திகம்பரனின் திகம்பரி அவள் 17 2 11706 இப்படியே ஒரு மாதம் செல்ல, ஈஷ்வர் செய்த வேலையால் நரசிம்மனுக்கு இவர்கள் விஷயம் காதை எட்டிவிட்டது. “டேய் என்னடா செஞ்சு வச்சிருக்க..?” விஷ்ணு கோவத்தில் கத்த, “ஏன் இப்படி பண்ணீங்க..? இப்போ இது ரொம்ப முக்கியமா..?” இப்படி என்று போனில் சொல்ல பல்லவியும் ஆற்றாமையுடன் கேட்டாள். “எனக்கு முக்கியம் தான், யாராலும் எங்களை பிரிக்க முடியாத அளவு எல்லா விதத்திலும் எங்க உறவை பலப்படுத்திக்கணும்ன்னு தோணுச்சு, அதனால தான் செஞ்சேன்.. இதுல என்ன தப்பு..?” விஷ்ணு, பல்லவி இருவரிடமும் இவனும் காய்ந்தான். “டேய்.. உன்னோட முடியலைடா.. கண்டிப்பா உங்க அப்பாக்கு தெரிஞ்சிடும்.. ரெஜிஸ்டர் ஆபிஸ்ல நம்ம ஏரியா ஆபிசர் இருக்கிறதை மறந்துட்டியா..?” விஷ்ணு எரிச்சலாக சொன்னான். ஆம் ஈஷ்வர் ரெஜிஸ்டர் மேரேஜுக்கு அப்ளை செய்திருக்க, நாளை ரெஜிஸ்டர் ஆபிஸ் வர சொல்லியிருந்தனர். பல்லவி ஐடி எல்லாம் இவனே பணம் கொடுத்து நகல் எடுத்து விட்டிருந்தான். அங்கு இருந்த இவர்கள் ஏரியா ஆபிசர் நரசிம்மன் பேர் பார்த்து சந்தேகம் கொண்டு விசாரித்ததில் ஈஷ்வர் தான் என்று கன்பார்மாக நரசிம்மனுக்கு தகவல் சொல்லிவிட்டார். அவர் உடனே ஈஷ்வருக்கு அழைக்க, உடன் இருந்த விஷ்ணுவிடம் போன் எடுத்து காட்டினான். “தெரிஞ்சிடுச்சு.. நீ நைட் வீட்டுக்கு போகாத, எப்படியும் மாமா செம கோவத்துல இருப்பார்..” விஷ்ணு சொல்ல, “இல்லை விஷ்ணு.. நேர்ல பேசிடலாம்..” என்றான் அவன். “ஈஷ்வர் சத்தியமா எனக்கு வர கோவத்துக்கு உன் மண்டையை உடைக்கணும்ன்னு வெறியாயிருக்கு.. ஏண்டா இப்படி ஆகிட்ட..?” “விஷ்ணு.. நான் போலன்னா லவிக்கு தான் பிரச்சனை, இந்நேரத்துக்கு அவ எங்க இருக்கான்னு பிடிச்சிருப்பார், அது வேண்டாம், நான் நேர்ல போறேன்..” என்று வீட்டிற்கு கிளம்ப, விஷ்ணு அவனை தனியே விட முடியாமல் உடன் சென்றான். பல்லவி அங்கு உச்சகட்ட பதட்டத்தில் இருக்க, ஈஷ்வர் வரவைத்து கொண்ட தைரியத்துடன் தந்தை முன் நின்றான். நரசிம்மனுக்கு மகனை பார்க்க பார்க்க அவ்வளவு கோவம், வேதனை. “உங்ககிட்ட இருந்து இதை நான் முன்னமே எதிர்பார்த்திருக்கணும்..?” உடல் தளர்ந்து போய் நின்றார் மனிதர். கங்கா, மகா இருவரும் நரசிம்மன் சொல்லியிருந்த விஷயத்தில் ஈஷ்வரையே நம்ப முடியாமல் பார்த்து நின்றிருந்தனர். அதிலும் மகா பக்கத்தில் நின்ற விஷ்ணுவை முறைத்து பார்த்தாள். “என்னை ஏன் மேடம் முறைக்கிறீங்க..?” விஷ்ணு அவளிடம் கேட்கவே செய்தான். “நீங்க என் அண்ணனை சரியா கைட் பண்ணியிருக்கணும்..” என்றாள் அவள் கோபத்துடன். “ஏன் கல்யாணம் செய்றது தப்பா என்ன..?” விஷ்ணு வேண்டும் என்றே சத்தமாகவே சொல்ல, நரசிம்மன் அவனை பார்த்தவர், “அப்போ நீங்க ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல, உங்களை விட சின்ன பையன் செஞ்சுக்கிட்டான், நீங்களும் பண்ணிக்கோங்க..” என்றார் ஆத்திரத்துடன். “செஞ்சுப்பேன் தான், ஆனா பொண்ணு இல்லையே..?” செட் பண்ணேன் என்று அர்த்தத்தில் மகாவை பார்த்து புருவம் தூக்கி விஷ்ணு நக்கலாகவே சொல்ல, மகா கைகள் அவன் மண்டைய உடைக்க துறுதுறுத்தது. “நீங்க அவருக்கு சப்போர்ட் பண்ண தான இப்படி பேசிட்டு இருக்கீங்கன்னு தெரியுது..” நரசிம்மன் சொல்ல, “அப்படி ஒன்னும் பெரிய தப்பு அவன் பண்ணிடல மாமா, அந்த பொண்ணு வீட்ல வெளியே அனுப்பிடவும் இப்படி செஞ்சுட்டான், ஆனா ரெண்டு பேரும் தனி தனியா தான் இருக்காங்க, நீங்க விசாரிச்சிருப்பீங்களே..” “அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் பொறுமையா இருக்கேன்..” என்றவர் மகனை பார்த்தார். அவனோ அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்ட வருத்தம், பெற்றவர்கள் மீதான பயம் தவிர எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நின்றான். “நீங்க செஞ்சது தப்புன்னு உங்களுக்கு தோணவே இல்லையில்லை..” நரசிம்மன் நேரடியாக மகனிடம் கேட்டார். “என்னிக்கு இருந்தாலும் லவி தான் என் பொண்டாட்டின்னும் போது..” அவன் நிறுத்த, புரிந்த நரசிம்மன், “அதை எப்போ செஞ்சா என்னன்னு கேட்கிறீங்க..?” முடித்து வைத்தார். “ப்பா.. அப்போ எனக்கு இதை தான் செய்ய தோணுச்சு, அவங்க அப்பாக்கு எங்க விஷயம் தெரிஞ்சு அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டார், என்னை நம்பி டெலிபோன் பூத்ல அழுதிட்டு நிக்கிறா, அவளுக்கு நான் இருக்கேன்னு எப்படி நம்பிக்கை கொடுக்க இதை தவிர..?” இப்போதும் அவளின் அழுத முகம் அவனை பாதித்த வேதனை அவனிடம் தெரிந்தது. எப்படி இவ்வளவு காதல் அந்த பெண்ணிடம்..? இது தான் மொத்த குடும்பத்துக்கும் தோன்றியது. விஷ்ணுவிற்கு அவனின் லவி பைத்தியம் தெரியும் என்பதால் அமைதியாக நின்றான். “அப்போ நாங்க.. நான் உங்க மேல வச்ச நம்பிக்கை..” நரசிம்மன் அப்பாவாக கேட்க, “இந்த கல்யாண விஷயத்துல உங்க நம்பிக்கையை நான் உடைச்சிட்டேன்ப்பா, ஆனா கண்டிப்பா நீங்க பெருமை படக்கூடிய நல்ல நிலமைக்கு வருவேன், என்னை நம்புங்கப்பா..” ஈஷ்வர் பணிவாக, நிச்சயமாக சொல்ல, “இதுக்கு அப்பறமும் உங்களை நான் எப்படிங்க நம்பிறது..?” நரசிம்மனோ விரக்தியாக சொன்னார். “நம்புங்கப்பா.. நான் செய்றேன்..” “சரி நம்புறேன்.. அதுக்கு நீங்க இந்த ரெஜிஸ்டர் மேரேஜை நிறுத்தணும்..” என்றார் அவர். ஈஷ்வர்க்கு அவர் எங்கு வருகிறார் என்று புரிய, “அது கஷ்டம்ப்பா.. அவ கழுத்துல நான் கட்டுன தாலியே தொங்கும் போது இதுல என்ன ஆகிடும்..?” என்றான். “அது தான் நானும் சொல்றேன், இதுல என்ன ஆகிடும்ன்னு இந்த ரெஜிஸ்டர் மேரேஜ், நீங்க படிச்சு ஒரு நல்ல வேலையில உட்காருங்க, அப்பறம் நானே ஊர் உலகத்தை கூட்டி இந்த கல்யாணத்தை செஞ்சு வைக்கிறேன்..” “ப்பா.. எங்களுக்கு இந்த கல்யாணமே போதும்..” “இதை கல்யாணம் சொல்லாதீங்க, எதோ ஒரு கோயில்ல வச்சு ஒரு மஞ்சள் கயிறு கட்டிட்டா அது கல்யாணமாகிடுமா..?” ஆத்திரத்தோடு கத்தினார் நரசிம்மன். “ப்பா.. அதே மஞ்சள் கயிறை தான் நாலாயிரம் பேர் முன்னாடி கட்டுறோம், எங்க கட்டினாலும் மூணு முடிச்சு தான், அதோட அர்த்தம் மாறாது..” “இப்படி பேசி என்னை இன்னும் கோவப்படுத்தாதீங்க, உங்களுக்கு அந்த பொண்ணு தான் முக்கியமா போயிட்டாளா..? உங்களுக்கு எந்த விதத்துல நான் குறை வச்சேன். ஒரு நல்ல அப்பாவா இருக்கனும்ன்னு ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்றேன், என்கிட்ட இப்படி நடந்துக்க உங்களால எப்படி முடியுது..?” “தப்பு தான்ப்பா, மன்னிக்கவே முடியாத தப்பு தான், மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்லை, ஆனா என்னால லவியை விட்டு கொடுக்க முடியல.. என்ன செய்யட்டும்..?” “அப்போ அந்த பொண்ணுகிட்ட நானே பேசுறேன்..” இதற்கு தானே அவன் வந்தது. “நீங்க எதுக்குப்பா அவகிட்ட பேசணும்..? வேண்டாம்..” என்றான் தந்தையை நேர் கொண்டு. “உங்களை இப்படி எல்லாம் செய்ய வைக்கிறதே அந்த பொண்ணு தானே, அவங்ககிட்ட பேசுறதுல என்ன தப்பு..?” “அவ என்னை இப்படி செய்ய வைக்கல, அவ மேல நான் வச்ச காதல் தான் அவளையும் படுத்துது, அது உங்களுக்கு தெரியாது..” “எனக்கு எதுவும் தெரிய வேண்டாம், எனக்கு இப்போ தேவை அந்த ரெஜிஸ்டர் மேரேஜ் இப்போ வேண்டாங்குறது மட்டும் தான்..” “அது கஷ்டம்ன்னு நானும் முன்னமே சொல்லிட்டேன்ப்பா..” “அப்போ என்னை பகைச்சிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டிங்க..?” “நிச்சயமா இல்லைப்பா.. எனக்கு நீங்க எந்தளவு முக்கியமோ அதே அளவு லவியும் முக்கியம்..” “இது சரி வராது, உங்ககிட்ட பேசி எனக்கு புரிய வைக்க முடியாது, நான் அந்த பொண்ணுக்கிட்டே பேசிக்கிறேன்..” “நீங்க ஏன் அவகிட்ட பேசணும்..? நடக்கிற எதுவுக்கும் அவ காரணம் இல்லை, ஏதா இருந்தாலும் என்கிட்ட தான் நீங்க பேசணும்..” “உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா..? என் தலைக்கு மேல உங்க மேல நம்பிக்கை, பாசம் வச்சிருக்கேன், அதனால தான் உங்களை கஷ்டப்படுத்த கூடாதுன்னு இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன்.. இதுக்கு மேல என்னால முடியாது, நீங்க முதல்ல படிச்சு வேலைக்கு போற வழியை பாருங்க, அதுவரைக்கும் அந்த பொண்ணு என் பாதுகாப்புல இருக்கட்டும், இல்லை அவங்க வீட்ல பேசி அங்க விடலாம்..” “முடியாதுப்பா, எப்போ அவளை வீட்டை விட்டு அனுப்பினாங்களோ அப்போவே என் பொண்டாட்டி இனி அங்க போக மாட்டா..” “ஈஷ்வர்.. போதும் நிறுத்துங்க..” வீடு அதிர கத்தினார் மனிதர். மொத்த பேரும் பயந்தே போனர். “ஏங்க முதல்ல தண்ணி குடிங்க, ஈஷ்வர் அப்பா சொல்றதை கொஞ்சம் கேளுடா ஏண்டா இப்படி பண்ற..?” கங்கா மகனிடம் கேட்டபடி கணவருக்கு குடிக்க கொடுத்தார். மகாவிற்கோ வீட்டின் நிலை கண்ணில் கண்ணீரை தேங்க வைத்தது. இதில் எதுவும் பாதிக்க படாத ஆள் விஷ்ணு கைகளை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். “ப்பா.. இவ்வளவு டென்க்ஷன் எடுத்துக்காதீங்க, இப்போ என்ன ரெஜிஸ்டர் மேரேஜ் வேண்டாம் அவ்வளவு தானே, நடக்காது விடுங்க..” என, நரசிம்மன் மகனை சந்தேகத்துடன் பார்த்தார். “ஆனா லவி என் பாதுகாப்புல என் பொண்டாட்டியா தான் இருப்பா, நீங்க எப்போவும் அவகிட்ட போக கூடாது, அவளை எந்த விதத்திலும் கஷ்ட படுத்த கூடாது, இது என்மேல சத்தியம், மீற மாட்டிங்கன்னு நம்புறேன்..” முற்று புள்ளி வைத்தான். ஆனால் நரசிம்மனோ அவர் கனவிற்காக அந்த சத்தியத்தை மறந்தார், மகன் வைத்த முற்று புள்ளியையும் அழித்தார்.