ஜனனிக்கு, அங்கு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணமெல்லாம் இல்லை.. தீர்ப்பு முடிந்து வெளியே வந்தாள்.. வந்தவள், தன் அண்ணனை கட்டிக் கொண்டு அமைதியாக நின்றாள். அவளின் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிக்கிறது. அதை அவளால் உணர முடிகிறது. ‘எவ்வளவு பெரிய நரகம்… அதிலிருந்து தப்பித்தால் இப்படிதான் அதிரும் இதயம்..’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டு.. மூச்சை சமன் செய்ய முயன்றால் பெண்.
சற்று நொடிகளில் சமன்பட்ட மனது மீண்டும் சந்தோஷத்தில் துடித்தது.. ம், இப்போதும் படபடவென அடித்துக் கொண்டது இதயம்.. இது சந்தோஷத்தில். ஏதேனும் பேசி, அந்த நிமிடத்தை அவள் இழக்க விரும்பவில்லை. எனவே சற்று நேரம் அமைதியாக நின்றாள் அண்ணனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு.
அவளுக்கு மனிதர்கள் என்ற பெரியரில் சில வக்ரங்களும் இருக்கும் என்ற உண்மையை உணர்த்தியவன் வசந்த். சிலர், வாழ்க்கையில்… பார்க்கக் கூடாத மனிதர்களையும், சந்திக்க கூடாத சூழ்நிலையையும் சந்தித்திருப்பர். அதில் ஜனனியும் ஒருத்தி. கணவன் என்ற பிம்பம் சிலரை எப்போதும் பயமுறுத்தும்.. ஒரு நிம்மதியின்மையை கொடுக்கும் அப்படிதான் ஜனனிக்கு, கணவன் என்ற வசந்த்.. ஒரு ராட்சஷன். அவனின் மறுப்பக்கம் பார்த்த சிறு பெண்.. ஜனனி.
ஜனனி, தன் வாழ்வில் மொத்தமாக மறக்க நினைக்கும் பக்கங்கள் எல்லாம் அந்த இருபது நாட்கள் மட்டும்தான்.
எல்லாம் சரியாகத்தான் சென்றது அவளின் வாழ்வில்.. கல்லூரி முடித்து.. வந்தாள். அடுத்து படிக்க விரும்பினாள்.
சூரி, ஒருவருடம் வேலைக்கு செல்.. என அறிவுரை கூறினான். அதன்படி.. ஒரு சின்ன மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தாள் ஜனனி.
அப்போதே லேசாக, சுகுமாரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அங்கேயே அவரை பரிசோதித்தாள் பெண். மூளையில் கட்டி.. என்றனர் மருத்துவர்கள்.
சூரியும் இவளும் தங்களின் ஸீனியர்சிடம் கேட்டு, மருத்துவமனை விசாரித்து.. அலைய, கார்த்திகேயனும், ராகவும் பணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
நாட்கள் இப்படியே சென்றது. சுகுமாரி அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வீடு வருவார்.. வீடு அமளிதுமளி பட்டுக் கொண்டிருக்கும். வீட்டில் சின்ன குழந்தை, உடம்பு முடியாதவர், வேலைக்கு செல்லும் மூவர்.. காயத்ரியால், அந்த வீட்டை சரியாக நிர்வாகம் செய்ய முடியவில்லை, அவளும் சிறு பெண். கேப்டன் என்ற ஒருவர் இல்லாமல், அதன் வீடு தள்ளாடியது.
எல்லோருக்கும் டென்ஷன், கோவம், சத்தம், சண்டை.. என வீடு தன் சந்தோஷத்தை தொலைத்துக் கொண்டிருந்தது. அதில் சுகுமாரிக்கு பயம் வந்தது.. ‘தன் பெண்ணை தனியே விட்டு.. போய்விடுவோமோ’ என.
முதலிலேயே மருந்து மாத்திரை.. செலவு.. வலி.. என இருப்பவர்க்கு.. இந்த சண்டைகளும், பேச்சுகளும் பெண் குறித்த பயத்தை தந்தது. ‘தன் கணவர் இருக்கிறார் எல்லாம் பார்ப்பார்..’ என மனம் சொன்னாலும்.. ஒரு பயம் அவருள்.. தன் பெண்ணை தனக்கு பின் யார் கரைசேர்பர்..’ என அதனால் பெண்ணின் திருமணம் முடியட்டும்.. என் அறுவை சிகிச்சையை பார்க்கிறேன் என்றார்.
எனவே, அறுவைசிகிச்சை என வரும் போது.. பெண்ணின் திருமணத்தை முன் வைத்தார் சுகுமாரி. அதை கார்த்திகேயனாலும் மறுக்க முடியவில்லை. அந்த நேரத்தில்.
திருமணம் முடித்து. எல்லாம் நன்றாக சென்றது. திருச்சியில் வரவேற்பு நடந்தது. அடுத்து, மறுவீடு.. விருந்து.. என ஒரு வாரம் ஜனனியும் வசந்தும் சென்னையில் இருந்தனர். அடுத்த வாரம்தான் திருச்சி சென்றனர்.
சென்னையில் இருந்த ஒரு வாரமும் எந்த சந்தேகமும் அவனிடம் வரவில்லை. காலையில் எழுவான் பேப்பர், சற்று நேரம் ஹாலில் அமர்ந்து கார்த்திகேயனுடன் பேசுவான், குழந்தையை ஜனனி தூக்கி வைத்திருக்க, விளையாடுவான் பின் காலை உணவு முடித்து எங்கேனும் ப்ரெண்ட்ஸ் வீடு சென்றுவிடுவான். மாலையில் வருவான்.. ஜனனியோடு வெளியே செல்லுவான்.. உண்டு வருவர்.. கணவன் மனைவி இருவரும்.
இயல்பாகதான் இருந்தான் வசந்த்.. இரவில் எதோ மாத்திரை எடுத்துக் கொண்டான். ஜனனி ஒரு அக்கறையில் ‘அதென்னங்க.. மாத்திரை’ என தயங்கியபடியே கேட்டாள்.
பொதுவாக பொண்டாட்டி என.. ஜனனியிடம் எதுவும் பேசுவதில்லை வசந்த் இந்த நாட்களில். “காபி, வெளிய போலாம்.. சரி.. தூக்கம் வருது.. எனக்கு வேலையிருக்கு” இதுதான் அவனின் பேச்சுகள் ஜனனியிடம்.
முதல் இரண்டு நாட்கள் ஜனனிக்கு ‘என்ன டா இது’ எனத்தான் இருந்தது. ஆனால், வரும் நாட்களில் மஞ்சள் கயிறு ஏதேனும் மந்திரம் செய்யும் என தன்னை தேற்றிக் கொண்டாள், பெண்.
உறவுகள், வேலையாட்கள் என எல்லாம் இருந்தனர். அதனால் சுகுமாரியின் உடல்நலன், மருத்துவமனை சென்று வருதல் என ஜனனி, காயத்ரி இருவரும் அதில் கவனம் வைத்தனர். உறவுகளும் ‘மாப்பிள்ளை தங்கம்.. மாமியார் கூட பெண்டாட்டிய விட்டுட்டு போயிட்டார்’ என கதை பேசியது. சுகுமாரிக்கு அப்படியொரு ஆனந்தம்.. ‘நல்ல குணமான மாப்பிள்ளை’ என. அத்தோடு பெண்ணிடம் கேட்டார் ‘மாப்பிள்ளை நல்லபடியா நடந்துக்கிறாரா ம்மா..’ என. இதன் அர்த்தம் அப்போது புரியவில்லை புது பெண்ணுக்கு.
இப்படியே அந்த வாரம் முடிய, மறுவீடு முடிந்து, பெண் மாப்பிள்ளை இருவரும் திருச்சி கிளம்பினர். சுகுமாரி குடும்பம்.. சீர் செய்து, திருச்சி கொண்டு விட்டு வந்தனர்.
திருச்சியின் மத்திய பகுதியில் வீடு.. பெரிதாக வசதியாக இருந்தது. கூப்பிட்டு வேலை ஏவ வேலையாட்கள்.. வீடு முழுவது ஏசி.. கார்.. என எல்லா வசதிகளும் இருந்தது. முதல் இரண்டு நாட்களும் திருச்சியில் உறவுகள் வந்து சென்றனர். கலகலப்பாக சென்றது நேரம்.
அடுத்த நாட்கள் வேகமாக சென்றது. வீட்டில் வேலையாட்கள் அனைவரும் ஆண்களே.. அவர்களே சமையல்.. சுற்று வேலை எல்லாம் பார்த்தனர், பெண்களே இல்லை. மாமியார், எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என சொல்லிக் கொடுத்தார். பொதுவாக பேசினார், வசந்த பற்றி பேச்சே இல்லை அவரிடம். இவளாக எதாவது கேட்டால்.. ‘அவன் அப்படிதான் ‘ஷைய் பாய்… ஒரே பையனாவே இருக்கானில்ல..’ என ஏதேதோ பேசினார் அவ்வளவுதான்.
மாமனார், ‘என்ன குறைன்னாலும் சொல்லும்மா.. ஒரு பதினைந்து நாள் வீட்டில் இரும்மா, அப்புறம் வேலையோ, படிப்போ பார்த்துக்கோ.. அவன் கொஞ்சம் சின்ன பையனாட்டம் இருப்பான் பார்த்துக்கோ எல்லாம்..” என்றார்.
ம்.. அடுத்தடுத்த நாட்களில் அவர், கண்ணில் படவில்லை, மாமியாரிடம் கேட்டதற்கு.. ‘எப்போது பேக்டரி என அலைவதால்.. பல நேரம் அங்கேயே தங்கிக் கொள்வார் டா..’ என்றார் மாமியார்.
ஜனனி “ஏன் அத்த, வசந்த் போகலையா..” என்றாள்.
மாமியார் “அவன் விளையாட்டு பையன் டா.. அவனுக்கு சட்டென கோவம் வந்திடும்.. இப்போதானே நீ வந்திருக்க.. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும்” என்றார் எங்கோ வெளியே கிளம்பிக் கொண்டே.
ஜனனிக்கு ‘என்ன டா இது’ என மீண்டும் தோன்றியது.
மேலும் மாமியார் “நான் இரண்டுநாள்.. என் வீட்டுக்கு போறேன்.. அங்க விதைப்பு நேரம்.. நீ இங்க பார்த்துக்கோ.. அவன் கோவப்பட்டால் கூட, கொஞ்ச நேரத்தில் சரியாகிடுவான்.. பார்த்துக்கோ” என்றார், அவளின் தாடை தடவி. ஒன்றும் புரியவில்லை பெண்ணுக்கு.
வீடு என்னமோ இவள் வந்த நான்கு நாட்களில் வெறிச்சோடி போனது போல ஜனனிக்கு தோன்றியது. என்னமோ எல்லோரும் எங்கோ சென்றனர்.. வேலையாட்கள் நேரத்திற்கு உணவு தயார் என அறிவித்தனர். இவள் கிட்சென் சென்றால்.. அங்கே ஒரே ஒரு பணியாளர்.. நாற்பது வயதை கடந்தவர் நின்றிருந்தார் பதட்டமாக. அவரின் முகமே என்னிடம் பேசாதே என்றதோ.. என்னமோ.. எல்லாம் அமானுஷ்யமாக இருந்தது.
யாருமில்லா முதல்நாள் இரவு, கொஞ்சம் பயத்தை தந்தது ஜனனிக்கு. சரியான நேரத்திற்கு உணவு உண்ண வந்தான் வசந்த்.. ஏதும் பேசாமல் உண்டான், முடித்து “எனக்கு ஏதும் வேண்டாம்.. மாத்திரை போட போறேன், என்னை டிஸ்ட்ரப் பண்ணாத” என சென்னையில் சொல்லுவது போல சொல்லி சென்றுவிட்டான்.
ஜனனி, உண்டு முடித்து, தங்களின் அறைக்கு செல்லவே பயமாக இருந்தது. மேலே சென்றாள்.. கதவை திறந்து பார்த்தவளுக்கு.. பகீர் என்றது.. அவன் கட்டிலில் அமர்ந்து கையில் மது கோப்பையுடன் அமர்ந்திருந்தான்.