முல்லையின் வரவு என்பது அர்ச்சனாவிற்கு அப்படியொரு உற்சாகத்தை கொடுத்திருந்தது.
“உன்னை எவ்வளோ மிஸ் பண்ணேன் தெரியுமா சித்தி…” என்று அவரை இறுக கட்டிக்கொண்டாள்.
“அதுசரி.. இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போயேன் அர்ச்சுன்னு சொன்னதுக்கு. அதெல்லாம் முடியவே முடியாதுன்னு சொல்லி ஓடி வந்துட்டு, மிஸ் பண்ணியாம் மிஸ்…” என்று முல்லை நொடித்துக் கொண்டாலும், அக்காவின் மகளை வாஞ்சையாய் வருடத் தவறவில்லை.
“இந்த ரோஸ் உன்ன போல இல்லை.. ரொம்ப ஸ்ட்ரிக்ட் தெரியுமா?” என்றவள் “சித்தப்பாவும் தம்பியும் கூட வந்திருக்கலாம்…” என,
“உன் சித்தப்பாக்கு அவர் பாக்குற வேலை தான் முதல் பொண்டாட்டி. உனக்கு தெரியாததா.. அண்ட் நான் பெத்தது, அப்பா எவ்வழியோ அவனும் அவ்வழியே. அதான் நான் வந்துட்டேன்ல, ரெண்டு மாசம் ஜாலியா இருந்துட்டு போகறேன்..” என்றவர்
“என்ன அர்ச்சு நீ இப்படி ஒருமாதிரி ஆகிட்ட…” என்று அவளைப் பார்த்து கேட்க,
“அதெல்லாம் இருக்கட்டும்.. நான் கேட்ட காஸ்மெட்டிக்ஸ் எல்லாம் வாங்கினியா இல்லையா?” என்றவள், அவரது பேக்கை திறந்து பார்த்து கொண்டு இருக்க,
ரோஜாவோ “ஆமா பெரிய அரண்மனை கட்டுறா.. போய் தினமும் வெயில்ல நின்னு நின்னு இங்க பாரு ஆளே மாறி போனா..” என்று தங்கையிடம் வருந்த,
“ம்மா…” என்று முறைத்தாள் அர்ச்சனா.
“இங்க பாரு, நீயும் உன் சித்தியும் பேசுறப்போ நான் நடுவில வந்தேனா? இல்லைதானே. அதேபோல நானும் என் தங்கச்சியும் பேசும்போது நடுவில வரக் கூடாது…” என்றவர், மகளை முறைக்க,
“ஓ! அம்மா சப்போர்ட்டுக்கு ஆள் வரவும், என்னை முறைச்சு வேற பாக்குறியா நீ? இரு இரு இன்னும் ரெண்டே நாள் தான். அக்கா இங்க வந்துடா நானும் அவளும் கூட்டு சேர்ந்துடுவோம்..” என்று அர்ச்சனா உற்சாகமகவே பேச,
“என்னக்கா எல்லா வேலையும் முடிச்சாச்சா? இன்னும் திங்க்ஸ் எதுவும் வாங்கனுமா?“ என்று முல்லை கேட்க,
“வளைகாப்பு சாமான் எல்லாம் வாங்கியாச்சு. தட்டு வரிசைக்குத்தான் இப்போ நிறைய பேர் ரெடி பண்ணி தர்றாங்களே.. அதுபோல அர்ச்சனாவோட ஸ்கூல்மேட் ஒரு பொண்ணு இங்க பண்றா. அவக்கிட்ட கொடுத்தாச்சு. ரிட்டர்ன் கிப்ட்ஸ் கூட ரெடி பண்ணியாச்சு.. நீ வரவும் போய் கொஞ்சம் நகைகள் மட்டும் எடுத்துட்டு வரலாம்னு இருந்தோம்..” என்று ரோஜா விளக்க,
“அதுக்கென்னக்கா நானும் அனிதாக்கு வாங்கணும். அவளோட கல்யாணத்துக்கும் வரலை இல்லையா..” என்றிட, அடுத்து அர்ச்சனா சிறிது நேரம் வீட்டினில் இருந்தவள், அவளது வேலையைப் பார்க்கவென்று கிளம்பிவிட, முல்லையும் சிறிது நேரம் ஓய்வெடுக்க, நேரம் போனது தெரியவில்லை.
அச்சுதன் அவனது நகை கடையில் தான் இருந்தான். கூட்டம் சற்று அதிகமாகவே இருக்க, அன்றைய தினம் அர்ஜூனுக்கு விடுமுறை என்பதால் அவனும் கடைக்கு வந்திருந்தான்.
“என்னடா அப்பாக்கு ஹெல்ப் பண்ணாம இங்க வந்துட்ட..” என்று சொல்ல,
“அங்க அம்மாவும் இருக்காங்க தானே அண்ணா…” என்றவன் வந்திருப்பவர்களை கவனித்துக்கொண்டு இருக்க, சற்று நேரத்தில் எல்லாம் முல்லையும், ரோஜாவும் இங்கே வந்தனர்.
“அட வாங்க வாங்க…” என்று அச்சுதன் வரவேற்க, முல்லையின் பார்வை அவன்மீது ஒரு ஆராய்ச்சியாய் தான் படிந்தது.
“வளையல் பார்க்கணும்…” என்று ரோஜா சொல்லவுமே,
“பார்க்கலாம் அத்தை…” என்றவன் “அர்ஜூன்..” என்று அவனை அழைக்க, அவனும் இவர்களை வரவேற்றவன் “எங்க பெரியண்ணி?” என்றுவிட,
அச்சுதன் அவனை ஒரு பார்வை பார்த்தவன் “அர்ஜூன் எடுத்து காட்டுவான் அத்தை.. இல்லை வேற கேட்லாக் பார்க்கிறதுன்னாலும் சரி. பாருங்க ரெடி பண்ணிடலாம்…” என்றவன் அங்கே வேலை செய்யும் பெண்ணிடம் இவர்களுக்கு பருகுவதற்கு என்ன வேண்டும் என்று கேட்கச் சொல்லிவிட்டு, கல்லாவிற்கு சென்றுவிட,
ரோஜாவோ வளையல்களைப் பார்க்க, முல்லையோ அச்சுதனின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார். அச்சுதனுக்கு முல்லையின் பார்வையே உணர்த்தியது தான். அவர் தன்னை எடை போடுகிறார் என்றார். எப்படியும் நடந்தவற்றை ரோஜா, தங்கையிடம் சொல்லியிருப்பார் என்றும் தெரியும்.
‘என்னவோ செய்துகொள்ளுங்கள்..’ என்று எண்ணியவன் தான் அர்ஜூனை இவர்களிடம் நிற்க வைத்துவிட்டு வந்தது.
அர்ஜூன் அப்போதும் சும்மா இருக்காமல் “அர்ச்சனா அண்ணி வரலையா?” என்று திரும்பக் கேட்க,
“சைட்ல இருந்து நேரா இங்க வந்துடுறேன் சொன்னா..” என்ற ரோஜா, மகளுக்கு அழைத்துப் பார்க்க
“ம்மா வீட்ல தான் இருக்கேன். பிரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்..” என்றிட, ரோஜா அனிதாவிற்கு எது நன்றாய் இருக்கும் என்பதுபோல பார்த்து எடுத்துவிட,
அடுத்து அர்ஜூன் “அர்ச்சனா அன்னிக்கு எடுக்கலையா?” என்றான் வேகமாய்.
“நீ நல்லா வியாபாரம் பண்றப்பா…” என்று முல்லை அவனை கேலி செய்ய,
“பின்ன..” என்றவன் “சொல்லுங்க அத்தை..” என்று ரோஜாவிடம் கேட்க,
“அவளே வந்து அவளுக்கு வேண்டியதை எடுக்கட்டுமே…” என்றுவிட, அடுத்து முல்லை, இரு பெண்களுக்கும் ஒன்றுபோல் இருக்கும் இடுப்புச் சங்கிலி பார்த்துக்கொண்டு இருந்தார்.
“இப்போ என்னக்கா பிள்ளை பெத்துட்டு போடட்டும்.. சேலை கட்டும் போது இப்படி ஹிப் செயின் போட்டு கட்டினா அழகா இருக்கும்..” என்று சொல்ல, அவர் கேட்டது போல ஒன்று போல இல்லை.
“ஒரே டிசைனா இருந்த நல்லாருக்கும்…” என்று முல்லை யோசிக்க, அடுத்து ஒரு அரைமணி நேரம் இதிலேயே கழிய, அர்ச்சனாவும் வந்துவிட்டாள்.
இவர்கள் வந்திருப்பதால், எப்படியும் அர்ச்சனாவும் வருவாள் என்று கணித்திருந்த அச்சுதன், அவள் வந்ததுமே மிக மிக சாதாரணமாய் “வா அர்ச்சனா..” என்று வரவேற்க
“ம்ம்…“ என்று அவனைப் பார்த்து சம்பிரதாயமாய் புன்னகை சிந்தியவள்
“என்ன ரோஸ் முடிஞ்சதா?” என்றாள்.
“அண்ணி.. நீங்க வராம ஒண்ணுமே எடுக்கமாட்டோம்னு என்னை டயர்ட் பண்ணிட்டாங்க…” என்று அர்ஜூன் பேச,
“ஏய்! நீ என்னடா இங்க?” என்று அர்ச்சனா அவனிடம் சந்தோசமாய் பேச,
“சொந்த கடையில யாரும் சம்பளம் வாங்குவாங்களா டா. அதெல்லாம் சிலர் இருக்காங்க.. சொந்தமா பெரிய கம்பனி வச்சிருந்தாலும், அங்கேயே வேலை பார்த்து சம்பளமும் வாங்கிப்பாங்க…” என்று மறைமுகமாய் அச்சுதன் அர்ச்சனாவை பேச,
“நீங்களா அண்ணி?” என்றுவிட்டான் அர்ஜூன்.
“அது அவரையே கேட்டுக்கோ…” என்றவள், ரோஜா எடுத்து வைத்திருந்த வளையல்களை பார்க்க, அனிதாவிற்கு அது அழகாய் இருக்கும் என்றே தோன்றியது.
“நல்லா இருக்கும்மா…” என்றவள், சித்தி எடுத்து வைத்திருந்த இடுப்புச் சங்கிலி பார்க்க “வேற டிசைன் பார்க்கலாம் தானே சித்தி…” என்றாள்.
“இது நல்லாருக்கும்னு தோணிச்சு…” என்று முல்லை சொல்ல,
“நல்லாத்தான் இருக்கு. ஆனா ஸ்டோன் வொர்க் இல்லாம பாரேன்…” என்று பேச,
அச்சுதனோ “பிரசாந்த்க்கு கால் பண்ணி வேற டிசைன்ஸ் இருக்கான்னு கேட்டு அந்த போட்டோஸ் காட்டு.. அப்படியே உங்க அப்பாக்கும் கேளு…” என்றவன் நகர்ந்துவிட்டான்.
அவன் வந்து நின்று சென்றதே பெரியா விஷயம் என்பது போல ஒரு பெருமூச்சு விட்டாள் அர்ச்சனா. அவளது பெருமூச்சினை பார்த்து, பெரிய பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, மேலும் ஒரு ஒருமணி நேரம் ஆனது இவர்கள் அங்கிருந்து கிளம்ப.
எப்படியோ அர்ஜூனின் அப்பா கடையில் ஒன்றுபோலவே இரு இடுப்புச் சங்கிலி இருக்க, அங்கிருந்து டிரைவர் வந்து கொடுத்துவிட்டு போக, பில் போட்டு எல்லாம் முடித்து கிளம்பிவிட்டனர்.
காரில் செல்லும் போதே, முல்லை “அச்சுதனைப் பார்க்க நார்மலா தானே க்கா இருக்கு?” என்று சொல்ல, அர்ச்சனா பட்டென்று அவரை திரும்பிப் பார்க்க,
“என்ன பாக்குற?” என்றார்.
“அவரை ஆராய்ச்சி பண்ணத்தான் வந்தியா சித்தி?” என்று கேட்க,
“பண்ணக் கூடாதா என்ன?” என்றவர் வீடு வந்ததுமே “அந்த பையன் மனசு மாறுவான்னு எல்லாம் எனக்குத் தோணலை க்கா…” என்றார் ரோஜாவிடம்.
“எப்படி சொல்ற முல்லை?” என்று ரோஜா கேட்க,
“சின்னதா ஒரு பார்வை கூட அர்ச்சனா பக்கம் வரல…” என்று சொல்ல,
“சித்தி…“ என்றாள் பல்லைக் கடித்து.
“நீ சும்மா இரு அர்ச்சு. ஏன் நான் இதெல்லாம் பேசக் கூடாதா? பேச வேண்டாம்னா சொல்லிடு..” என்ற முல்லை,
“உங்கம்மாவை யோசி நீ முதல்ல.. மனசுக்குள்ள போட்டு வந்துட்டு இருக்கா.. உன்னோட லவ் எல்லாம் எங்களுக்கு புரியுது. ஆனா அதுக்கு ஏதாவது ஸ்கோப் இருக்கா சொல்லு. இதோ இன்னிக்கு கண்கூடா பார்த்தேனே, நம்மை விரும்புற பொண்ணுன்னு ஒரு பார்வை கூட அச்சுதன் கிட்ட இல்லை..” என்று முல்லை பேச பேச, அர்ச்சனாவிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
நாட்கள் செல்ல செல்ல, அவளுக்கும் மனது வலிக்கத்தானே செய்யும். அதை இதை என்று அவளே சொல்லி சொல்லி, மனதை தேற்றி வைத்திருக்க, இன்றோ முல்லை கண் முன்னே கண்ட நிதர்சனத்தை போட்டு பட்டென்று உடைக்க, அது அவள் மனதை வெகுவாய் சுட்டுவிட்டது.
“பேசாம? நீ எப்படி இருந்த அர்ச்சு அங்க? நீ இப்போ எப்படி இருக்கன்னு தெரியுமா? உன் கண்ணுல அப்பட்டமா ஒரு ஏக்கமும் வலியும் தெரியுது டி. மத்தவங்களுக்கு அது புரியாம இருக்கலாம்.. ஆனா எங்களுக்குமா அது புரியலைன்னு நினைச்ச. கடைல அச்சுதனை நீ எத்தன தடவை பார்த்தன்னு நான் சொல்லட்டுமா?” என்றவர்,
ஆதரவாய் அவள் கரம் பற்றி “நீ நல்ல பொண்ணுடா.. உடனே மறந்து தான் ஆகணும்னு எல்லாம் நான் சொல்லமாட்டேன்.. ஆனா அவனோட முடிவையும் மனசுல ஏத்துக்கப் பாரு. நீயே சொல்றதானே கட்டாயப் படுத்தக் கூடாதுன்னு. நீ இப்படி அமைதியா இருக்கிறதே, அத்தனை பேரையும் ஒரு காட்டாயதுல நிறுத்துது தெரியுமா?” என்று பேச, அர்ச்சனா மௌனமா தலைகுனித்து அமர்ந்திருக்க,
“உனக்கு எப்படிப்பட்ட பேரன்ட்ஸ் கிடைச்சிருக்காங்க அர்ச்சு.. எந்த சூழ்நிலையிலும் பிள்ளைங்களை புரிந்து அவங்களோட நிக்கிற அருமையான பெத்தவங்க.. அவங்களை கூட நீ நினைக்கக் கூடாதா?” என்று சொல்ல, அர்ச்சனாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“யோசி டா. தெளிவா நல்ல முடிவா எடு. விலகி போறவங்களை, இழுத்து பிடிக்க முடியாது…” என்று முல்லை பேச, அர்ச்சனாவின் மனது பயம் கண்டுவிட்டது.
மறுநாளும் சைட்டில் வேலை இல்லை. அனைவருக்கும் விடுமுறை இரு தினங்களுக்கு கொடுத்திருந்தார்கள். அர்ச்சனாவோ அன்றும் கூட வீட்டில் இருக்க முடியாமல்,
“ம்மா பார்லர் போறேன்..” என்றுவிட்டு சைட் வந்துவிட, இதோ இன்னும் சில நாட்களில் இந்த கட்டிட வேலையும் முடிந்துவிடும். இப்போதாவது கட்டிடத்தை காண வருகையில், தானும் தினமும் காண்கிறோம். இந்த வேலையும் முடிந்துவிட்டால், இனி எங்கே பார்ப்பது.
அவன் உண்டு அவன் வேலையுண்டு என்று இருந்துகொள்வான்.
அவளுக்குத்தானே மனது கிடந்து தவிக்கும்.
இத்தனை நாட்கள் பழகியதில், பேசியதில் ஒரு சிறு பாதிப்பும் கூட தன்னிடம் அவனுக்குத் தோன்றவில்லையா?
இதையே யோசித்து யோசித்து அவளுக்கு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.
என்மீது தான் அவனுக்கு அபிப்ராயம் இல்லை என்றாலும், குறைந்தபட்சமாய் இந்த கட்டிடத்தை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு என் நினைப்பு வரும்தானே என்று தோன்ற, ஒருமுறை அமைதியாய் சுற்றி பார்த்துக்கொண்டு வந்தாள்.
ஆட்கள் யாருமின்றி அத்தனை அமைதியாய் இருந்தது. அந்த அமைதியே அவளுக்கு ஒருமாதிரி இருக்க, நடக்க நடக்க மனது கனத்துப் போனது.
இத்தனை நாட்கள் இல்லாமல், இன்று மனது அதீத பயம் கண்டது தான் நிஜம்.
‘அச்சுதன் மனது மாறவே மாறாதோ…’ என்று அதையே எண்ணிக்கொண்டு நடந்து வந்தவளுக்கு, பக்கவாட்டு சுவற்றில் ஒரு நீளமான ஆணியொன்று நீட்டிக்கொண்டு இருந்ததை கவனிக்க தவறிவிட்டாள்.
வேலை செய்பவர்களின் சில நொடி மெத்தனம், அது மற்றவர்களுக்கு பாதிப்பாய் போகும் என்று யாரும் எண்ணுவதில்லை.
அர்ச்சனா சுவரை ஒட்டியே நடந்துவந்துகொண்டு இருக்க, தூரத்தில் அச்சுதன் வருவது போல தெரிய, அவன்தானா நின்று பார்த்துவிட்டு நகர, சரியாய் அந்த கூர்மையான ஆணி, அவளது இடப்புற தோளை நன்கு பதம் பார்த்தது.
“ம்மா..!” என்று சத்தமாகவே அர்ச்சனா சத்தமிட்டு விட, அச்சுதன் இவள் இங்கிருக்கிறாள் என்று கவனிக்கவில்லை முதலில். வெளியில் கார் நிற்பதை கண்டிருந்தவன், வெளியே சுற்றிலும் தோட்டம் அமைக்கும் வேலையாய், அது சம்பந்தப்பட்ட ஆளைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தவன், அர்ச்சனா வெளியே வருவது கண்டு, அப்படியே நின்று தான் பேசிக்கொண்டு இருந்தான்.
ஆனால் அவளது இந்த அலறல் சத்தம், ஒருநொடி அவனை திடுக்கிடச் செய்ய, “அர்ச்சு…” என்று பதறி அவன் வேகமாய் விரைய, அவனது முகத்தில் தெரிந்த பதற்றத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் அர்ச்சனா.
“ஏய் என்னாச்சு? என்னாச்சு அர்ச்சு.. இதென்ன இவ்வளோ ரத்தம்…” என்று அவளது கரம் பற்றி கேட்க,
“ஆணி..” என்றவளுக்கு கை வலி பிச்சுத் திண்றது.
“ஷிட்..! கவனிச்சு வரமாட்டியா நீ…” என்று அவளை கடிந்தவன், அவள் தோளில் வேகமாய் அவனது கர்சீப் இறுக்கி கட்டிவிட்டு “கிளம்பு…” என்றவன் முன்னே நடக்க, அவளுக்கோ நடக்கவே முடியும் போல தோன்றவில்லை.
திடீரென இப்படியானத்தில் அதிர்ச்சியாகவும் இருக்க, ஏற்கனவே சோர்ந்திருந்த மனது வேறு. மொத்தமாய் அவளது பலத்தை எல்லாம் உறிஞ்சிவிட்டது.
“அச்சத்தான்…” என்று தீனமாய் அழைத்தவள், அங்கேயே நிற்க,
அவள் வருவாள் என்று எண்ணியவன், அர்ச்சனா அசையாமல் நிற்க “என்ன அர்ச்சு சீக்கிரம் வா.. ப்ளட் ரொம்ப வருது…” என,
“எ.. என்னால முடியலை…“ என்று தலையை மறுப்பாய் ஆட்ட, வேகமாய் அவளின் அருகே வந்தவன், கை தாங்களை அவளை அணைத்து நடக்கச் செய்ய, அவளுக்கோ கனவில் நடப்பது போலிருந்தது.