மகிழ்ச்சி, நம்பிக்கை, தைரியம் எல்லாம் நிறைந்த உணர்ச்சிப் பெருக்கில் அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.
பிடித்திருந்த அவளின் கையை சுண்டி இழுத்து அவளை தன்னை நோக்கி ஓரடி முன்னேறி வரச் செய்தான்.
அவள் அவனது முகத்தை காண்பதும் வேறு பக்கம் பார்த்து விட்டு மீண்டும் அவன் முகத்தில் தன் பார்வையால் முகாமிடுவதுமாக இருந்தாள்.
“நாம சின்ன பசங்களா மிது, கல்யாணத்துக்கெல்லாம் நிறைய வருஷம் இருக்கா?” எனக் கேட்டான்.
“ஆமாம், இப்போ கையை விடுங்க” என்றாள்.
சின்ன புன்னகையுடன் இருவரும் விலகிக் கொண்டார்கள்.
அடுத்த பத்து நிமிடங்களில் சென்னை செல்ல பேருந்தில் டிக்கெட் போட்டு விட்டான்.
“நீ லீவ் முடிஞ்சு காலேஜ் வந்தப்புறம் மீட் பண்ணலாம்தானே?” என அவன் கேட்கவும் சம்மதம் சொன்னாள்.
வாசுகியுடன் இவளை சமாதானம் செய்து வைத்து இருவரையும் இயல்பாக பேசிக் கொள்ள வைத்தான்.
அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டும் என சொல்லி அன்றே கிளம்பியும் விட்டான். இந்தப் பக்கம் எப்போது வந்தாலும் நம் வீட்டிற்கு வந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என அன்புக்கட்டளை போட்டார் பாட்டி. பசுபதியே காரெடுத்து அவனை தஞ்சையில் விட்டு வந்தார்.
அடுத்த நாள் மதியத்தில் வினோதினி வந்து விட்டார். நல்ல வேளையாக ஜீவா சென்று விட்டான் என நிம்மதி அடைந்தாள் மிதுன்யா. ஆனால் சின்ன மகளை அடிக்கடி ஏதோ யோசனையாக பார்த்தார்.
ஒரு வாரத்தில் அவளது தோழிகள் கிளம்பிய பிறகுதான் என்னம்மா என விசாரித்தாள் மிதுன்யா.
வினோதினியின் அண்ணன் மகள் பெங்களூரில் படிக்கிறாள். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பையனை விரும்புகிறாளாம், வீட்டில் யாருக்கும் சம்மதம் இல்லையாம், அவளது மனதை மாற்ற முயற்சி செய்கிறார்களாம், அவளோ மிகுந்த பிடிவாதமாக இருக்கிறாளாம். இதனால் தான் இவரது அம்மாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உடம்புக்கு முடியாமல் போய் விட்டதாம்.
சுள் என மகளின் தொடையில் அடித்தவர், “பெத்தவங்க எங்களுக்கு தெரியாதா என்ன செய்யணும்னு? உன்கிட்ட என்ன செய்யலாம்னு யோசனை கேட்டு ஒன்னும் இத சொல்லலை, என் அண்ணன் பொண்ணு மாதிரி பெத்தவங்களுக்கு துரோகம் பண்ணிடாதன்னு சொல்லத்தான் இத சொல்றேன்” என்றார்.
மிதுன்யா அம்மாவை முறைத்தாள். இன்னொரு முறை படிப்பை தவிர உனக்கு வேறு சிந்தனையே இருக்க கூடாது என கட்டளையாக சொல்லி சென்றார் அவர்.
அப்பா பாட்டிக்கெல்லாம் ஜீவாவை பிடித்திருக்கிறது, சொந்தம் எனும் போது வேற்று ஆள் என கூட பெரியவர்கள் யோசிக்க மாட்டார்கள், அப்பாவிடம் தன் விருப்பத்தை சொன்னால் மாட்டேன் என எப்படியும் சொல்ல மாட்டார் என உறுதியாக நம்பினாள் மிதுன்யா.
ஜீவா சென்னை வந்தடைந்த போது கோபிகாவும் வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருந்தார்.
தன்னிடமிருக்கும் சாவியை கொண்டுதான் வீட்டை திறக்க வேண்டும் என நினைத்திருந்தவன் வீடு உள் பக்கமாக தாளிட பட்டிருக்கவுமே அம்மா வந்து விட்டதை புரிந்து மலர்ந்தான்.
அழைப்பு மணி ஓசை கேட்டு கதவு திறந்த கோபிகா விரைந்து வந்து மகனின் கையை பற்றிக் கொண்டு சிரித்தார்.
இவனுக்கு அம்மா என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நாற்பத்தைந்து வயதான அவரின் தோற்றமோ முப்பதுகளில் இருப்பது போலவே இருந்தது.
“உன் ஃப்ரெண்ட் ஊருக்கு போயிட்டு நாளைக்குத்தான் ரிட்டர்ன்னு சொல்லியிருந்த, நைட் பேசினப்போ கூட இன்னிக்கு வர்றதா சொல்லலையேடா? என்ன சமைக்க சொல்லட்டும், இடியாப்பம் ஓகேவா உனக்கு?” பட படவென பேசினார்.
“சாப்பாடு என்னன்னாலும் ஓகே, எங்கேயும் கிளம்பாம என் கூடவே நீ இருந்தா டபுள் ஓகே” என்றான்.
“நீ வர்றதா என்கிட்ட சொல்லவே இல்லை, திடீர்னு கூடவே இருன்னா எப்படிடா?” என்றார்.
“நீயும் கூட இன்னிக்கு சென்னை வர்றதா என்கிட்ட சொல்லவே இல்லமா. நான் இங்க தனியா இருக்கிறது நினைச்சு நீ ஃபீல் பண்ண வேணாம்னுதான் வர்றத சொல்லலை. என்ன இப்போ உனக்கு வேலையிருக்கு போகணும் அதானே, போ” என சொல்லி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான்.
உடனே பங்கஜ்க்கு அழைத்து ஜீவா வந்து விட்டதை சொல்லி தன்னால் இன்று வர முடியாது, சமாளித்து கொள்ள முடியுமா என கேட்டார். சரி என்ற பதிலை பெற்றுக் கொண்டு அவர் திரும்ப, அம்மாவை அப்படியே தூக்கியிருந்தான் ஜீவா.
அவனது தலையில் செல்லமாக கொட்டி தன்னை இறக்கி விட செய்தார். வீட்டு டிரைவர் ரங்கசாமியின் மனைவி சரோஜாதான் அங்கே சமையல் செய்பவர். பல வருடங்களாக இங்கு வேலை செய்கின்றனர். கோபிகா இல்லாத போது கூட ஜீவா இங்கு வந்தால் சரோஜா வந்து சமைத்து விட்டு செல்வார்.