அந்த வாரம் முழுதுமே ஓய்வெடுப்பது,  நண்பர்களுடன் அவுட்டிங் செல்வது, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது என்று இருந்தாள்.

ராஜேந்திரன் அதன் பின் இரண்டொரு முறை அவளிடம் தேசிகன் பற்றி பேச முயன்று, மகளின் உறுதியான முடிவில் பின் வாங்கிவிட்டார்.

சுதாவிற்கு தேசிகன் குடும்பம் மேல் சிறிது விருப்பம் தான். ஆனால் மகள் வளர்ந்துவிட்டாள், இனியும் தான் என்ன சொல்வது, கேட்டால் சொல்லலாம் என்று அமைதியாக இருந்து கொண்டார்.

சதாசிவம் மட்டுமே மிகவும் உற்சாகமாக சுற்றி கொண்டிருந்தவர், குடும்பத்துடன் அதிக நேரங்களை பகிர்ந்து கொண்டார்.

படம் பார்க்க, பீச் அவுஸ் போல் எல்லாம் சென்று வந்தனர். ஸ்ருதி குடும்பமும் சென்னையிலே இருக்க, ராஜேந்திரன் மகன்களையும் வர வைத்து, அந்த வார இறுதியில் எல்லாம் ஒன்று கூடி விருந்து உண்டனர்.

“நெக்ஸ்ட் என்ன பிளான் தன்வி?” என்று ராஜேந்திரனின் மகன்கள் கேட்டனர்.

“கம்பெனிக்கு தான். நாளையில் இருந்து தன்வி நம்ம ஆபிஸ்க்கு வர போறா” என்று தந்தை அறிவிக்க,

“ஆமாண்ணா” என்று தன்வியும் சொல்ல, அதற்கொரு கொண்டாட்டம்.

SR குரூப்ஸ் அவர்கள் கம்பெனி. சில தொழில்களை உள்ளடக்கியது SR.

ராஜேந்திரன் மகன்கள், ஸ்ருதி ஆளுக்கொரு தொழில் பார்க்க, இப்போது தன்வியும் அவர்களுடன் இணைந்தாள்.

“தன்வி நம்ம புட் ப்ரொடக்ட்ஸ் பார்க்கட்டும்” என்று ராஜேந்திரன் சொல்ல, சதாசிவம் அண்ணன் முடிவை ஏற்று கொண்டார்.

ராஜேந்திரன் கட்டுப்பாட்டில் இருந்த தொழில் இப்போது தன்வி பொறுப்பு.

மறுநாளில் இருந்து தன்வி அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். நாட்கள் அவளுக்கு வேகமாகவே சென்றது. அதிக சவால்கள் உள்ள தொழில். எல்லா வகையான மசாலும் தயாரித்து விற்றனர்.

மசாலாவிற்கான மூல பொருட்கள் கொள்முதல் முதல் கொண்டு, அதை தாயரித்து, மசாலா தூளாக மார்க்கெட்டில் கொண்டு சேர்ப்பது வரை எல்லாம் அதிக கவனம் எடுத்து செய்தனர்.

ராஜேந்திரனின் அடித்தளம் மிகவும் வலுவாகவே இருக்க, தன்விக்கு சமாளிக்க முடிந்தது. அனுபவமிக்க ஆட்களும் துணையாக நின்றனர்.

அடிக்கடி பெரியப்பாவிடம் கலந்தாலோசிக்கவும் செய்தாள். ராஜேந்திரன் அவர் பதவிக்கான பொறுப்பில் இருந்தாலும், மகளுக்கு எல்லாம் கற்று கொடுத்தார்.

“கஷ்டமா இருந்தா சொல்லு தன்வி. அப்பா உதவிக்கு வரேன்” என்று சதாசிவம் கேட்க,

“இல்லைப்பா. பெரியப்பா ஹெல்ப் பண்றார்” என்றாள் மகள்.

தேசிகனை நிராகரித்ததில் இருந்து சதாசிவத்தின் அன்பு மிகவும் கூடித்தான் போனது. மகளுக்கும் புரிந்தது.

பெருமூச்சுடன் போனை பார்த்தாள். பாட்டி அவளுக்கு அழைப்பதில்லை. என்னமோ அது மட்டுமே பெண்ணை கொஞ்சம் அசைத்து பார்த்தது.

மிகவும் அன்பான பெண்மணி. அவரின் பாசம் உண்மை. ஏன் அந்த முரட்டு பெரியம்மாவை கூட அடிக்கடி நினைத்தாள் தன்வி.

“நாமளே கூப்பிட்டு பேசுவோமா?” என்று போன் எடுக்கவும் செய்தாள்.

ஆனால் அதுவே அவர்களுக்கு ஓர் நம்பிக்கை கொடுத்து விடுமோ என்ற எண்ணத்தில் எடுத்த போனை வைத்தும் விடுகிறாள்.

அவங்க பேரன் வேணா சொன்னா நானும் வேண்டாதவளா போயிடுவேனா என்ன?

பின்ன அவங்களுக்கும், உனக்கும் அவரை தவிர வேறென்ன சம்மந்தம்?

பேத்தி மாதிரி தானே நான்? போகட்டும், எனக்கென்ன?

அவளின் தொழிலில் கவனத்தை மாற்றி விடுகிறாள். இடையில் சதாசிவம் அவளுக்கான வரன் ஒன்றை எடுத்து வர, தன்வி உறுதியாக மறுத்துவிட்டாள்.

“நோ’ப்பா. இப்போதான் பிஸ்னஸ்ல அடி எடுத்து வைச்சிருக்கேன். எனக்கு இந்த தொழில் பிடிச்சும் இருக்கு. நல்லா படியா செய்யணும்ன்னு நினைக்கிறேன்”

“அவ்வளவு தானே? வேறெந்த காரணமும் இல்லையே தன்வி?” என்று சதாசிவம் சந்தேகத்துடனே கேட்க,

தன்விக்கு சுர்ரென கோவம். “எனக்கு அப்படியொரு காரணம் இருந்தா நான் பெரியப்பாகிட்ட பேசினா போதும்ப்பா” என்றாள் மகள்.

“சரி, சரி. டைம் எடுத்துக்கோ” என்று அமைதியாகி விட்டார்.

மகளை பேசி தானே தூண்டிவிட கூடாது என்ற தெளிவு அவருக்கு வந்துவிட்டது.

தன்வி அந்த கடுப்பிலே அலுவலகம் வர, அன்றய நாள் இன்னும் அவளுக்கு மோசமாக தான் இருந்தது.

மசாலாவிற்கான மூல பொருட்கள் சிலது வந்து சேரவில்லை. “ஏன்? என்னாச்சு?” என்று தன்வி கேட்க,

“தெரியலை மேம். நாம கால் பண்ணாலும் சரியா ரெஸ்பான்ஸ் இல்லை” என்றார் GM.

“அதெப்படி ரெஸ்பாண்ட் பண்ணாம போவாங்க. அக்ரீமெண்ட் போட்டிருக்கோம் இல்லை”

“மேம். அங்க தான் சிக்கல். அக்ரீமெண்ட் முடிஞ்சிடுச்சு, திரும்ப போட்டுக்கலாம்ன்னு நாங்களும் ஒரு வாரமா முயற்சி பண்ணிட்டு இருக்கோம்”

“நம்மகிட்ட ஸ்டாக் இருக்கா?” சந்தேகமாகவே கேட்டாள்.

விஷயம் பெரிது என்பதோடு, அவர்களால் தீர்க்க முடியாததாலே என் வரை வந்திருக்கிறது என்பது தன்விக்கு புரியத்தான் செய்தது.

“இல்லை மேம். இருந்த ஸ்டாக் எல்லாம் தீர போகுது”

“அப்போ வேற கம்பெனி போலாம். இவங்களை என்ன பண்றதுன்னு அப்புறம் பார்க்கலாம்” என,

“அது இல்லை மேம். இந்த கம்பெனி பெரிய சார் அவரோட விருப்பத்தில கொண்டு வந்தது”

தன்விக்கு பெரியப்பாவிடம் பேச வேண்டும் என்று புரிந்து போக, “கம்பெனி டீடைல் கொடுங்க” என்றாள்.

அதற்கு முன் இறுதி வாய்ப்பாக அவளே அந்த கம்பெனிக்கு அழைத்தாள்,

“ஹலோ” என்றனர் அந்த பக்கம்.

“நான் தன்வி பேசுறேன். SR குரூப்ஸ்ல இருந்து”

“தெரியுது சொல்லுங்க” என்றது மறுபக்கம். அலட்சியமாக பேசுகிறார். தன்விக்கு கோவம்.

“மசாலா பொருட்களை அனுப்பாததுக்கு காரணம் தெரிஞ்சுக்கலாமா?”

“அதான் அக்ரீமெண்ட் முடிஞ்சு போச்சு இல்லை”

“அக்ரீமெண்ட் மறுபடியும் போட்டுக்கலாம்”

“நாங்க கலந்து பேசி தான் பதில் சொல்ல முடியும்”

பெரியப்பாவிற்காக பொறுமையாக பேசி கொண்டிருந்தவளை அதிகமே சோதித்தான் எதிரில் இருந்தவன்.

“எங்களுக்கு ஸ்டாக் இல்லை. நீங்க கலந்து பேசிட்டு வர வரைக்கும் நாங்க காத்திட்டு இருக்க முடியாது”

“அது உங்க பிரச்சனை மேடம்”

“ஹலோ. என்ன உங்களை விட்டா வேற கம்பெனி இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா?”

“அப்போ அங்கேயே வாங்கிக்கோங்க போங்க” என்று போனை வைத்துவிட்டான்.

தன்வி நம்ப முடியாமல் போனை வெறித்து பார்த்தவள், பெரியப்பாவிற்கு அழைத்து பொரிந்து தள்ளிவிட்டாள்.

“தன்வி. ரிலாக்ஸ், தொழில்ன்னா அப்படி இப்படி தான் இருக்கும்” ராஜேந்திரன் சாதாரணமாக சொல்ல,

“அவன் மரியாதை இல்லாம பேசுறான் பெரியப்பா. அவன்கிட்ட அப்படியென்ன பிஸ்னஸ் பண்ணனும்?”

“எனக்கு வேண்டியவங்க தன்வி”

“அதனால் தான் நானும் உங்ககிட்ட கேட்டுட்டு இருக்கேன் பெரியப்பா”

“சரி. எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் பேசிட்டு வரேன்” என்று வைத்தார் அவர்.

தன்வி உடனே அந்த கம்பெனி பற்றி ஆராய்ந்தாள். கிடைத்தது அவளுக்கான பதில்.

ஆம் அது தேசிகன் குடும்பத்தை சார்ந்த நிறுவனம். இந்த ஒரு வருடமாக தான் உள்ளே வந்திருக்கின்றனர்.

சில மசாலா பொருட்கள் அவர்களிடம் இருந்து தான் அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர். இப்படி சொல்லாமல், கொள்ளாமல் நிறுத்தினால் நிச்சயம் எங்கள் கம்பெனி பாதிக்கப்படும் என்று தெரிந்தே செய்திருக்கிறார்கள்.

தன்வியின் கோவம் எல்லை கடந்தது. உடனே போன் எடுத்து தேசிகனுக்கு அழைத்தாள். அவனின் எண் மட்டுமில்லை, அவனின் குடும்பத்தார் பலரின் போன் நம்பர்கள் இவளிடம் இருக்கிறது.

“எஸ் தேசிகன்” என்றான் எடுத்ததும்.

“உங்க வேலையை காமிக்கிறீங்க இல்லை” தன்வி கோவத்தில் வெடிக்க,

“ஹலோ நீங்க யாருன்னு சொல்லிட்டு பேசுங்க முதல்ல?” என்றான் அவன்.

“என்னை தெரியாது சொன்னா நான் நம்பிடுவேனா?”

“நம்பலைன்னா போன் வைங்க”

“ஹலோ நான் தன்வி”

“ஹேய். ஹாய். எப்படி இருக்க?”

“அதெப்படி என் நம்பர் உங்ககிட்ட இல்லாம போகும்”

“நீ என்னை வேண்டாம் சொன்ன, நான் உன் நம்பரை டெலிட் பண்ணிட்டேன்” என்றான் தேசிகன் மிகவும் சாதாரணமாக.

“வாட்?”

“விஷயத்துக்கு வாங்க மேடம். நான் மீட்டிங்ல இருக்கேன்”

“உங்களுக்கு விஷயம் தெரியாது. இதையும் நான் நம்பணும்”

“தன்வி. என்கிட்ட நீங்க இப்படி பேசுறதுக்கான ரைட்ஸ் உங்களுக்கு இருக்கிறதா எனக்கு ஞாபகமில்லை”

பெண்ணுக்கு புரிந்தது அவள் தவறு. நொடி எடுத்து தன்னை சமாளித்து கொண்டவள், “எங்களுக்கு வர வேண்டிய மசாலா பொருட்கள் வரலை” என்றாள்.

“கம்பெனிக்கு பேசுனீங்களா?”

“பேசினேன். அக்ரீமெண்ட் முடிஞ்சிடுச்சு சொல்றாங்க”

“அக்ரீமெண்ட் கன்டினியூ பண்றதுல உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா திரும்ப போடுங்க”

“உங்க கம்பெனி ஆட்கள் அதுக்கு தயாரில்லை”

“ஓஹ்” தேசிகனுக்கு உடனே விளங்கியது.

“நான் ஒருத்தன் மட்டுமே முடிவெடுக்க முடியாது. பொறுப்புல இருக்கிறவங்ககிட்டேயும்”

“கலந்து பேசணும் அதானே” என்று இடையிட்டு கடுப்படித்தாள் தன்வி.

“எஸ். அதே. நாங்க பேசிட்டு உங்களுக்கு கால் பண்றோம். வேறெதுவும் இல்லை தானே?” என்று கேட்க,

“எங்களோட ஸ்டாக் முடிய போகுது, சீக்கிரம் பதில் வேணும்” என்றாள் தன்வி.

“ம்ஹ்ம். நான் மட்டுமே முடிவெடுக்க முடியாது”

“நீங்க தான் அங்க எல்லாம்ன்னு எனக்கு தெரியும்”

“உன் விஷயத்துல என் பேச்சை அவங்க கேட்க மாட்டாங்க”

“நல்லது. நாங்க வேற கம்பெனி பார்த்துகிறோம்” தன்வி சட்டென சொல்லிவிட்டாள்.

“நீ இப்படி தான் முடிவெடுப்பன்னு எனக்கு தெரியும்”

“என்ன மீன் பண்றீங்க நீங்க?”

“யோசிக்கவே மாட்ட. ஈஸியா தூக்கிட்டு போட்டுடுவன்னு தெரியும்”

“ஆமா. நான் அப்படி தான். கட்டாயமா கைக்கு வர எதையும் நான் வைச்சுக்கிறதில்லை”

“அது உன் கைக்கு அடக்கமா இருந்தாலுமா?”

“நீங்க என் கைக்கு அடக்கமா?”

“பிடிச்சு பார்த்தா தெரிஞ்சிருக்கும்”

“வாட்?”

“இந்த வாட் தவிர உனக்கு வேறெதுவும் தெரியாதுன்னு எனக்கு தெரியும்” அவன் கிண்டலடிக்க,

“என்னை கிண்டல் அடிக்கிற ரைட்ஸ் மட்டும் உங்களுக்கு நான் கொடுத்திருக்கேனா என்ன?” என்று தன்வி திருப்பி கேட்டாள்.

“கேட்டு, வாங்கி, திரும்ப கொடுத்து எல்லாம் பெரிய ப்ரோஸஸ். எனக்கு செட் ஆகாது”

‘யோவ் நீ இப்படி கூட பேசுவியா?’ தன்வி அறிந்த தேசிகன் குணம் இது இல்லையே!

“சரிங்க மேடம். நாங்க பேசிட்டு மெயில் பண்றோம். நீங்க உங்க ப்ரெஷரை என்ஜாய் பண்ணுங்க. பை” என்று வைத்துவிட்டான் தேசிகன்.

‘ப்ரஷரை என்ஜாய் பண்ணனுமா?’ தன்வி கடுப்பாகி போனாள்.