திகம்பரனின் திகம்பரி அவள் 15 2 12870 “சரி வரவா சாப்பிட போலாம்..” விஷ்ணு நொடியே கேட்க, இது தான் என் விஷ்ணு, ஈஷ்வர் முகத்தில் ஒரு இளக்கம். “வேண்டாம், படிக்கணும் சொன்ன இல்லை, நீ படி, டாக்டருக்குகுகு படிக்கிற படிப்பாளிளிளி நீங்க எல்லாம்..” ஈஷ்வர் இழு இழு என்று இழுத்தான். “ஏன் இவ்வளவு கடுப்பு டாக்டர் மேல..?” புரிந்த விஷ்ணு புருவம் சுருக்கி கேட்டான். “பின்ன என்னை மாதிரி டிகிரி படிச்சா நல்ல நிலைக்கு வர முடியுமா..? நீங்க தான் வேற லெவல்..” “டேய் உனக்கும் மெரிட்லே டாக்டர் சீட் கிடைச்சது, நீதான் எனக்கு செட் ஆகாதுன்னு சொல்லிட்டு டிகிரி சேர்ந்த, உனக்கே தெரியும் எங்க எல்லாரையும் விட நீதான் படிப்பாளின்னு, அப்பறம் என்ன..?” “இதை நீ தான் சொல்லணும், எங்க அப்பாக்கு நான் சும்மா சுத்திட்டு இருக்கிற ரோட் சைட் ரோமியோன்னு நினைப்பு போல, அன்னிக்கு நான் டாக்டர் வேணாம் சொன்னப்போ நல்லது சொல்லிட்டு இன்னிக்கு மகா கூட என்னை கம்பேர் பண்ணி பேசுறார்..” தங்கையுடன் ஒப்பிட்டு பேசியதில் கோவம் தெறித்தது. “ஓஹோ..” நரசிம்மன் பற்றி பேசும் போது இந்த கோவம் புதிது. “மாமாகூட சண்டை போட்டியா..?” பெரியவனாக குரலில் கண்டிப்பு. “அவர் தான் என்கிட்ட முதல்ல கோவப்பட்டார்.. நான் இல்லை, அவரை போய் கேளு..” ஈஷ்வர் அடங்காமல் எகிறினான். “ஈஷ்வர்.. என்ன இது..? எதுக்கு இவ்வளவு டென்ஷன்..?” “நான் பல்லவி கூட வெளியே போனது பிடிக்கல அவருக்கு, கூப்பிட்டு வச்சு என்னையே மிரட்டுறார்..” “நீ காலேஜ் லீவ் போட்டு வெளியே போனது பிடிச்சிருக்காது அவருக்கு, அதுல என்ன தப்பு..?” “நீயும் அவர் மாதிரி பேசாத விஷ்ணு, ஒரு நாள் லீவ் போட்டத்துல என்ன ஆயிடும்..?” “அதை மாமாக்கு பொறுமையா சொல்லி புரிய வச்சிருக்கலாம் இல்லை..” “அவர் பேசினது எனக்கு பிடிக்கல, இவரும் மத்த அப்பா போல தான், காதல்ன்னுதும் கொஞ்ச கொஞ்சமா வேலையை காட்டுறார்..” “ஈஷ்வர்.. முதல்ல இந்த முன் கோவத்தை விடு, அவர் உன் காதலுக்கு எதுவும் சொல்லியிருக்க மாட்டார், உன் படிப்புல தான் பேசியிருப்பார், நீ ரெண்டையும் போட்டு குழப்பாத..” “எது பல்லவியை அந்த பொண்ணு சொல்றதும், அவ பின்னாடி சுத்துனா படிப்புல எப்படி கவனம் வரும்ங்கிறதும், கவனிச்சிருப்பேங்கிறதும்.. வேற வேறயா..?” “பொண்ணு சொல்லாம வேறென்ன சொல்லியிருக்கணும்..? உன் பொண்டாட்டின்னா, இதை தானே நீ எதிர்பார்க்கிற..?” “ம்ப்ச் விஷ்ணு..” “ஈஷ்வர்.. அப்பாவா அவர் கேட்கிறதுல எந்த தப்பும் இல்லை, நல்லா படிச்சு ஒரு நல்ல நிலைக்கு வந்ததுக்கு அப்பறம் என்னமும் பண்ணு, யார் கேட்க போறா உன்னை..” “அப்போ அதுவரைக்கும் அவகூட நான் டைம் ஸ்பென்ட் பண்ண ஆசை பட கூடாதா..? இல்லை அப்படி பண்ணா என்னை மிரட்டுவாரா..?” “ஆசை.. பொல்லாத ஆசை, இது தான் அவர் சொல்றதும், உன்னோட திங்கிங் புல்லா பல்லவியோட டைம் ஸ்பென்ட் பண்றதிலே இருக்கு, அப்பறம் எப்படி படிப்ப..?” “இப்போ என்ன உங்களுக்கு நான் படிக்கணும், அதானே படிக்கிறேன், அதோட பல்லவியோடவும் டைம் ஸ்பென்ட் பண்ணுவேன், அப்பறம் எப்படி என்னை கேள்வி கேட்கிறீங்கன்னு நானும் பார்க்கிறேன்..” “என்னடா செய்ய போற..?” “அவர் தான் என்னை UPSC கோச்சிங் கிளாஸ் போக சொல்லி கேட்டுகிட்டே இருக்கார் இல்லை, அதுக்கு போக போறேன்.. அதுவும் எங்க தெரியுமா..? பல்லவி கிளாஸ் போற கோச்சிங் சென்டருக்கு..” “அங்க போய் படிப்பானா இவன்..?” விஷ்ணுவிற்கு சந்தேகம் தான். “அங்க ஜாயின் பண்ணிட்டு படிப்ப தானே..?” மெல்ல கேட்டான். “ஏன் விஷ்ணு உனக்கும், என் அப்பாக்கும் நான் ஒரு நல்ல நிலையில் இருக்கணும் அவ்வளவு தானே, அது ஏன் IAS, IPSன்னு அதிலே இருக்கீங்க, இந்த கம்பெனி, பிஸ்னஸ் எல்லாம் நல்ல நிலை இல்லையா..?” இவனும் மெல்ல நூல் விட்டான். “டேய்.. இந்த பிஸ்னஸ் எல்லாம் உங்க அப்பாவாலே ஆரம்பிக்க முடியும்..? அவர் உன்கிட்ட எதிர்பார்க்கிறது ஒரு பெரிய பேர் சொல்ற வேலை, இந்த அரசியல்வாதி மகனை பாருங்கன்னு நெஞ்சை நிமித்துற ஒரு பெருமை, கௌரவம அதை செஞ்சா என்ன உனக்கு..?” “அதான் ஏன்னு நானும் கேட்கிறேன், அவரோட கனவை என்மேல ஏன் திணிக்கிறீங்க..?” “ஈஷ்வர் நீ கொஞ்சம் சுமாரா படிச்சா மாமா உன்கிட்ட இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டார், நீ நல்லா படிக்கிறவன், உன்னால முடியும்ன்னு தான் கேட்கிறார், படிச்சா என்ன..?” “இனி கஷ்டம் விஷ்ணு, உனக்கே தெரியும் நான் அவருக்காக மட்டும் தான் படிக்கணும் நினைச்சேன், ஆனா இப்போ அதுவும் முடியும்ன்னு தோணல..” “ஓஹோ உன்னை அவர் எந்த கேள்வியும் கேட்காத வரை உனக்கு அவர் பெஸ்ட் அப்பா, உன் தப்பை கேட்டா இப்படி எல்லாம் யோசிப்பியா நீ..?” விஷ்ணு கோவமாக கேட்டான். ஈஷ்வரிடம் சில நொடி அமைதி. “எனக்கும் இது தோணுது விஷ்ணு, பட்.. உனக்கு புரியலையாடா முன்ன ஒருமுறையும் இப்படி தான் பேசினார், நான் ஏத்துக்கிட்டு பல்லவியை பிரிஞ்சிருந்தேன், அது அவளுக்காக தான்னாலும், அவரோட விருப்பமும் இருந்தது..” “இப்போவும் ஒரு நாள் போனதுக்கு அவ்வளவு பேசுறார், என்னவோ பிடிக்கலடா அவர் பேசினது, உண்மையை சொல்லணும்ன்னா ரொம்ப கஷ்டமா இருக்கு, என் அப்பான்னு நான் கர்வமா நினைச்ச மனுஷன்.. இப்போ.. ச்சு.. விடுடா..” “ஈஷ்வர்.. உன் கஷ்டம் புரியுது, உன் அப்பா தானே அவர், உன்மேல உயிரா இருக்க மனுஷன், உனக்கும் இது தெரியும் தானே, அப்பறம் என்ன..? உன்னால முடிஞ்சா படிடா.. உன் பேரன்ட்ஸ்க்கு நீ செய்ற கடைமயா நினச்சு படி..” “சரி படிக்கிறேன்.. ஆனா அதுவும் அவருக்காக மட்டும் தான், ஆனா கண்டிப்பா பல்லவி படிக்கிற சென்டர் தான் போவேன்..” என, இதுவே போதும் என்று நினைத்த விஷ்ணு, “சரி போ.. பட் படிக்கணும்..” மிரட்டலாக சொன்னான். “அதான் படிக்கிறேன் சொல்லிட்டேன் இல்லை விடு..” ஈஷ்வர் போனை வைத்துவிட, விஷ்ணு நெற்றியை தேய்த்து விட்டு கொண்டான். சொன்னது போல மறுநாள் கோச்சிங் சென்டரும் ஜாயின் செய்தவன், பல்லவியை எதிர்பார்த்து காத்திருந்தான். அவளும் மாலை பேச்சிற்கு வந்தவள், உள்ளே நுழைகையில் ஈஷ்வரை பார்த்து கண் விரித்தாள். ஈஷ்வர் அவளை பார்த்து கண்ணடித்தவன், “எப்படி இருக்கு என் சர்ப்ரைஸ்..?” என்றான். “நீங்களும் இங்க ஜாயின் பண்ணியிருக்கீங்களா..?” பல்லவி கேட்க, “எஸ் எஸ்.. இனி தினமும் உன்னோட சில மணி நேரம்..” “என்ன திடீர்ன்னு..?” “ஏன் உனக்கு பிடிக்கலையா..?” “ச்சு.. என்ன பேசுறீங்க..? காலேஜ் போய்ட்டு வந்து இங்கேயும்ன்னா உங்களுக்கும் கஷ்டம் இல்லை அதான் கேட்டேன்..” “எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை, முழு இஷ்டம் தான் மேடமோட இருக்க..” “ம்ம்..” பல்லவி அவன் காதலில் முகம் மலர, கிளாஸ் ஆரம்பிக்கவும் அவன் அவளின் பக்கத்து சேரிலே அமர்ந்தான். பல்லவி முதலில் கொஞ்சம் சந்தோஷத்தில் திணறினாலும் கிளாஸ் போக போக நோட்ஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டாள். ஈஷ்வரோ அவளை பார்ப்பதும், இடையிடையே பேசுவதுமாக நேரத்தை ஓட்டினான். அன்றய கிளாஸ் முடிய, “நீங்க நோட்ஸ் எடுக்கலயா..?” பல்லவி கேட்க, “நீ தான் எடுத்திருக்க இல்லை அதுவே போதும், ஏன் எனக்கு தர மாட்டியா..?” கேட்டான். “தருவேன் தான், ஆனா நீங்களும் கிளாஸ் கவனிங்க, படிக்கணும்ன்னு இருக்கு தானே..?” கண் சுருக்கி கேட்டாள். “இருக்கு மேடம்.. கண்டிப்பா படிப்பேன்.. போதுமா..?” “இல்லை நிறைய பீஸ் கட்டி இங்க சேர்ந்திருக்கோம் அதான் சொன்னேன்..” என, ஈஷ்வர் அவளை ஒரு நொடி பார்த்தவன், “காபி குடிக்கலாமா..?” கேட்டான். காலேஜிலிருந்து அப்படியே வந்திருப்பான் போல, சோர்வாக இருந்தான். மறுக்க முடியாமல் அவனுடன் சென்றாள். இருவரும் பேசி கொண்டே காபி குடிக்க, ஈஷ்வருக்கு அந்த நேரம் மிகவும் பிடித்தது. அவன் இத்தனை வருடங்கள் ஆசைப்பட்ட நேரம். அவனின் லவியுடன் வெகு நேரம். பல கதைகள் அவள் முகம் பார்த்து பேசினான். அவளை ரசித்தான். கண்ணடித்து, ரகசிய சின்ன சின்ன தொடுகையில் அவளையும் தவிக்க வைத்தான். பல்லவியுடன் நேரம் செலவழித்த மகிழ்ச்சியில் வீடு வர, நேற்று போல நரசிம்மன் காத்திருந்தார். “கோச்சிங் கிளாஸ் போறீங்க போல..” என்றார் முகத்தில் மகிழ்ச்சி நிச்சயம் இருந்தது. “ஆமா..” என்றான், அவரின் மகிழ்ச்சியை கலைக்க ஏனோ மனம் வரவில்லை. “நல்லது.. ஆனா அந்த சென்டரை விட இன்னும் நல்ல சென்டர் இருக்கு, இல்லை வீட்டுக்கே வந்து கைட் பண்ணற மாதிரியும் ஆள் இருக்கு, பார்க்கலாமா..?” எதிர்பார்ப்போடு கேட்டார். “இல்.. இல்லை வேண்டாம், அதுவே போதும்..” முடித்து கொண்டு ரூம் சென்றுவிட, நரசிம்மனுக்கு அங்கு பல்லவி இருப்பது கொஞ்சம் உறுத்தல் என்றாலும் மகன் திறமையில் உள்ள நம்பிக்கையில் அமைதியாகிவிட்டார். ஈஷ்வர், பல்லவி இருவரும் சென்டரில் தங்கள் காதலை வளர்த்து கொண்டனர். விஷ்ணு இது பற்றி பேசினாலே ஈஷ்வர் கத்தரித்துவிட, அவனும் என்ன செய்ய என்று பார்த்து கொண்டிருந்தான். அதற்கு வழியே இல்லாமல் அவர்கள் காதல் பல்லவி வீட்டுக்கு தெரிய வர, எல்லாம் மாறிப்போனது.