Advertisement
ஒருவனின் ஆசைக்காக அத்தனை பேரின் வேண்டுதல்களும் ஆசைகளும் நிறைவேறாமல் போவது எந்த விதத்திலும் நியாயமில்லை., என்று நியாயவாதியாக யோசித்த திலகவதி.,
‘தன் மகனை மெதுமெதுவாக இதிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும்‘ என்று நினைத்துக் கொண்டார்.
அவனுடைய பாசமும் அன்பும் அவருக்கு புரிந்தது தான்., அவன் வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும்., தன் மகனின் மனம் என்னவென்று தெரியாத அளவிற்கு ஒன்றும் தெரியாத தாய் இல்லையே., என்பதை யோசித்துக் கொண்டே அவளை எப்போதும் போல டிராயிங் கிளாஸ்க்கு அழைத்துக்கொண்டு சென்றார்.
அன்று டிராயிங் வகுப்பில் ஒரு இயற்கை காட்சியை கொடுத்து இதை பென்சில் ட்ராயிங் செய்ய வேண்டும் என்று அவளுக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அதில் அழகான மலையும்., அதன் மேல் மேகங்கள் ஓடுவது போல இருந்தது., அந்த மேகத்தை பார்த்துக் கொண்டே இருந்தவள்., ‘இத இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கிறோமே‘., என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அழகான மலைமுகடு., அதன் மேல் மிதக்கும் மேகம்., ஆங்காங்கு தெரியும் வெளிச்சக் கீற்று., சுற்றிலும் இயற்கையான செடி கொடிகள் என யோசித்துக் கொண்டே இருந்தவள்., அதை அவளால் மனதிற்குள் முழுதாக உள்வாங்க முடிந்தது.
ஏனோ மற்ற ஓவியங்களில் இருந்து இந்த ஓவியம் மட்டும்., அவளுக்கு மிகவும் நன்றாக வந்திருப்பதாக அவளுடைய ஓவிய பயிற்சியாளர் திலகவதியிடம் சொல்லியிருந்தார்.,
திலகவதியும் அந்த ஓவியத்தைப் பார்த்து விட்டு., “அழகா இருக்க அம்மு“., என்று சொன்னார்.
“அத்தை நான் இதுக்கு முன்னாடி இந்த இடத்தை எங்கேயோ பார்த்து இருக்கேன்., இதே மாதிரி மேகம், இதே மாதிரி செடி, இதே மாதிரி லேசான வெளிச்சம் பார்த்திருக்கேன் பார்த்திருக்கேன்., இந்த இடத்தை இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கேன்“., என்று மீண்டும் சொன்னாள்.
அவருக்கு புரிந்தது., ‘இவள் விபத்திற்கு முன்னாடி எங்கேயோ பார்த்தது., அவளுக்கு லேசாக நினைவு வந்து செல்கிறது., முழுதாக என்று வருமா‘., என்று யோசித்துக் கொண்டு இருந்தவருக்கு ‘சரி எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்தால் கூட போதும்‘ என்று நினைத்துக் கொண்டதை அன்று சரவணனிடம் போனில் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவனோ, “அவள் வரைந்ததை போட்டோ எடுத்து எனக்கு கொஞ்சம் அனுப்புங்க ம்மா“., என்று கேட்டான்.
அவள் ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் ல் இருக்கும் போது அவனுடைய அம்மா அவள் வரைந்ததை போட்டோ எடுத்து அவனுக்கு அனுப்பி வைத்தார்.
அதை பார்த்தவனுக்கு ‘ஒருவேளை இவளை மீண்டும் ஊட்டிக்கு அழைத்து சென்று., அவள் கல்லூரி சுற்றுலாவில் பார்த்த இடங்களை மீண்டும் காட்டினால்., ஒருவேளை நினைவு வருமோ‘., என்று யோசித்தான்.
அதை கண்டிப்பாக நாளை மருத்துவரிடம் செல்லும் போது கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
ஏற்கனவே மருத்துவரிடம் போனில் இவன் கல்லூரிக்கு சென்றது., அவளுடைய பெற்றோர்களை பார்த்தது என அனைத்தையும் சொல்லி இருந்தான்.
அவரும் “கூட்டி வாருங்கள் அவளிடம் பேசி பார்ப்போம்” என்று சொல்லியிருக்கிறார். ‘நிச்சயமாக‘ என்று சொல்லியிருந்தான்.
மறுநாள் மதியத்திற்கு மேல் அவளுக்கு டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் என்பதால்., அதையும் தன் அம்மாவிற்கு நினைவு படுத்தியவன் “நாளை மாலை இங்கிலீஷ் வகுப்பு மட்டும் வேண்டாம்“., என்று சொல்லி விடுங்கள் என்று சொல்லி இருந்தான்.
மாலை அவன் வந்த பிறகு ஓவியத்தைப் பார்த்து விட்டு “ரொம்ப அழகா வரையுற அம்மு“., என்று சொன்னான்.
“நல்ல வரைந்து இருக்கேனா., நெஜமாவே தானே” என்று அவளும் சிரித்தபடி அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ஆமா இந்த இடத்தை எங்கேயோ பார்த்தேன்னு சொன்னியாமே அம்மாட்ட., எங்க பார்த்த நியாபகம் இருக்கா” என்று கேட்டான்.
“அதுதான் எனக்கு சரியா தெரியல., ஆனா எங்கேயோ பார்த்து இருக்கேன்., இந்த மேகம்., மலை அப்புறம் வந்து” என்று அவள் நினைவுகளை மீட்க அவளுமே முயன்று கொண்டிருந்தாள்.,
அப்போது அதிகமான சிந்தனையில்., அவள் எதுவும் குழம்பி விடக் கூடாது என்ற நினைவில் திலகவதி தான்., “ஓகே ஓகே அதை மெதுவா யோசிப்போம்., இன்னைக்கு பாட்டு பாடி காட்டு“., என்று சொன்னார்.
அவன் கொடுத்த பாடலில் ஒரு பாடலை மட்டும் அழகாக பாடி முடித்தாள்., அவள் கண்மூடி பாடும் போதே அம்மாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.,
ஏனெனில் அந்த அளவிற்கு உள்வாங்கி பாடியிருந்தால்., அவளுக்கு நினைவுகள் இல்லாமல் போனாலும்., அவளுடைய ஒவ்வொரு செயல்களும்., அவளுடைய செய்கையில் வெளியே வந்து கொண்டிருப்பதை அவர்களால் உணர முடிந்தது.,
ஏனெனில் அதில் லயித்து அதைப் பாடும் போது அவளுடைய வேறு எந்த நினைவும் இல்லாமல் அந்த பாடல் மட்டும் தான் அவளுக்குள் உள்ளிறங்கி இருப்பதை உணர முடிந்தது., அவள் பாடுவதை சத்தமில்லாமல் ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தான் அவன்.
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா?சுகமா?
உன் தனிமை சுகமா?சுகமா?
வீடு வாசல் சுகமா?
உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா?
உன் பொய்கள் எல்லாம் சுகமா?
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா?
மறுநாள் மதியம் டாக்டரிடம் செல்லும் போது அவளிடம் சாதாரணமாக பேச்சு கொடுப்பது போல டாக்டர்.,
‘அவள் கல்லூரி விஷயங்களும்., அவளுடைய வீட்டைப் பற்றியும் மெதுமெதுவாக ஹின்ட் கொடுத்தது போல பேச., அவளுக்கு சரியான ஞாபகம் இல்லாவிட்டாலும்., அவள் ஆழ்மனதில் பதிந்த சில விஷயங்கள் அவளறியாமல் வெளியே வரத் தொடங்கியிருந்தது‘.,
கட்டைவிரலை மட்டும் தூக்கி சரவணனுக்கு காட்டிய படி மீண்டும் கேள்விகளை கேட்கத் தொடங்கினார்., அப்போது “நல்ல பாட்டு பாடுவியாமே“., என்று கேட்டார்.
தலை நிமிர்ந்து பார்த்தவள்., “அதுதான் டாக்டர் எனக்கும் தெரியல எனக்கு இவ்ளோ நல்ல பாடத் தெரியும் ன்னு எனக்கே தெரியாது“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,
“முன்னாடி பாடி இருக்கீங்க அப்புறம் அதை பத்தி யோசிச்சு இருக்க மாட்டீங்க“என்று சொன்னார்.,
“உம் அப்படியும் இருக்குமோ., என்று டாக்டரிடம் கேள்வி கேட்டவள்., பின்பு அமைதியாக “ஏன் டாக்டர் நான் எல்லாத்தையும் மறந்து இருக்கேனா“., என்று கேட்டாள்.
“இல்லையே உனக்கு இதோ உன் அத்தை ஞாபகம் இருக்கு., சரவணன் ஞாபகம் இருக்கு., உன்னோட ஸ்டடீஸ் பத்தி எல்லாம் ஞாபகம் இருக்கே“., என்று சொன்னார்.
“என்னோட ஸ்டடீஸ் என்னது“., என்று கேட்டாள்.
“கம்ப்யூட்டர்” என்று சொல்ல., ம்ம் என்று தலையை ஆட்டி கொண்டாள்.
ஆனால் ஒரு குழப்பமான முகபாவம் அவளிடம் தெரிவதை கண்டு அப்படியே பேச்சை மாற்றியவர்., “உனக்கு உன்னுடைய எல்லா விஷயங்களும் உனக்கு தான் கரெக்டா ஞாபகம் இருக்கே“., என்று சொன்னார்.
“ஆமா” என்று அவளே சற்று சமாதானம் செய்து கொண்டாள்.
டாக்டர் இடம் சரவணன் கன்னடத்தில் “ஒன்னும் பிரச்சினை இல்லையே“., என்று கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல., லேசா குழப்பி விட்டு இருக்கேன்., கொஞ்சம் அப்பப்போ யோசிக்கட்டும்., முடிஞ்சா அவளுக்கு கம்ப்யூட்டர் பத்தி நிறைய தெரியும் அப்படிங்கிறதால., அவளை சிஸ்டம் ல விடுங்க., என்னென்ன பண்றா அப்படிங்கறத கவனிங்க “., என்று சொன்னார்.
ஓகே டாக்டர் என்று சொன்னபடி அன்றைய ட்ரீட்மென்ட் முடித்துக் கொண்டு டாக்டரிடம் சில அறிவுரைகளை கேட்டு கொண்டு கிளம்பினர்.,
அவளோ கிளம்பு முன் டாக்டரிடம் “எனக்கு அந்த மஞ்ச கலர் டேப்லெட் வேண்டாமே., அது ரொம்ப பெருசா இருக்கு“., என்று கேட்டாள்.
டாக்டரோ சிரித்துக் கொண்டே “இந்த ஒரு தடவை சாப்பிடு நெக்ஸ்ட் டைம் வரும் போது மாத்திரை யை குறைத்துவிடுவோம்“., என்று சொன்னார்.,
சரி என்று தலையை ஆட்டியபடி அங்கிருந்து கிளம்பினாள்.
வெளியே வரும்போதே சற்று யோசனையோடு வந்தவள் சரவணனிடம் “நான் என்ன படிச்சிட்டிருந்தேன்., உங்களுக்கு தெரியுமா“., என்று கேட்டாள்.
“அது தெரியுமே” என்று சொன்னான்.
“ஆமா அப்புறம் எதுக்கு நான் காலேஜ் போகலை“., என்று கேட்டாள்.
அது உனக்கு இப்ப தான் ஆக்ஸிடென்ட் ஆச்சி இல்ல., இன்னும் பெய்ன் இருக்குல்ல., கழுத்து வலி முதுகு வலி இருக்கும் இல்ல., அதனால தான் அந்த டாக்டர் நல்ல சரியானதுக்கப்புறம் காலேஜிக்கு அனுப்பினால் போதும் ன்னு சொல்லிட்டாங்க., அதனால தான் காலேஜ் அனுப்பாம வச்சிருக்கோம்“., என்று சொல்லவும்.,
அப்ப சரி என்று அவளை அவளே சமாதானம் செய்து கொண்டாள்.
தனக்கு தானே தன்னை சமாதானம் செய்து கொண்டவள் ‘எங்கே படித்தேன்‘ என்பதை கேட்க மறந்து விட்டாள், ‘ஏன் உங்களோடு இருக்கிறேன்‘ என்பதையும் மறந்து விட்டாள்.
அவளுக்கு அடிக்கடி மறதியும் ஆட்கொள்ளுகிறது என்பதை இந்த ஆக்சிடென்ட் க்கு பிறகு என்பதாக இருக்கும் என்று டாக்டர் கணித்து இருந்தார்.,
அதற்கு மேல் வேறு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை வீட்டில் உள்ளவர்களும்., அவள் எப்படியும் இன்னும் நாளை காலைக்குள் இதில் பாதியை மறந்து விடுவாள் என்பது தெரிந்தது தான்., அதனால் அவள் இதற்கு மேல் துருவித்துருவி கேட்க மாட்டாள் என்ற எண்ணத்தோடு விட்டுவிட்டனர்.
அதைப்பற்றி ஒரு முறை டாக்டரிடம் சொல்லி இருந்த போது டாக்டர் தான் “அவள் தொடர்ந்து செய்யும் செயல்கள் மட்டும் தான் அவளுக்கு தொடர்ச்சியாக நினைவில் நிற்கும்., மாற்றி மாற்றி சொல்வதோ., அல்லது ஒரு முறை சொல்லிவிட்டு அதை அத்தோடு விட்டு விட்டால்., அதன் பிறகு அவளுக்கு அந்த அளவுக்கு அது மனதில் நிற்காது” என்பதையும் தெளிவு படுத்தி இருந்தார்.,
“ஏனெனில் அவளுக்கு இப்பொழுது ஆழ்மனதில் ஒரு நினைவு ஓடிக்கொண்டிருக்கும்., அந்த நினைவை அவளாகவே வெளியில் எடுத்தால் ஒழிய., அவளுக்கு அது முழுவதுமாக நினைவுக்கு வராது., மற்றபடி இப்பொழுது நடைமுறையில் இருப்பவை ஞாபகத்திற்கு வந்தாலும்.,
அதிகமாக ஆழ்ந்து திரும்பத் திரும்ப ஒரு விஷயங்களை செய்தால் மட்டுமே அவை எப்பொழுதும் அவளுக்கு ஞாபகத்தில் இருக்கும் படியாக இருக்கும்., மற்றவை நாற்பத்தி எட்டு மணி நேரம் ஞாபகத்தில் இருந்தாலே அவளுக்கு அதிகம் தான்“., என்று சொல்லியிருந்தார்.
அதனாலேயே சில விஷயங்கள் அவர்கள் அறியாமல் பேசி விட்டாலும் மீண்டும் அதைப் பற்றி பேசாமல் இருந்து கொள்ள முயற்சி செய்வார்கள்., ஏனெனில் நிச்சயமாக அடுத்து கொஞ்ச நேரத்தில் அவற்றை மறந்து விடுவாள் என்பதால்.
அதனால் தான் டாக்டரும் சொல்லியிருந்தார்., “அவளுக்கு நினைவு வந்த பிறகு., இப்பொழுது உள்ள நினைவுகள் எந்த அளவு இருக்கு அவளுடைய மனதில் நிற்கும் என்பது தெரியாது“., என்றிருந்தார்.
காரை ஓட்டிக் கொண்டிருந்த சரவணனும் ‘வீட்டுக்கு போனவுடன் இவளுக்கு கம்ப்யூட்டர் எந்த அளவிற்கு தெரிகிறது என்பதை பார்த்து விடவேண்டும்‘., என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
திலகவதி ‘எப்படியும் மறந்து போவாள்., நிச்சயமாக நினைவு வந்த பிறகு இவனையும் மறந்து தான் போவாள்., அதை இவனுக்கு எப்படி புரிய வைப்பது‘ என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
வரங்களை சாபமாய் மாற்றுவதும் மறதி தான்., சாபத்தை வரமாய் மாற்றுவதும் அதே மறதி தான்., இங்கு வரமா சாபமா என்பது புரியாத நிலையில் இருவரும்.,
அளவுக்கு அதிகமான அன்பும்
எல்லையின்றி கொண்டாடப்படும்
நம்பிக்கையும் இருக்கும்
இடத்தில் கண்டிப்பாக
ஒருநாள் கண்ணீருக்கும்
ஏமாற்றத்திற்கும் இடம் உண்டு..
அது நட்பாக இருந்தாலும் சரி..
காதலாக இருந்தாலும் சரி.
Advertisement