Advertisement
மதுர ப்ரியம்!
சென்னை
இரவு எட்டுமணி..
நல்ல மழை தொடங்கியிருந்தது..
ஒரு பெரிய அப்பார்ட்மென்ட் குடியிருப்பு வளாகம்.. மொத்தம் இருபத்திரெண்டு, இருபத்திரெண்டு தளங்களை கொண்ட ஐந்து அடுக்குமாடி குடியிருப்பு வளாகம், இது. சகல வசதிகளும் அங்கு உண்டு.
அங்கே, எட்டாவது மாடியில் உள்ள ஒரு த்ரீ பெட்ரூம் பிளாட். வீர்..வீர்ரென… ஒரு குழந்தையின் அழுகுரல், அந்த பெரிய பிளாட்.. அதை தாண்டி வராண்ட.. ஏன் பக்கத்து வீடுகள் வரை எதிரொலித்தது. கதவு சாற்றிதான் இருக்கிறது, ஆனாலும், குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது.
ஐந்து.. ஏழு.. எட்டு நிமிடங்கள்.. கடந்தும் இன்னமும் அழுகை சத்தம் அடங்கவில்லை.. வீர் வீர்ரென.. குழந்தையின் வறண்ட தொண்டையின் அழுகுரல்.
அதே தளத்தில் இருந்த பக்கத்து பிளாட்டையும் அந்த சத்தம் வாட்டியது. அங்கே அமர்ந்திருந்த அறுபது வயது மதிக்க தக்க.. ஜெயலட்சுமியை மிகவும் பாதித்தது குழந்தையின் அழுகுரல்.
ஜெயாம்மா “என்னமோ இப்படி கத்தறது குழந்தை.. என்னதான் ஆச்சோ.. யாரும் இருக்காங்களா இல்லையா..” என தன் கணவர் நாராயணமூர்த்தியிடம் புலம்பினார்.
அவரோ டிவியில் “சென்னையில் வெளுத்து வாங்கும் மழை” என்ற தமிழ் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தவர், தன் மனைவியின் புலம்பல் காதில் சரியாக விழாததால்.. “என்ன ஜெயா.. தேங்காய் கீறி தரணுமா” என்றார். இரவு உணவுக்கு, தேவையான உதவியை கேட்க்கிறாள் தன் மனையாள் என எண்ணி வினவினார்.
ஜெயா, அருகில் வந்து “அய்யோ!..” என தன் தலையில் அடித்துக் கொண்டவர்.. “குழந்தை எப்படி கத்தறது… சத்தம் கேட்கலை உங்களுக்கு” என்றார்.
நாராயணன் “எங்கடி.. எனக்கு ஏதும் கேட்டகளை..” என சொல்லி டிவி சத்தத்தை குறைத்தார். இப்போது அவருக்கும் காதில் விழ.. மீண்டும் அவர் “ஆமாம்..” என்றார் யோசனையாக. பின் அவரே தொடர்ந்து “அதுக்கு என்ன பண்ண முடியும்.. போ, வேலையை பாரு..” என்றார்.
ஜெயா, அதுவரை என்ன செய்வது என கையை பிசைந்துக் கொண்டிருந்தவர் வீம்பாக “அதெல்லாம் என்னால் முடியாது… இருங்க என்னான்னு பார்க்கிறேன்” என வாசல் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தார்.
நாராயணான் ‘இவ கேட்க்க மாட்டா… இதென்ன திருச்சியா.. ம்.. போ…’போ..’ என கையால் சைகை செய்து.. டிவி சத்தத்தை அதிகமாக வைத்து மீண்டும் நியூஸ் பார்க்க தொடங்கினார்.
ஜெயாலக்ஷ்மி நாராயணன் தம்பதிக்கு சொந்த ஊர் திருச்சி.. தன் மகன் வீட்டில் ஒரு மாதம் தங்கி செல்ல வந்திருக்கின்றனர். மகன், வேலை விஷயமாக ஆஸ்த்ரேலியா சென்றிருப்பதால், தன் மருமகளுக்கு துணைக்கு வந்திருக்கின்றனர்.
அவர்களின் மகன் தினேஷ்குமார், மருமகள் தேன்மொழி. மென்பொருள் நிறுவனத்தில் வேலை, இருவருக்கும். இப்போது, மருமகள் வீட்டிலிருந்தே வேலை. அதனால், தனியறையில் வேலையில் மூழ்கியிருந்தாள்.. தேன்மொழி.
இவர்கள் இருவரும், ஹாலில் பேசிக் கொண்டிருந்தனர். ஜெயம்மா தன் கணவனின் பேச்சை கேட்க்காமல் வெளியேவும் வந்துவிட்டார்.
இப்போது, ஜெயாம்மா, அந்த வராண்டாவின் எதிரில் இருந்த குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுக் கொண்டிருந்த வீட்டின் கதவை தட்டினார், தயங்கிக் கொண்டே.
அப்போதுதான் அந்த ஷனம்தான்.. ஷிவா சுதாரித்தான்.
வீட்டில் ஒரு பொருளும் இல்லை, பொருளில்லா வீடு குழந்தையின் அழுகுரலை எதிரொலித்தது.. ஷிவாவும், குழந்தை அழத் தொடங்கவும்.. எதை எதையோ தேடியவன்.. ‘தான் எடுத்து வந்த பொருட்களில் எதுவும் இல்லையே.. எங்கே இவனின் புட் பாக்..’ என தனது உடமைகளில் துளாவினான்.. அங்கும் ஏதும் இல்லை. அத்தோடு, எங்கே சென்று வாங்குவது என தெரியவில்லை.. எல்லாம் எடுத்து வைத்த நினைவுதான், காலையில் வந்திறங்கியது முதல்.. என்னுடைய ஆவணங்களை சரிபார்த்து.. விசாரணை முடித்து அனுப்புவதற்கே.. மாலை ஆறுமணிக்கு மேலானது. அதுவரை, சாம்மிற்கு உண்டான உணவுகளை கொடுத்தேனே..’ என குழந்தையின் ரெடிமிக்ஸ் உணவுகளை தேடினான்.
ஆனாலும், குழந்தை சாம்’யை தூக்கிக் கொண்டேதான் தேடினான். ஒரு கட்டத்தில், சாம் அதிகமாக அழ.. அவனின் ட்ரவல் சேர்ரில் விட்டு விட்டு.. மீண்டும் ஒருமுறை எல்லா பைகளையும் குடைந்தான். ஐந்து.. ஆறு.. என நிமிடங்கள் பரபரத்தவன், பத்தாவது நிமிடத்தில் என்ன செய்வது என தெரியாமல் ஸ்தம்பித்து நின்றான் தன் சாம்மை பார்த்த வண்ணம். அவனின் சர்வமும் ஸ்தம்பித்துதான் நின்றது.
அடுத்த நிமிடத்தில் கதவு தட்டும் ஓசை கேட்க.. ஷிவா எரிச்சல் மிகுதியில் “இடியட்.. வாட் தி டைம்.. லேசி பெல்லொவ்ஸ்..” என யாரையோ திட்டிக் கொண்டே வாசல் நோக்கி சென்றான், ஷிவசங்கரன்.
இந்த வார்த்தையில் அவனின் இறந்த காலம் அவனை பார்த்து சிரித்தது.. ‘அஹ.. அஹ.. இவர் பெரிய பெர்ஃபெக்ட் சிகாமணி’ என.
ஷிவா, கதவை திறக்க, அங்கே அவன் எதிர்பார்த்தது போல.. தனது திங்க்ஸ் டெலிவரி செய்யும் ஆட்களில்லை.. ஒரு பெண்மணி நின்றிருந்தார்.
பார்த்தவனுக்கு இந்த ஏழெட்டு வருட வெளிநாடு வாழ்கையின் பழக்கமாக கோவமே வந்தது. ‘யாரிது.. எதுக்கு வந்தார்.. எதுக்கு கதவை தட்டினார்.. நான் இருக்கும் டென்ஷன் புரியாமல்’ எனத்தான் கோவம். கொஞ்சம் கடுப்பான குரலில் “வாட்…” என்றான்.
குழந்தையின் அழுகை இன்னும் நின்றிருக்கவில்லை.. ஜெயத்தின் முகமே ஷிவாவின் கேள்வியில் சுருங்கிப் போனது, ஆனாலும் “இல்ல, குழந்தை அழுது.. அ..அதான்..” என்றார், அவனை தாண்டி உள்ளே பார்த்தபடி.
ஷிவா ”ஊப்ஸ்…” என தளர்ந்தான். தன் படர்ந்த நெற்றியை வலது கையின் சுட்டு விரலால் நீவியபடியே “சாரி… அவனோட பூட் பாக் காணோம்..” என சொல்லி இரு கைகளையும் பெரிதாக விரித்தான்.. பின் “வாங்க “ என சொல்லி உள்ளே சென்றான்.
இப்போது, தொண்டை காய்ந்து, குழந்தை இரும்பியது.. ஜெயம்.. அவனோடு.. சென்றார்.. அவனின் பின்னால் செல்லவில்லை.. அவனோடு சென்றார் வேகமாக.
குழந்தை அவனின் ட்ரவல் சேரில்.. மியூசிக் இசைக்க.. கைகளை நீட்டி நீட்டி அழுதுக் கொண்டிருந்தான்.
குழந்தையை பார்த்த ஜெயம்.. பதறி போய்.. குழந்தையின் அருகே சென்று. .குழந்தையை தூக்கினார். ஆனால், சிட்டிங் பெல்ட் அணிந்திருந்ததால்.. குழந்தையை தூக்க முடியவில்லை. ஷிவா, பதறாமல் வந்து அந்த தடைகளை உடைத்து.. குழந்தையை எடுத்தான்.
ஜெயம்மா பதறி வாங்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் “தண்ணி தண்ணி கொடுப்பா..” என்றார்.
ஷிவா “ஹோ அதைத்தான் காணோமே..” என்றான், சலிப்பாக.
ஜெயம்மா “தண்ணி கொடுப்பா” என்றார்.
ஷிவா “அவனோட பீடிங் கிட் எல்லாம் மிஸ் ஆகிடுச்சி.. இப்போது தண்ணி எப்படி கொடுக்கிறது” என்றான் எரிச்சலாக.
ஜெயத்திற்கு அப்படியே ஓங்கி ஒரு அறை விட்டு ‘அந்த தண்ணி பாட்டிலை எடு டா’ன்னு சொல்லுமளவு கோவம் வந்தது. ஜெயம்மா “தண்ணி பாட்டில் கொடு.. அங்க இருக்கு பாருப்பா” என்றார், பல்லை கடித்துக் கொண்டு.
ஷிவா, ஒன்றும் புரியாமல் அந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தான்.. ஜெயாம்மா குழந்தையை அணைத்து ஆறுதல்படுத்த தொடங்கினார்.
சாம், ஒன்பது மாத குழந்தை.. சிவப்பு ரோஜா வண்ணத்தில் இருந்தான்.. அவனின் ஆலிவ் நிற கண்கள் இப்போது மிளகாய் நிறமாய் மாற தொடங்கியிருந்தது.. அதிலிருந்து இன்னமும் வற்றாத ஊற்றாக கண்ணீர் பெருகிக் கொண்டே இருந்தது.. மெல்ல மெல்ல.. ஜெயாம்மாவின் அணைப்பில், அணத்த தொடங்கினான் சாம். ஜெயாம்மா “வேண்ட்ம்மா டா.. பசிக்குதா.. செல்லம் டா.. ஓஒ…ஓஒ… ஓ..” என ஏதேதோ பேசினார்.
குழந்தைக்கு அழுகை சற்று மட்டுபடவும்.. ஜெயாம்மா, வாகாக குழந்தையை பிடித்துக் கொண்டு.. தண்ணீர் பாட்டிலின் மூடியில் நீர் ஊற்றி.. குழந்தையின் வாயில் வைக்க.. தன்போல் உறிஞ்சி நீர் குடித்தான் சாம்.
ஷிவா அதை அதிசையமாக பார்த்திருந்தான்.. ஜெயாம்மா பொறுமையாக நீர் கொடுத்து முடித்தார்.
ஷிவா இப்போது கொஞ்சம் அமைதியான முகபாவனைக்கு வந்திருந்தான்.. ஜெயாம்மாவை பார்த்து.. “தேங்க்ஸ் ஆன்ட்டி..” என்றான் கொஞ்சம் நிம்மதியான குரலில்.. கூடவே “அப்படி கூப்பிடலாமா” என்றான்.
ஜெயாம்மாவின் கவனம் முழுவதும் பிள்ளையிடம் இருந்ததால்.. சரியாக ஷிவாவின் பேச்சை கவணிக்கவில்லை.. “என்னப்பா..” என்றார்.
மீண்டும் அனுமதி வேண்டினான் ஷிவா.
ஜெயாம்மா “கூப்பிடு பா.. இதெல்லாம் கேட்கனும்மா.. அம்மான்னு கூட சொல்லு.. எங்க உன் பெண்டாட்டி” என்றார், இயல்பாய்.
ஷிவா எதோ கேட்க்க கூடாததை கேட்டது போல.. அவரின் முகம் பார்க்காமல் திரும்பி நின்றுக் கொண்டான்.. சட்டென. கோவம்தான் முதல் காரணம்.. பின் தன் இயலாமைதான் அடுத்த காரணம்.. எதை நினைப்பது, எதை விடுவது என தெரியாமல்.. உறைந்து நின்றான்.
ஜெயாம்மா திரும்பிக் கொண்ட அவனை பார்த்தார்.. ஷிவாவிடம் பதிலில்லாமல் போக.. “எத்தனை மாசம் ஆகுது குழந்தைக்கு..” என்றார், என்னமோ.. அவனை வருத்துவதற்கு தோன்றாமல் அடுத்துக் கேட்டார்.
ஷிவா திரும்பி “நைன்.. ஒப்பது மாசம் ஆகுது.. அல்மோஸ்ட் டென்..” என்றான்.
ஜெயாம்மா “சாப்பாட்டு பாக் தொலைஞ்சு போச்சுன்னா.. குழந்தைக்கு பசிக்காதா..நான் இட்லி தரேன்..” என்றார்.
ஷிவா “இட்லியா.. அவன் எப்படி சாப்பிடுவான்..” என்றான்.
ஜெயாம்மா சிரித்தார்.. “நான் ஊட்டி விடுறேன்.. இதென்ன நீ அப்படியே இருக்க.. இன்னிக்குதான் வந்தியாப்பா… எந்த ஊர் உனக்கு.. ஐயோ, நானே பேசறேனே.. இவனுக்கு முதலில் சாப்பாடு கொடுக்கணும்.. நான் இவனை வீட்டுக்கு கூட்டிட்டு போகவா..” என்றார்.
ஷிவா “ஐயோ… என்ன வீட்டுக்கா..“ என்றான் பதறி.
ஜெயாம்மா சிரித்தார் “இங்க நாலடி தள்ளி எங்கள் பிளாட்.. மழை வேற.. எங்க போய் என்ன வாங்குவ.. ஓ.. ஆர்டர் செய்திருக்கியா” என்றார்.
ஷிவா “இல்ல, செய்யணும் இனிதான்..” என தளர்ந்து அங்கிருந்த சுவரில் சாய்ந்தான்.
இவர்களுடைய அத்யாவசிய பொருட்கள்.. உடைகள்.. அடங்கிய நான்கு பெட்டிகள்.. மேலும் நான்கு பாக்.. இரண்டு கை பை.. தண்ணீர் பாட்டில் போன் சார்ஜர் தவிர, மற்றது ஏதும் அங்கு இல்லை. இனிதான் எல்லாம் வாங்க வேண்டும்.
ஜெயாம்மா “வா.. எங்க வீட்டில் வந்து நாலு இட்லி சாப்பிடு.. நான், குழந்தை பேரென்ன..” என்றார், யோசனையாக.
ஷிவா “சாம்..” என்றான்.
ஜெயாம்மா “ஷி.. ஷ்யாம்.. அப்படியே சொல்றேனே. நான் தூக்கி போறேன்… இவனை. எங்கிட்ட அழாமல் இருக்கானே. பாவம், குழந்தைக்கு பசிக்கும்..” என சொல்லி குழந்தையோடு எழ முயன்றார்.. முடியவில்லை.
ஷிவா, வந்து தன் குழந்தையை வாங்கிக் கொண்டு.. நின்றான்.
ஜெயம்மா எழுந்ததும்.. குழந்தையிடம் கை நீட்டி “வா டா கண்ணா” என்றார்.
குழந்தையிடம் அழுதக் கலை இருந்தாலும்.. லேசாக சிரித்துக் கொண்டு.. ஜெயாம்மாவிடன் தாவினான், ஷ்யாம் என புதிய நாமகரணம் சூட்டிக் கொண்ட சாம்.
ஷிவாவிற்கு, இத்தனை வருடமாக தெரியாத ‘நெகிழ்வு’ என்ற ஒரு உணர்வு எழுந்தது அவனுள். உடல் சிலிர்க்க.. நின்றான்.
ஜெயாம்மா குழந்தையோடு தன் வீடு நோக்கி சென்றார்.
ஷிவசங்கர் விவரிக்க முடியாத மனநிலையில், அப்படியே சுவரில் சாய்ந்து கீழே அமர்ந்தான். ‘எத்தனை யோசிப்பேன் நான்.. எவ்வளவு யோசிப்பேன் நான்..’ என மனம் தனக்கு தானே பரிதாபம் கொண்டது. ஆனால், உள்ளுக்குள் இன்னொரு மனம் ‘ம்.. இந்த யோசனை ஒரு நான்கு வருடம் முன்பு இருந்திருந்தால்.. இந்த நிலையே வந்திருக்காதே..’ எனவும் சொல்லியது. ‘எல்லாவற்றுக்கும் என் ஆசையே பிரதானம்..’ என அவனின் நியமான மனம் சொல்லியது. ‘ச்ச, அதெல்லாம் நினைக்க எனக்கு நேரமில்லை..’ என ஃப்ர்ட்டிக்கல் மூளை எடுத்து சொல்ல.. மனம் அமைதியிழந்தது.
நேரம் கடந்தது.. ஷிவாவிற்கு, இருக்கும் நிலை உணர்ந்தது. தனக்குள் சொல்லிக் கொண்டான் “எஸ்.. கோ ஷிவா.. இது உன்னுடைய உலகம்.. உனக்காக நீ வாழ் போதும்.. யாருக்கும் விளக்கம் சொல்லும் அவசியம் உனக்கு இல்லை..’ என தன்னுடைய நம்பிக்கையை மீட்டுக் கொண்டான் நிமிடத்தில்.
தனது போனை எடுத்து இந்தியன் சிம்கார்ட் போட்டான். அதன்பின் போனில் நேரத்தில் தொலைத்தான்.
ஒருவழியாக போன் இந்தியன் எண்ணுக்கு ஆக்டிவேட் ஆக, தேடி உணவுகளை ஆர்டர் செய்தான். கூடவே, அந்த டெலிவரி செய்யும் நபருக்கு அழைத்து பீர் வாங்கி வர சொல்லினான், தனியாக.
தன்னுடை பேக்கிங் பிரித்து.. பாத் பொருட்களை எடுத்தான். பின் ப்ரெஷ்ஷாக ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டான்.
அடுத்த அரைமணி நேரம் சென்று குளித்து வந்தான்.
இலகு உடையை அணிந்துக் கொண்டு, தன்னுடைய வ்வேலெட் எடுத்துக் கொண்டு.. கீழே சென்றான். டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கண்ணில் பட்டது. குழந்தைக்கு தேவையானதை வாங்கினான். ஆனால், அவனின் ப்ரண்ட் உணவு வகைகள் இங்கே இல்லை.. இப்போதிக்கு என பால் பவுடர்.. சிப்பர்.. என தேவையானதை வாங்கிக் கொண்டான். மற்றதை கடையிலேயே சொல்லி.. அவர்களை வாங்கி தருமாறு பணித்து மேலே வந்து சேர்ந்தான்.
இன்னமும் சாம் வந்திருக்கவில்லை.
ஷிவாவிற்கு, என்னமோ மகனை பற்றி பயம் கொள்ளவில்லை அவனின் மனம்.. அலட்டிக் கொள்ளவில்லை. எங்கே சென்றிருக்கிறான்.. எந்த வீடு என எதுவும் தெரியாமல்.. தன் வீட்டின் கதவை திறந்துக் கொண்டு.. வந்து வராண்டாவில் நின்றான்.
மழை! இடி! மின்னல்!… என இயற்கையின் சத்தம் அவனை அமைதியாக்கியது. சற்று நேரம் அங்கேயே நின்றான்.
இப்போது ஜெயாம்மா, ஷ்யாமோடு வந்தார்.. இவன் வீடு நோக்கி. வாசலில் ஷிவாவை பார்த்தார்.
ஷ்யாம் குஷியாக கை கால்களை ஆடிக் கொண்டு.. ஜெயாம்மாவிடம் பொருந்தி இருந்தான்.
ஷிவா அமைதியாக “தேங்க்ஸ் ஆன்ட்டி..” என்றான் ஆத்மார்த்தமாக.
ஜெயாம்மா “இருக்கட்டும் பா… ஷ்யாம் ரொம்ப குறும்பு.. ரொம்ப நல்லா விளையாடுறான். என் வீட்டுகாரர் கண்ணாடியை பிடிச்சி இழுக்கிறான்.. என் மருமகளை பார்த்தால்தான் அழறான்.. மத்தபடி.. சமத்து” என ஒருமணி நேரம் முன்புதான் பழக்கமான குழந்தையை பற்றி, அதன் தந்தையிடமே புகழ்ந்தார் ஜெயா.
ஷிவா, ஒடுங்கிய பாவனையோடு.. நிதானமாக.. இந்த புதிய பெரிய அம்மா சொல்லுவதை கேட்டுக் கொண்டிருந்தான். இதுவரை, யாரும் தன் குழந்தையை புகழ்ந்து அவன் கேட்டதேயில்லை. அவன் கண்டது எல்லாம் மெக்கானிக் உலகம்.. டெக்னாலஜி உலகம்.. ஷேர் மார்கெட்டின் ஏற்ற இறக்கங்கள் பற்றி கவலை கொள்ளும் எக்கனாமிக் உலகம். அதில், இந்த நெகிழ்வை அவன் உணர்ந்ததேயில்லை.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த ஷிவா, ஆஸ்ட்டின் நகரத்தில் இருந்தவரை.. குழந்தையை, கவனிக்க பேபி சிட்டர் வைத்திருந்தான். அந்த அளவிற்கு அவனுக்கு வருமானம் இருந்தது. அவன் அங்கே வாழ்ந்தது ராஜ வாழ்க்கைதான். அவனால், பணத்தினால் எல்லாவற்றையும் தனக்கென செய்துக் கொள்ள முடிந்தது.. அது தந்த மிதப்பில்.. களிப்பில்.. நூலறுந்த பட்டமாக அவன் பரந்த வானம், அவனை இங்கே தூக்கி எறிந்துவிட்டது. எல்லோரிடமிருந்தும் தூரமாக.
தன் சாம்மோடு வீட்டின் உள் வந்தான் ஷிவா.
குழந்தைக்கு என சின்ன பெட்டில் அவனை படுக்க வைத்தான். சாம்மும் சமர்த்தாக விளையாட தொடங்கினான்.
சரியாக உணவும் வந்து சேர்ந்தது.
ஷிவா, பேக்கிங் பிரித்து அமர்ந்தான் தரையில். தான் அணிந்திருந்த ஸ்ப்படிக மாலையை கழற்றி.. ஒரு துணியின் மேல் வைத்து விட்டு.. பீர் பாட்டில் ஓபன் செய்தான் நிதானமாக.
அந்த பச்சை நிற பாட்டிலை வெறுப்பாகத்தான் பார்த்தான்.. இதெல்லாம் அவன் திரும்பியும் பாராத பொருட்கள்.. திரவங்கள் அப்போது.. அந்த ஏழு வருடங்களுக்கு முன். அஹ.. அவனின் கேட்பாடுகள்.. கொள்ளைகளை எல்லாம் தூள் தூளாக்கியவளை.. சகித்து வாழ்ந்த பிறகு.. இதெல்லாம் அவனின் அன்றாட அத்யாவசிய பொருட்கள் இப்போது.
“மனம் பச்சை தண்ணிதான் பெண்ணே..
அதை பற்ற வைத்ததுன் கண்ணே..
என் வாழ்க்கை எனும் காட்டை எரித்து..
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே..”
Advertisement