அச்சுதனோடு ஒரு அரைமணி நேர கார் பயணம். அதுவே அவளுக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது. மனதினுள்ளே தான். வெளிக்காட்ட முடியுமா என்ன?!
அச்சுதனோ, அம்மாவிடம் கடிந்துகொண்டாலும், அர்ச்சனாவிடம் எதையும் காட்டிக்கொள்ள வில்லை. கைதேர்ந்த வியாபாரி அல்லவா. யாரிடம் எப்படி பேசவேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?!
அவனைப் பொருத்தமட்டில், அர்ச்சனா சொந்தத்தில் ஒருத்தி. இதோ இது, ஒரு தொழில் முறை பிரயாணம். அதற்கும் மேலாய் அர்ச்சனா அனிதாவின் தங்கை. அவளுக்கான மரியாதையை குடுக்கத்தானே வேண்டும். அதனால் காரில் செல்லும் போது, அர்ச்சனாவோடு பேசிக்கொண்டே தான் வந்தான். எல்லாமே பொதுவான பேச்சுக்கள்.
அவன் காரினை ஓட்ட, அவள் முன்னே தான் அமர்ந்திருந்தாள். போகும் வழியெல்லாம் அர்ச்சனா வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வர,
“திருச்சியை ரொம்பவும் மிஸ் பண்ணியோ?” என்ற அவனின் கேள்வி அவளை திரும்பிப் பார்க்க வைக்க, அவனது கவனமெல்லாம் சாலையில் தான் இருந்தது.
“இல்லாம இருக்குமா? வந்து நல்லா ஊர் சுத்தணும்னு நினைச்சேன்…” என்று இழுத்தி நிறுத்தி, அவளும் இலகுவாய் பேச,
“ஹா ஹா..!” என்று சிரித்தவன் “பெர்சனல் லீவ் போட்டுக்கோ…” என்று சொல்ல, அவனது சிரிப்போ அவளை கொள்ளைகொண்டது.
‘எம்பெருமாளே…’ என்று ரங்கநாதரை மனதினில் எண்ணியவள், பார்வையை வேகமாய் மீண்டும் வேடிக்கைப் பார்க்கத் திருப்ப, அவனோடு இன்னும் பேசவேண்டும் போல இருந்த ஆவலை அடக்கிக்கொண்டாள்.
அவனோ “அங்க வந்து பாரு அர்ச்சனா. என்னோட ஐடியா சொல்றேன்.. கம்ப்ளீட் பண்ண முடியுமான்னு நீ தான் சொல்லணும்…” என்று அவன் பேச, தொழில் முறை பேச்சு என்பதால்,
அவளும் “உங்க ஐடியா என்னன்னு இப்போ கூட சொல்லலாம் தானே..” என்றாள்.
“ம்ம் சொல்லலாம் தான். இடத்தை கண் முன்னாடி வச்சுட்டு சொன்னா உனக்கு கற்பனை பண்ண ஈசியா இருக்குமே…” என்று அவனும் சொல்ல, அவனது பேச்சு திறன் அவளுக்கு புரிந்து போனது.
மற்றவரை தன் பேச்சை கேட்க வைக்கும் ஆள் இவன் என்று எண்ணிக்கொண்டவளுக்கு, நானும் உனக்கு சளைத்தவள் அல்ல என்று அவள் காட்டிட வேண்டாமா?!
“உங்களோட ஐடியா சொன்னா, இடத்தை பார்த்துமே சட்டுன்னு ஒரு ஐடியா எனக்கும் தோணிடும் தானே…” என்று அவளும் பேச, அச்சுதன் புன்னகைத்துக் கொண்டான்.
‘ஏன்டா சிரிக்கிற? ஏன் சிரிக்கிற?’ என்று அவளது மனது குரல் கொடுக்க,
“நகை மாளிகைன்னு பேர்ல மட்டும் மாளிகை இருக்கக் கூடாது. அது நிஜமான மாளிகையா இருக்கணும்…” என்று அவன் சொல்ல,
“என்னது?!” என்றாள் விழிகள் விரித்து.
“எஸ்.. பேலஸ் போல வேணும்…” என்று சொன்னவனின் கண்களிலும் அதற்கான காட்சிகள் விரிய,
“சோ.. உங்கட்ட ஏற்கனவே ஒரு பைனல் ஸ்கெட்ச் இருக்கும் போலவே…” என்றாள் அர்ச்சனாவும்.
“யா.. பட் அது பைனலான்னு நீதான் சொல்லணும்…” என, இந்த பேச்சுக்கள் அவளுக்கும் மிகவும் பிடித்து இருந்தது.
சொல்லப்போனால், இவனிடம் இருந்து தூர தள்ளி நிற்க வேண்டும். அப்பா சொன்னதற்காக இடத்தைப் பார்த்துவிட்டு, பின் ஏதேனும் காரணம் சொல்லி விலகிடலாம் என்றெல்லாம் அவள் ஒரு பக்கம் எண்ணியிருக்க, இப்போது அச்சுதனோடு பேசுகையில், அவனது கனவு மாளிகையில் என் பங்கு இல்லாமலா என்று அவளது மனதே கேட்க,
அதானே?! என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.
அவளது இந்த திடீர் அமைதியில், கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் பக்கம் திரும்பிவிட்டு மீண்டும் சாலையில் கவனம் வைத்தவன் அடுத்து எதுவும் பேசினான் இல்லை. சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, பேச்சுக்கள் இருந்த பொழுது இருந்த இதம், இப்பொழுது மௌனத்தில் ஒருவித இம்சையை கொடுத்தது.
அது அர்ச்சனாவிற்குத் தான்.
அச்சுதனோ அதிகம் பேசுகிறோமோ என்று எண்ணி, தன்னை அடக்கினான். வெளி பெண்கள் யாரோடும் இத்தனை இயல்பில் அவன் பேசியதில்லை. என்னதான் தொழில் முறை பயணம் என்றாலும் கூட, அவனது பேச்சு அதிகமோ என்று அவனுக்கே தோன்றியது.
திருமணம் செய்துகொள்ள போகும், தனுஜாவிடம் கூட அவன் அளவாய் தானே பேசினான். எல்லைகள் தாண்டி ஒரு வார்த்தைகள் இல்லையே.
ஆனால் இப்போது என்னவோ அவனுக்கே அவனை எண்ணி, ஒருமாதிரி இருந்தது.
‘என்ன இத்தனை பேசுற அச்சுதா?! இப்படித்தான் வேணும்னு நீ கேட்கணும்.. அதைவிட்டு, நீதான் முடிவு பண்ணனும்னு சொல்லிட்டு இருக்க..’ என்று அவனது மனது கேட்க, அவனுமே நாவிற்கு பூட்டிட்டுக் கொண்டான்.
அர்ச்சனாவோ மனதிற்குள்ளே பல அரண்மனைகளை கற்பனைக்கு கொண்டு வந்துகொண்டு இருந்தாள். நகை மாளிகைக்கும், நிஜ மாளிகைக்கும் எப்படி ஒப்பீடு செய்வது என்று ஒரு கற்பனை வடிவமைப்பை அவள் யோசனை செய்துகொண்டு இருக்க, அச்சுதன் சொன்ன இடமும் வந்துவிட்டது.
திருச்சி – தஞ்சையின் பிரதான சாலையின் பக்கவாட்டில் இருக்க, சுற்றிலும் நிறைய தோட்டங்கள் இருந்தது. இவர்களுமே இந்த இடத்தினை சும்மா விடவில்ல. அதற்காக தோட்டம் போலவும் இல்லை. காலை வெயில் ஏறத் தொடங்கிய நேரம் என்பதால், காற்று லேசாய் அனல் கலந்து வந்தாலும் வெக்கை இல்லை.
அச்சுதனும், அர்ச்சனாவும் கார் விட்டிறங்கவும், அர்ச்சனாவின் பார்வை சுற்றிலும் வட்டமிட, அவளே சொல்லட்டும் என்று அச்சுதன் காரின் மீதே சாய்ந்துகொண்டு நின்றுவிட, அர்ச்சனா அவனிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
இப்படி வேண்டும் என்று அவன் சொல்லிவிட்டான். அவளது எண்ணத்தின்படி கற்பனையை இந்த இடத்திற்கு ஏற்றவாறு ஓட்டிப் பார்க்க, காட்சிகளாய் அவை விரிய, மனதினில் பதிய வைத்துக்கொண்டாள்.
கார்பரேட் உலகத்தில், இயற்கையோடு இணைந்த வகையில் ஒரு நகை மாளிகை இருந்தால் எப்படி என்று தோன்ற, அதனை அடிப்படையாய் வைத்து, அவளது ஐ பேடில் சிறிது நேரம் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தவளின் முகம் தெளிவானது.
அத்தனை நேரமும் அச்சுதன் அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவளது முக பாவனைகள், அவளது யோசனைகள் என்று எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். இருக்காதா பின்னே, இப்போது தான் படிப்பு முடித்து வந்திருக்கிறாள். இன்னும் அனுபவங்கள் இல்லை. எல்லாம் கார்மேகம் பார்த்துக்கொள்வார் என்றாலும், முன் நின்று செய்யப்போவது அர்ச்சனாவெனில், அவனுக்கும் சில கணக்குகள் மனதினில் எழும் தானே.
அவனுக்குமே தனியாய் ஆரம்பிக்கும் தொழில் இதுதான் முதல். அவளுக்குமே இதுதான் முதல் ப்ராஜக்ட்.
அவளது முக பாவனைகள், அவளது திறமையை வெளிக்காட்டும் இல்லையா. அதனால் அவளைப் பார்த்துக்கொண்டு இருக்க, கடைசியில் அவள் காட்டிய தெளிவு, அவனது முகத்திலும் ஒரு தெளிவை கொண்டுவந்தது.
அதிலும் அவளது இதழில் அத்தனை நேரமில்லாத புன்னகை இப்போது வந்து ஒட்டிக்கொள்ள, அவளது கீழ் இதழ் அருகே இருக்கும் குட்டி மச்சமும் சேர்த்தே புன்னகை பூக்க
“ம்ம் ஒரு ரஃப் ப்ளான் தான். ஜஸ்ட் எனக்கு இப்போ தோணினதை டிசைன் பண்ணிருக்கேன்…” என்று அவள் காட்ட, அதனை வாங்கிப் பார்த்தவனுக்கு, புருவம் தானாய் உயர்ந்தது.
‘வாவ்…’ என்று அவன் சொல்லாமல் சொல்லிய விதம், அவளுக்கு அப்படியொரு சந்தோசத்தைக் கொடுக்க, இன்னும் ஏதேனும் சொல்வானோ என்று அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு நிற்க,
“என்னோட டிசைன்ஸ் அனுப்புறேன். மேட்ச் பண்ணி பாரு அர்ச்சனா. பெர்பெக்ட் ப்ளான் அடுத்து முடிவு பண்ணிக்கலாம்…” என்று சொல்ல,
“தட்ஸ் குட்… உங்களோடது பார்த்துட்டு, டீம் கிட்டயும் டிஸ்கஸ் பண்ணிட்டு, அஞ்சு பைனல் ப்ளான்ஸ் குடுக்குறேன். நீங்க டிசைட் பண்ணுங்க ஓகே…” என்று அவள் பேசிய விதம், அவனுக்கு மிக ஸ்டைலாய் பட்டது.
அவளது ஆங்கில உச்சரிப்பு அவனுக்கு வித்தியாசமாய் பட்டது எனலாம். அச்சுதனும் சரளமாய் ஆங்கிலம் பேசுபவன் தான். அர்ச்சனாவிற்கு வெளிநாட்டு வாசம் அதனை இன்னும் முறைப்படி மெருகேற்றி இருந்தது. ஆகையால் அவள் பேசும் விதத்தினை, அச்சுதன் அவனை மீறி கவனித்துக்கொண்டு இருக்க, அது ஒருவகையில் அவன் மனதிலும் லேசாய் பதிந்தது.
“ம்ம்ம்…” என்றுமட்டும் தலையை ஆட்டிக்கொண்டவனுக்கு ‘கிளம்பலாம்…’ என்று தோன்றிவிட
“போலாம்…” என்று அவளுக்கு கார் கதவினை திறந்துவிட்டவன், அர்ச்சனா ஏறி அமரவுமே, அவனும் இருக்கையில் வந்து அமர்ந்தவன், காரினை செலுத்தத் தொடங்க, வழக்கமாய் அந்த நேரத்தில் நீலவேணி அழைத்து மாத்திரை போட்டாயா என்று கேட்பார்.
அதுபோலவே அன்றும் அழைத்துக் கேட்க “ம்மா இன்னும் இல்லை.. இங்க புது ப்ராஜக்டுக்காக இடம் பார்க்க வந்தோம்…” என்று அவன் விபரம் சொல்ல,
“ஓ! நல்லது அச்சுதா.. ஆனாலும் மருந்து போடணும் இல்லையா?” என்றார் கண்டிப்புடன்.
“அர்ச்சனா டேஷ் போர்ட் ஒப்பன் பண்ணேன்…“ என்றிட, அவளுக்கு புரிந்தது அவனது மாத்திரைகள் போட்டுக்கொள்ள வேண்டிய நேரமிது என்பது.
அவன் சொன்னதுமே டேஷ் போர்ட் திறந்தவள், அவன் கூறிய பவுச்சை எடுத்துக் கொடுக்க, மொத்தம் மூன்று விதமான பவுச்சுகள் இருந்தது. அவளே புரிந்துகொண்டாள். மூன்று வேளைக்குமான மாத்திரைகள் தனி தனியே வைக்கப்பட்டு இருக்கிறது என்று. அதிலும் அவன் இந்த நேரத்தில் எந்தெந்த மாத்திரைகள் போடுகிறான் என்பதும் பார்த்து வைத்துக்கொண்டாள்.
இரண்டு மாத்திரைகளை நிதானமாய் விழுங்கியவன், அடுத்து அரை பாட்டில் நீரையும் குடித்து முடிக்க, அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் அர்ச்சனா. அவள் கவனிக்கிறாள் என்பதனையும் அவன் கவனித்தவன், எதுவும் பேசவில்லை.
காரினை மீண்டும் செலுத்த, ஒருநாளைக்கு இத்தனை மாத்திரைகள் என்றால், அவனுக்கு இன்னமும் உடல்நிலை சரியாகிடவில்லையா என்று அவளுள் கேள்வி எழ, அவளது எண்ணவோட்டத்தை சரியாய் கணித்தவன் போல “ஒரு நாளைக்கே இத்தனை இல்லை அர்ச்சனா…” என்றான் திடீரென.
“என்னது?!” என்று அவள் திரும்பக் கேட்க,
“இல்ல உள்ள இருந்த பவுச்சஸ் பார்த்து, இப்போ நான் போட்ட மாத்திரைகள் பார்த்து, தினமும் இத்தனையான்னு யோசனை பண்ணதானே.. அதான் தினமும் இத்தனை இல்லைன்னு சொன்னேன்…“ என்றிட,
“பின்ன?!” என்றாள், அவன் தன்னை கவனிக்கிறான் என்பதை உணர்ந்து.
“என்னோட ஸ்ட்ரஸ் லெவல் பொறுத்து. பிரஷர் லெவல், ஹார்ட் பீட் இதெல்லாம் பொறுத்து டோசெஜ் மாறும் அர்ச்சனா…” என்றவன் விரக்தியாய் ஒரு புன்னகையை உதிர்த்து, காரினை மீண்டும் எடுக்க, அவளுக்கு அத்தனை நேரம் இருந்த இதம் மறைந்து இப்போது அதீத கவலை வந்து ஒட்டிக்கொண்டது.
அவனுக்கு எல்லாம் சீக்கிரமே சரியாகிட வேண்டும் என்று அவள் வேண்டிக்கொள்ள, அவள் முகத்தை ஒருமுறை பார்த்தவன், லேசாய் இதழ் வளைத்துக் கொண்டான்.
அர்ச்சனாவிற்கோ, அவனது துன்பங்கள் கண்டு, அவளும் துயரம் கொள்ள, அதற்குமேலே பேச்சுக்கள் வரவில்லை. அவனுக்குள்ளேயே நிறைய போராடுகிறான் என்பது அவளுக்கு புரிந்தது. ஆள் பார்க்க அழகன். அவன் நேற்றில் இருக்கும் தழும்பு கூட, அவனுக்கு இன்னும் அழகு சேர்ப்பதாய் இருந்தது.
அவனது உயரம், உடற்கட்டு, குணம், பழகும் விதம், குடும்ப பின்னணி, சொத்து பத்து என்று அனைத்தும் நிறைந்த ஆண்மகனுக்கு ஆண்டவன் இப்படி ஒரு சூழலை கொடுத்திருக்கக் கூடாது என்று அந்த நொடி அந்த எம்பெருமாளிடமே அவள் சண்டையிடத் தொடங்கிவிட்டாள்.
இவனுக்காகவேனும் அந்த தனுஜா கண் விழித்து பார்த்திருக்கக் கூடாதா என்று அவளுக்குத் தோன்றிய அந்த நொடி, அச்சுதனுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. தனுஜாவின் அப்பாவிடம் இருந்து.
“சொல்லுங்க அங்கிள் என்னாச்சு?” என்று அவன் பதறியே கேட்க, அவர் சொன்ன செய்தி கேட்டு, காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்த, அவனது பதற்றமும், காரை நிறுத்திய விதமும் என்னவோ என்று அர்ச்சனாவையும் பதற வைக்க,
அவளோ கொஞ்சம் பயத்துடனே அவனைப் பார்க்க, அவனோ “நா.. நான் வர்றேன்…” என்றவன் அழைப்பை துண்டித்து, அர்ச்சனாவிடம் “சாரி அர்ச்சனா, இப்போ நான்.. நான் தனுஜா வீட்டுக்கு போகணும். அவளுக்கு பல்ஸ் கம்மியாகுதுன்னு சொல்றாங்க…” என்றிட,
‘அச்சோ..!’ என்றாள் இதழ் அசைப்பில்.
“அகைன் சாரி.. நீ… நீ டாக்சி…” எனும்போதே, இந்த சூழலில் இவனை தனியே விடுவதா என்று தோன்ற
“வேணாம் அர்ச்சனா.. நான் கிளம்ப எத்தனை நேரம் ஆகும்னு தெரியாது. நீ எதுக்கு அங்க எல்லாம்.. உனக்கு தேவையில்லாத டென்சன்ஸ் இதெல்லாம்.. நான் ஆட்டோ பிடிச்சு விடுறேன். கடைல விட்டுடுவாங்க…” எனும்போதே, கார் அவன் கையில் படாதபாடு பட்டுக்கொண்டு இருந்தது.
அவளோ நிறுத்தி நிதானமாய் “இத்தனை டென்சன்ல உங்களை தனியா அனுப்ப எனக்கு மனசு வரல. அங்க வந்துட்டு வர்றேன்.. வருவேன்…” என்று முடிக்க, அவளை வித்தியாசமாய் திரும்பிப் பார்த்தான் அச்சுதன்.