அத்தியாயம் 12

மாறவர்மசிம்மனின் “யார் நீ?” என்ற கேள்வியில் திடுக்கிட்ட மீனாட்சி அதை மறைத்தபடி வெளியே சாதாரண குரலில், “உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டாள்.

அவளது முகத்தையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன் அவளது நொடி நேர திடுக்கிடலை கண்டு கொண்டான்.

அவன், “தெரியவில்லையே! அதனால் தான் கேட்கிறேன்” என்றான் கூர்மையான பார்வையுடன்.

தன் முன் இருப்பது தனது காதலன் அல்ல, இங்கு வந்த முதல் நாள் தன்னை கேள்வி கேட்ட ராஜா மாறவர்மசிம்மன் என்பதை புரிந்துக் கொண்டவள் வரவழைத்த இயல்பு குரலில், “என்னை பற்றிய விவரங்கள் உங்களுக்குத் தெரியுமே! இப்போது ஏன் இந்த திடீர் சந்தேகம்?” என்று கேட்டாள்.

“திடீர் சந்தேகம் என்று இல்லை.. ஆரம்பத்தில் இருந்தே இருப்பது தான்”

அவள் அமைதியாக இருக்க, அவன், “உன்னைப் பற்றிய சொந்த விஷயங்களின் நிதி உதவியவரை தவிர அனைத்தும் எனக்குத் தெரியும் தான்.. ஆனால் நீ இங்கே வந்த வேலை!” என்று கூறி நிறுத்தினான்.

“ஏன் அதற்கு என்ன?”

“பொருந்த பொய் சொல்ல வேண்டும் என்ற வாய்மொழியை கேட்டது இல்லையா தேவி?”

“ஏன்?”

“இன்றைய உனது தாக்குதலுக்கும் உனது வேலைக்கும் என்ன சம்பந்தம்?”

“கேர் டேகர் கராத்தே தெரிந்து வைத்திருக்கக் கூடாதா?”

“தெரிந்து இருக்கலாம்.. ஆனால் உனது தாக்குதல் கத்துகுட்டியை போல் அல்லாமல்  நேர்த்தியாக இருந்தது”

மென்னகையுடன், “நன்றி” என்றவள், “கராத்தே ஒரு தற்காப்பு கலை.. பெண்களுக்கு அவசியம் என்று அதை ஆசிரமத்தில் சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.. அங்கே தான் நான் கற்றுக் கொண்டேன்” என்றாள்.

“நான் பல கலைகளை முறையாக கற்றுத் தேர்ந்தவன்.. ஒருவர் சண்டையிடும் போது தெரியும் நெளிவு சுளிவுகளில் இருந்தே அவரது திறமையையும் அவர் கற்றுக் கொண்ட பயிற்சி முறையையும் நான் கண்டு பிடித்துவிடுவேன்”

அவள் லேசாக தோளை குலுக்க, அவன் அவளை அமைதியாக பார்த்தான்.

அவனது பார்வையில் அவள், “நான் பொய் சொல்லவில்லை” என்றாள்.

அவன் தீர்க்கமாக பார்க்க, 

“நிஜம்.. இல்லாததை நான் கூறவில்லை” என்றவளின் குரலிலும் கண்களிலும் உண்மையே தெரிந்தது.

“இருக்கலாம் ஆனால் முழு உண்மையையும் நீ கூறவில்லை தேவி” என்றவன் கைகளை கட்டிக் கொண்டு இன்னும் தீர்க்கமாகப் பார்த்தான்.

அவனது கூர்விழிகளின் வீச்சைத் தாக்குபிடிக்க முடியாமல் பார்வையை தாழ்த்தியவள் பேச வாய் திறக்கும் முன்,

அவன், “இன்று நீ எந்த காரணத்தைக் கூறியும் தப்பிக்க முடியாது.. இப்பொழுது விடுமுறையில் தான் இருக்கிறாய்..” என்றான்.

 

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்து, “அன்னைக்கே சொல்லிட்டேன்.. நான் ஏன் தப்பிக்கணும்? என்னோட வாழ்நாள் முழுவதும் உங்களோட அன்பென்னும் சிறை வாசத்தில் இருக்கத் தான் நான் விரும்புகிறேன்” என்றவளின் கண்களில் உண்மையே இருந்தது.

“இது எல்லாமே சரி தான்.. ஆனால் நிச்சயம் நீ எதையோ என்னிடம் இருந்து மறைக்கிறாய் தேவி” என்று உறுதியான குரலில் கூறியவன், 

“நீயாக இருக்கப் போய் தான், நான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன்” என்றும் சேர்த்துக் கூறினான். 

சற்று தடுமாறியவள் பின் அவனை தீர்க்கமாகப் பார்த்து, “சரி.. ஒத்துக்கிறேன்.. நான் இங்கே வந்த உண்மை காரணம் வேறு தான்.. நேரம் வரும் போது நானே அதை உங்களிடம் சொல்வேன்.. அதுவரை கேட்காதீங்க ப்ளீஸ்..” என்றவள், “ஒன்றை மட்டும் நினைவில் வச்சுக்கோங்க.. என்னோட நோக்கத்தில் தவறு ஏதும் இல்லை.. உங்களுக்கு எந்த தீங்கு செய்யயும் நான் இங்கே வரவில்லை” என்றாள்.  

அதற்கு மேல் எதையும் கேட்காமல், “சரி வா.. போகலாம்” என்றபடி அவன் எழ, அவளும் அமைதியாக எழுந்தாள்.

அவள் தேவிபுரத்தில் இருக்கும் தனது அறைக்குச் செல்ல, அவன் வேந்தன்புரத்தில் இருக்கும் தீரன் அறைக்குச் சென்றான்.

மாறவர்மசிம்மனை கண்டதும், தீரன், “என்ன விஷயம் ராஜா? நீங்களே இங்கே வந்து இருக்கிறீங்க?” என்று கேட்டான்.

மாறவர்மசிம்மன், “தேவியின் அறையில் இருக்கும் ஒலிவாங்கி இன்னமும் வேலை செய்துக் கொண்டு தானே இருக்கிறது?” என்று கேட்க,

தீரன் சிறு அதிர்ச்சியுடன், “அவங்க.. அவங்களுக்கும் இன்றைய தாக்குதலில் பங்கு இருக்கும் என்று நினைக்கிறீங்களா?” என்று கேட்டான்.

அவன் ‘ராணி’ என்று கூறாமல் ‘அவங்க’ என்று கூறியதை கவனித்தவன், “தேவி என்ற அழைப்பிலேயே புரிந்திருக்க வேண்டாமா?” என்றான்.

“மன்னிக்கணும் ராஜா.. சரியா கவனிக்கவில்லை”

“தேவிக்கும் இந்த தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை.. ஆனால் அவள் எதையோ மறைக்கிறாள்.. அதை அவளும் ஒப்புக் கொண்டாள்.. அவளாக கூறும் வரை இனி அதைப் பற்றி அவளிடம் விசாரிக்க மாட்டேன் ஆனால் அவள் கூறும் முன் நானே கண்டு கொள்வேன்”

“நான் உங்களுக்கு சொல்லத் தேவை இல்லை.. இருந்தாலும் சற்று கவனத்துடன் இருக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ராஜா.. இதை சொல்வதற்காக என்னை மன்னிக்கவும்.. பண்டை காலத்தில் ஒற்றர்கள் காதலனாகவோ காதலியாகவோ வந்து ராஜியத்தையே சிதைத்த உண்மை கதைகளை நாம் கேட்டிருக்கிறோம்”

“காதல் மயக்கத்தில் தவறி விடுவேன் என்று நினைக்கிறாயா?” என்று அவன் சாதாரண குரலில் கேட்டாலும்,

தீரன் பதறியபடி, “அப்படி கூறவில்லை ராஜா.. மன்னிக்கவும்” என்றான்.

“நீ கூறியதை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.. உன் எண்ணத்தை முழுதாக கூறி முடி” என்றான்.

“உங்களுக்கே அவங்க மேல் சந்தேகம் இருக்கிறது.. இன்று நடந்ததில் அவர்களுக்கும் மறைமுக பங்கு இருக்கலாமே! நீங்க இருவர் மட்டும் தனியாக வருவதை தெரிந்து தான் தாக்குதல் நடந்தது இருக்கிறது.. தாக்க வந்த ஆட்கள் தயாவும் சுதிரும் வந்ததும் ஓடிட்டாங்க.. இதுவே அதற்குச் சான்று”

“ஆசிரமத்தில் இருந்து நாங்கள் கிளம்பிய நேரம் யாரேனும் வேவு பார்த்து இருக்கலாம்”

“வாய்ப்பு இருக்கிறது தான்.. ஆனாலும்” என்று தீரன் இழுத்து நிறுத்த,

“ஆசிரமத்தில் இருந்து உடனே கிளம்பவில்லை.. அங்கிருந்த நேரம் முழுவதும் அவள் என்னுடன் தான் இருந்தாள்.. அவள் எனக்குத் தெரியாமல் அழைப்பு என்ன குறுஞ்செய்தி அனுப்பி இருக்கக் கூட வாய்ப்பு இல்லை.. 

ஆசிரமத்தில் இருந்து கிளம்பிய நேரம், முதலில் கிளம்பி பின் வாடகை வண்டி வருவதற்காக காத்திருந்து சற்று  தாமதமாகத் தான் கிளம்பினோம்.. அதனால் வேவு பார்ப்பதற்கு சுலபமாக இருந்து இருக்கும்” என்றவன், 

“இன்னொன்றை மறந்துவிட்டு பேசுகிறாய்.. தாக்குதலின் போது அவள் என்னை காப்பாற்றி இருக்கிறாள்” என்றான்.

“மறக்கவில்லை ராஜா.. நிலைமை கை மீறவும் தன்னை காப்பாற்றிக் கொள்ள உங்களை காப்பாற்றி இருக்கலாமே!”

“அதாவது அவள் மீது சந்தேகம் வராமல் இருக்க என்னை காப்பாற்றி இருக்கிறாள் என்று கூறுகிறாய்”

“நிச்சயமாக கூறவில்லை.. வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறேன் ராஜா”

“ஹ்ம்ம்.. சரியாகத் தான் யோசிக்கிறாய்.. நானும் இதை எல்லாம் யோசித்தேன் தான்.. உனக்கு முழுவதுமாக தெரியாத ஒரு விஷயம், எனக்கு மட்டுமே முழுதாக தெரிந்த விஷயம்.. எங்களுக்குள் இருக்கும் காதல்”

தீரன் அமைதியாக இருக்க, மாறவர்மசிம்மன், “காதலே நடிப்பு என்பது உன் வாதம் சரியா?” என்றான்.

தீரன் ‘ஆம்’ என்று கூற முடியாமல் இப்பொழுதும் அமைதியாக இருக்க, அவன், “தயங்காமல் சொல் தீரா.. நான் உனக்கு பேசும் உரிமை அளிக்கவில்லையா என்ன?” என்றான்.

தீரன் அவசரமாக, “நான் அமைதியாக இருந்ததிற்கு அது காரணம் இல்லை ராஜா.. என் வாதம் உங்கள் மனதை வருத்திவிடக் கூடாதே என்று நினைத்தேன்.. எப்படியும் என் மனதில் இருப்பது உங்களுக்கு தெரிகிறது.. இனி அந்த கண்ணோட்டத்திலும் நிச்சயமாக நீங்கள் யோசிப்பீங்க.. அப்புறம் எதற்கு என் வாயினால் கூறி உங்களை வருத்த வேண்டும் என்று நினைத்தேன்” என்றான்.

“பரவா இல்லை.. உனது வாதங்களை ஒவ்வொன்றாகக் கூறு”

“அவங்க சண்டையிட்டதை பார்த்து தான் உங்களுக்கு மீண்டும் சந்தேகம் வந்திருக்கிறது.. ஆகையால் அவங்களோட சண்டை நேர்த்தியாக இருந்து இருக்க வேண்டும்.. கேர் டேகருக்கும் சண்டை பயிற்சிக்கும் என்ன சம்பந்தம்?

காதல் என்ற பெயரில் உங்களை ஏமாற்றி கொல்வது தான் அவங்க திட்டமோ?

ஒருவேளை ராஜமாதா இல்லை இளவரசர் அவங்களை வர வைத்து இருப்பாங்களா?

இன்னொரு சந்தேகம் கூட இருக்கிறது ராஜா.. ஒருவேளை இன்று நடந்த தாக்குதலே அவங்களோட ஏற்பாடாக இருக்குமோ?” என்று கூறி நிறுத்தினான்.

“உன்னுடைய முதல் கேள்வியை நான் தேவியிடமே கேட்டுவிட்டேன்.. ஆசிரமத்தில் கராத்தே பயிற்சி அளித்தகாக கூறினாள்.. அதை விசாரித்து சரி பார்..

அடுத்து அவள் நிச்சயம் என்னை கொல்ல வரவில்லை.. அவளது வரவின் காரணத்தைப் பற்றி எனக்கு ஒரு அனுமானம் இருக்கிறது.. அது சரியா என்று பார்க்கலாம்..

அடுத்து விக்ரம் இவளை அனுப்பி இருக்க மாட்டான்.. இந்த உளவாளி வேலை எல்லாம் அவனுக்கு வராது.. ஆனால் ராஜமாதாவை உறுதியாக மறுக்க முடியாது..

அடுத்து இந்த தாக்குதல் பராந்தகன் செயல் தான்.. வந்தவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்து சொல்கிறேன்” என்று நீண்ட விளக்கத்தைக் கொடுத்தான்.

தீரன், “இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ராஜா?” என்று கேட்டான்.

“தேவி அறையில் இருக்கும் ஒலிவாங்கி பற்றி கேட்டேனே!”

“அது.. உங்கள் எண்ணை அவங்களிடம் கொடுத்ததில் இருந்து அதன் பதிவுகளை நான் ஆராயவில்லை.. ஆனால் நீங்க திரும்ப ஸ்பான்சர் பற்றி பேசியதில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்” என்று சிறு தயக்கத்துடன் கூறினான்.

“புரிகிறது.. தயக்கம் தேவை இல்லை.. இனி நான் பேசும் நேரங்களில் மட்டும் ஒலிவாங்கியை அணைத்து வை” என்றவன், “பழைய பதிவுகள் உனது மடிக்கணினியில் இருக்கிறது தானே!” என்று கேட்டான்.