தன்வி தான் பிரச்சனை என்றால் அவளிடம் பேசவும் எல்லாம் தயார் தான். ஆனால் கூடாது, அவளிடம் யாரும் பேசவே கூடாது என்று நிற்கும் தேசிகனை தான் அவர்களுக்கு சமாளிக்க முடியாமல் போனது.
தன்வி அங்கு எப்போதும் போல் இருந்தாள். பாட்டி அழைத்து பேசினால் நன்றாக பேசினாள்.
ஆனால் தேசிகன் விஷயத்தில் அவளின் நிலைப்பாடு என்ன என்பது இவர்களுக்கு உறுதியாக தெரியவில்லை.
அதன் வெளிப்பாடு தேசிகனின் மாமா அவரின் மகளின் திருமணத்தை பற்றி யோசிக்க மறுத்தார்.
சாவித்திரியிடம் வந்த உறவினர் ஒருவர், “அதான் உங்க மகனுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு இல்லை. உங்க அண்ணன் பொண்ணை எங்களுக்கு கொடுக்கலாம் தானே?” என்று கேட்டார்.
சாவித்திரிக்கும் இந்த உறுத்தல் இருக்க, அதை அப்படியே பிடித்து கொண்டவர் தன் அண்ணனிடம் பேசினார்.
“சாவித்திரி நீ சொல்றது சரி. ஆனா தேசிகன் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு தான் என் பொண்ணை வெளியே கொடுக்கிறது பத்தி யோசிப்பேன்” என்றார் அண்ணன் உறுதியாக.
“அண்ணா என்ன பேசுற நீ. அவனுக்கு பார்த்து வர நல்ல வரனை எல்லாம் விட்டுட்டு இருப்பியா?” என்று பேச,
“இங்க பாரும்மா. நம்ம குடும்பத்துக்காக தான் தேசிகன் சில விஷயங்களை செஞ்சான். ஆனா இடையில் என்னென்னமோ நடந்திடுச்சு. அதை சரி பண்ண பார்க்கணும். இல்லைன்னா நாம நம்ம குடும்பத்துக்குள்ளே சரி பண்ணிக்கணும். அதை விட்டு எல்லாத்தையும் அவன் தலையிலே போட்டுட்டு நான் போயிட முடியாது இல்லை”
“அண்ணா. அவன் நிச்சயம் சரி பண்ணுவான். அதுவரைக்கும்”
“மருமகன் சரிபண்ணிட்டு வரட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்” என்று முடித்துவிட, தேசிகனை அழைத்துவிட்டார் சாவித்திரி.
தேசிகன் உடனே மாமாவிடம் பேச, அவரோ அதையே தான் திரும்ப சொன்னார். தேசிகனுக்கு புரிந்து போனது ஒன்று தான் உடனே மாமா மகளின் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பது தான்.
“மாமா. எனக்கு நாள் ஆகும். சொல்ல முடியாது வருஷம் கூட போகும். அதுவரைக்கும் நம்ம பொண்ணை வைச்சிட்டிருக்கணுமா? அவளுக்கும், இதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு”
“உனக்கும், அவளுக்கும் சம்மந்தமா மாமா நான் இருக்கேன் இல்லை மருமகனே”
“மாமா. என்ன பேச்சு இது? நீங்க அவ கல்யாணத்துக்கு பார்க்கிறீங்க அவ்வளவு தான்”
“சரி நாங்க ஒரு வார்த்தை உன் பொண்டாட்டிகிட்ட பேசிக்கிறோம். அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு”
“மாமா. தன்விக்கிட்ட நான் பேசிக்கிறேன். நான் மட்டும் தான் பேசுவேன்”
“அதெப்படி மருமகனே”
“அத்தை நான் உங்களுக்கு வேணும்ன்னு நினைச்சா தன்வி விஷயத்துல நீங்க யாரும் தலையிடாதீங்க”
இதென்ன? குடும்பத்தினருக்கு ஏனோ அந்த நொடி சந்தேகம் வந்தது. தன்வி அவளின் முடிவில் உறுதியாக நின்றுவிட்டாளா என்ன? அதனால தான் தேசிகன் இப்படி இருக்கானா?
கனத்த மௌனத்திற்கு பிறகு, மாமா ஓர் முடிவோடு, “சரி. அப்போ நான் உங்ககிட்ட கேட்க வேண்டியதை கேட்டுடுறேன்”
“இங்க பாருங்க சதாசிவம். நாம சம்மந்தி ஆகணும்ன்னு தான் பொறுமையா பேசிட்டு இருக்கோம். நீங்க கோபப்படுறதுல பிரயோஜனம் இல்லை. ஒன்னு டிவோர்ஸ் வாங்குங்க இல்லை, உங்க பொண்ணுக்கும், அந்த பையனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு அவன்கிட்ட எழுதி வாங்குங்க” என்றார்கள்.