அன்று காலையிலே தேவா வழக்கம் போல வெளியே கிளம்பி கொண்டிருக்க, “கொஞ்சம் பொறு தேவா” என்று மகனை நிறுத்தி வைத்தார் பசுபதி.
“ப்பா. போய்ட்டு வந்து பேசிக்கலாமா?” என்று தேவா கேட்க,
“பேசிட்டு கூட கிளம்ப முடியாது” என்றார் தந்தை.
“கல்யாணம் முடிஞ்சு குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு வந்ததோட சரி. அதுக்கு அப்புறம் என்னதான் பண்ணியிருக்க சொல்லு? விருந்துக்கு போறதை கூட விடு. துளசியோட எங்கேயாவது வெளியே போயிருக்கலாம் இல்லை. அதையும் செய்யலை. நீ மட்டும் தனியா போற, வர. என்ன தேவா இது?” என்று தந்தை தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“ப்பா. அவ்வளவு தான். நாளையோட எல்லாம் முடிஞ்சிடும்” என்று தேவா சொல்ல,
“சுந்தரம் பின்னாடியே சுத்திட்டிருக்கான். இதுக்கெதுக்கு துளசியை கல்யாணம் பண்ணனும்?” என்று வைரவேல் கேட்க,
“ப்பா” என்றான் மகன்.
“என் தம்பி கேட்கிறதுல என்ன தப்பு தேவா?”
“அண்ணா. அவனுக்கு பொண்டாட்டி சுந்தரமா? இல்லை துளசியா?” என்று வைரவேல் சந்தேகம் எழுப்பினார்.
“ப்பா. உங்க தம்பி ஓவரா போறார்” மகன் கோபம்கொண்டான். பேச்சுக்கு கூட அந்த சுந்தரத்தை. ச்சீ. முகத்தை ஏகத்துக்கும் சுருக்கினான் தேவா.
“மாமா. எனக்காக தானே இதெல்லாம் செஞ்சிட்டிருக்கார்” துளசி சொல்ல,
“உனக்காக செய்யட்டும் துளசி. அதுக்காக அதுவே வேலையாவா இருக்கிறது? ஏன் எங்ககிட்ட சொன்னா நாங்க பார்க்க மாட்டோமா என்ன?” வைரவேலுக்கு அவன் தனியாக செய்வதில் ஆதங்கம்.
“இதான் வேலை. செய்ங்கன்னு சொன்னா ஆளா இல்லை செய்ய? இவனே ஓடணும்ன்னு என்ன இருக்கு?”
“ப்பா. இது மத்த வேலை போல இல்லை. யாரையும் உள்ள இழுத்துவிட முடியாது” என்றான் தேவா.
அவனுக்கும் காரணங்கள் உண்டு. சொந்தத்தை பகிர்ந்து கொள்ள முடியும்! பகையை பகிர்ந்து கொள்ள முடியுமா?
“எல்லாம் முடிய போகுது. இரண்டு நாள் தான்” என்றான் தேவா.
“புரிஞ்சுக்க மாட்டேங்கிற நீ? உன்னை பார்த்தா புது மாப்பிள்ளை மாதிரியா இருக்கு. இதெல்லாம் ஒரு நேரம். அனுபவிக்கனும். சந்தோஷமா இருக்கணும். அப்புறம் ஓடு. யார் கேட்க போறா உன்னை” என்ற வைரவேல்,
“இந்தா டிக்கெட். இந்த வாரம் கிளம்பணும்” என்று நீட்டினார்.
“எங்க டிக்கெட் போட்டிருக்கீங்க?” என்று வாங்கி பார்த்தவன், “இதுக்கா இவ்வளவு பேச்சு? இங்கெல்லாம் நான் போக மாட்டேன்” என்றான்.
“டேய். மணாலி போக மாட்டியா நீ?”
“குளிர் எனக்கு சேராது” என்று திருப்பி கொடுத்தான்.
“விளையாடாத தேவா. பணம் எல்லாம் கட்டியாச்சுடா”
“நீங்க போங்க. நான் வேற இடத்துக்கு போறேன்” என்றான் தேவா.
“நானா? என்னை கோவப்படுத்தாத”
“நீங்களும் தான் புது மாப்பிள்ளை. இதெல்லாம் ஒரு நேரம் தான் கிடைக்கும். அனுபவிங்க, சந்தோஷமா இருங்க” அப்படியே திருப்பி சொன்னான்.
“நான் போக மாட்டேன். ஒழுங்கா நீ போற”
“மாலதி சித்தியை கூட்டிட்டு போக முடியாதளவு அவங்க என்ன செஞ்சிட்டாங்களாம்?”
“டேய். நான் எப்போ அப்படி சொன்னேன்” வைரவேல் திரும்பி மனைவியை பார்த்தார்.
“போக மாட்டேன்னு சொன்னா, அவங்களை கூட்டிட்டு போக விருப்பமில்லைன்னு தான் அர்த்தம். மாலதி சித்தியும் பாவம். கல்யாணம் முடிச்சதுல இருந்து இங்க தான் இருக்காங்க. ஆபிஸ் தான் உங்க பொண்டாட்டியா என்ன?”
“தேவா”
“சித்தி நீங்க எல்லாம் பேக் பண்ணி ரெடியா இருங்க. அவர் கூட்டிட்டு போவார்” என்று முடித்தான் நல்லவன்.
வைரவேல் இப்போது என்ன சொல்ல என்று முழித்தார்.
“சரி வேலு போகட்டும். நீ எங்க போக போற? அதை சொல்லு முதல்ல?” என்று கேட்டார் பசுபதி.