சொல்லாமல்…

மௌனம் 07(i)

சில வருடங்களுக்கு முன்பு…

அவளிடம் இருந்து கொஞ்சம் அழுத்தம் தொனித்து வந்த பதிலில் அவனின் புருவங்கள் உயர்ந்து வில்லென உயர்ந்து நின்றன.

“வாட்ட்ட்ட்ட்ட்ட்ட்..” அதிர்வின் துளிகளை தோய்த்துக் கொண்டு அவன் குரல்.

சட்டென அவன் தாவிக் கீழே வர மேசையும் ஈரடி பின்னே நகர்ந்து தன்னியக்கத்தை நிறுத்திக் கொண்டது.

உள்ளுக்குள் எழுந்த கோபத்தை அடக்கிட முயன்றாலும் அது முடியவில்லையே,

அவளால்.

அச்சுப்பிசகாமல் அவள் கோபத்தை அப்படியே பிரதிபலித்துக் கொண்டிருந்தது,

அவள் முகம்.

அதற்கு மேலாய் கொஞ்சமாய் சுருங்கி அவனை முறைத்துக் கொண்டிருந்த அந்த விழிகள்.

அவள் அத்தனை தைரியமானவள் இல்லை தான்.

ஆனால், இப்படி “காதல்”என்று வைத்து தன்னை இழுத்துக் கொண்டு பொய்யாக கதைக்கும் போதெல்லாம் அவள் அவளாக இருப்பதில்லை என்பதே நிஜம்.

பக்கவாட்டாய் திரும்பி “ஊப்ப்ப்” என்று பெருமூச்சொன்றை இழுத்து விட்டவளின்

செய்கை அவனுக்கும் கொஞ்சம் ரசனையைத் தந்ததோ..?

ஆடவனின் ஆட்டுவிக்கும் நேத்திரங்களில் ஆர்ப்பாட்டமின்றிய சிறு ரசனைப் பூக்கள்.

தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவன் புறம் திரும்பியவளின் பார்வை அவனை கூர்மையாக அளவிட்டது.

“சீனியர்..என்னோட பேரு தெவதர்ஷினி..” நிதானத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டவளின் பெயரை தன்னைக் கேளாமலே உச்சிரப் பார்த்து இரசித்தது,

ஆடவன் மனம்.

அவன் வீட்டுக்கும் கேட்பது தானே.

அக்காளும் தம்பியும் பெயரை ஏலம் விட்டுக் கொண்டு சண்டை போடுவது எல்லாம்.

ஆனால், அவளின் முழுப்பெயரில் ஒரு “தேவா”ஒட்டிக் கொண்டிருப்பது இதுவரை அவன் அறிந்திராத விடயம்.

ஏன் சுற்றம் இருப்பவர்களுக்கு கூட அவளின் முழுப்பெயர் அவ்வளாவாய் தெரியாமல் போனதற்கு முதற் காரணம் வீட்டினர் முதற்கொண்டு அனைவரினதும் “தர்ஷினி” என்கின்ற அழைப்பே.

“அது மட்டுல்ல..நா லவ் யூ எல்லாம் சொல்ர ஆள் இல்ல..” அவனின் வார்த்தை தந்த கோபத்தில் அவள் வாயை விட்டிட இத்தனை நேரம் இருந்த இரசிப்பான மனநிலை மாறி மெல்ல இறுக்கம் சூழ்ந்து கொண்டது,

அவன் மனதை.

“ஆமா..நீங்க வாயால சொல்ற ஆள் இல்ல..லெட்டர் தான எழுதி கொடுப்பீங்க..” நக்கல் தொனிக்க ஒற்றைப் புருவமுயர்த்தி கூரியவனின் விரல்கள் பின்னந்தலைச் சிகையை அழுந்தக் கோதியது.

அவளுக்கு அவன் பதிலில் முகம் கறுத்துப் போனது.

பதில் பேசும் வழி இல்லையே.

இதழ்களை அழுந்த மூடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தரையைப் பார்த்தவாறு நின்றிட அவன் இதழ்களின் ஓரம் ஏனோ கேளாமலே இரசிப்பான புன்னகையின் சிறு கோடு.

ஓரிரு நிமிடங்களின் பின் அவன் தான் தொண்டையைச் செருமி பேசத் துவங்கியதே.

“ம்ம்ம்..தப்பு தான்ல..நாமள யெதுயும் பாத்து கெஸ் பண்ணி முடிவு எடுக்க கூடாதுல்ல..தேவான்னு பேர கேட்டதும் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்..நா ரொம்ப அவசரப்பட்டு பேசிட்டேன்னு தோணுது..என்ன இருந்தாலும் நா அப்டி பேசி இருக்க கூடாதுல..சாரி..” அவன் நிறுத்தாது பேசி முடித்திட பாலாவின் விழிகள் தெறித்து விடும் அளவுக்கு விரிந்தன.

அவன் வாயில் அத்தனை எளிதில் உதிர்ந்திடுவதா “சாரி..”என்கின்ற ஒற்றைச் சொல்.

அவளும் அவன் இப்படி அடக்கமான தொனியில் மன்னிப்பு கேட்பான் என நினைத்தே இல்லாது இருக்க அவனின் மன்னிப்பில் அவளுக்குள் இலேசாக குற்றவுணர்வு எட்டிப் பார்த்திடத் தான் செய்தது.

“பரவால..” என்று அவள் சொல்ல வாயெடுக்கும் முன்னரே இத்தனை நேரம் இருந்த பணிவு மாறி ஒரு வித மிடுக்கு சடுதியாய் ஆடவனின் வதனத்தில்.

இடுப்பில் கரம் குற்றி ஒரு புறம் இதழ் வளைத்து இரு விழி சுருக்கி தலை சரித்து அவளைப் பார்த்தவாறே ஈரடி பின்னே நகர்ந்தவனோ மேசையில் இரு கை ஊன்றி தாவி மேசையில் அமர்ந்து கொண்டான்,

அவள் விழிகளில் இருந்து விழிகளை எடுக்காமலே.

தாவி ஏறிய வேகத்தில் பின்னே தள்ளியிருந்த முன்னுச்சிக் கற்றைகள் முத்தமிட்டுக் கொண்டிருந்தது,

முன் நெற்றியை.

“ஓகே ரைட்ட்ட்ட்ட்…கண்டிப்பா உன் எடத்துல வேற யாராவது இருந்தா நா இப்டி தான் பேசி இருப்பேன்..அதுவும் ஒரு பொண்ணுல கண்டிப்பா சாரி கேட்டு இருப்பேன்..பட்ட்ட்ட்ட்..” முடிக்காது ராகமிழுத்தான்,

அழுத்தமான ஆடவன்.

“பட்ட்ட்ட்ட்ட்…இருக்குறது நீ தான..ஆனா இந்த எடத்துல உன்ன தவிர வேற யாராவது இருந்தா நா தேவாங்குற பேர கேட்டு கொதிச்சி போயிருக்க மாட்டேங்குறது வேற விஷயம்..ஆனா இப்போ நீ தான நிக்குற..உன்ன மாதிரி வீட்டுக்கு தெரியாம லெட்டர் கொடுத்த உன்கிட்ட நா அப்டி நடந்துகிட்டது தப்பே இல்ல..என் மேல தான் தப்புன்னாலும்..ஸோ கண்டிப்பா சாரி கேக்க மாட்டேன்..ஓகே ரைட்ட்..வன் மோர் திங்க்..என் கண்ணு முன்னாடி வராம இரு..ஏன்னா இப்டி அவசரப்பட்டு நானா முடிவெடுத்து உனக்கு திட்டுனப்றம் நீ பீல் பண்ணக் கூடாதுல..”

கெத்தாக சொல்லி முடித்தவனோ மீண்டும் தாவியிறங்கி மேசையில் இருந்த தன் ஒற்றை நோட்டை கையில் எடுத்து அதை வீசிப் பிடித்தவாறே திரும்பி நடக்கத் துவங்க அவனைப் பின் தொடர்ந்தான்,

பாலா.

தர்ஷினியோ எந்த வித உணர்வையும் காட்டாது மறு புறம் திரும்பி நின்றிட ஏனோ நகர்ந்தவனின் விழிகள் ஒரு கணம் திரும்பி அவள் முதுகைத் தொட்டு மீண்டிட முகத்தை காணாமல் சிறு ஏமாற்றம் ஆடவன் மனதுக்குள்.

தலையை திருப்பிய தோழனை ஆராய்ச்சியாய் பார்த்த பாலாவின் இதழ்களில் அர்த்தப் புன்னகை.

அந்த யன்னலின் அருகே இருந்த இடத்தில் பேசாமல் அமர்ந்து கொண்டாள்,

தர்ஷினி.

“தர்ஷினி..எதுக்குடி பேசாம இருக்கு..நல்லா திட்டி விட வேண்டியது தானே..” தோழியின் தோளை உலுக்கிய படி கார்த்திகா கேட்க வெற்றுப் பார்வை பார்த்தாள், அவளை.

“விடு கார்த்தி..நாமலும் ஏதாவது பேச போனா இன்னும் சண்ட நீண்டுட்டு தான் போகும்..ஏட்டிக்கு போட்டியா பேசுறது மத்தவங்களுக்கு எப்டியோ..இந்த எடத்துல எனக்கு அத பண்ணனும்னு தோணல..நாமலும் பதில் சொல்லிகிட்டே இருந்தா பேச்சு வார்த்த தான் கூடும்..அவரு எனக்கு யாரோ தான்..அப்டி இருக்குறவரு கிட்ட பேச்சு வார்த்த வளக்க நா விரும்பல..இப்போ பேசாம இருந்துட்டேன்..மோதல் தான் மா காதலுக்கு அடித்தளம்..நா காதல் பண்ணக் கூடாதுன்னு இருக்குறவ..அப்போ மோதல் உம் இருக்கக் கூடாது ல..” முதற் பாதியை தீவிரமாகவும் மறு பாதியை சிரிப்புடன் சொல்லிட அவளின் தோளில் மென்மையாய் அடித்தாள் கார்த்திகா.

“விடு கார்த்தி இந்த அடங்காத சிங்கமும் நாளக்கி பொண்டாட்டி கிட்ட பம்மிகிட்டு தான் நிக்கும்..யாரோ ஒருத்தி வந்து அந்த ஆள மாத்த தான போறா..ஸோ டோன்ட் வொரி..இதுக்கும் காதல் வரும்..அப்போ பாரு அதோட சேஞ்ச..அந்த டைம் நாம கலாய்ச்சி சிரிக்கலாம்..” என்று தோழியுடன் ஹை பை அடித்துக் கொண்டவளுக்கு அவளின் மீது தான் காதல் வந்து ஓங்கி வளர்ந்து அவனை மாற்றப் போகின்றது என்பது தெரிய வாய்ப்பேயில்லை.

கடந்திடும் போது தரித்து நின்று கேட்ட ஆடவனின் இதழ்கள் விரிய ஏனோ வித்தியாசமாய் தான் தோன்றிற்று அவன் மனதுக்கு..

அவள்.

கல்லூரி முடிந்து வீட்டுக்கு கிளம்ப வாயிலில் ஆர்த்தி நின்றிருக்க அவளுக்கு எதிர்ப்பட்டான்,

தேவா.

அவள் முகத்தில் ஒரு வித ஆர்வம் வந்து ஒட்டிக் கொள்ள அவளின் ஆடவனின் புறம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

தன் தலையைக் கோதிக் கொண்டே பாலா வருவதற்காக அவன் காத்திருக்க அடிக்கடி அவளின் பார்வை அவனை தொட்டு மீண்டதை அறியவில்லை,

அவன்.

அலைபேசியை ஆராய்ந்து கொண்டு அவன் நின்றிருந்தாலும் சுற்றும் புறத்தின் மீது கவனத்தின் சிறு துளி பதிந்து தான் இருந்தது.

தோழியர் எவருமின்றி ஆர்த்தி மட்டும் அவ்விடத்தில் நின்றிருக்க கடந்து சென்ற மாணவர் கூட்டமொன்று அவளுக்கு ஏதோ சொ ல்வது தெளிவாய் விழுந்தது, அவன் காதுகளில்.

சட்டென விழி நிமிர்த்தி கனலுடன் அவர்களை பார்த்து விட்டு அவளருகே வந்து நின்றிட தேவாவை பற்றி தெரிந்ததால் அதன் பின் அங்கு யாருமே தரிக்கவில்லை.

அவனின் சிறு செயல்..

ஏனோ அவளுக்குள் அத்தனை ஆனந்தத்தை கொடுத்திட ஏறிட்டு அவன் முகத்தை பார்த்தவளின் புறம் திரும்பவேயில்லை,

அவன் பார்வை.

தோழியர் வந்திட அவனுக்கு சிறு புன்னகையுடன் கூடிய தலையசைப்பை கொடுத்து விட்டு அவள் நகர்ந்திட அவனிடம் இருந்து எந்தவொரு பதிலுமில்லை.

கடமையைத் தான் செய்தேன் என வெற்றுப் பார்வை பார்த்து விட்டு அவன் நகர்ந்து உள்ளே சென்றான், தோழனைக் காண.

மரத்தடியில் இருப்பதாக அவன் குறுஞ்செய்தி அனுப்பியிருக்க நடந்திடும் போது மறு புறத்தில் இருந்து வந்து கொண்டிருந்தாள்,

தர்ஷினி.

அவனைக் கண்டதும் எதற்கு வம்பென்று தன் முகக் கவசத்தை அணிந்து கொண்டு வந்த வழியில் நகராமல் வேறு வழியில் அவள் நடந்திட அவளின் செயலில் எழுந்த புன்னகையை இதழ்களுக்குள் புதைத்துக் கொண்டவனின் முகத்தில் அத்தனை இறுக்கம்.

காதலே பிடிக்காத தனக்கு காதல் கடிதம் கொடுத்தவள் என்று நினைத்திருந்த மனதே அவள் நேர்ப்பார்வையில் கொஞ்சம் தளர்ந்திருக்க இப்போது காதலே பிடிக்காது என அவள் பேசியதை கேட்ட ஆடவனின் மனதில் அவள் தனக்கு கடிதம் கொடுத்திருக்க மாட்டாள் என்கின்ற எண்ணம் கொஞ்சமாய்.

அந்த எண்ணம் இன்னுமே அவனின் இறுக்கத்தை குறைத்திருந்தன.

அதிலும் தன்னை பார்த்திடும் போது ரசனை மின்னும் விழிகளையே எதிரில் கண்டிருப்பவனுக்கு வெறுமையாய் இருக்கும் அவள் விழிகள் அவனின் எண்ணத்தை இன்னும் வலுப்பெறச் செய்தன என்பது மிகையல்ல.

ஏன் இன்றும் கூட..

அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்து தனக்கான ரசனையைத் தேடி தோற்றுப் போனதே அவன் விழிகள்.

“காதலித்தால் இப்படித் தான் வெறுமையாக பார்ப்பார்களா..?” தானாகவே மனதில் ஒரு கேள்வி உதித்திருந்தது, அந்த நொடி.

ஏதோ யோசனையுடன் நடந்து வந்த தோழனை கத்தி அழைத்தான், பாலா.

அவனோ தலையுயர்த்தி பார்த்திட “தேவா வாடா..” என்க விரைந்தான், அவ்விடத்துக்கு.

“என்னடா இப்டி கத்திகிட்டு இருக்க..?”

“ஒரு தடவ கூப்டு பதில் சொல்லாம இருந்தா என்ன பண்ணுவாங்க…சரி அந்த பொண்ணு யாரு..?”

“யார கேக்குற..?”

“டேய் டேய்..அதான் தேவதர்ஷினி..” என்றவனின் இதழ்களோ “தேவா” என்பதை அழுத்து உச்சரித்தது.

“எங்க வீட்டு பக்கத்துல குடியிருக்குற ராமநாதன் அங்கிள் பொண்ணு..”

“டேய்…உனக்கு அந்த பொண்ண புடிச்சிருக்காடா..?” நேரடியாய் கேட்ட தோழனின் கேள்வியில் அவனுக்கு ஒரு திடுக்கிடலும் இல்லை.

“இங்க பாரு பாலா..புடிச்சிருக்குன்னு எல்லாம் இல்ல..யேன்னு தெரியல அவ கொஞ்சம் வித்யாசமா தெரியுறா..மத்தவங்க மாதிரி இல்ல..அதுவே அவள கவனிக்குற மோட்டிவ கொடுக்குது..இந்த லவ் லைக் அப்டி எந்த விதமான பீலிங்க்ஸும் இல்ல..நாம எங்கயாச்சும் ட்ரெயின்ல ட்ராவல் பண்ணும் போது யாராச்சும் டிபரெண்டா நடந்து கிட்டா கவனிச்சு பாத்துட்டு மறந்துருவோம் தான..அது மாதிரி தான் அவளும்..என் மனசுல அவ மேல எந்த எண்ணமும் இல்ல..” அழுத்தம் திருத்தமாய் தன் மன எண்ணத்தை ஒப்புவிக்க அதை மறுக்க இயலாது தான் போனது அவன் விழிகளில் இருந்த உண்மையில்.

“வேணுன்னா பாரு பாலா..எனக்கு யாரு மேலயும் லவ் வராது..யாரயும் நம்பற அளவு என்னோட மனசு பரந்தது இல்ல..அப்டி வந்தா மத்தவங்களுக்கு எப்டியோ உனக்கு கண்டிப்பா புரிஞ்சிரும்..ஸோ டோன்ட் வொரி மச்சீ..” தோளைத் தட்டிச் சொன்னவனின் முகத்தில் புதிதாய் குடிகொண்ட இறுக்கம்.

அவன் வலி என்னவென்று தெரியாதா தோழனுக்கு..?

அதன் வடுக்கள் இன்னுமே அவனை துளைத்துக் கொண்டல்லவா இருக்கிறது.

தோழனின் தோளை அழுத்திட வெறுமையான பாவமே தேவாவின் முகத்தில்.

நடந்தது எதையும் மாற்றிட இயலாது என்று தெரிந்தாலும் அவ்வப்போது நினைவில் வந்திடும் சமயம் வலித்திடாமல் இருப்பதில்லையே.

காயங்களை காலம் ஆற்றிடும்.

காலம் ஆற்றிடா காயங்கள் இயல்பையே மாற்றிடும்.

இயல்பு தொலைந்து நிற்கும் ஆடவனின் இறுக்கமது அவளின் முன் தான் தகர்ந்திடும் என இருக்கையில் அதற்காக காத்திருக்கத் தானே வேண்டும்..?

காதல் என்பது துளிர்த்து அவளின் அவனாக அவன்  மாறும் வரை அவன் அவனாகவே கொஞ்சம் இருந்து கொள்ளட்டுமே..