காளிக்கு இப்படி ஒரு வீக் பாயிண்ட் இருக்கா என்ன.. அப்ப கூடிய சீக்கிரமே நீ அப்பாவா ப்ரோமோஷன் ஆக போறது உறுதி.. இப்பவே தெரிஞ்சுதே.. இதை வச்சு பல எபிசோடு ஒட்டிடலாம். இப்ப போயி ஒரு அட்டனன்ஸ் போட்டுட்டு வருவோம்..’ என மனதில் நினைத்துக் கொண்டே அவள் இருந்த அறைக்கு சென்று மீண்டும் கதவை பூட்டி விட்டு போய் அவள் பக்கத்தில் அமர்ந்தான்..

அவள் கை எடுத்து அவன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு பேசுவதற்கு வாய் அவன் திறக்கும் போது கையை உருவி எடுத்துக் கொண்டாள்..

“ இப்ப தானே சொன்னேன்.. தொட்டு பேசுற வேலை எல்லாம் வேணாம்னு.. தொடாம கொஞ்சம் தள்ளி இருந்து என்ன சொல்லனுமோ சொல்லிட்டு போங்க..” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி கத்தினாள்..

அவள் முகத்தில் அவ்வளவு கோபம் இருந்தது ஆனால் அதெல்லாம் நம்ம ஹீரோவுக்கு கணக்கே இல்லை ..

“ ப்ச்ச். என்னடி இப்ப?. உன்னை தொடக்கூடாது அவ்வளவு தானே.. சரி தொடல..” என்று கொஞ்சம் இடைவெளி விட்டு இருந்தான்..

“ நேத்து நான் ஆக்சிடென்ட் பண்ணதுக்கு பழி வாங்கிட்டு.. இப்ப நீங்க நல்லவர் மாதிரி நடிக்கிறீங்க என்ன?. “

“ என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது.. பழிவாங்கற ஆள் மாதிரியா தெரியுது. எனக்கு பழிவாங்குறதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.. எனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறதை நீ மனசுல வச்சிக்கிட்டு எதுவா இருந்தாலும் பேசு.. உண்மையா ஒரு தங்கச்சியை அம்மாவை நேசிக்கிறவன் எந்த பொண்ணையும் நோகடிக்க மாட்டான்.. அம்மா இல்ல ஆனா ஒரு பொண்ணு இடத்துல இருந்து எனக்கு எல்லாமே ஒரு நல்ல ஃப்ரெண்ட் தங்கச்சி அக்கா அம்மா யமுனா தான்.. இப்படி தங்கச்சியவே இவ்வளவு நேசிக்கிறேன்.. யமுனாக்கு பார்த்து பார்த்து எல்லாத்தையும் செய்ற நான் எனக்கு பொண்டாட்டியா வர போறவளை எப்படி நேசிக்க காத்திருப்பேன்..” என்றான்..

 அவன் பேசுவதை கை நீட்டி தடுத்தவள்.

“ அதுதான் நீங்க நேசிச்ச இலட்சணத்தை நானே பார்த்தேன்.. நீங்க லேசா சொல்லிட்டீங்க என்ன இப்படி அறை குறையா பார்த்ததால என்னை தவிர நீங்க யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்கன்னு சொல்லி..

என்கிட்ட ஒரு வார்த்தை இதுக்கு சம்மதமானு கேட்கவும் இல்லை.. ஆனா தாலி வாங்கி கட்டிட்டிங்க கழுத்துல.. சேர்ந்து வாழறதும்.. இல்ல உன் ஊருக்கு போறதும் உன்னோட விருப்பமுன்னு சொல்லி நீங்க ரொம்ப நல்லவர் ஆகிட்டிங்க..

ஆனா நீங்க இந்த தாலிய கட்டாம இருந்திருந்தா காலப்போக்கில் நான் இதை மறந்துட்டு எனக்கு ஏற்ற மாதிரி ஒரு வசதியான வாழ்க்கையை தேடி இருப்பேன்..

இப்ப நான் இந்த தாலியை இங்க வச்சே கழட்டி போட்டுட்டு அங்க எனக்கு ஏத்த மாதிரி ஒரு வாழ்க்கை அமைச்சிக்க முடியும்..

நீ எனக்கான கால அவகாசம் தந்தாலும் நான் மனசு மாறி வந்து உன்கூட சேர்ந்து வாழ்வேன்னு மட்டும் கனவிலயும் நினைக்காதீங்க..

முடிவு என்னன்னு எல்லாருக்கும் கேட்டு காத்திருக்கிறீங்க தானே..

 சொல்றேன் என்னோட முடிவை நல்லா கேட்டுக்கோங்க…

நீங்க டிவோஸ் தர மாட்டீங்க நான் இன்னொரு வாழ்க்கையை தேடி போக மாட்டேன்… நான் அங்க தான் இருப்பேன்.. நீங்க இங்க இருக்கிறதோ இல்ல வேற எங்கேயும் இருக்கிறதோ உங்க விருப்பம்…

 எனக்கு இங்க வந்து அஞ்சுக்கும் பத்துக்கும் டெய்லி நீ ஆட்டோ ஓட்டி உழைச்சு வந்து அதுல சாப்பிட்டு கஷ்டப்படுற வாழ்க்கை செட் ஆகாது.. ஒரு நைட் இங்க ஏசி இல்லாம தூங்க முடியாம தான்.. நான் வெளியே எழுப்பி போனேன்.. அதனால தான் இவ்வளவு பிரச்சினையும் எனக்கு வந்தது… இதுதான் என்னோட முடிவு போய் சொல்ல வேண்டியவங்ககிட்ட சொல்லுங்க.. எனக்கு இன்னும் மூணு மாத படிப்பு இருக்கு அதை முடிச்சுட்டு எங்க அப்பாவோட கம்பெனிய எடுத்து ரன் பண்ணனும்.. இதுதான் என்னோட ஒரே ஆசை..” என்றாள்..

 அவன் தான் அவளுக்கு சொன்னான் மனம் மாறும் வரையும் இருக்க விரும்பினால் இங்கு இரு.. இல்லை என்றால் அவளோட இடத்துக்கு போ என்று..

 அதையே அவளும் திரும்ப அவனுக்கு சொல்லும் போது அவன் மனம் மிகவும் ரணப்பட்டு போயிருந்தது..

“ நான் உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்… அந்த கேள்விக்கு நீ உன் மனசாட்சி தொட்டு உண்மையான பதில் சொல்லு.. “

 என்று அவன் கூறும் பொழுது திரும்பிப் பார்த்து புருவத்தை உயர்த்தினாள்.. என்னவென்று கூறும்படி..

“ நான் இன்னைக்கு உனக்கு தாலி கட்டி கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா உனக்கு புடிச்சவனோட நீ சந்தோசமா நடந்ததை மறந்துட்டு வாழ்ந்து இருப்பியா?.. ” என்றான்..

“ யா கட்டாயம் மறந்திருப்பேன்.. லைஃப்ல டெய்லி எவ்வளவோ நடக்குது எல்லாத்தையும் ஞாபகம் வைத்து இருக்க முடியுமா என்ன?.. எனக்கு இது ஒரு சின்ன ஆக்சிடென்ட் மாதிரி இங்க இருந்து போகும் போதே நான் மறந்து இருப்பேன்.. இந்த ஆக்சிடென்ட் என் லைஃபை பாதிக்க நான் விடமாட்டேன்.. ” என்று அவன் முகத்திற்கு நேராகவே கூறினாள்..

“ ஓஹோ..! அப்போ இங்க நடந்தது உனக்கு ஒரு ஆக்சிடென்ட் தானே.. நீ ஃபீல் பண்ண வேணாம்.. தாலியை கழட்டி தந்துட்டு நீ போகலாம்.. இங்க ஆரம்பிச்ச இந்த உறவு இங்கேயே இப்பவே முறி (டி) ஞ்சி போகட்டும்.. ” என்று தாலியை கழட்டும்படி கூறி கையை நீட்டினான்..

“ நான் நினைச்சா இந்த தாலி கழட்டி போட்டு இந்த கல்யாணம் இங்க நடந்தது அங்க யாருக்கும் தெரியாம அழிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்.. ஆனா நானும் ஒரு தமிழ் தாய் தகப்பனுக்கு பிறந்ததால இந்த மஞ்சள் கயிறோட புனிதம் கொஞ்சம் தெரியும்.. போனா போகுது இது என்னோட கழுத்துல கிடந்துட்டு போகட்டும்.. இன்னைக்கு ஈவினிங் நான் இங்கிருந்து கிளம்பணும்.. அதுக்கு ரெடி பண்ணனும்..நீங்க போய் ஆக வேண்டிய வேலையை பாருங்க.. ” என்று கூறிவிட்டு அவன் பதில் எதுக்கும் காத்திருக்காமல் உடைகளை எடுத்து பெட்டியில் அடுக்க ஆரம்பித்தாள் சீதா..

 பட்டணத்தில் அதிகம் பணத்தைப் பார்த்து தனியாக ஒற்றைப் பெண்ணாக வளர்ந்தவள்.. என்று கேள்விப்பட்டதும் அவனுக்கும் அவளை பார்த்ததும் பிடித்திருந்தது… அதனால் அவன் அன்பால் அவளை மாற்றி விடலாம் என நினைத்திருந்தான்..

 ஆனால் பிடிக்கவில்லை சேர்ந்து காலத்திற்கும் வாழ மாட்டேன்.. எனக் கூறுபவளை எவ்வாறு கட்டாயப்படுத்தி பிடித்து வைத்திருக்க முடியும்..

 அவளிடத்தில் அவன் யமுனாவை தான் வைத்துப் பார்த்தான்.. அவன் தங்கைக்கு யாரும் இவ்வாறு செய்திருந்தால் ஒரு அண்ணனாக அவன் என்ன முடிவு எடுத்திருப்பான்.. கொதித்து போய் இருப்பான்..

 அதனால் அவளது விருப்பதிற்கு விட்டுவிட்டான்..

 காலம்தான் அவர்களை சேர்த்து வைக்குமா? பிரித்து வைக்குமா? என தெரிந்து கொள்ள வேண்டும்..

 அவனும் கை நீட்டினான்.. ஆனால் அவள் தாலியை கழட்ட முன் வரவில்லை..

“ நீ செய்த வேலைக்கு இது உனக்கு தண்டனைனு நீ நினைச்சுக்கோ..

 தாலி என் கழுத்துல தான் இருக்கும் நீதான் இதை கட்டின ஆனா அதை தவிர வேற நமக்கு இடையில் எதுவும் இல்லை..

கல்யாணம் பண்ணி நான் அங்க இருக்கணும்.. நீ இங்க இருக்கணும்.. ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்து வாழ விடாமல் பண்ணிட்டேன்னு நீ பீல் பண்ணனும்.. உன் தங்கச்சியை பற்றி நீ சொன்னதால நான் ஒன்னு மட்டும் புரிஞ்சுகிட்டேன்.. என் விருப்பம் இல்லாமல் நீ கட்டாயப்படுத்த மாட்ட… நீ கட்டாயப்படுத்தாத வரைக்கும் நமக்கு இடையில் எதுவுமே இல்லை.. ” என்று தாலியை எடுத்து வெளியே போட்டு கொண்டு அவனுக்கு முன்பே அறையை விட்டு வெளியேறிவிட்டாள்..

 அவனுக்கு என்ன மனநிலை என்றே தெரியவில்லை.. தாலியை அவள் கழட்டவில்லை..

 கோவம் போனதும் ஏற்றுக் கொள்வாளோ அல்லது காலப்போக்கில் இது தான் வாழ்க்கை என புரிந்து நடந்து கொள்வாளா?.. இல்லை அவள் சொன்னது போன்று இருவரது வாழ்க்கையும் வீணாகி விடுமா?.. என எதுவும் அவனால் புரிந்து தற்பொழுது ஒரு முடிவுக்கு வர முடியவில்லை..

 அவனும் அந்த அறையை விட்டு வெளியேறியதும் வீட்டுக்கு வெளியே அவர்களது தந்தையை அழைக்கும் சத்தம் கேட்டு வெளியேறினான்..

“ கணேஷ் அண்ணே கணேஷ் அண்ணே.. ” என்று ஒருவர் அழைத்தார்..

 யசோதா மீராவுடன் இருந்து பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்த கணேசன் முத்துவும் வெளியே வந்தார்கள்..

 வந்தவர் கணேசனை பார்த்து “ அண்ணே பஞ்சாயத்து கூட்டி இருக்காங்க.. பஞ்சாயத்து தலைவர் உங்க குடும்பத்தையும் ஐயாவோட குடும்பத்தையும் வரச் சொன்னார்.. ” என்று அங்கேயும் சென்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..

 துர்காவையும் அவள் கணவனையும் வீட்டில் விட்டுவிட்டு அந்த பெரியவரும் பாட்டியும் அங்கிருந்து சென்றார்கள்..

  சீதாவின் காரில் மீரா யசோதா விஐபி சீதா போக. அவன் ஆட்டோவில் யமுனாவும் கணேசனும் முத்துவும் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு சென்றார்கள்..

 போகும்போதே அவர்ககுளுக்கு இடையான வித்தியாசம் ஆட்டோவில் அவனும் காரில் அவளும் போவதை வைத்து இதுதான் நீ என வித்தியாசத்தை காட்டி விட்டு சென்றாள்..

 அழகிய இளமாலைப் பொழுது..

 ஊர் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி இருந்தார்கள்..

 பஞ்சாயத்து தலைவரும் இரு குடும்பத்தாரும் வந்ததும் பஞ்சாயத்து ஆரம்பித்தது..

முதலில் கணேசன் தான் பேசினார்.

“ ஐயா என்ன பஞ்சாயத்துன்னு தெரிஞ்சுக்கலாமா யார் எங்க மேல புகார் கொடுத்தது.. “

“ யாரும் புகார் கொடுக்கல கணேஷா இது ஊர் பொது பஞ்சாயத்து.. “

“ பொதுப்பஞ்சாயத்தா என்னன்னே புரியலையே.. ” என்றார் கணேசன்..

“ அது என்னன்னா நம்ம ஊரு பொண்ணு யசோதா பல வருஷம் கழிச்சு பெரியவர் வீட்டு கல்யாணத்துக்கு அதோட பொண்ண அனுப்பி வச்சிருக்கு.. ஊரே கூடி இருந்த கல்யாணத்துல திடீர்னு எதிர்பாராதவிதமா உன் மகன் முத்து அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டான்.. இப்ப பெரியவர் யசோதா குடும்பத்தையும் அழைச்சிருக்கார்..

 ஊரே முத்து மாதிரி ஒரு புள்ள இருக்கான்னு பேசுற இடத்துல அவன் திடீர்னு இப்படி ஒரு கல்யாணம் பண்ணினது நாளைக்கு வெட்டியா சுத்துற இளவட்ட பசங்களுக்கு ஒரு தப்பான உதாரணமா ஆயிடக்கூடாது..

 அதுதான் இந்த கல்யாணத்துக்கு என்ன காரணம் இந்த கல்யாணம் ரெண்டு குடும்பம் மற்றும் பொண்ணு மாப்பிள்ளைக்கும் புடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்க இந்த பஞ்சாயத்து..

 நாளை பின்ன நம்ம ஊரையும் முத்துவையும் அந்த பொண்ணையும் யாரும் தப்பா பேசிட கூடாது இல்ல..” என்று திடீர் பஞ்சாயத்து கூடிய காரணத்தை பஞ்சாயத்து தலைவர் கூறினார்..

 அவரை அடுத்து பக்கத்தில் இருந்த மற்றொரு பெரியவர் பேசினார்..

“ ஏம்மா பொண்ணு இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதமா?..” என்றார் அந்த பெரியவர்..

“ அவர் என்கிட்ட கேட்டு நான் சம்மதம் சொன்ன பிறகு தான் ஐயா தாலி கட்டினார்.. ” என்றாள் சீதா..

அவனை ஏன் அவள் விட்டு கொடுக்கவில்லை..

விருப்பம் இல்லாமல் தாலி கட்டிவிட்டான் என உண்மை சொல்லி இருக்கலாமே..

இருவருக்கும் இடையில் காதல் புகுந்து விட்டதோ..

“ அப்போ திடீர்னு இப்படி பெத்தவங்க சம்மதம் இல்லாம ஒரு ஏற்பாடும் பண்ணாம நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு காரணம் என்னன்னு நீங்க சொல்லித்தான் ஆகணும்.. நாளைக்கு வேற ஒருத்தன் இன்னொரு பொண்ண கல்யாணம் கட்டிக்கிட்டு வருவான்..

அப்ப நாங்க கேள்வி கேட்டா முத்து அந்த பொண்ண கட்டினான்.. யாரும் கேட்டீங்களான்னு எந்த காளி பயலுகளும் எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது பாருங்க.. ” என்றார்..

“ நடந்தது என்னன்னு நானே பொதுவா சொல்றேன்.. நேத்து தாத்தா வீட்டு கல்யாணத்துக்கு பொருட்களும் காய்கறி வாங்குறதுக்கு நான் மதுரை வரைக்கும் போயிட்டு வர தாமதம் ஆயிடுச்சு.. வந்து என்னோட ரூம்ல கட்டில்ல நான் படுத்துட்டேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு யாரோ அழுகிற சத்தம் கேட்டுச்சுன்னு நான் திடீர்னு எழும்பி பார்த்தேன்.. இந்த பொண்ணு கட்டிலுக்கு கீழ குனிஞ்சு அழுதுகிட்டே இருந்துச்சு.. பயந்துட்டேன் யார் இந்த பொண்ணு எதுக்காக அழுகுதுன்னு.. இவங்க கிட்ட விவரம் கேட்க இவங்க சொன்னாங்க.. புது இடம் தூக்கம் வராததால் கொஞ்சம் நடக்கலாம்னு வீட்டை விட்டு வெளியே வரும்போது நாய் தூரத்தி வர அவங்க பயந்து இந்த வீட்டுக்குள் வந்துவிட்டதாகவும் திரும்ப இங்கிருந்து வெளிய போக நாய்க்கு பயம் அவங்க கைல செல்போனும் கொண்டு வரல.. அதனால பயத்துல அழுதாங்க.. அப்போ நான் அவங்கள பத்திரமா தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு வீட்டை விட்டு வெளியில் வரும்போது இந்த கவினும் அவன் கூட்டாளி பயலுகளும் எங்க வீட்டை கடந்து வந்தாங்க ஐயா.. அப்ப இந்த பொண்ணு அழுதுட்டு எங்க வீட்டிலிருந்து வெளியே வர்றதை பார்த்துட்டு ஊருக்குள்ள கதையை தவறாக பரப்பிட்டாங்க..

இந்த ஊருக்கு நம்பி வந்த பொண்ணு பழியோட போகக்கூடாதுனு சொல்லி இந்த பொண்ணு கிட்ட கேட்டு நானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. சொல்லி செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் இல்ல.. ஊருக்குள்ள விஷயம் பரவ முன்னாடி கல்யாணம் நடக்கணும்னு நினைச்சேன்.. அதான் உடனே கல்யாணம் பண்ணிட்டேன்.. தாத்தாவும் அத்தையை வரவழைச்சிட்டாங்க.. இதுதான் திடீர் கல்யாணம் நடக்க காரணம்.. ” உண்மையை அப்படியே புதைத்து விட்டு உருட்டாக உருட்டி தள்ளினான் முத்து..

கவினுக்கும் அவன் நண்பர்களுக்கும் பஞ்சாயத்து தலைவரால் திட்டும் வார்னிங்கும் கொடுக்கப்பட்டது.. இவ்வாறு உண்மை தெரியாமல் பேசி பல பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்று அவர் எச்சரிக்கை செய்தார்..

“ நீங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் ஒருவரை ஒருவர் முன்ன பின்ன பார்த்ததில்லை.. ஏதோ தவறுதலா நடந்துடுச்சு.. ஆனாலும் நீங்க சம்மதத்தோடு தான் கல்யாணம் பண்ணிட்டீங்க சரி.. உங்க பெத்தவங்களுக்கு சம்மதமானும் கேக்கணும்..” என்றார் தலைவர்..

 அதன்பின் யசோதாவிடமும் கணேசனிடமும் கேட்கப்பட்டது அவர்களும் இருவருக்கும் சம்மதம் எனக் கூறியதும்..

 அடுத்து பேச வேண்டியதை பஞ்சாயத்து தலைவர் பேசினார்..

“ சரிப்பா முத்து ஊரே அழைத்து பெரியவர் ஏற்பாடு பண்ணின கல்யாணத்துல நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட.. ஆனா நீ கல்யாண விருந்து போடணுமே.. ஊர் மக்கள் எல்லாம் கூடி இருக்காங்க.. நீ ஊர் மக்களை இங்க வச்சு அழைச்சு எப்ப உனக்கு வசதியோ அப்ப கல்யாணத்துக்கு கறி விருந்து போட்டே ஆகணும்.. ” என்றார்..

 சோத்துக்கு செத்த பயலா இருக்கான்டா..

அவரை அடுத்து இன்னொரு பெரியவர் பேசினார்..

“ கல்யாணம் பண்றது லேசு பட்ட வேலை இல்ல.. முத்து இனி மறு வீட்டு அழைப்பு இருக்கு.. இனி மெட்ராஸ்ல பொண்ணு வீட்ல விருந்து வைக்கணும்.. எவ்வளவு வேலை இருக்கு.. சீக்கிரம் எல்லாத்தையும் ஆரம்பிங்க.. உங்களைப் பார்த்தால் உண்மையான சீதாராமன் மாதிரி ஜோடி பொருத்தம் அற்புதமா இருக்கு..நல்லா சந்தோசமா வாழுங்க.. ” என்றார்..

“ பொது இடத்தில் வைத்து பேசுவது சரி இல்லைங்க ஐயா.. எப்ப கல்யாண விருந்து வைக்கலாம்னு நான் வீட்டில கலந்து பேசிட்டு எல்லாருக்கும் தனி தனியா அழைக்கிறேன்.. ” என்றான்..

“ ஐயா நான் கொஞ்சம் பேசலாமா என்றாள் சீதா..”

“ சொல்லும்மா.. ” என்றார் தலைவர்..

“ ஊர் கூடி இருக்கும்போது நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன்.. நாங்க போனதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியாம யாரும் தவறாக பேசக்கூடாது.. எனக்கு இன்னும் படிப்பு முடியல..

 நான் திடீர்னு இங்க கல்யாணத்துக்கு வந்த இடத்துல கல்யாணம் நடந்ததால அங்க போட்டது போட்டபடி அப்படியே இருக்கு.. என்னோட நிலைமை எல்லாம் சொன்னேன்.. அவரும் சம்மதிச்சு இப்ப கல்யாணம் பண்ணிட்டு உங்க படிப்பு முடிஞ்சதுக்கு பிறகு வாழ்கை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி பேசித்தான் இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. எனக்கு நாளைக்கு முக்கியமான பரிட்சை இருக்கு.. இப்ப இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க சென்னை கிளம்ப போறோம்.. என்னோட படிப்பு முடிஞ்சதுக்கு பிறகு எல்லாம் முறைப்படி நடக்கும்.. அவரும் சம்மதம் சொல்லிட்டார்.. ” என்றாள்..

 கணவனை இழந்த பிறகு மகளே தன் வாழ்க்கை என வாழ்த்த யசோதாவுக்கு அவளின் இந்த திருமணம் யசோதாவுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்ததை மீரா கண்கூடாக பார்த்தார்..

 யசோத சந்தோஷத்தை சிதைக்கும் படியாக சீதா உடனே சென்னைக்கு தங்களுடன் வருவதாக கூறியதை கேட்டு சற்று வருத்தமாக இருந்தது அவருக்கு..

 அவளின் வாழ்க்கைக்கும் இந்த சூழ்நிலைக்கும் பொருந்துவது கடினம் தான்.. ஆனால் பெண்ணாக பிறந்தவள் வந்த வாழ்க்கையை ஏற்று சந்தோசமாக வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும்..

 அதனால் சீதாவிடம் பேசி இங்கே இருக்க வைக்க நினைத்தார்..

“ சீதம்மா உன்னோட கொஞ்சம் பேசணும்.. ” என்றார் மீரா

“ தனியாக பேச என்ன அத்தை இருக்கு.. எதுவா இருந்தாலும் இங்க வச்சு சொல்லுங்க..” என்றாள்..

“ இன்னைக்கு தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு.. மாப்பிள்ளை வீட்டில் இருந்து உடனே வெளிய வரக்கூடாது.. முறைபடி நாள் பார்த்து தான் மறுவீட்டு அழைப்பு வைக்கணும்.. நிறைய சம்பிரதாயம் இருக்கு.. உனக்கு இன்னும் மூணு மாத படிப்பு தானே இருக்கு.. லாஸ்ட் பைனல் எக்ஸாம் நீ எழுதலாம் தானே.. அவசரமா போகணும்.. அதனால நானும் விஜய்யும் இன்னைக்கு பிளைட்ல போகலாம்னு இருந்தோம்.. உங்க அம்மாவும் இங்க இருப்பாங்க.. அங்க செய்ய வேண்டிய ஏற்பாடு எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.. ” என்றார் மீரா..

விருப்பம் இல்லாதவளை பிடித்து வைக்க விரும்பாமல்

“ மீரா மா.. அவங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம்.. இந்த கல்யாணம் அவங்க படிப்புக்கு தடையாக இருக்கக்கூடாது.. அதை பேசி நான் சம்மதிச்சதுக்கு பிறகு தான் அவங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க.. தாராளமா அவங்க போய் படிக்கட்டும். படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்ணணுமோ அதை பார்க்கலாம்.. ” என்றான் முத்து..

 சம்மந்த பட்ட அவனே அப்படி கூறியதன் பின் வேறு யார் தான் என்ன பண்ணி விட முடியும்..

 அதன் பின் பேச வேண்டியது அனைத்தையும் பேசி பஞ்சாயத்து கலைந்தது..

 அனைவரும் வீட்டுக்கு வந்ததும் சீதாவிடம் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை..

 விஐபியும் யசோதாவும் மீராவும் பிளைட்டில் செல்வதற்காக அவர்கள் முன்பே பதிவு செய்து வைத்திருந்த நேரத்திற்கு மதுரை செல்ல கிளம்பி விட்டார்கள்..

 அவர்கள் வாடகை காரில் கிளம்பியதும்..

 முத்து அவன் அறைக்கு வந்தான்..

 ஒரு சிறிய அளவு உடை பெட்டி மட்டும் கொண்டு வந்தாள் சீதா..

 முன்பே முடிவு செய்து வைத்திருந்ததால் அதையும் தயாராகவே வைத்திருந்தாள்..

 கணேசன் யமுனா மற்றும் அங்கே சென்று தாத்தா பாட்டி மற்றும் துர்கா என அனைவரிடமும் கூறிவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தாள்..

அப்போது முத்துவும் பயணத்திற்கான உடையை மாற்றி தயாராக இருந்தான்..

‘ இவனும் எங்கயோ போறதுக்கு ரெடி ஆயிட்டான் போல..’ என்று அவள் நினைத்து விட்டு பெட்டியில் கை வைக்க அவள் கையை தட்டி விட்டு பெட்டியை அவன் எடுத்துக் கொண்டான்..

“கார்ல தானே போறோம்.. என்னத்துக்கு இந்த புடவை இன்னும் கட்டி இருக்க.. போ போய் வலி தெரியாத அளவு இலகுவான உடை போட்டுட்டு வா.. ” என்றான்..

“ அதெல்லாம் எனக்கு தெரியும்.. நீ எங்க போறதுக்கு வார.. போற வழியில் எங்கேயாவது உன்னை இறக்கி விடணுமா என்ன?..” என்றாள் நக்கல் குரலில்..

“ இதுக்கு முன்ன எப்படியோ.. இப்ப நீ என்னோட பொண்டாட்டி.. அவ்வளவு தூரம் இந்த நட்ட நடு ராத்திரில உன்ன தனியா அனுப்பி விட்டு இங்கே இருக்கிற அளவுக்கு நான் மனசாட்சி இல்லாதவன் இல்லை.. நான் கூட்டிட்டு வந்து விடுறேன்னு சொன்ன தைரியத்துல தான் அத்தையும் மீரா மாவும் கிளம்பி போயிட்டாங்க.. ” என்றவன்..

அதன் பின் “ இந்தா பிடி.. ” என அவள் நேற்று கொடுத்த வளையலை அவளிடம் திருப்பிக் கொடுத்தான்..

“ வளையல அடகு வைக்காம ஆட்டோ திருத்திற அளவுக்கு ஐயா கிட்ட காசு இருக்கோ.. இருக்கட்டும் இருக்கட்டும்.. நான் தானே இடிச்சேன்.. என் மேல தானே தவறு.. அதனால இது எனக்கு தேவையில்லை நான் தந்தது தந்ததாகவே இருக்கட்டும்.. கொடுத்ததை திருப்பி வாங்குற பழக்கம் எனக்கு இல்லை.. ” என்றாள் சீதா..

 அவள் பேசியதை கேட்டதும் வளையலை எடுத்து மீண்டும் வைக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு எதுவும் பேசிக்கொள்ளாமல் அவள் புடவை மாற்றி விட்டு வரட்டும் என வெளியேறி சென்று விட்டான்..

 அவன் சொன்னது போன்று இலகுவான ஒரு உடையை அணிந்து கொண்டு சீதா வரவும் அவளது காரில் இருவரது நீண்ட பயணமும் ஆரம்பித்தது..

 இந்த பயணம் போன்று அவர்களது வாழ்க்கையும் நீளுமா இல்லை இத்துடன் முடிந்து விடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்..

Advertisement