“ம்மா நீங்க எனக்கு ரொம்ப மனவுளைச்சல் குடுக்குறீங்க ம்மா…” என்று கோபத்தை அடக்கி, அமைதியாய் அழுத்தமாய் நீலவேணியிடம் பேசிக்கொண்டு இருந்தான் அச்சுதன்.
நீலவேணி பதிலேதும் சொல்லாமல், அலைபேசியில் எதையோ பார்த்து அமர்ந்து இருக்க “ம்மா உங்கக்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்..” என்றான் குரலை உயர்த்தி.
“ஆ! என்னப்பா? என்கிட்டே பேசிட்டு இருக்கியா? ஓ! சாரி அச்சுதா.. போன்ல ஒரு ஜோக் பார்த்துட்டு இருந்தேனா கவனிக்கல…” என்றவரின் அலட்சியம் அவனை மேலும் கோபம்கொள்ள வைக்க,
“ம்மா…” என்று பல்லைக் கடித்தவன் “அர்ச்சனா கிட்ட அப்படி என்ன பேச்சு உங்களுக்கு? முதல்ல யார் அவ.. அனிதாவோட தங்கச்சி அவ்வளோ தானே… என்னவோ பல நாள் பழக்கம் போல, மனசுல இருக்கிறது எல்லாம் கொட்டி பேசிட்டு இருக்கீங்க..” என,
“ஹ்ம்ம் என்னவோ அந்த நிமிஷம் பேசணும்னு தோனுச்சு பேசிட்டேன்.. அவளும் அதை இயல்பா எடுத்துக்கிட்டா…” என்று அவரும் சொல்ல,
“ம்மா… நீங்க என்ன மனசுல வச்சுட்டு இப்படில்லாம் பீகேவ் பண்றீங்கம்மா.. கொஞ்ச நாளாவே நீங்க சரியில்லை…” என்று பதிலுக்கு இவனும் பேசினான்.
“ஆமான்டா.. சரியில்லை தான்.. நீ மட்டும் ரொம்ப சரியா இருக்கியா? சொல்லு சரியா இருக்கியா. எங்க யார் பேச்சையும் கேட்காமத்தானே இருக்க.. என்னோட நிலையை நீ என்னிக்காவது நினைச்சு பார்த்து இருக்கியா?” என்று நீலவேணி பேச பேச, அச்சுதனுக்கு என்னானதோ தெரியவில்லை, பதிலேதும் சொல்லாமல் அமைதியாகிவிட்டான்.
மகனின் அமைதி கண்டவர் “பதில் பேசு அச்சுதா.. என்னோட நிலையை யோசிச்சு பார்த்தியா நீ? நீ அடிப்படை நியாயம் பேசுற.. ஆனா அதோட அஸ்திவாரமே ஆட்டம் கண்டு போச்சே. தனுஜா பிழைக்க வாய்ப்பு இருக்குனு சொன்னா கூட, எங்களுக்கும் மனசு ஒரு அமைதியாகும். அதுவுமில்லை. இந்த நாலு வருசத்துல எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவங்க அப்பா அம்மாவே உன்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றாங்க…” என்று பேசும்போதே,
“இந்த பேச்சு என்கிட்டே வேண்டாம்…” என்றவன் எழுந்து சென்றுவிட்டான்.
நீலவேணிக்கு வழக்கம் போல் மனது சுனங்கிக்கொண்டது. கணவரை எண்ணி கண்ணீர் விட்டவர் “நான் என்ன பண்றதுன்னு தெரியலையே…” என்று வாய்விட்டே புலம்பியவர் வெகு நேரம் உறக்கம் வராமல் தவிக்க, இங்கே அக்காவும் தங்கையுமோ பேசி பேசி கலைத்து போய் உறங்கி இருந்தார்கள்.
என்னதான் தினமும் அலைபேசியில் பேசியிருந்தாலும், நேரில் பேசும் கதைகள் போல் இருக்காது இல்லையா. அனிதாவிற்கு இன்னமுமே அவளின் புகுந்த வீட்டு ஆட்கள் மீது ஒருவித பயம் இருக்கவே செய்தது. தன்னை யாரும் ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணமே, அவளை பல நேரங்களில் தயங்கி நிற்க வைக்கிறது.
அதனை அர்ச்சனா புரிந்துகொண்டாள்.
மறுநாள் காலையில் கூட அக்காவிடம் “நீ என்னவோ தேவையில்லாம எல்லாத்துக்கும் டென்சன் ஆகுறது போல இருக்குக்கா.. எல்லாருமே ரொம்ப கேசுவலா தான் பழகுறாங்க.. உனக்கு மனசுக்குள்ள பயம்..” என்று சொல்ல,
“இருக்கலாம் டி.. பிரகாஷ் எப்போ பார் எனக்கு அட்வைஸ் தான்.. நீ இப்படி இரு அப்படி இருன்னு. அப்போ என்னோட இயல்பு அங்க மாறுது…” என்று அவளும் பேச, இப்படியாக அக்கா தங்கை இருவரும் பேசி பேசி, கடைசியில் பேச்சு அச்சுதனிடம் வந்து நின்றது.
“அவர் சொல்லித்தான் எங்க கல்யாணமே நடந்தது. இல்லைன்னா இன்னும் பிரகாஷ் வீட்ல பேசி இருக்கமாட்டார். இப்போ பாரு அடுத்து பிரசாந்த் இருக்கான்…” என்று பேச,
“நீ லவ் இல்லைன்னு சொல்ற.. ஆனா மனசுல லவ் இல்லாம இப்படி காத்திருக்க முடியுமா?” என்று கேட்டாள் அர்ச்சனா.
“நான் அடிச்சு சொல்வேன் அர்ச்சு. அச்சுதன் மாமாக்கு லவ்வெல்லாம் இல்லை. நானும் பிரகாசும் லவ் பண்ணித்தானே கல்யாணம் பண்ணோம். என்னால அதைகூடவா என்னால கண்டுபிடிக்க முடியாதா? அவருக்கு இதுவரைக்கும் யாரும் பொண்ணு குடுக்க முன்வரலை.
அவர் இப்போ மெண்டலி, பிசிகலி ஆல்ரைட் தான். ஆனாலும் அவருக்கு மனநிலை கொஞ்ச நாள் பாதிப்பு அடைஞ்சது யாருக்குமே பொண்ணு குடுக்க ஒரு பயம் வரும்தானே. சோ கல்யாண பேச்சு எடுத்து, அதுல அவமானங்கள் சந்திக்க வேண்டி வரும்னு பயம். அப்படியே ஒருவேளை கல்யாணம் நடந்தாலும், தனுஜா கண்விழிச்சிட்டா என்ன பண்றதுன்னு யோசனை. தர்மசங்கடம் தானே. அதெல்லாம் தான் அவர் மனசுல போட்டு படுத்திட்டு இருக்கு…” என்று அனிதா சொல்ல, அவள் சொல்வதும் சரி என்பது போலத்தான் இருந்தது.
விபத்தினாலும், அப்பாவின் மரணத்தாலும் ஏற்பட்ட மன அழுத்தம் அவனை சித்த பிரம்மை கொண்டிருக்க வைத்துவிட்டது. ஆனால் இத்தனை அழகாய், தொழில் நடத்தி வெற்றி காணும் ஒருவனை பைத்தியம் என்று சொன்னால் அவனுக்குத்தான் எப்படி இருக்கும்.
அச்சுதன் நிலை எண்ணியும் அர்ச்சனாவிற்கு வருத்தமாய் இருந்தது.
இவை அனைத்தையும் மீறி, தான் ஏன் அவனை இத்தனை நினைக்கிறோம், அவனைப் பற்றி இத்தனை பேசுகிறோம் என்றும் இருக்க
‘உனக்கு இதெல்லாம் தேவையா?‘ என்று அவளது மனது கேட்க,
‘நினைக்கிறது நீ.. என்னை கேள்வி கேட்காத…’ என்று சொல்லிக்கொண்டாள்.
அன்றைய தினம் அர்ச்சனா, கார்மேகத்தோடு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனிக்கு செல்வதாய் இருக்க, அவளுக்கான வரவேற்பு அங்கே தயாராய் இருக்க
“டாடி.. எந்த செலிபிரேசனும் வேணாம்.. சிம்பிளா இருந்தா போதும். முதல்ல வந்து நான் வேலை கத்துக்கிறேன்…” என்றுவிட்டாள்.
கார்மேகத்திற்கு மகளின் இந்தவித அணுகுமுறை மனதிற்கு அப்படியொரு சந்தோசத்தைக் கொடுத்தது. அவரை பொருத்தவரைக்கும் அடக்கமும், பொறுமையும் இருக்கும் இடத்தில் தான் நல்ல ஆளுமையும் இருக்கும் என்ற எண்ணம்.
அது அர்ச்சனாவிடம் நிறையவே இருப்பதாய் தோன்ற, அவளோ எடுத்ததுமே கம்பனி பொறுப்பு வேண்டாம் என்றுவிட்டாள். முதலில் ஏதேனும் ஒரு ப்ராஜக்ட் நல்லபடியாய் செய்து முடிக்கிறேன் பின் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிட, அவள் செய்யும் முதல் ப்ராஜக்ட் அச்சுதனின் நகை மாளிகையாய் இருந்தால் சந்தோசமாய் இருக்கும் என்றும் அவர் எண்ணிக்கொள்ள,
“அர்ச்சனா அச்சுதன் சொன்ன ப்ராஜக்ட் யோசிச்சியா?” என்றார்.
“யோசிச்சேன் டாடி. பட் அதையே தான் நான் எடுத்து செய்யனுமா?” என்று கேட்க,
“செஞ்சா அப்பாக்கு சந்தோசமா இருக்கும். உன்னோட முதல் ப்ராஜக்ட் நம்ம சம்பந்தி வீட்டுக்குன்னு சொன்னா சந்தோசம் தானே..” என்று அவர் பெருமையாய் பேச,
“ஆமா அர்ச்சு.. நீயே பண்ணு டி.. வெளிய யாருக்கும் பண்ணி, சின்னதா எதுவும் தப்பாசுன்னா கூட காச் மூச்சுன்னு கத்துவாங்க. ரொம்ப எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருக்கணும்..” என்று அனிதாவும் சொல்ல,
“நான் அந்த இடத்தைப் பார்த்துத்தானே முடிவு பண்ண முடியும்…” என்று அவள் பதில் சொல்ல,
“அதுவும் சரிதான்…” என்ற கார்மேகம் உடனே அச்சுதனுக்கு அழைத்துவிட்டார்.
விஷயம் அவனுக்கு பகிரப்பட, லேசாய் நெற்றியை கீறியவன் “ஓகே மாமா.. அர்ச்சனாக்கு எப்போ டைம்னு சொல்லுங்க.. நான் கார் அனுப்புறேன்…” என,
“தம்பி.. இதுக்கு ஏன் நான் நடுவில பேசணும். அர்ச்சனா தான் இந்த ப்ராஜக்ட் எடுத்து பண்றான்னு முடிவு ஆகிட்டா, நீங்க ரெண்டு பேருமே நேரடியா பேசிக்கோங்க…” என்றவர் “அர்ச்சனா நம்பர் அனுப்புறேன்.. உங்க நம்பரும் அவட்ட குடுத்துடுறேன்…” என்றுவிட்டார்.
அப்பா பேசுவதை எல்லாம் மகளும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். ஏற்கனவே தன மனம் போகும் போக்கு அவளுக்கு புரிபடவில்லை. அமெரிக்காவில் இருந்து கிளம்புகையில், அவள் ஒரு சிந்தனையில் வந்தாள். ஆனால் என்று அச்சுதனை நேரில் பார்த்தாளோ, அன்றிலிருந்து அவளது மனது அவனை மட்டுமே தான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறது.
அவனைப் பற்றியே பேசவேண்டும் போல் இருக்கிறது. அவனை பற்றியே யோசிக்கவேண்டும் போல் இருக்கிறது. அவனைப் பற்றி மற்றவர் பேசுவதையும் கேட்கவேண்டும் போல் இருக்கிறது.
இப்படி இத்தனை இருக்கையில், அவனோடு சேர்ந்து அவள் ப்ராஜக்ட் செய்தால் என்னாகும்?!
நினைக்கையில் அவளுக்கு ஒருப்பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.
‘நீயா அர்ச்சனா இது?!’ என்று அவளுக்கு அவளே முணுமுணுத்து புன்னகைத்துக் கொள்ள, அம்மா, அப்பா, அக்கா என்று மூவரும் அவளை விசித்திரமாய் பார்த்தனர்.
அவளோ ‘என்னவோ போ அர்ச்சு… விதி வலியது…’ என்று இன்னும் அதே சிரிப்போடு இருக்க,
ரோஜாவோ “அர்ச்சனா?!” என்றார் கேள்வியாய்.
“ஆ.. ம்மா…” என்று பட்டென்று அவரைப் பார்க்க,
“என்ன நீயா பேசி, நீயா சிரிக்கிற?” என்றாள் அடுத்து அனிதா.
“அப்படியா?!” என்றவள் “ஒண்ணுமில்லை…” என்றுவிட்டு “டாடி கிளம்பலாமா?” என்று கேட்க,
“கிளம்பலாம் ம்மா.. உனக்கு அச்சுதன் நம்பர் அனுப்பிட்டேன்…” என்றபடி கார்மேகம் முன்னே காருக்குச் செல்ல, அப்பா அனுப்பிய அவனது எண்ணை என்னவென்று அலைபேசியில் பதிவு செய்வது என்று தெரியாமல், இப்போது மனது இந்த யோசனைக்குத் தாவிட, அதையே சிந்தித்துக்கொண்டு சென்றாள்.
‘அச்சுதன்.. அச்சுதா.. ம்ம்ஹூம்.. நல்லா இல்லை.. அச்சுதன் மாமா… ஐயோ கண்றாவி…’ என்று அவளுக்கு அவளே நினைத்து முகத்தை வேறு சுறுக்கிக்கொள்ள, மகள் வந்து காரில் ஏறுவாள் என்று பார்த்து நின்றிருந்த கார்மேகம் அவளது அஷ்டகோணல் முகம் கண்டு
“இப்போ என்ன யோசனை அர்ச்சனா?!” என்றார்.
“ஆ! என்ன டாடி?!” என்று கேட்க,
“என்னதான் ஆச்சு உனக்கு? அப்பப்போ இப்படி நீயா ஒரு யோசனைக்குள்ள போனா என்ன அர்த்தம் டா? சம்திங் இஸ் ஈட்டிங் யூ.. என்னாச்சுடா?” என்று மகளுக்கு ஏதேனும் பிரச்சனையோ என்றெண்ணி கார்மேகம் சற்று பதற்றமாகவே கேட்க,
“அச்சோ.. டாடி…” என்று வேகமாய் அவர் கரம் பற்றியவள்
“ஒரு விசயமும் இல்ல.. விஷயம் என்னன்னா.. இப்போ நீங்க அச்சுதன் நம்பர் அனுப்பினீங்க இல்லையா, அவர் பேர் எப்படி சேவ் பண்றதுன்னு யோசிச்சேன் அவ்வளோ தான்…” என்று தான் எண்ணியதை வெளிப்படையாகவே சொல்ல,
“இதுகெல்லாம் யோசிப்பியா நீ.. அனிதா வீட்டுக்காரர் பேரை எப்படி சேவ் பண்ணிருக்க..?” என்று கேட்க,
‘அப்போ அர்ச்சனா ஹப்பின்னு சேவ் பண்ணு…’ என்று எடுத்துச் சொல்ல, அவளுக்கே ஒரு நொடி தூக்கி வாரி போட்டுவிட்டது.
என்னமாதிரி சிந்தனை இது..
ஆண்டவா… என்று ஒரு நொடியில் அரண்டவள், அதனை தந்தை முன்னே காட்டமல் இருக்க வெகு பாடு பட்டுப்போனாள்.
‘முட்டாள்.. முட்டாள்…’ என்று தன்னை தானே கடிந்தவள், அப்பா தன்னை கவனிக்கிறாரோ என்று பார்க்க, அவரோ கார் ட்ரைவரோடு பேசிக்கொண்டு இருக்க,
‘தேங்க் காட்…’ என்று சொல்லிக்கொண்டாள்.
“என்னடா போலாமா?!” என்று கார்மேகம் கேட்கவும், அதற்குமேல் அச்சுதன் பற்றி எதுவும் பேசாமல் காரில் ஏறியவள், அவர்களின் அலுவலகம் செல்ல,
“வெல்கம் மேம்…” என்று கம்பனி ஜெனரல் மேனேஜர் அவளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க
“தேங்க் யூ…” என்றவள், அனைவரையும் பார்த்து ஒரு புன்னகைத்து, அப்பாவோடு நடைபோட்டாள்.
“உனக்கு ஒரு கேபின் ரெடி அரச்சு… இனிசியலா என்னன்னே செய்யனும்னு, என்னோட பிஏ சொல்லிடுவார்.. அதுபோல வேற எந்த சந்தேகம் இருந்தாலும், என்கிட்டயோ இல்லை மேனேஜர் கிட்டயோ கேட்டுக்கோ.. உன்னோட முதல் ப்ராஜக்ட்டா நான் அசைன் பண்ணிருக்கிறது, நம்பெருமாள் குழுமத்தோட ப்ராஜக்ட். இப்போவே நல்ல நேரம் தான்.. போய் இடம் பார்த்துட்டு வந்துடு..” என்று தந்தையாகவும், கம்பனியின் எம்டி என்ற முறையிலும் அவர் பேச,
“எனக்கு இப்போ மீட்டிங் இருக்குடா.. உனக்கு தான் நம்பர் அனுப்பிட்டேனே.. நீயே பேசிக்கோ…” என்றவர், அவரின் பிஏ உடன் பேசியபடி சென்றுவிட,
‘என்னது நான் அச்சுதனுக்கு அழைத்து பேச வேண்டுமா?!’ என்று நினைக்கும் போதே, அவளுக்கு படபடப்பு கூடிப்போனது.
“மேம் உங்க கேபின்…” என்று மற்றுமொரு ஊழியர் வந்து, அவளது கேம்பின் நோக்கி கை நீட்ட,
“யா…” என்று தலையை அசைத்தவள், அங்கே சென்று அவளுக்கான இருக்கையில் அமர, அப்பா தனக்காக ஒவ்வொன்றும் யோசித்துச் செய்திருக்கிறார் என்பது நன்றாகவே புரிந்தது.
‘மனசு போற போக்கை எல்லாம் ஓரம் கட்டி வச்சிட்டு, நல்லபடியா நீ இந்த ப்ராஜக்ட் செஞ்சு முடி அர்ச்சு. உன்னோட நினைப்புகளுக்கு ஹோப்ஸ் எதுவும் இல்லை. அவனோட எண்ணங்கள் வேற.. நீயா ரொம்ப தீவிரப் படுத்திக்காத.. சூழ்நிலை ரொம்பவே மோசமாகிடும்..’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள், இரண்டொரு நொடி கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.
தன் மனது, புத்தி எல்லாம் ஒன்று சேர்ந்து சமநிலைக்கு வந்து, அவள் இயல்பான ஒரு நிலைக்கு வரவும் அவனுக்கு அழைத்தவள் “நான் அர்ச்சனா பேசுறேன்…” என்று தெளிவாய் சொல்ல, அவளே அழைப்பாள் என்று அச்சுதான் தான் நினைக்கவில்லை.
என்னதான் அலைபேசி எண்களை கொடுத்திருந்தாலும், கார்மேகம் தான் பேசுவார் என்று நினைத்திருக்க, அர்ச்சனாவே நேரடியாய் பேசவும் “ஆ.. அர்ச்சனா..” என்றான் வேகமாய் தன்னை நிதானம் செய்து.
அவனது கண்ணிமைக்கும் நேர தடுமாற்றமே அவளுக்கு சொல்லாமல் சொல்லியது, தன்னுடைய அழைப்பையும் அவன் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய அலைபேசி எண்ணையும் அவன் பதிய வைத்துக்கொள்ளவில்லை என்று.
“அந்த லேண்ட் அப்பா பார்த்துட்டு வர சொன்னார்.. அடுத்து தான் டிசைட் பண்ணனும்…” என்று அவள் சொல்ல,
“ஓகே.. கார் அனுப்புறேன்…” என்று அவன் பேச,
“இல்ல இல்ல.. லோகேசன் ஷேர் பண்ணுங்க.. நானே வந்துடுவேன்…” என்று அவளும் பேச,
“அப்படியா..” என்றவன் சில வினாடிகளே யோசித்து “எங்களோட நகை கடை தெரியுமா அர்ச்சனா? அந்த லேண்ட் போற வழியில தான் இருக்கு. இங்க வந்திடேன். சேர்ந்தே போயிடலாம்..” என்று சொல்ல, அவனது வாயில், அவளின் பெயர் உச்சரிப்பே அவளுக்கு வித்தியாசமாய் பட,
அவன் சேர்ந்தே போலாம் என்று சொன்னது என்னவோ அவளுக்கு மனதிற்கு இனியதாய் பட,
“ம்ம் வர்றேன்…” என்றுமட்டும் வைத்தவளுக்கு அவளையும் மீறி ஒரு பெருமூச்சு வந்தது.
சாதாரண நாட்களில் கூட நம்பெருமாள் நகை கடைகளில் கூட்டம் இருக்கவே செய்ய, இப்போதோ முஹூர்த்த நாட்கள் நிறைந்த மாதம் வேறு கூட்டத்திற்கு சொல்லவா வேண்டும். ஆட்கள் இருந்தாலும், அச்சுதனும் சேர்ந்து நின்றே வாடிக்கையாளருக்கு நகைகளை எல்லாம் எடுத்துக் காட்டிக்கொண்டு இருக்க,
அதே நேரத்தில் அவனது பார்வை நாலாபுறமும் சென்று வருவதையும் அர்ச்சனா கவனித்து தான் இருந்தவள், சட்டென்று அவன் முன்னே சென்று நிற்காமல், நகை கடை ஊழியர் ஒருவரை அழைத்து அவரிடம் சொல்ல, அவரும் சென்று அர்ச்சனா வந்திருப்பதை அச்சுதனிடம் சொல்ல, அவள் உள்ளே வந்ததையும் அவன் கவனித்தே இருந்தான்.
வாடிக்கயாளரோடு பேசுகையில், அவனது பேச்சு இடையில் நிற்கக் கூடாது இல்லையா. அதனால் அவன் சற்று தாமதிக்க, அர்ச்சனாவும் ஊழியர் வழியாய் தான் வந்த செய்தியை அனுப்பியது அவனுக்கு அவளது தொழில் யுக்தி புரிந்து போனது.
‘சூழல் புரிந்து நடப்பவள்…’ என்ற எண்ணம் எழ, அவளைப் பார்த்து வரவேற்பாய் தலையை ஆட்டியவன் “டூ மினிட்ஸ்…” என்று இதழ் அசைக்க,
“யூ கேரி ஆன்…” எனும்விதமாய் அவள் சைகை செய்தவள், அங்கிருந்த இருக்கையில் அமர, அடுத்த நிமிடம் அவளுக்கு அருகே கடையில் பணிபுரியும் பெண் வந்து நின்று “மேம் நீங்க என்ன சாப்பிடுறீங்க? ஜூஸ் ஆர் காபி இப்படி..“ என்று கேட்க,
“எதுவும் வேணாம்.. தேங்க்ஸ் கேட்டதுக்கு…“ என்று அர்ச்சனா புன்னகைத்தவள், அச்சுதனுக்காக காத்திருந்தாள்.
அவனுக்கான காத்திருப்புதான் காலம் அவளுக்கு எழுதி வைத்த ஒன்று என்று அந்த நொடி அவளுக்குத் தெரியவில்லை.