அத்தியாயம் – 15

அர்ச்சனாவிற்கு ஆத்திரமாகத்தான் வந்தது. காலம் எத்தனை முன்னேறிக்கொண்டு இருக்கிறது. பெண்கள் தங்களை எத்தனை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கல்யாணம் என்ற பேச்சு வந்தாலே, ஏன் குடும்பத்தில் இப்படியான நிலைபாடுகள் நிலவுகிறது என்று கோபமாய் இருந்தது.

‘அப்பா யூஎஸ் போய் படிக்கிறேனே…’ என்று சொன்னதுமே மறுப்பே சொல்லாமல் அதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்து கொடுத்தார் கார்மேகம்.

ரோஜாவோ இன்று வரையிலும் பிள்ளைகளின் பேச்சிற்கு, விருப்பத்திற்கு எவ்வித மாற்று பேச்சு சொல்லியதில்லை.

ஆனால் இப்போது?!

என்ன நினைத்துகொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணியவள், அதை அப்படியே அவளின் அம்மாவிடம் வெளிப்படுத்த “ஏய் அர்ச்சு.. இதுல கோபப்பட என்ன டி இருக்கு? அனிதா வீட்ல இன்னும் முறைப்படி பேசலை. ஆனா அங்க பேசினதை, அனிதா என்கிட்டே சொன்னா. நானும் அப்பாக்கிட்ட சொன்னேன். எதுன்னாலும் அவங்க நேரடியா பேசட்டும்..” என்று ரோஜா இப்போதும் ஒன்றுமே இல்லை என்பதுபோல் பேச,

“என்கிட்டே ஏன் சொல்லலை…?” என்றாள் ஆத்திரமாய்.

“அட இதுல சொல்றது சொல்லாததுன்னு என்ன டி இருக்கு?” என்றார் ரோஜா அப்போதும்.

“ம்மா…“ என்று பல்லைக் கடித்தவள் “அன்னிக்கே சொன்னேன் தானே. நானா ஒரு ப்ராஜக்ட் நல்லபடியா செஞ்சு முடிச்ச பிறகுதான் கல்யாணம் பத்தி யோசிப்பேன்னு…” என,

“யோசி.. யாரு வேணாம்னு சொன்னா? இப்போவும் சொல்றேன், அப்பாவும் சரி நானும் சரி உன்னோட முடிவு கேட்காம, உன்னோட விருப்பம் இல்லாம எதையும் செய்யமாட்டோம். சொந்தத்துல பொண்ணு மாப்பிள்ளைன்னு இருந்தா இந்தமாதிரி பேச்செல்லாம் சகஜம் தான் அர்ச்சு.. சரியா..” என்றிட,

“ம்மா சொந்தம் வேற, குடும்பம்ங்கிறது வேற…” என்றாள் பட்டென்று.

ரோஜாவிற்கு மகளது இந்த பேச்சு வார்த்தைகள், மனதிற்குள் ஒருவித பதற்றத்தை கொடுக்க “என்ன டி நீ?” என்றார் அயர்வாய்.

“என்ன டி நீ அப்படின்னு கேட்டா என்ன அர்த்தம்? ம்மா இது எப்பவுமே வேண்டாம். அக்கா அங்க நல்லபடியா வாழ்றா அப்படின்னா வாழட்டும். அதுக்காக நானும் அங்கேயே போகணும்னு இல்லை.  எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற தாட் இல்லை…” என்று அழுத்தம் திருத்தமாய் பேச, சரியாய் அதே நேரம் கார்மேகம் வீட்டினுள் வர,

“அப்பாடி வந்துட்டீங்களா?!” என்று வேகமாய் அவரிடம் சென்றவர் அர்ச்சனாவின் பேச்சுக்களை சொல்ல,

மகளை பார்த்தவர் “என்ன அர்ச்சு?” என்றார்.

“என்ன டாடி, உங்களுக்குமா புரியலை. நாளைக்கு அங்க பார்ட்டி. கண்டிப்பா அனிதா மாமனார் இதை உங்கக்கிட்ட பேசுவார். நீங்க என்னை பார்ப்பீங்க. அந்த சிச்சுவேசன் எப்படி இருக்கும்னு திங் பண்ணுங்க..” என்று மகள் சொல்ல,

“டேய்.. அர்ச்சு..” என்று மகளை ஆதுரமாய் தோளில் கை போட்டவர் “உன்னை கேட்காம, உன்னோட விருப்பம் இல்லாம அப்பா எதுவும் செய்வேனா?!” என்றிட,

“இல்லைதான். ஆனா இப்போ எனக்கே சொல்லாம இத்தனை நடந்திருக்கு தானே…” என்றாள்.

“சரி சொல்லு.. என்ன பண்ணலாம்..” என்றார் நிதானமாய்.

“வேண்டாம் டாடி.. எனக்கு இந்த பேச்சே பிடிக்கல. நீங்க ஒரே இடத்துல ரெண்டு சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிடுங்க…” என்று பிடிவாதமாய் அவள் மறுக்க,

“பிரசாந்த் நல்ல சாய்ஸ்டா. நல்ல பையனும் கூட.. எங்களுக்கு நோ சொல்ல ரீசன்ஸ் இல்லை. நீ ஒருதடவை பேசி பார்த்துட்டு முடிவு பண்ணு…” என்று எதார்த்தத்தை பேச,

“டாடி…!” என்று பல்லைக் கடித்தவளுக்கு, நெஞ்சம் துடியாய் துடித்தது.

என்ன செய்வது என்று தெரியவில்லை. நாளை அவர்கள் நேரில் இந்த பேச்சை பேசினால் என்று அவளால் இதனை யோசிக்கவே முடியவில்லை. சம்மதம் சொன்னால் இரு குடும்பம் சந்தோஷிப்பார்கள். ஆனால் வேண்டாம் என்று மறுத்தால் நிச்சயம் காரணம் கேட்பார்கள்.

என்ன சொல்வேன் நான்?! 

தவியாய் தவித்துக்கொண்டு இருக்க, கார்மேகமோ “பிரசாந்த் கூட இதைத்தான் சொல்லிருக்கான் டா. பேசி பார்த்துட்டு தான் டிசைட் பண்ணனும்னு. அதுனால பி ரிலாக்ஸ்…” என்று மகளின் தலையை லேசாய் தட்டிவிட்டுச் செல்ல,

ரோஜாவோ “இத்தனை பிடிவாதமா ஏன் இப்படி பேசுற அர்ச்சு..?” என்றார்  மகளின் முகத்தை ஆராய்ந்தபடி.

“பிடிவாதமா? அதுசரி.. ம்மா என்னோட வாழ்க்கைம்மா. பேசி பார்த்து ஒருவேளை எனக்கு இது செட்டாகாதுன்னு தோனுச்சுன்னா என்ன செய்றது சொல்லுங்க. பிரசாந்த் யாரோ இல்லை, பிரகாஷ் மாமாவோட தம்பி. காலத்துக்கும் இருக்கிற உறவு இது. நாளைக்கு என்னை பார்க்கும் போதெல்லாம் அவங்களுக்கு ஒருமாதிரி ஆகாதா?” என்று கேட்க,

“ம்ம்ச் நீ  பேசுறது எல்லாம் பேச்சுக்கு தான் சரிவரும்…” என்றவர் “ஏன் டி அனிதா போல நீயும் யாரையும்…” என்று அம்மா கேள்வியை முடிக்காமல் நிறுத்த,

“ம்மா…!” என்று விதிர்விதிர்த்துப் போய் அவரைப் பார்த்தாள் அர்ச்சனா.

“உனக்கும் அனிதாக்கும் நானும் அப்பாவும் நிறைய கனவுகள் கண்டு வச்சிருந்தோம். ஆனா அனி லவ் பண்றேன்னு வந்து நின்னா. நல்ல இடம், நல்ல மனுசங்க, நமக்கு ஈக்குவலான ஸ்டேட்டஸ் அப்படின்னு எல்லாமே செட்டாச்சு. அதுக்கும் மேல அவங்க வீட்ல ஜாதகம் பார்த்து ஓகே சொன்னாங்க. எல்லாம் எதுக்கு, பிள்ளைங்க வாழ்க்கை நல்லபடியா இருக்கணும்னு பெத்தவங்க யோசிக்கிறது தான்.

உங்களுக்கு அதெல்லாம் இப்போ புரியாது. இப்போ உன்னை பிடிச்சுப் போய் பெரியவங்களே பேசுறாங்க. அதை நாங்க எப்படி வேண்டவே வேண்டாம்னு மறுக்க முடியும்? எங்க இடத்துல இருந்து யோசி அர்ச்சனா. உன்னை நாங்க கட்டாயப்படுத்தலை. பேசி பார்த்துட்டு முடிவு பண்ணுன்னு தான் சொல்றோம்…” என்றவர் மகளின் கரம் பற்ற, பெற்றவர்களின் நிலையும் அவளுக்கு புரியாமல் இல்லை.

எல்லாம் தாண்டி ‘டி அக்கா.. அனி…’ என்று அனிதாவை எண்ணி பல்லைக் கடிக்காமல் இருக்கவே முடியவில்லை.

பிரசாந்திடம் பேசி முடிவு செய்வதா?!

அது அவளால் முடியுமா?!

அவனோடு நின்று எதிர்காலம் பற்றி பேசி என்ற யோசனை கூட அவளுக்கு செய்து பார்க்க  முடியாதே. அவளின் அகம் முழுவதும் அச்சுதன் நிறைந்திருக்க அவனின் சகோதரனோடு பேச்சு வார்த்தையா?!

‘கடவுளே…’ என்று இறைவனை துணைக்கு அழைத்தவள், அப்படியே தான் சிலையென அமர்ந்திருந்தாள்.

இதற்குமேல்  பெற்றவர்களிடம் என்ன பேசுவது என்பது தெரியவில்லை. நாளை அங்கே போகாமலும் இருக்க முடியாது. அனைத்தையும், அனைவரையும் மனதினில் வைத்து யோசிக்கவேண்டிய நிலையில் அர்ச்சனா இருக்க, மனதோ இப்போதே ஓடிச்சென்று அச்சுதனிடம் அனைத்தையும் சொல்லிவிடலாம் என்று பறந்துகொண்டு இருந்தது.

‘உன்னை நேசிக்கும் மனது தான் எனக்கு…’ என்று அவனிடம் சொல்லிடலாமா என்று கூப்பாடு போட்டது.

 ‘என்ன செய்வேன் நான்?!’ என்று இதையே உறுப்போட்டுக் கொண்டு இருக்க, இரவு பெயருக்கு உணவை கொறித்தவள், உறங்காமல் அறையில் உலாத்திக்கொண்டு இருந்தாள்.

ரோஜாவிற்கோ மகளின் பேச்சு வருத்தத்தை கொடுக்க, கார்மேகம் அதை கணித்தவர் “அவளுக்கு திடீர்னு சொல்லவும் டென்சன் ஆகிட்டா ரோஜா.. ப்ரீயா விடு. அர்ச்சு அனிதாவை விட மெச்சூர்டான பொண்ணு. எல்லாமே யோசிப்பா…” என்று பேச, மறுநாளோ விடியவே கூடாது என்று அர்ச்சனா வேண்டினாள்.

அவளது உணர்வுகளை பகிர்ந்துகொள்ள கூட யாருமில்லை என்று நினைக்க, அவளுக்கு நெஞ்சமெல்லாம் பாரமாய் தான் போனது.

இது அனைவருக்குமே தெரிந்திருக்கையில், அச்.. அச்சுதனுக்கும் இது தெரிந்து தானே இருக்கும் என்று நினைக்கும் போதே அவளது காதல் மனது வெகுவாய் காயம்பட்டுவிட்டது.

“ம்ம்ச்.. லூசு அர்ச்சு.. அவனை சொல்லி ஒண்ணுமில்லை…” என்று அவளுக்கு அவளே எண்ணிக்கொண்டவள், இந்த சூழலை எப்படி கையாள்வது என்று யோசிக்க, நேரம் போனது தான் மிச்சம்.

யார் மனதும் நோகக் கூடாது. அச்சுதன் மீதான என் காதலும் வெளியே தெரியக் கூடாது. எது நடந்தாலும் இரு குடும்பத்திற்கும் இடையில் இருக்கும் சுமுகம் போய்விடும்.  அப்படியே தொய்ந்து போய் அமர்ந்திருந்தவள், எப்போது அவளை மீறி கண்ணுறங்கினாள் என்று தெரியவே இல்லை.

மறுநாள் வழக்கத்தை விட வேகமாய் கிளம்பிச் சென்றுவிட்டாள் அர்ச்சனா.         ரோஜா என்ன சொல்லியும் அவள் வீட்டில் நிற்கவில்லை. அனிதாவை அழைத்து நன்றாய் திட்டவேண்டும் போல் இருந்தாலும், அவளும் தான் என்ன செய்வாள் என்று நினைத்தாள்.

வழக்கம் போல் அச்சுதன் காலையில் அங்கே வர, அர்ச்சனாவோ அவனை ஒரு பார்வை பார்த்தவள் ஒன்றுமே பேசவில்லை. அவனிடம் சண்டையிட வேண்டும் போல இருந்தது. எல்லாம் தெரிந்தும் நீயும் என்னிடம் சொல்லாமல் விட்டாயே என்று சத்தம் போடவேண்டும் போல இருக்க, எந்த உரிமையில் அவனிடம் இதனை எல்லாம் பேசுவாள்.

மௌனமாய் மனதினுள்ளே கண்ணீர் வடிக்க, அதனை காட்டாமல் இருக்க முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு வேலை இருப்பது போல இருக்க, அச்சுதன் வேலைகள் நடப்பதைப் பார்த்தவன் “என்ன அர்ச்சனா உடம்பு சரியில்லையா?!“ என்றான்.

“நோ…” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவள், அவன் பக்கம் பார்வையை திருப்பவே இல்லை.

“ஓகே.. அப்போ ஈவ்னிங் என்ன ப்ளான்?” என்று அவன் சாதாரணமாய் கேட்க, பட்டென்று திரும்பி அவனை முறைத்தவளுக்கு, எல்லாம் தெரிந்தே அவன் பேசுவது புரியாதா என்ன.

“நான் வர்றது டபுட் தான்..” என்றாள் பட்டென்று.

“ஏன்? ஏன் வரல? பர்த் டே பார்ட்டி உன்னோட அக்கா ஹஸ்பன்ட்க்கு ம்மா…” என்று பேச,

“ஷ்..!!” என்று தனது உணர்வுகளை அடக்கியவள் “வேலை இருக்கு. சோ வர்றது டபுட் தான்..” என்று முடிக்க, இன்று என்னவோ அவளது செயல்கள் எல்லாம் வித்தியாசமாய் பட,

‘சரி இதற்குமேல் தான் பேசக் கூடாது…’ என்று எண்ணியவன் “ஓகே டேக் கேர்…” என்று எழுந்து சென்றுவிட்டான்.

அவன் சென்றது தான் தாமதம், டென்ட் ஸ்க்ரீனை இழுத்து மூடியவள், முகத்தையும் மூடிக்கொண்டு சத்தம் வராமல் ஒரே அழுகை.

யாரிடம் சொல்வது?!

என்னவென்று சொல்வது?!

அவள் காதலை சொல்வதா? இல்லை காதலை காதலனிடம் சொல்ல முடியா நிலையைச் சொல்வதா?

எதைச் சொல்வது? எதை விடுவது?

காதலிக்கிறேன் என்று சொன்னால், வீட்டில் அதற்கு எதிர்ப்பு வரப் போவதில்லை தான். ஆனால் யார் என்ன என்று விசாரிப்பர் இல்லையா?

அச்சுதன் என்று சொல்ல முடியுமா?

சொன்னால் அது அவனது மன ஆரோக்கியதிற்கே பங்கம் கொடுக்கும்.  சொல்லாமல் போனால் வீட்டினில் இவர்கள் எல்லாம் கல்யாண பேச்சை உறுதியே செய்துவிடுவார்கள் போல.

நினைக்க நினைக்க தலையே வெடிப்பது போல இருக்க, கார்மேகம் அலைபேசியில் மகளுக்கு அழைக்க, முகத்தை அழுந்தத் துடைத்தவள் “யா டாடி…” என்று பேச,

“நான் இங்க சைட்ல தான் இருக்கேன்டா.. டென்ட் ஸ்க்ரீன் போட்டிருக்கு…” என்று பேச,

“ஓ! நத்திங் டாடி. கண்ணுல மண்ணு விழுந்திடுச்சு. அது ஒருமாதிரி இருக்குன்னு கண்ணு மூடி படுத்திருந்தேன்..” என்று அப்பாவிடம் பொய் சொன்னவள், வேகமாய் ஸ்க்ரீன் திறந்து பார்க்க,

மகளின் முகத்தினைப் பார்த்தவருக்கு மகளின் கண்ணீருக்கும், கண்ணில் மண் விழுந்ததற்குமான வித்தியாசம் தெரியாதா என்ன?!

எதுவும் பேசாமல் அவளின் முகத்தையே பார்க்க “எ.. என்ன டாடி..” என்றாள் திணறி.

“இன்னும் நீ அதையே நினைச்சு குழப்பிட்டு இருக்கியா? ஆனா இதுல இத்தனை வொர்ரி பண்ற அளவுக்கு ஒண்ணுமே இல்லைடா..” என்றவர் “உனக்கு பிடிக்கல அப்படின்னா, அதை எப்படி கன்வே பண்றதுன்னு அப்பாக்கு தெரியாதா என்ன?” என்று பேச, அர்ச்சனா மனதினில் லேசாய் ஒரு தைரியம் பிறந்தது.

அவள் முகம் தெளிவுருவதை கண்டவர் “சின்னதுல இருந்து நீ மாறவே இல்லை. ஏதாவது ஒண்ணுன்னா மனசுக்குள்ளயே போட்டுக்கிறது. அப்ராட் போய் கொஞ்சம் மாறியிருப்பன்னு நினைச்சேன்..” என,

“மத்த விஷயங்கள் அப்படின்னா ஓகே டாடி. அனிதா அங்க வாழறா. என்னோட முடிவுகள், பேச்சுக்கள் அவளோட லைஃபை பாதிக்கக் கூடாது இல்லையா..” என்று பேச,

“லீவ் இட் அர்ச்சு. ரிலாக்ஸ் பண்ணு.. ஈவ்னிங் அங்க போகணும்…” என, மீண்டும் மனதினில் சுனக்கம்.

ஆனாலும் அப்பாவிற்காக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

எப்படி அச்சுதன் மீதான் காதல் வெளியில் தெரியக் கூடாது என்று எண்ணினாளோ, அதுபோலவே அவளாது சோகத்தையும் மனதினில் போட்டு வைத்தவள், என்ன நடக்கிறதோ பார்த்துக்கொள்வோம் என்று தனக்கு தானே ஒரு தைரியம் சொல்லி, சிறிது நேரத்தில் வீட்டிற்குச் செல்ல, அனிதாவிடம் இருந்து அத்தனை அழைப்புகள்.

வேறு வழியே இல்லாமல், அப்பா அம்மாவினோடு கிளம்பிச் செல்ல, இவர்களை கண்டதும் அனிதா ஓடிவர, அவளை அப்பட்டமாய் முறைத்தவள், பிரகாஷ் இவர்கள் பக்கம் வருவது கண்டு முகத்தை மாற்றிக்கொண்டாள்.

பிரகாஷ் வந்தவன் இன்முகமாய் வரவேற்க  “சாரி மாமா.. உங்களுக்கு என்ன கிப்ட் வாங்குறதுன்னு தெரியலை. சோ நீங்க ப்ரீ ஆகிட்டு சொல்லுங்க  ஒன் வீக் போல ஒரு ட்ரிப் உங்களுக்கும் அக்காக்கும் கிப்ட் ப்ளான் பண்ணிடலாம்…” என்று பேச,

“ஆகா…!” என்று வந்தான் பிரசாந்த்.

அவன் வந்ததுமே அர்ச்சனாவோ அதிர்ந்து பார்க்க “இப்போதான் அச்சண்ணாவும் இதையே சொன்னார். ஒரு ட்ரிப் ப்ளான் பண்றேன்டா ப்ரீ டைம் சொல்லு அப்படின்னு. அதனால இவன் இப்படி சொல்லி வந்து நிக்கிறான்…” என்று பிரகாஷ் பேச,

‘அச்சுதனும் இதையே சொன்னனா?!’ என்று சிறு சந்தோஷ உணர்வுடன் அவளது பார்வை அவனைத் தேட, அச்சுதன் அங்கே வேறு யாருடனோ பேசிக்கொண்டு இருந்தவன் “ஹாய்…” என்று கை ஆட்டி, பெரியவர்களை பார்த்து தலையசைப்பு செய்ய, 

அனிதாவின் மாமனார் மாமியாரும் இவர்களை வரவேற்க என்று வந்துவிட, பாமினியோ “வாம்மா அர்ச்சனா.. சீக்கிரமே வந்திருக்கலாம் தானே.. இத்தனை நேரம் இந்த பசங்க எல்லாம் போட்டோஸ் எடுக்கிறோம்னு ஒரே சேட்டை…” என்று பேச, உள்ளே தடதடக்கும் இதயத்தோடு, வெளியில் பெயருக்கு புன்னகை சிந்தி அர்ச்சனா நிற்க, தாமோதரனும், கார்மேகமும் பேசியபடி நகர்ந்தனர்.  

அழைப்பு வைத்திருந்த விருந்தினர்கள் எல்லாம் வந்துவிட, பிரகாஷ்  கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட, இளைய பட்டாளம் சந்தோஷ கூச்சலிட, இவை எதுவுமே அர்ச்சனாவிற்கு மனதிற்கு எட்டவில்லை.

‘என்னாகுமோ?!’ என்ற பயத்திலேயே நிற்க, நேரம் செல்ல செல்ல, அவளுக்கு முடியவே இல்லை.

பிறந்தநாள் விழா முடிந்து, இரவு உணவுகள் முடிந்து, வந்திருந்த விருந்தினர்கள் எல்லாம் கிளம்பிச் செல்ல, குடும்பத்து ஆட்கள் மட்டுமே இருக்க,

“உங்களோட பேசனும் கொஞ்சம் பேசணும் சம்பந்தி…” என்ற தாமோதரன் கார்மேகம் ரோஜாவிடம் விசயத்தைச் சொல்ல, 

“நீங்க கேட்டது எனக்கு சந்தோசம் தான் சம்பந்தி. ஆனா அனிதாவுக்கு எப்படி அவளுக்கு விருப்பமான வாழ்க்கை அமைச்சு கொடுத்தோமோ, அதுபோலத்தான் அர்ச்சனாவுக்கும்…” என்றார் கார்மேகம்.

பெரியவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்க, நீலவேணி எதற்குமே வாய் திறக்கவில்லை. நடப்பதை எல்லாம் கனத்த மனதோடு பார்க்க, அர்ச்சனாவோ அலைபேசியில் எதையோ பார்ப்பது போல் தனித்து இருக்க, அச்சுதன் அவளை கவனித்துகொண்டு தான் இருந்தான்.

காலையில் இருந்து அவள் சரியே இல்லை என்பது அவனுக்கு ஊர்ஜிதமாக, ஒருவேளை அவளுக்கு இந்த திருமண ஏற்பாடுகள் பிடிக்கவில்லையோ என்றும் தோன்ற, வேண்டாம் என்றால் வேண்டாம் என்றுவிட்டு ரிலாக்சாக இருக்க வேண்டியது தானே. முகத்தை ஏன் இப்படி தூக்கி வைத்துக்கொண்டு எதையோ இழந்தது போல இருக்கிறாள் என்று அவளுக்காக வருந்தியவன்   “அர்ச்சனா…” என்ற அழுத்தமான அழைப்போடு அவளின் அருகே வர, அர்ச்சனா கண்களை இறுக மூடித் திறந்தவள்

“ம்ம்…” என்று அவனை நிமிர்ந்து பார்க்க,

“என்ன பிரச்சனை அர்ச்சனா..?” என்று இலகுவாகவே அச்சுதன் கேட்க,

“ந.. நத்திங்…” என்றாள் கண்ணீர் சொரிய காத்திருக்கும் கண்களை வேறு பக்கம் திருப்பி. மனதை கட்டுப்படுத்த முயன்று தோற்றுக்கொண்டு இருந்தாள்.

அங்கே பெரியவர்கள் அதற்குமேல் என்ன பேசினார்களோ அனிதாவு பிரகாஷும்  இங்கே வர, அனிதாவோ   “அர்ச்சு வா.. அம்மா எல்லாம் சொன்னாங்க தானே. ஜாதகப் பொருத்தம் கூட இருக்கு டி. நீயும் பிரசாந்தும் பேசி முடிவு பண்ணுங்க…” என்று வந்து அழைக்க,

“என்னது ஜாதகமா?!” என்றாள் திகைத்து.

“ம்ம்.. இன்னிக்கு காலையில தான் இங்க எல்லாருக்கும் பார்த்தாங்க.. என்ன மாமா?” என்று அச்சுதனையும் அனிதா துணைக்கு அழைக்க,

‘உனக்கும் இதெல்லாம் தெரியுமா?’ என்று அடிப்பட்ட பார்வை பார்த்தாள் அர்ச்சனா.

“அர்ச்சனா பி ரிலாக்ஸ்.. இத்தனை டென்சன் ஆகிட ஒண்ணுமே இல்லை. உன்னோட மனசுல என்ன இருக்கோ அதை பிரசாந்த் கிட்ட ஒப்பனா பேசிடலாம்.. இல்லையா டா..” என்று அச்சுதனும், பிராகஷை பேச்சினில் இழுத்து பேச,

“ஆமா அர்ச்சு…” என்றான் பிரகாஷும்.

அச்சுதனே இதை சொல்கையில் அவளுக்கு சொல்ல முடியாத வேதனை தான் இதயத்தில். இப்படியே எங்காவது ஓடிவிடலாமா என்று தோன்ற, அவளுக்கு வெளிப்படையாய் எதை சொல்ல முடியும்.

சொல்லும் சூழ்நிலையா அவளுக்கு இப்போது?!

அச்சுதனின் நிலை எண்ணி அல்லவா இப்படி இங்கே அவள் தவித்து நிற்பது. அது புரியாமல் அவனே இப்படி பேசிட “அக்கா ப்ளீஸ்…” என்றாள் பல்லைக் கடித்து.

“என்ன டி அர்ச்சு.. எல்லாம் தெரிஞ்சிட்டே வந்துட்டு.. இங்க வந்து இப்படி பண்ற.. அங்க பிரசாந்த் வெய்ட் பண்ணிட்டு இருக்கான்…” என்று அனிதா பேச, ரோஜாவும், கார்மேகமும் கூட  அங்கே வந்துவிட்டனர். என்னவோ அர்ச்சனாவிற்கு பிரசாந்திடம் என்று நின்று பேசுவதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

அதுவும் அச்சுதன் இருக்கையில், அவளால் முடியுமா என்ன?!

பிரகாஷிடம் “மா.. மாமா.. சாரி நான் இப்படி சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம்.. இது.. எ.. எனக்கு…” என்று அவள் வார்த்தைகளைத் தேட,

அனிதாவோ “அர்ச்சு.. என்ன டி நீ? இப்படி பிஹேவ் பண்ற?” என்று பேச, சூழல் எல்லாம் கை மீறிக்கொண்டு இருந்தது.

பெரியவர்கள் வரவும் அச்சுதன் நாசூக்காய் நகர்ந்துவிட்டான். அவர்கள் முதலில் குடும்பமாய் பேசிக்கொள்ளட்டும் என்று. நகர்ந்தவன் தங்கள் வீட்டு பெரியவர்களிடமும் “அவளுக்கு இப்போதான் தெரிஞ்சிருக்கு போல.. கொஞ்சம் டென்சன் ஆகிட்டா…” என்று சொல்லிக்கொண்டு இருக்க,

பிரகாஷோ “அனி.. அவ எதோ சொல்ல வர்றா தானே…” என,

“அட அவ சொல்லட்டும் பிரகாஷ்.. யாரும் அவளை கம்பல் பண்ணலை தானே.. ஒருதடவை பேசிட்டு சொல்லுன்னு சொன்னா இத்தனை அலம்பலா..” என்று அனிதா பேச,

 “அக்கா ப்ளீஸ்.. பேசு பேசுன்னு என்னை கம்பல் பண்ணாத. ம்மா நீயும் அப்பாவும் பேசிட்டு வாங்க. நான் போறேன்…” என்று அர்ச்சனா கிளம்பப் போக,

“அர்ச்சனா என்னடா இது?” என்றார் கார்மேகம்.

“டாடி ப்ளீஸ்…” என்று கண்களால் இறைஞ்சி அப்பாவைப் பார்க்க,

அனிதாவோ “டாடியை  ஏன் பாக்குற அர்ச்சு. பேசக் கூட முடியாதுன்னா என்ன அர்த்தம். உன்னோட முடிவு எதுவா இருந்தாலும் இங்க யாருமே தப்பாவும் நினைக்கப் போறது இல்லை…” என்றிட, அர்ச்சனாவோ எதுவுமே முடியாது என்று நின்றாள்.

அனிதாவோ யார் பேச்சையும் கேட்பதாய் காணோம். புகுந்த வீட்டினர் முன்னே தங்கை இப்படி நடந்துகொள்வது மரியாதை குறைவாய் பட, இப்போது இவர்கள் கிளம்பியபின்னே, அனைவரும் தன்னை அல்லவா கேள்வி கேட்பார்கள் என்று அதுவேறு பயமாய் இருந்தது.

அர்ச்சனாவோ “மாமா என்னை தப்பா நினைக்காதீங்க. எனக்கு இப்போ கல்யாணம் பண்ற எண்ணமெல்லாம் இல்லை…” என்று பிரகாஷிடம் படபடக்க,

“அதை நீ பிரசாந்த் கூட ஒருவார்த்தை பேசி பார்த்துட்டு சொல்லு…” என்று தங்கையின் கை பிடித்து இழுக்க, அர்ச்சனாவிற்கோ அச்சுதன் தள்ளி செல்லவுமே அழுகை முட்டிக்கொண்டு நின்றது.

இப்போது கண்களில் நீரை கொட்ட, இப்படியொரு நிலையில் தன்னை தனியாய் விட்டுச் செல்கிறானே என்றும் இருக்க, அனைத்தையும் சொல்லிவிடுவோமா என்றும் இருந்தது.

அனிதாவோ அவள் கை பிடித்து இழுக்க “ஐயோ.. அக்கா விடேன்..” என்று கையை உதறியவள் “ஐம் இன் லவ்…” என்றாள் வேறு வழியே இல்லாது.

“என்னது? லவ்வா?!” என்று அனைவரும் அதிர,

“இதை நான் நம்பனுமா? லவ் பண்றவ எப்படி இருப்பான்னு எனக்குத் தெரியாதா சும்மா பொய் சொல்லாத..“ என்றாள் அனிதா.

“பொய் இல்லை…” என்று அர்ச்சனா பேச,

“சரி அப்போ யாருன்னு சொல்லு…” என,

“அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது…” என்றாள் அர்ச்சனா.

“ அப்போ நீ சொல்றது பொய் தான்..” என்றாள் அனிதா.

“ஐயோ..! பொய் இல்லைக்கா..” என,

“அப்போ யாருன்னு சொல்லு. நானே இங்கே சொல்லிடுறேன். என் தங்கச்சி இன்னாரை லவ் பண்றா அப்படின்னு. அடுத்து பேச்சு எதுவும் வராது பாரு..” என,

“சொல்ல முடியாதுக்கா…” என்றவளுக்கு கேவல் பிறந்தது.

தூரத்தில் நின்று அச்சுதன் அர்ச்சனாவைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுக்கே அர்ச்சனாவின் இந்த செயல்கள் எல்லாம் விசித்திரமாய் பட, அவளது அழுகை அவனுக்கு கஷ்டமாய் இருந்தது.

வேண்டாம் என்றால் விட்டுத் தொலையவேண்டியது தானே என்று எண்ணியவன் “சித்தப்பா.. என்ன இதெல்லாம்..” என்றான் தாமோதரனிடம்.

“எங்களுக்கும் ஒன்னும் புரியலை அச்சுதா…” என்றிட,

பிரசாந்த் அங்கே வந்தவன் கூட “ப்பா முதல்ல அண்ணியை கூப்பிடுங்க. சந்தோசமா வந்துட்டு இப்படி அழ வைக்கிறது நல்லா இல்லை…” என்று சொல்ல,   

பாமினியோ “ஆமாங்க.. நம்ம வீட்டுக்கு வந்துட்டு அந்த பொண்ணு அழுதுட்டு போறது வேண்டாம்…” என்று பேச, சரி என்று இவர்களும் அங்கே செல்ல,

“அப்போ லவ்னு சொல்றது பொய். அப்போ நாங்க சொல்றதை கொஞ்சம் கேளேன்…” என்றவள் “ஒருதடவ பேசி பாரேன் டி…” என்று அவள் கையை மீண்டும் பற்ற,

“அக்கா விடு. இன்னொரு தடவ என்னோட லவ் பொய்ன்னு சொல்லாத..” என்றாள் அர்ச்சனா சீற்றமாய்.

“அப்போ யாருன்னாவது சொல்லேன் டி…” என்று அனிதாவும் விடாது கேட்க, இதற்குமேல் அவளுக்கும் தாக்கு பிடிக்க முடியவில்லை.

“இப்போ என்ன? நான் யாரை லவ் பண்றேன்னு தெரியனும் அவ்வளோதானே.. சொல்றேன் கேட்டுக்கோ.. இதோ.. இவர்.. அச்சுதன்.. அச்சத்தான்.. இவரைத்தான் லவ் பண்றேன்.. போதுமா? சந்தோசமா உனக்கு?” என்று மொத்தமாய் விஷயத்தை போட்டு உடைத்தவள்,

அப்படியே இரு கைகளாலும் முகத்தினை மூடிக்கொண்டு ஓவென்று அழுதவள், கால்களை மடக்கி கீழேயே அமர்ந்துவிட்டாள்.