அவன் கால் சரியாகி பேங்க்கு வேலைக்குச் செல்லும் நாளும் வந்தது. அன்று எப்போதும் போல் வேலைக்கு கிளம்பிச் சென்றான். வீட்டுக்கு வந்ததும் அன்னையிடம் பேச வேண்டும் என்ற முடிவில் அவன் இருக்க காலை பதினொரு மணி அளவில் “ரகு சார் உங்களைப் பாக்க ஒருத்தர் வந்துருக்கார்”, என்று சொன்னான் பியூன்.
“யாரா இருக்கும்?”, என்று எண்ணி வெளியே சென்று பார்த்தவன் அங்கே இருந்தவரை யாரென்று தெரியாமல் “ஹலோ சார் என்னையா பாக்க வந்தீங்க? நீங்க யாருன்னு தெரியலையே?”, என்று குழப்பமாக கேட்டான்.
“நீங்க ரகுராம் தானே?”
“ஆமா, என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?”
“உங்க பேர் மட்டும் இல்லை, உங்க ஜாதகமே எனக்கு தெரியும்”, என்று மனதில் எண்ணியவர் “நான் ஜானகியோட அப்பா”, என்றார்.
“ஜானுவோட அப்பாவா? எப்படி சார் இருக்கீங்க? ரொம்ப நாளா உங்களைப் பாக்கணும்னு நினைச்சேன். இப்ப தான் பாக்க முடிஞ்சிருக்கு”, என்று மலர்ந்த முகத்துடன் பேசினான்.
“எது எப்ப நடக்கணுமோ அப்ப தானே நடக்கும்?”, என்று அவர் சொல்ல “ஏதாவது சாப்பிடுறீங்களா சார்?”, என்று கேட்டான்.
“இல்லை, தம்பி வேண்டாம். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“வாங்க சார், அங்க உக்காந்து பேசலாம்”, என்று சொல்லி அவரை அருகில் இருந்த காபி ஷாப்புக்கு அழைத்துச் சென்றான்.
“மிர்ச்சி நீ செம ஸ்பீட் தான் டி? நான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு தான் கேட்டேன்? அதுக்குள்ள நீ சம்பந்தம் பேச அப்பாவை அனுப்பிட்ட. என் செல்லம் டி நீ”, என்று மனதுக்குள் கொஞ்சிக் கொண்டான் அவளை.
அவர் வேண்டாம் என்று சொன்னாலும் அவருக்கு காபி ஆர்டர் செய்தான். இருவருக்கும் காபி வந்ததும் அவரையும் குடிக்கச் சொல்லி தானும் பருகியவன் “சொல்லுங்க சார், என்ன விஷயம்? சொல்லி இருந்தா நான் வீட்டுக்கு வந்திருப்பேனே?”, என்று கேட்டான்.
“நீங்க ஜானு கிட்ட கல்யாணம் பத்தி பேசுனீங்களாம்?”, என்று அவர் தடுமாற்றத்துடன் சொல்ல அவர் முகத்தைக் கண்டு அவனுக்கு திக்கென்று இருந்தது. சம்மதிக்க மாட்டாரோ என்று பதறினான்.
“ஆமா சார். எனக்கு உங்க பொண்ணைக் கட்டிக் கொடுக்குறீங்களா? அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். நானே உங்க கிட்ட வந்து பேசணும்னு நினைச்சேன்”, என்று அவன் சொல்ல “தாராளமா கட்டித் தரேன்”, என்று மோகன் சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது. “ஆனா”, என்று அவர் இழுக்க குழப்பத்துடன் அவரைப் பார்த்தான்.
“உங்க குழந்தை உங்க கூட இல்லைன்னா மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்கும்”, என்று அவர் சொன்னதும் அவன் முகம் கருத்துப் போனது. அவரையே இமைக்காமல் பார்த்தான். இதை அவன் எதிர் பார்க்கவே இல்லை.
“என்ன தம்பி அமைதியாகிட்டீங்க? என் பொண்ணை உங்களுக்கு கட்டிக் கொடுக்க எனக்கு சம்மதம் தான். ஆனால் குழந்தை. உங்களுக்கு என் நிலைமை புரியுது தானே? ஒரு தகப்பனா என் பக்கமும் பாருங்க”, என்று அவர் சொல்ல அவனுக்கு அவர் மனது புரிந்தது. எந்த பெற்றோரும் மகளை இன்னொரு பெண்ணின் குழந்தைக்கு வளர்ப்பு தாயாக அனுப்ப மாட்டார்கள் தானே?
“எனக்கு உங்க மனசு புரியுது சார். பொதுவாவே பொண்ணை ரெண்டாதாரமா கட்டிக் கொடுக்க யோசிக்க தான் செய்வாங்க. என் விசயத்துல குழந்தையையும் ஏத்துக்கணும்னு சொல்றது பெரிய விஷயம் தான். என் தப்பு புரியுது சார். சாரி என்னால என் குழந்தையை விட முடியாது. என் நிலைமை புரிஞ்சும் நான் ஜானு கிட்ட அப்படி பேசினது தப்பு தான். இனி இந்த விஷயமா அவ கிட்ட பேச மாட்டேன். நீங்க அவளுக்கு வேற மாப்பிள்ளை பாருங்க”, என்று இறுக்கத்துடன் சொன்னான்.
“பரவால்ல, சொன்ன உடனே புரிஞ்சிக்கிட்டீங்க. புரிய வைக்க நேரம் ஆகுமோன்னு நினைச்சேன். ரொம்ப நன்றி தம்பி புரிஞ்சிக்கிட்டதுக்கு”
“என் நிலைமையை எனக்கு புரிய வச்சதுக்கு நான் தான் சார் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்”, என்று வேதனையுடன் சொல்ல அவர் முகமும் வேதனையில் கசங்கியது. மோகன் இப்படி பட்டவர் எல்லாம் இல்லை. அன்பே உருவானவர், குழந்தைகள் என்றால் அவருக்கு உயிர். ஆனால் அப்படிப் பட்டவர் இன்று ஒரு குழந்தையை நிராகரிக்கிறார் என்பதை அவராலே தாங்க முடிய வில்லை. அது மட்டுமல்லாமல் ரகுவின் காதலும் அவருக்கு புரியுமே.
அதற்கு மேல் அவனிடம் பேச முடியாமல் “நான் வரேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டவருடன் அவனும் எழுந்தான்.
போகும் முன் “அப்புறம் தம்பி, என் பொண்ணு ஏதாவது கேட்டா….”, என்று அவர் தயங்க “கண்டிப்பா நீங்க இப்படி பேசினதை நான் அவ கிட்ட சொல்ல மாட்டேன் சார். எந்த அப்பாவும் தன்னோட குழந்தை முன்னாடி குற்றவாளியா இருக்க விரும்ப மாட்டாங்க. நீங்க அவ கிட்ட கல்யாணத்துக்கு நான் சம்மதம் சொல்லலைன்னே சொல்லிருங்க. அவ என் கிட்ட கேட்டா நான் விளையாட்டுக்கு பண்ணினேன்னு சொல்லிறேன்”, என்றான்.
“சரிங்க தம்பி, நான் வரேன். கஷ்டப் படுத்திருந்தா மன்னிச்சிக்கோங்க”, என்று சொல்லி விட்டு மனம் கணக்க சென்று விட்டார். அவனுக்கும் வலித்தது. “என்னோட காதல் இந்த ஜென்மத்துல எனக்கு இல்லை”, என்று எண்ணிக் கொண்டான்.
அன்று மாலை வேலை முடிந்து மோகன் வீட்டுக்கு சென்ற போது ஆவலே உருவாக அவரின் முகம் பார்த்தாள் ஜானகி. விஷ்ணுவும் தேவகியும் கூட அவரின் பதிலுக்காக காத்திருந்தார்கள். அவர்களுக்கு தெரியுமே அவர் இன்று ரகுவைப் பார்த்து பேசுவார் என்று.
அதிக ஆவலில் ஜானகி ரகுவை அழைத்துக் கேட்பதற்காக அவனுக்கு அழைத்தாள். ஆனால் அவன் போனை எடுக்க வில்லை. அதனால் தான் தந்தைக்காக காத்திருந்தாள்.
“அப்பா ரகு கிட்ட பேசினீங்களா? என்ன சொன்னான் பா? கல்யாணம் முடிவு பண்ணிட்டீங்களா? ரகு அவன் அம்மா கிட்ட பேசிட்டானா?”, என்று எதிர்பார்ப்புடன் கேட்ட மகளை ஏமாற்ற தந்தைக்கு மனம் வலித்தது.
“சாரி டா மா. என்னோட பதில் உனக்கு ஏமாற்றத்தை தான் தரும்”, என்று அவர் வேதனையாக சொல்ல “என்னப்பா சொல்றீங்க?”, என்று அதிர்வுடன் கேட்டாள்.
“நீ கல்யாணம்னு சொன்ன? ஆனா தம்பிக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லையாமே மா?”, என்று தெரிந்தே பொய்ச் சொன்னார்.
“என்னது? எண்ணமே இல்லையா?”, என்று அவள் அதிர “ஆமா மா, அப்படி தான் அந்த தம்பி சொல்லுச்சு. வேணும்னா நீயே கேட்டுப் பாரேன்”, என்று சொன்னவர் அதற்கு மேல் மகளின் அதிர்ச்சியையும் கண்ணீரையும் காண முடியாமல் அறைக்குள் சென்று விட்டார்.
“ஒருத்தங்களுக்கு நம்மளைப் பிடிக்கலைன்னா கட்டாயப் படுத்தக் கூடாது டா அம்மு. ஒரு தடவை உன்னை விட்டுப் போனவர் மறுபடியும் உன்னை ஏத்துக்குவார்ன்னு எப்படி எதிர் பாக்குற? அவர் ஒரு பையனுக்கு அப்பா. ரகு அவர் மனைவி கூட எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்துருப்பார்? அவர் எப்படி உன்னை அந்த இடத்துல வைப்பார்? உன் மனசை மாத்திக்கோ ஜானு”, என்று நிதர்சனத்தை சொல்லி விட்டுச் சென்றான் விஷ்ணு.
“எல்லாருக்கும் விடிவு வருது, என் மகளுக்கு எப்ப தான் விடியுமோ?”, என்று தனக்கு தானே புலம்பி கொண்டு சென்றாள் தேவகி.
அனைவரும் சென்றதும் திகைத்து போய் சோபாவில் அமர்ந்தாள் ஜானகி. அவள் முகம் கோபத்தாலும் அழுகையாலும் அவமானத்தாலும் சிவந்து போனது. “இவன் என்னைப் பத்தி என்ன நினைச்சான்? இளிச்ச வாயின்னா? இவனே வந்தான் கல்யாணம்னு பேசினான்? இப்ப எண்ணமே இல்லைன்னு சொல்லிருக்கான்”, என்று கடுப்புடன் எண்ணியவள் அவனுக்கு அழைத்தாள். அவன் எடுக்க வில்லை. எடுத்து அவனால் என்ன பேச முடியும்?
அவள் மீண்டும் மீண்டும் அழைக்க வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த ரகு அவள் போனை எடுக்கவே இல்லை. அதனால் அடுத்த நாளே வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் அவனைக் காண.
அதே போல பியூன் வந்து சொல்ல வெளியே வந்தவன் சோர்ந்து அமர்ந்திருந்தவளைக் கண்டான். அவளது கலங்கிய முகம் அவளது உணர்வுகளை பறைசாற்ற இப்போதைக்கு அவளுடன் பேச தனிமை தான் தேவை என்று எண்ணி அவளை அந்த கட்டிடத்தின் மாடிக்கு அழைத்துச் சென்றான்.
உடைந்த சேர்கள் எல்லாம் ஒரு பக்கம் குவிந்திருக்க மற்றொரு பக்கம் நின்றார்கள். மேலே கூலிங்க் சீட் போட்டு கவர் செய்யப் பட்டிருந்தது.
அங்கே சென்றதும் அவள் அவனையே பார்க்க மனதில் எழுந்த வருத்தத்தை மறைத்து விட்டு புன்னகையுடன் வந்தவன் “என்ன மிர்ச்சி, திடீர்னு பேங்க்க்கு என்னைத் தேடி வந்திருக்க?”, என்று கேட்டான்.
“என்னை அப்படிக் கூப்பிட்ட உன்னைக் கொன்னுருவேன் டா”, என்று பழைய ஜானகியாக அவள் கத்த “ஏய் என்ன இன்னைக்கு காரம் தெறிக்குது? இது பேங்க் டி. கத்தாத”, என்றான்.
“கத்தக் கூடாதா? எனக்கு இருக்குற கடுப்புல உன்னை தூக்கி அடுப்புல வச்சிருவேன்”, என்று அவள் சொன்னதும் அவன் அவளின் இடையைப் பார்த்தான்.
“என்ன டா பாக்குற?”, என்று அவள் கேட்க “இல்லை இந்த சின்ன இடுப்புல என்னை எப்படி தூக்குவ?”, என்று கேட்டான். அவளோ தீயாக முறைத்தாள்.