மஞ்சள் காட்டு மைனா 24 2 10170 “அப்படியென்ன கேட்டுக்கு வெளியே தவம் கிடக்கணும்? உனக்கு வேணும்ன்னா நான் நிக்கிறேன். நீ போய் கார்ல இரு” என்றார் வைரவேல். “உங்களோட” என்றவன், “நீயும் இறங்கிடாத” என்று மனைவியை எச்சரித்தான். “மாட்டேன். நீங்க சொல்லாம இறங்க மாட்டேன்” என்றாள் துளசி. கணவனை முற்றும் முழுதாக நம்புபவள் ஆயிற்றே! பொறுமையாக காத்திருந்து பின் கேட்டிற்குள் நுழைந்தனர். எங்கும் இருள். ஓர் அறைக்கு முன் இவர்கள் வரவும், அங்கு மட்டும் வெளிச்சம் படர்ந்தது. சந்தோஷ் இருந்தான். நான்கு சுவற்றுக்குள் படுத்து கிடந்தான். கைகால்கள் கட்டப்படவில்லை. துளசி வெறுப்புடன் முகம் சுளிக்க, வைரவேல் அவனை ஆராய்ந்தார். “உள்ள போகணுமா?” என்று ஒருவர் கேட்டார். “நான் மட்டும்” என்று தேவா சொல்ல, துளசி பக்கம் கேள்வியாக பார்த்து, பதிலை தேவாவிடம் எதிர்பார்த்தார் அவர். “அவளுக்கு விருப்பமிருக்காது” என்றான் தேவா. அவர் கதவை திறக்க, “நீங்க ஏன் உள்ள போகணும்” என்று கணவன் கைப்பிடித்தாள். “அவன் மூச்சு காற்று படுற இடத்துல கூட நீங்க வேணாம்” என்றாள் மனைவி. “சிலது மட்டும் தீர்த்துக்கிறேன்” என்றவன் அறைக்குள் நுழைந்தான். “ஏய். தேவா. புது மாப்பிள்ளை. எப்படி இருக்கா என் பொண்டாட்டி” என்று சந்தோஷ் இவனை பார்த்ததும் கோவத்துடணும், ஏளனத்துடணும் கேட்டான். “ரொம்ப நல்லா இருக்க போல” என்று தேவா அவனை நெருங்க, “என்னை கடத்தினது நீயா? இல்லை சுவாதி அப்பனா?” சந்தோஷ் கேட்டான். “கடத்தினது அவர் தான். ஆனா உனக்கான பதில் என்கிட்ட தான் கிடைக்கும்” என்றான். “நீ யார்டா எனக்கு பதில் சொல்ல? நான் நினைச்சா உன்னை இருக்கிற இடம் தெரியாம முடிச்சிடுவேன்” என்று சந்தோஷ் குதிக்க, “அப்படியா?” என்றான் தேவா. “டேய் என்ன?” என்று சந்தோஷ் ஆத்திரத்துடன் தேவாவை அடிக்க போனவன், தேவா விட்ட உதையில் “ஆஹ்” என்று அலறி கீழே விழுந்து கிடந்தான். “அப்படியே பாயுற? பெரிய ***கியாடா நீ? வைடா கை. இப்போ வைடா பார்க்கலாம்” என்று சந்தோஷ் முகத்துக்கருகில் சென்று தேவா கர்ஜித்ததில், சந்தோஷ் கதிகலங்கி போனான். அவன் வீரமெல்லாம் எளியவர்களிடம் மட்டுமே. தேவா போன்ற ஆண் மகன் முன்பு நிற்க கூட திரணியில்லாதவன். “இந்த கை, கால் எல்லாம் உருப்படியா இருக்க போய்த்தானே அந்த ஆட்டம் போட்ட? ஆம்பிளைன்னு காட்ட என்ன வேணும்ன்னா செய்வியா? யாரை வேணும்ன்னாலும் துரத்துவியா? நாலு சுவத்துக்குள்ள அடிச்சு சாப்பிட ஆசைப்பட்ட ஓநாய் தானே நீ?” என்று அவன் சட்டை பிடித்து முகத்திலே விட்ட குத்தில், துளசி கண்களை மூடி கொண்டாள். “வெறி பிடிச்சு ஆடுவியே. இப்போ ஆடுடா” என்று அவனை எழுப்பி நிற்க வைக்க, “அடிச்சுட்ட இல்லை. என்னையே அடிச்சுட்ட இல்லை. உன்னை விடமாட்டேன்” என்று சந்தோஷ் கோவத்தில் தேவாவை அடிக்க கை, கால்களை ஓங்கினான். தேவா மின்னலாக அவனை ஓங்கிய கை, கால்களை தட்டி விட்டு மண்டி போட வைத்தான். “உன் அப்பா வந்தா நான் எப்படியெல்லாம் அடிச்சேன்னு நீ சொல்லணும்” என்று அதன்பின் தேவா ஆடிய ஆட்டமெல்லாம் சந்தோஷ் வாழ்நாளிலே மறக்க மாட்டான். தேவாவை தடுக்க கூட அங்க ஆளில்லை. “நீ இருக்கணும். முழு புத்தியோட வாழணும். அவ்வளவு சீக்கிரம் உனக்கான விடுதலை கிடைச்சிடாது” என்று தேவாவே ஒரு கட்டத்தில் அவனை விட்டுவிட்டான். சந்தோஷ் வலியில் முனக கூட முடியாமல் அறை முழுதும் புரண்டு கொண்டிருந்தான். “நீங்க கைவைக்க தான் அவனை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தோம்” என்று அங்கிருந்த ஆள் சொல்ல, “உங்க சாருக்கு நான் நன்றி சொன்னேன்னு சொல்லிடுங்க” என்றான் தேவா. “அவர் உங்களை கூடிய சீக்கிரம் சந்திப்பார்” என்று அவர்களுக்கு கேட்டை திறந்து விட்டார். வைரவேல் மகன் தோளை தட்டி கொடுத்து அவர்களை வீட்டிற்க்கு அழைத்து வந்தார். கணவனும், மனைவியும் அறைக்கு வர, தேவா முதல் வேலையாக குளிக்க சென்றான். துளசி அவனுக்காக காத்திருந்தவள், தேவா வரவும் அவன்முன் சென்று நின்றாள். “எனக்காகவா?” என்று தன் நெஞ்சில் விரல் வைத்து சைகையில் கேட்டாள் துளசி. அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டிருந்தவளுக்கு வார்த்தைகள் அவள் வசம் வரவில்லை. தேவா புரிந்து அவள் விரலை பற்றி தன் இதயத்தில் வைத்தவன், “எனக்காக. என் காதலுக்காக!” என்றான். துளசியின் கட்டுப்படுத்திய கண்ணீர் வழிய, “ஏன்?” என்றாள். “நான் உங்களை காதலிக்கலை” என்றாள் இருவரின் இதயத்தையும் தொட்டு விரல்களை பிணைந்து கொண்டு வினவினாள். “அதனால என்ன இப்போ? நாந்தான் உன்னை காதலிக்கிறேனே. போதும்” என்றான் தேவா. இருவருக்குமாக அவன் காதல் போதுமாமே! துளசி அழுத்தமாக தன் கண்களை துடைத்து கொண்டவள், “நம்ம கல்யாணம் நடக்கைலைன்னா?” என்று கேட்டாள். “நிச்சயம் அவனை இப்படி முழுசா விட்டு வந்திருக்க மாட்டேன்” என்றான் தேவா. “ஆஹ்” துளசி கண்கள் விரிந்து போனதுடன், பாய்ந்து கணவனை கட்டி கொண்டாள். “என்னோட வாழணும்ன்னு உனக்கு இப்போ வந்த ஆசை எனக்கு பல வருஷமா இருக்கு. என்னோட பேராசை நீ” என்றான் தேவா. “உன் கைக்குள்ள இப்போ நான் இருக்கேன். ஆனா என் கைக்குள்ள எப்போவும் நீ இருந்ததில்லை” துளசி உடனே அவன் கைகளை எடுத்து தன் இடையை சுற்றி படரவிட்டாள். ‘உன் கைக்குள் நான் இப்போ இருக்கேன்‘ என்று கணவனுக்கு உணர்த்த முயன்றாள். சிக்கென்ற சின்ன இடை அவன் முரட்டு கைகளுக்குள் வெகுசுலபமாக அடங்கி கொள்ள, தேவா முதல் முறையாக அவள் ஸ்பரிசத்தில் விழிவிரித்தான். அவன் கைகள் நழுவ, “பிடிங்க. நல்லா பிடிங்க” என்று மனைவி திரும்ப வைத்தாள். “கெட்டியா பிடிச்சா உடைஞ்சிடாது?” என்று தேவா கேட்டுவைக்க, “என்ன கேள்வி இது?” என்று துளசி கணவன் முகம் பார்த்தாள். “ரொம்ப குட்டியூண்டா இருக்குடி” என்றான் கரகரத்த குரலில். “எல்லாம் சரியாத்தான் இருக்கு. நீங்க பிடிங்க. நான் இப்போ உங்க கைக்குள்ள தான் இருக்கேன். பாருங்க” என்றாள் துளசி. “ஆ. ஆமா இருக்க” என்ற தேவா, “உன்கிட்ட ஒன்னு கேட்கவா?” அவளின் காதுக்கருகில் முனகினான். “என்ன கேட்கணும்?” துளசிக்கு அவன் மீசை முடி உராய்ந்ததில் சிலிர்த்து கொண்டது. “இந்த இடுப்பு. இது போதுமா?” அவனுக்குள் தோன்றிய மாபெரும் கேள்வியை கேட்டான். “என், எதுக்கு போதும்?” துளசி காதுகள் சிவந்து போனது. “உன்னை தாங்க?” “இத்தனை வருஷமா தாங்கிட்டு தானே இருக்கு” துளசி குரல் வருவேனா என்றது. “ஆனா நான், நான் பெரியவன்டி” துளசியின் சுவாசம் தப்பி போனது. “நாம இப்போ வேற பேசி“ “உன்னை தொட்டுட்டேன்“ “அதனால“ “என் கையோட, என் மனசும் மாறிடுச்சு“ “விரல் நடுங்குது, சுகர் பேஷண்ட்டா நீங்க” துளசி கேலியாக பேசி கணவனை விட்டு விலகிவர, “காதல் பேஷண்ட். குணமாக்கி விடு” என்று திரும்ப அவளை தன் கைக்குள் கொண்டு வந்தான். “ஆஹ்ன் இதென்ன?” “என் விரல் நடுக்கம் இனி இருக்கவே கூடாது, அதுக்கு என்ன வழியோ அதை செய்“ “நான் எப்படி. நான் என்ன செய்ய?” துளசி அவன் நெஞ்சில் கை வைத்தாள். மனைவியின் உள்ளங்கை மிதமான வெப்பம் அவனுக்கு தேவைப்பட்டது. “பழகிட்டா நடுக்கம் இருக்காது. பழக்கி விட்டுடு” என்றான் கணவன். “நான் பழக்கணுமா?” துளசி அதிர்ந்து போனாள். “என் காதலை நான் உனக்கு பழக்கிவிடுறேன். நீ உன்னை எனக்கு பழக்கி விடு” “நீங்களே அதை செஞ்சுக்கோங்க” என்று துளசி தப்பிக்க முயன்றாள். “நாம சந்தோஷமா வாழணும் தானே? நான் ஒன்னு செஞ்சா நீ ஒன்னு செய். இங்க பாருடி காதல் என்கிட்ட மட்டும் தான் இருக்கு. நாந்தான் அதை கொடுக்க முடியும்“ “உங்க சேட்டையை ஆரம்பிக்காதீங்க“ “சேட்டையை ஆரம்பிச்சா தான் குழந்தை குட்டின்னு வாழ முடியும். பார்த்துக்கோ“ “உங்களோட முடியலை“ “அதை இங்க, இப்போ சொல்ல கூடாது” என்று கண்ணடித்தான் குறும்புக்காரன். “என்னங்க” துளசி அவன் மார்பில் மெல்ல தட்டினாள். “என்னோட பல வருஷ ஏக்கம் நீ. உன்னை மனசால நிறைய தொட்டிருக்கேன். ஆனா கையால தொட்டதில்லை. என் முன்னாடி புதையலா நிக்கிற. மினுக்கிற! நடுக்கம் வராம இருக்குமா? சொல்லு” என்று அவளின் கன்னம் தாங்கினான். துளசி கணவனை இமை சிமிட்டி பார்த்தாள். “என்னோட கனவு இல்லை. நிஜம் நீ! நிழலா தான் என் காதல் இருந்திருக்கு. நிஜத்துல என் காதலை நான் அனுபவிக்கணும். மெய்மறந்து திளைக்கணும். என் காதலுக்கு நான் நியாயம் செய்யணும். அதுக்கு நீ மனசு வைக்கணும். என்னை காதலிக்க கேட்கலை. என் காதலை உணர்ந்தா சொல்லு. நான் ஜெயிச்சுப்பேன். அப்படியே உன்னை மொத்தமா எனக்குள்ள அள்ளி எடுத்துப்பேன்! எனக்குள்ள நிறைச்சுப்பேன்! முழுசா உன்னை உணர்ந்து சந்தோஷத்துல உச்சம் தொட்டுடுவேன்” என்றான் காதலன் தேவா.