அத்தியாயம் 21

“விடிஞ்சா சின்னவனுக்கு கல்யாணம். இன்னைக்கு ராத்திரி கூட ராகவன் வீட்டுல போய் தான் தூங்குவேன்னு சொல்லுறது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் டி.”

 ஒலிப்பெருக்கியில் பாடல் உச்சஸ்தாயியில் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்க, மகள் ஆனந்தியிடம் இரைந்து கத்திக் கொண்டிருந்தார் தெய்வானை.

இதோ, நாலு வீடு தள்ளி இருக்குற ராகவன் வீட்டுல தூங்குனா என்ன, இங்க தூங்குனா என்ன? எல்லாம் ஒண்ணு தான் ம்மா.” அம்மாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தாள் ஆனந்தி.

“ஒண்ணு தான? அப்போ இங்கவே தூங்கு.” முடிவாக சொன்ன தெய்வானை, அங்கே வந்த கதிரேசனிடம், “டேய் கல்யாண மாப்பிள்ளை, நீ, இங்க தூங்கப் போறியா? இல்ல, உங்க அண்ணன் வீட்டுக்குப் போறியா?” வேண்டுமென்றே கேட்டார்.

“அங்கதான் எல்லாரும் இருக்காங்க. நானும் அங்கயேப் போறேன் ம்மா, ஜாலியா இருக்கும்” என்றான் கதிரேசன்.

“அடிங்… விடிஞ்சா கல்யாணம். இன்னைக்கு கூட வீடு தங்க முடியாதோ மாப்பிள்ளைக்கு” என்று பல்லைக் கடித்த தெய்வானை, “மரியாதையா இங்க தூங்குற நீ” என்றவர்,

“அப்பிடி என்ன சொக்குப்பொடி தான் போடுறாளோ? எல்லாம் அங்க போய் முட்டிக்கிட்டு நிக்குதுங்க” என்று முணுமுணுத்தபடியே சென்றார்.

ஆமாம்… நாளை விடிந்தால் கதிரேசனுக்கு திருமணம். அண்ணனின் வாழ்க்கையில் வசந்தம் மீளவும், தன்னுடைய திருமணத்திற்கு பெண் பார்க்க சம்மதித்தான் கதிரேசன்.

கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்குப் பிறகு, அவன் விருப்பத்திற்கேற்ப பெண் அமைய, இதோ, இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணத்தை நிச்சயமும் செய்திருந்தனர்.

  திருமணத்திற்காக வந்திருந்த தன் பெண்மக்கள், வழக்கம் போல பெரிய மகன் ராகவன் வீட்டில் தங்குவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சத்தமிடுகிறார் தெய்வானை.

இவ்வளவு ஏன்? திருமணத்திற்கு வந்திருக்கும் சிதம்பரம் கூட ராகவனின் வீட்டில் தான் குடும்பத்தோடு தங்கியிருக்கிறார்.

‘இத்தனை நாட்கள் தான் பிள்ளைகள் தங்களைவிட்டு தள்ளி நின்றார்கள், இப்போது தான் பெரியவனோடு எல்லாம் சரியாகி விட்டதே. எல்லோரும் இங்கே தங்கள் வீட்டில் தங்கினால் என்ன?’ என்ற ஆதங்கமே தெய்வானைக்கு.

ஆமாம்…வெளியே இருந்து பார்த்தால் அவர்களுக்குள் எல்லாம் சரியாகிவிட்டது போன்றதொரு தோற்றம் தான். ஆனால், காயப்பட்ட மனங்கள் ஒன்றுக்கொன்று இன்னமும் நெருக்கமாகவில்லை என்பது தான் உண்மை. அதாவது, இருக்கு, ஆனா இல்லை, அப்படித்தான் ராகவன் தம்பதியரின் உறவு அவன் பெற்றோரோடு இருந்தது.

அன்று ராகவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அங்கிருந்து வெளியேறியிருந்த தெய்வானை, அதன் பிறகு வந்த நாட்களில் யாருடைய துணையையும் எதிர்பார்க்காமல் ராகவனின் வீட்டுக்கு போய் வர ஆரம்பித்தார். பேரப்பிள்ளைகளோடு உரிமையோடு பழகினார். இவ்வளவு ஏன்? கையோடு இருவரையும் தங்களுடைய வீட்டுக்கு கூட அழைத்து சென்றார்.

 சண்டைக்கு கோர்த்துக் கொண்டு வந்தால் எதுவும் சொல்லலாம். ஆனால், சரணாகதி அடைபவரிடம் என்ன சொல்ல முடியும்? அதுவும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு?

எனவே ராகவனோ, மலர்விழியோ தெய்வானையை தடுக்கவில்லை. அதே நேரம் ஆதரிக்கவும் இல்லை. அது எதுவும் தெய்வானையை பாதிக்கவும் இல்லை.

ராகவனின் பெற்றவர்களைப் பொருத்தவரை இப்போதும் அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிகிறதா என்றெல்லாம் தெரியவில்லை.

அவர்களுக்குத் தேவை, அவர்களுடைய பிள்ளைகளின் சந்தோஷமான வாழ்க்கை. அதற்காக, இப்போது என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். கடந்து போன காலமும், மலர்விழியிலேயே நின்று போன மகனின் பிடிவாதமும், மற்றப் பிள்ளைகளின் ஒதுக்கமும் அவர்களை உச்சாணிக் கொம்பிலிருந்து தரையிறங்கச் செய்திருந்தது.

இதோ, இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இளைய மகனின் திருமண நிச்சயத்திற்கு கூட இராஜஸ்தானில் இருந்த மலர்விழிக்கு ஃபோன் மூலம் தெய்வானையே அழைப்பு விடுத்தார்.

 “வீட்டுக்கு மூத்த மருமகளா முன்ன நின்னு நீ தான் எல்லாம் செய்யணும். அதனால கண்டிப்பா வந்துடணும். இல்ல, நேர்ல வந்து கூப்பிடணும்னாலும் சொல்லிடு, உங்க மாமா கூட வரேன்.” இப்படி அதிரடியாகத் தான் இருந்தது அவரது அழைப்பு.

பெண்பார்க்க செல்லும் போது தமையனை கூடவே கதிரேசன் அழைத்துக்கொண்டு சென்றதால், ராகவனுக்கு விஷயம் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் தெய்வானை மகனையும் நேரடியாக அழைக்கத்தான் செய்தார்.

“இது, நீ எல்லாரையும் கூப்பிட்டு நடத்த வேண்டிய நிகழ்ச்சி. ஆனா உன்னையே நாங்க வெளியாள் போல கூப்பிட வேண்டிய நிலைமை ஆகிப்போச்சு. ம்ஹும்… இதுக்கு மேலயும் எதையும் பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்க வேண்டாம்.”

 “மலருக்கும் ஃபோன் பண்ணி சொல்லிட்டேன். எதுக்கும், நீயும் பிள்ளைங்களைக் கூட்டிட்டு அவளை வரச்சொல்லிடு. அப்பா கூப்பிடலைன்னு நினைக்காத. அவர் ஆம்பிள்ளை, ஆசையிருந்தாலும் சட்டுன்னு இறங்கி வரமுடியல” என்றிருந்தார் மகனிடம்.

 பெற்றவர்களை ராகவன் எப்போதுமே வெறுக்கவில்லையே. தன் மனைவியின் உணர்வுகளை மதிக்காத, அவளுக்கு அடிப்படை மரியாதைக் கூட தராத தன் பெற்றவர்களிடமிருந்து தள்ளி நின்றான், அவ்வளவு தான்.

இப்போதோ, ஊர், உறவு இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாமல், பெற்றவர்கள் மகனுக்காக சிலபடிகள் இறங்கி வந்திருக்க, ராகவனும் இறங்கி வந்தாக வேண்டிய சூழ்நிலை.

யாருக்காக இல்லாவிட்டாலும் தன் உடன்பிறந்தவர்களுக்காகவாவது அவன் கொஞ்சம் தன்னை வளைத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம்.

எனவே மனைவி மக்களோடு ஐந்து வருடங்கள் கழித்து தம்பியின் நிச்சயதார்த்தத்திற்காக தன் பிறந்த வீட்டின் வாசலை மிதித்தான் ராகவன்.

மருமகளுக்கு ஒரு தலையசைப்பை வரவேற்பாகத் தந்த குமாரசாமி, “இப்போத் தான் தொரைக்கு வழி தெரிஞ்சிதோ?” என்று மகனிடம் உறுமல் தான்.

தெய்வானையோ, ஒதுங்கி நின்ற மருமகளை, அதைச்செய், இதைச்செய் என்று முன்னிலைப்படுத்தினார்.

ஆக, இளைய மகனின் திருமணத்தை முன்னிட்டு மூத்த மகனை குடும்பமாக தங்களுக்குள் பிணைக்கும் முயற்சியில் மும்முரமாக தெய்வானை ஈடுபட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

“மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

மலரும் மலரும் புது தாளம் போட்டு

புதுசா புதுசா அதைக் காதில் கேட்டு

புழுவாய் துடித்தாள் அந்த மின்னல் கீற்று…”

  காலை வேளையில் காற்றில் மிதந்து வந்த, தன் மனம் கவர்ந்த பாடலோடு சேர்ந்து பாடியபடியே, கதிரேசனின் திருமணத்திற்கு செல்வதற்காக பட்டுப்புடவை கட்டிக்கொண்டிருந்தாள் மலர்விழி.

“இன்னுமா புடவை கட்டி முடிக்கல?” என்று கேட்டபடியே அறைக்குள் வந்த ராகவன், மெரூன் கலரில் சில்க் காட்டன் சட்டையும், பட்டு வேஷ்டியும் கட்டி ஜம்மென்று இருந்தான்.

“உங்களுக்கென்ன? ஒரு வேஷ்டியை எடுத்து சுத்திக்கிட்டு சட்டையைப் போட்டா போச்சு. ஆனா, எங்களுக்கு அப்படியா? அதுவும் இந்த புதுபட்டுக்கு ஃப்ளீட்ஸ் அடங்குவனான்னு மொடமொடன்னு நிக்குது. இதுக்கு தான் கல்யாணப் பொண்ணப்போல பெரிய்ய்…ய பார்டர் வச்ச புடவை வேண்டாம்னு நான் சொன்னேன். உங்கம்மா கேட்டாங்களா?”

தனியாக புது பட்டுப்புடவையை கட்டமுடியாமல் தவித்த மலர்விழி, ராகவன் வந்து கேட்கவும், நீளமாகப் புலம்பித் தள்ளினாள்.

“ஃப்ளீட்ஸ் நிக்கலைன்னா இப்பிடி கையை வச்சி நல்லா நீவி விட்டாப் போதும்” என்றபடியே மலர்விழியின் கழுத்துக்கு கீழே கையை கொண்டு வந்தான் ராகவன்.

சட்டென்று அவன் கையில் ஒரு அடிவைத்த மலர்விழி, “அங்க சொல்லலை, இடுப்பு கொசுவத்தைச் சொன்னேன்” என்றாள் பல்லைக் கடித்தபடி.

“ஓ… இப்பிடி தெளிவா சொல்லணும் கலெக்டர் மேடம்” என்ற ராகவன், மனைவிக்கு முன்னால் கால் மடக்கி அமர்ந்து கொசுவத்தை ஒரே சீராக அடுக்க ஆரம்பித்தவன்,

“இதென்ன இடுப்பு பக்கத்து பார்டர் வெளியத் தெரியல?” என்று கேட்டபடியே மனைவியின் பளிங்கு போன்ற இடுப்பில் கை வைக்க, துள்ளிக் குதித்தாள் மலர்விழி.

“அட… நல்லதுக்கே காலம் இல்ல ப்பா” என்றவன், மறுபடியும் மனைவியின் இடுப்பு கொசுவத்தை கலைத்து, இடுப்பு பக்கம் பளிச்சென்று பார்டர் தெரியும்படி மனைவிக்கு புடவை கட்ட உதவி செய்ய,

“நீங்க ப்ரொஃபெஸ்ஸரா இல்ல ஜவுளிக்கடையில பொம்மைக்கு சாரி கட்டி விடுற வேலை பாக்குறீங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கே” என்று இழுத்தாள் மலர்விழி.

 “அதெல்லாம் அழகான பொண்டாட்டி கிடைச்சா, எல்லா பயலும் எல்லா வித்தையையும் கத்துப்பான்” என்றவன், மனைவியின் இரு தோள்களையும் பற்றி அவளை தலை முதல் கால் வரைப் பார்த்தபடியே,

 “ம்ம்… எல்லாம் சூப்பரா இருக்கு. ஆனா பூ மட்டும் தான் கம்மியா இருக்கு, இரு நான் கொண்டு வரேன்” என்றபடி வாசலுக்கு நகர, அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள் மலர்விழி.

காப்பர் சல்பேட் கலரில் உடம்பும், வாடாமல்லிக் கலரில் அகல பார்டருமாக இருந்த அசல் காஞ்சிப்பட்டு மலர்விழிக்கு அசத்தலாக இருந்தது.

 ஆனந்தி, ஜெயந்தி, மலர்விழியோடு சேர்த்து சுந்தரின் மனைவி பத்மாவுக்கும் கல்யாணப் பெண்ணுக்குப் போலவே புடவை எடுத்திருந்தார் தெய்வானை.

ஆமாம்… தணிகாச்சலத்தின் குடும்பத்தையும் திருமணத்திற்கு அழைத்திருந்தார்கள் குமாரசாமி தம்பதியினர். சுந்தரின் மனைவி பத்மாவிற்கு ஆண் குழந்தை பிறந்து எட்டு மாதங்களே ஆகியிருந்தாலும், மலர்விழிக்காக வந்திருந்தார்கள். இங்கே வீட்டின் மாடியறையில் தான் பத்மா தன் குழந்தையோடு தங்கியிருக்கிறாள்.

திருமணத்திற்கு அணிவதற்கென்றே மனைவிக்கு தங்கத்தில் ஒரு ஹாரம், அதற்கு இணையாக கழுத்தணி, ஜிமிக்கி, ஆறு வளையல்கள் என்று வாங்கி மனைவிக்கு பரிசளித்திருந்தான் ராகவன்.

பொன்னிடப், பொன்னிடப் பெண் அழகு தானே‌. அது எல்லாவற்றையும் அணிந்து அழகே பொறாமை கொள்ளும் பேரழகாக மலர்விழி நின்றிருந்தாள்.

“ஜெயந்தி, எம்பொண்டாட்டிக்கு மட்டும் கொஞ்சமா பூ குடுத்துட்டு நீங்க எல்லாம் நிறைய வச்சிருக்கீங்களா? குடு, குடு, உங்கையில இருக்குற பூவை எல்லாம் குடு.” ராகவனின் சத்தம் அறைக்கு வெளியே கேட்டது.

“ஹைய்யோ… நான் தான், கம்மியா போதும்னு எடுத்தேன்” என்றபடி வேகமாக அறையை விட்டு வெளியே வந்தாள் மலர்விழி.

“உனக்கு ஒண்ணும் தெரியாது ம்மா. பூ தந்தவங்க ல்ல உனக்கு கூடுதல் தந்திருக்கணும்” என்று ராகவன் சொல்ல, தன் கையிலிருந்த பூவை எல்லாம் அண்ணன் கையில் கொடுத்த ஜெயந்தி,

“எப்பிடி? மாப்பிள்ளை தாலி கட்ட போறதுக்கு முன்னாடி கிளம்பி வந்துடுவீங்களா அண்ணி?” என்று கிண்டலடித்தபடியே சென்றாள்.

“ஐயோ… எம்மானம் போச்சு” என்றபடியே மலர்விழி அறைக்குள் நுழைந்து கொள்ள,

“ஏன்? ஜெயந்திக்கு நிர்மல் பூ வச்சி விட்டுருக்கவே மாட்டானா என்ன?” என்றபடியே மனைவியின் பின்னோடு சென்ற ராகவன், இறுகப் பின்னிய மனைவியின் நீண்ட கூந்தலுக்கு ஏற்றாற்போல பூவை கத்தரிக்க முயலும் போது, லேசாக சாத்தி வைத்திருந்த அறைக்கதவை தள்ளிக்கொண்டு அறைக்குள் வந்தாள் அவர்களின் பெண்ணரசி.

தகப்பனின் கைகளில் பூவைப் பார்க்கவும், “எனக்கா ப்பா?” என்று கேட்டு தன் கோலிக்குண்டு கண்களை உருட்ட, பூவை அளந்து கொண்டிருந்தவனின் கைகளோ ஒரு வினாடி தடுமாறியது.

 “நீங்கதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே, இல்லைன்னு தான் உங்க பொண்ணுகிட்ட சொல்லிடுங்க பாப்போமே.” கண்களாலேயே கணவனிடம் சவால் விட்டாள் மலர்விழி.

மலர்விழியின் புடவைக் கலரிலேயே பட்டுப்பாவாடை சட்டை அணிந்து, அதற்கு தோதான நகையும் அணிந்து, தலையில் இரண்டு குடுமி போட்டு, அது இரண்டையும் இணைப்பது போல பூவும் வைத்து தான் நின்றது அந்த பேசும் புல்லாங்குழல்.

ராகவனுக்கு தடுமாற்றம் எல்லாம் ஒரு வினாடி தான். மறுநொடியே தன்னை சுதாரித்துக்கொண்டு, “ஹ்ம்ம்… ஆமா பட்டூ, உனக்குத் தான்” என்றபடியே, மகளின் இரண்டு குடுமிக்கும் நடுவே, பூவால் இன்னொரு பாலம் அமைத்தான்.

“தேங்ஸ் ப்பா.” தகப்பனின் கன்னம் பற்றி முத்தமிட்டு சென்றது அந்த சிட்டு.

இப்படித்தான், மனைவிக்கு நகையை எடுத்து ராகவன் கொடுக்கும் போதும், “எனக்கா ப்பா?” என்று வந்து நின்றாள் நாச்சி.

அவ்வளவு பெரிய நகை தங்கத்தில் சிறு பிள்ளைக்கு போடமுடியாதே. எனவே, உடைக்கு தகுந்தாற்போல ஃபேஷன் ஜீவல்லரி அணிந்து நின்ற மகளிடம், “அம்மா, பெரியவங்க, அதனால பெரிய ஜுவல். பட்டூ, குட்டி பாப்பா. அதனால குட்டி ஜுவல்” என்று மகள் அணிந்திருந்ததை ராகவன் சுட்டிக் காட்ட,

“ப்ப்பூ… அம்மா பெரிசு தான்.” தன் பிஞ்சு விரல்கள் கொண்டு வாயைப் பொத்தி கேலியாக சிரித்தாள் நாச்சி.

கடந்த பத்து மாதங்களாக இராஜஸ்தானுக்கும் செங்குளத்திற்குமாக மாறி மாறி பறந்த பயணம் முடிவுக்கு வந்து, இப்போது இருபது நாட்களாக திருநெல்வேலியில் நிலை கொண்டதில் கொஞ்சம் பூரித்து தான் போயிருந்தாள் மலர்விழி.

ஆமாம்… திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக மலர்விழி பதவியேற்று இருபது நாட்களாகிறது. ராகவன் தனது ஜாகையை திருநெல்வேலிக்கு மாற்றியிருக்கிறான். தினமும் கல்லூரிக்கு தனது காரில் வந்து போகிறான். கொஞ்சம் நீண்ட பயணம் தான். ஆனால், மனைவி மக்களோடு சேர்ந்திருப்பதில் அது தெரியவில்லை.

கையிலிருந்த பூவை மனைவியின் நீண்ட ஜடையின் இருபுறமும் தாராளமாக வழிய விட்ட ராகவன், மனைவியை பின்னிருந்து இடையோடு கட்டிக்கொண்டு அவள் கூந்தலில் முகத்தை புதைத்து ஆழ்ந்து மூச்செடுத்தான்.

அவன் இடுப்பில் கிள்ளி, “சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு தெரிஞ்சிடிச்சு சார்” என்று நக்கலடித்தாள் மலர்விழி. மையலாக சிரித்தான் ராகவன்.

ஒருவழியாக இருவரும் கிளம்பி, தணிகாச்சலம் குடும்பத்தினரோடு ராகவனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கே கபிலன், தகப்பனைப் போலவே வேஷ்டியும் சட்டையும் அணிந்து, தாத்தனின் விரல் பிடித்து கல்யாண வீட்டை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான். ஆமாம்… குமாரசாமி என்ற கல்லும், கபிலனிடம் கரைந்து தான் நிற்கிறது.

குட்டி காமாட்சியோ தன் அன்பால் தெய்வானையை ஆட்டி வைக்கிறாள். எல்லோரும் காமாட்சியை நாச்சி என்றழைக்க, தெய்வானை மட்டும் வாய்நிறைய ‘காமாட்சி’ என்றழைக்கிறார்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே. உண்மை அன்பு இல்லை என்றால் அந்த இடத்தில் பிள்ளைகளை பிடித்து வைக்கவே முடியாதே.

தன் பிள்ளைகள் மீது தன்னை பெற்றவர்கள் காட்டும் அன்பில், அவர்கள் மீதிருந்த ஆதங்கம் எல்லாம், உள்ளங்கைக்குள் பொத்தி வைத்த குறுமணல் போல ராகவனிடமிருந்து நழுவி ஓடத்தான் முயற்சிக்கிறது.

மலர்விழி வீட்டுக்குள் நுழையவும், “தலைக்கு மேல வேல கிடக்கு, கொஞ்சம் சீக்கிரம் ரெடியாகி வந்தா தான் என்னவாம்?” என்று தெய்வானை நொடித்துக் கொள்ள,

“என்ன செய்யணும், அதை மொதல்ல சொல்லுங்க” என்றபடியே வீட்டுக்குள் சென்றாள் மலர்விழி.

“முதல்ல அந்த விளக்கை ஏத்து” என்ற தெய்வானை, “எத்தனை தடவை சொல்லுறது, இப்பிடி மொட்டையா பேசாதன்னு. அத்தைன்னு சொல்ல முடியாம வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க?” என்று மருமகளை அதட்டினார்.

“அதெல்லாம் எங்களுக்கு தோணும் போது சொல்லுவோம்” என்றபடியே பூஜை அறைக்கு சென்று விளக்கை ஏற்றினாள் மலர்விழி.

ஏற்கனவே கதிரேசன் நிச்சயத்திற்கு அங்கு வந்திருந்ததால் பெரிதாக தடுமாற்றம் எதுவும் இல்லை மலர்விழிக்கு. என்றாலும், ஜெயந்தியும் ஆனந்தியும் அவளுக்கு உதவினார்கள்.

அதென்னவோ தெரியவில்லை, தெய்வானை என்று வந்து விட்டால் அக்மார்க் மருமகள் ஆகிப்போகிறாள் மலர்விழி. அம்மாவுக்கும் மலர்விழிக்குமிடையே நடந்த உரையாடலைக் கேட்டு அந்த வீட்டு பெண்ணரசிகளுக்கு வாய்கொள்ளாச் சிரிப்பு.

ஆனால், அங்கிருந்த கோதையோ, “ஒரு மரியாதையே இல்லாம எப்பிடி பேசிட்டு போறா பாருங்களேன் க்கா?” என்று கோதையிடம் கிசுகிசுக்க,

“எம்மருமக எங்கிட்ட பேசுறா. அதுல உனக்கென்னடி யம்மா போச்சு?” அதட்டலாக தெய்வானை கேட்க, கப்பென்று வாயை மூடிக்கொண்டார் கோதை.

கோதை இப்படி என்றால் மாதவனின் அம்மா வேறு மாதிரி.

ஆமாம்… “வேண்டாத மருமக, இப்போ கலெக்டர் ஆன உடனே தலைல தூக்கி வச்சி ஆடுறாங்க. இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்கத்தானே போறேன்.”

திருமணத்திற்கு வந்த நேரத்திலிருந்து இதுதான் அந்த பெண்மணியின் டயலாக் ஆகிப்போனது. ஆனால் அவரைக் கண்டுகொள்ளத் தான் யாரும் இல்லை.

ஒருவழியாக எல்லோரும் புறப்பட்டு பெண்ணின் ஊரான அம்பாசமுத்திரத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். தம்பியின் திருமணத்தில் ஒரு அண்ணன் செய்ய வேண்டிய அத்தனை முறைகளையும் யாரும் சொல்லாமலேயே முன்னின்று செய்து முடித்தான் ராகவன்.

அண்ணனின் நல்வாழ்விற்காக காத்திருந்த இளையவனின் திருமணம், அவன் விருப்பப்படியே சுற்றம்சூழ, குறிப்பாக அவன் உடன்பிறந்தவர்கள் சூழ நல்லபடியாகவே நடந்து முடிந்தது.

ராகவனின் நண்பன் செந்திலும் தன் மனைவி, மக்களோடு திருமணத்திற்கு வந்திருந்தான். தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நல்ல பதவியில் இருக்கிறான் செந்தில்.

“டேய் மச்சான், கல்யாணச் சாப்பாடு போடலைன்னு இனிமே நீ சொல்லக்கூடாது.” மதிய விருந்து முடிந்து வந்த நண்பனிடம் ராகவன் சொல்ல,

“இது கதிரோட கல்யாணச் சாப்பாடு, உன் கல்யாணச் சாப்பாடு நீ இன்னும் போடலைத் தான்” என்று ராகவனை வெறுப்பேற்றிவிட்டே சென்றான் செந்தில்.

சம்பிரதாயங்கள், கல்யாண விருந்து, ஃபோட்டோ ஷுட் எல்லாம் முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் செங்குளத்திற்கு வர, முன்மாலைப் பொழுதாகி விட்டது.

அன்று சாயங்காலமே மறுவீட்டு விருந்து என்று மறுபடியும் குமாரசாமியின் வீடு பரபரப்பாக, கலெக்டர் என்ற பந்தா எதுவுமின்றி வீட்டின் மருமகளாக அத்தனை வேலைகளையும் பொறுப்பாக நின்று கவனித்தாள் மலர்விழி.

கபிலனும் காமாட்சியும் இத்தனை நாட்களில் முதன்முதலாக நேரில் ஒரு திருமணத்தைப் பார்த்த குஷியில் சிறகு முளைத்த சிட்டுக்களாக பறந்து அந்த வீட்டையே அழகாக்கிக் கொண்டிருந்தார்கள்.

 விருந்து முடிந்து பெண்வீட்டார்கள் கிளம்பிச் சென்றிருக்க, நல்ல முகூர்த்த நேரத்தில் மணமக்களை முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு, மலர்விழி வீட்டுக்கு கிளம்பினாள்.

சிறியவர்கள் அத்தனை பேரையும் பத்மாவும் சரோஜாவும் தங்களோடு ராகவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.

ஆனந்தியும், ஜெயந்தியும் கூட மலர்விழியோடு கிளம்ப ஆயத்தமாக, “இன்னைக்கு அவளை இங்க தங்க சொல்லுறதை விட்டுட்டு நீங்களும் கூட கிளம்புறீங்களா?” என்று தன் பெண்களிடம் சண்டைக்கு வந்தார் தெய்வானை.

“உங்களுக்கு தேவைன்னா, நீங்களே சொல்லுங்க ம்மா” என்றாள் ஜெயந்தி.

“ராகவா, இன்னைக்கு நீயும் மலரும் இங்க தங்குங்க டா” ஹாலில் நிர்மல், மாதவன் சகிதம் உக்கார்ந்திருந்த மகனிடம் தன் தயக்கத்தை உதறி சொல்லிவிட்டார் தெய்வானை.

“இல்ல… பிள்ளைங்க வீட்டுக்கு போய்ட்டாங்க.” சட்டென்று பதில் வந்தது மலர்விழியிடமிருந்து.

“நீங்க இங்க தூங்குங்க மலர். நான் போய் பிள்ளைங்களைப் பாத்துக்குறேன்” மலர்விழி மறுத்துச் சொல்ல வழியின்றி சிதம்பரத்தின் மனைவி கணவரோடு ராகவன் வீட்டுக்கு செல்ல,

“இன்னைக்கு நம்ம வீட்டுலயே தூங்குவோமா ராகவா?” தம்பியிடம் ஆசையாக கேட்டாள் ஆனந்தி.