அத்தியாயம் 9

அருகில் சென்றவன் அவள் நெற்றியில் தன் புறங்கையை வைத்துப் பார்க்க, கணகணவென்றிருந்தது.

சத்தமெழுப்பாமல் வெளியே வந்தவன் கதவைச் சாற்றி விட்டு “காலைல என்ன சாப்பிட்டாங்க?” என்று பொன்னம்மாவிடம் கேட்டான்.

“அரை இட்டிலி”

அவன் முகத்தில் கோபத்தைக் கண்டவர் “எவ்வளவோ கட்டாயப் படுத்தினேன் தம்பி…வாயெல்லாம் கசக்குது…வேணாம்னுட்டாங்க”

“மாத்திரை போட்டாங்களா?”

“ம்ம்ம்…போட்டாங்க”

“ஆனா இன்னும் காய்ச்சல் விடலையே…நீங்க ஒன்னு செய்ங்க…ஒரு கப்ல பச்சைத் தண்ணியும் ஒரு வெள்ளைத் துணியும் கொண்டு வாங்க”

அவன் சொன்னது போல் அவள் கொண்டு வந்து தர அவள் கட்டிலின் அருகே நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்தவன் துணியை நீரில் நனைத்துப் பிழிந்து நெற்றியில் பரவலாகப் போட்டான்.

அதில் “ம்ம்ம்” என முனகியவள் அவன் பக்கமாகவே திரும்பிப் படுத்தாள்.

அவள் அணிந்திருந்த லேஸ் வேலைப்பாடு செய்த இரவு உடை கொஞ்சம் நெகிழ, அவன் கண்கள் கட்டுக்கடங்காமல் அவள் மேனியில் அலைபாய்ந்தது.

உறக்கத்தில் இருப்பவளை அவளறியாமல் ரசிக்கிறான் என மனம் குற்றம் சாட்டினாலும் எனக்கு உரிமையானவள்தானே என மனதிற்கு ஒரு கொட்டு வைத்தவனால் அதிக நேரம் மனசாட்சியை அப்படி அடக்கி வைக்க முடியவில்லை.

அவன் அப்படிப் பார்ப்பது அவளுக்கு விருப்பமிருக்காது எனும் போது இது தவறு என்று மனசாட்சி பலமாகக் குத்திக் காட்ட மேலும் அவள் திடீரென விழித்துப் பார்த்தால் சங்கடப்படவும் நேரிடும் என எண்ணியவன் கால் பக்கம் கிடந்த போர்வையை எடுத்துக் கழுத்து வரை மூடி விட்டான். ஆனால் அவளுக்கு அது பிடிக்கவில்லையோ என்னவோ காலாலேயே உதைத்து இழுத்துக் கீழே மீண்டும் இறக்கி விட்டாள்.

“இவளை…” என மனதுக்குள் செல்லமாகக் கொஞ்சிக் கொண்டவன் மீண்டும் இழுத்து மூடி விட மறுபடியும் விலக்கி விட்டாள். இப்படியே இரண்டு மூன்று முறை நடக்க ஏதோ வேறுபாட்டை உணர்ந்து கொண்டது போல் அவளிமைகள் மெல்லப் பிரிந்தன.

எதிரில் அவனைக் கண்டு முதலில் ஏதோ கனவுத் தோற்றம் என்று எண்ணி மீண்டும் கண்களை மூடியவள் பின் படக்கெனக் கண்களைத் திறந்தாள்.

கனவல்ல, அவன் நிற்பது நிஜமே எனப் புரிய வெகு வேகமாகத் தன் இடைவரை இருந்த போர்வையை எடுத்துக் கழுத்து வரை போர்த்திக் கொண்டு “இங்க என்ன பண்றீங்க நீங்க?” எனவும் அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

“இவ்வளவு நேரம் போர்த்தி விட்டா இழுத்து இழுத்து விட்டுட்டு இப்ப ரொம்ப வேகமாப் போர்த்திக்கிறே? சரி போர்த்திகோ! டாக்டர் வந்தாலும் வந்துடுவாரு” என்றவன் அவள்புறம் கைநீட்ட, பயந்து பின்னடைந்தவள் அவள் நெற்றியில் கிடந்த அவளுடல் சூட்டில் காய்ந்து விட்ட துணியை எடுத்து மீண்டும் ஈரத்தில் நனைத்து நெற்றியில் போட்டு விட்டவனைக் கண்களில் வெறுப்புடன் பார்த்தாள்.

“ஏன் இங்க வந்தீங்க?”

“ம்ம்ம்…உன்னைப் பார்க்க ஆசைப்பட்டு வந்தேன்னு சொன்னா என்ன செய்வே?”

 அவள் கோபமாக ஏதோ சொல்லும் முன் வெளியே மருத்துவரின் குரல் கேட்க அமைதியானாள்.

சில வினாடிகள் கடக்க மருத்துவர் ராமமூர்த்தி அந்த அறையினுள் நுழைந்தார்.தும்பைப்பூ போல நரைத்த தலையுடன் பழுத்த பழமாக இருந்தவருக்குக் கண்டிப்பாக வயது அறுபதுக்கு மேல் இருக்கும்.

விக்னேஷைப் பார்த்ததும்,

“நீங்கதான் எனக்கு போன் செய்ததா?”

“ஆமா டாக்டர்! ஐயம் விக்னேஷ்… மதன் கார்மெண்ட்ஸ் சிஈஓ” 

“ஓ! இப்ப நீ இவங்க கூடத்தான் ஜாயின் பண்ணி இருக்கேல்ல?” என்று நீலாவிடம் கேட்டவாறு அவளின் அருகில் சென்றார் ராமமூர்த்தி.

“ஆமா அங்கிள்!”

அவள் குரலில் இருந்த மிதமிஞ்சிய சோர்வை கவனித்தவர் அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்து விட்டு அவளிடம் கனிவுடன்,

“என்ன ஆச்சு நீலா? ஏன் திடீர்னு ஃபீவர்? ஜெர்மனில இருந்து வந்ததும் நீயும் குழந்தைகளும் என்னை வந்து பார்த்து ப்ராப்பராப் போட வேண்டிய வேக்சின்லாம் போட்டாச்சுல்ல”

“இது…இது மழைல நனைஞ்சனால வந்த ஃபீவர் அங்கிள்”

எழும்பாத குரலில் மொழிந்தவளைப் பார்த்து

“மழைல நனைஞ்சியா… ஏன்?  சின்ன குழந்தையா நீ? ஆபிஸ் போறது வர்றதெல்லாம் கார்லதான! காருக்குள்ள மழை பேய்ஞ்சுதா?”

மருத்துவரின் கேள்விகளும் அவனது கூரிய பார்வையும் அவளைத் துளைத்தெடுக்க உதட்டைக் கடித்தபடி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

“இப்பிடித்தான் கொஞ்ச நாள் முன்னால ஸ்டீரிங்க் வீல்ல மோதிக்கிட்டேன்னு சொன்னே”

பேசிக் கொண்டே தன் ஸ்டெதஸ்கோப்பைக் காதுகளில் மாட்டியவர் அவளைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்.

 “குழந்தைகள் எங்கே?”

“ஸ்கூல் போய் இருக்காங்க”

“எப்போ இருந்து ஃபீவர் இருக்கு?”

“முந்தாநாள் நைட்ல இருந்து…”

“உடனே ஃபோன் பண்றதுக்கு என்ன?”

………………………………………………….

“என்ன மெடிஸின் சாப்பிட்ட?”

“கால்பால்”

பரிசோதித்து முடித்தவர்,

“சாதாரண வைரல் ஃபீவர் மாதிரிதான் இருக்கு… மூணு நாளைக்கு மெடிஸின் தரேன். சாப்பிடு! ஃபீவர் ஆரம்பிச்சு இன்னிக்கு தர்ட் டேனால இன்னும் ரெண்டு நாள்ல ஃபீவர் குறையலைன்னா ப்ளட் டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கும். பட் மேக்சிமம் குறைஞ்சுடும். லெட்ஸ் சீ” என்றவர் மருந்துகளின் பெயர்களைத் தன் மருந்துகள் பரிந்துரைக்கும் குறிப்பேட்டில் எழுதி அவள் கை நீட்டிக் கொண்டிருப்பதைக் கவனிக்காமல் அவனிடம் நீட்டினார்.

பின் அவளிடம் திரும்பி,

“இட்லி, இடியாப்பம், கஞ்சி, ரசம் சாதம் சாப்பிடலாம் . சுடுதண்ணி குடிக்கணும். மூணு நாளைக்குக் குளிக்க வேணாம். வேணும்னா டவல் பாத் எடுத்துக்கலாம்”

அவள் சரியெனத் தலையாட்ட “ஓகே நான் கிளம்புறேன். நீலா! சின்ன குழந்தையில்ல நீ… கவனமா இரு! பை!” என்று விட்டுக் கிளம்பினார்.

அவருடனே சென்றவன்,

“பயப்படற மாதிரி ஒன்னும் இல்லல்ல டாக்டர்”

“இப்பதைக்கு ஒன்னும் பெருசா இருக்கிற மாதிரித் தெரியல… மெடிசின்ஸ்கு ஃபீவர் ரெஸ்பாண்ட் பண்ணலைன்னாதான் பயப்படணும்”

“நீங்கதான் இவங்க ஃபேமிலி டாக்டரா டாக்டர்?”

“ஆமா மிஸ்டர் விக்னேஷ். நீலாவோட ஹஸ்பண்ட் பேமிலிக்கு நான்தான் பார்த்துட்டு இருந்தேன்…தென் நீலா, அவ கிட்ஸ்”

அவர்கள் நடந்து பேசிக் கொண்டே வாசலில் நின்றிருந்த அவர் காரை நெருங்கி இருக்க,

“நீங்க என்ன ஆபிஸ் டைம்ல இங்க?”

“இன்னிக்கு ஆபிஸ் வந்ததும் நீலாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அவங்க செக்ரட்டரி சொன்னாங்க…நான் ஃபாக்டரிக்குப் போற வழியில பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். இங்க வந்து பார்த்தா நல்ல ஃபீவர். அதான் பொன்னம்மாகிட்டக் கேட்டு உங்களுக்கு போன் செய்தேன்” 

“குட் ஜாப் விக்னேஷ்! நீலா ரொம்பப் பொறுப்பான பொண்ணுதான்… ஆனா தன்னைத்தானே கேர் செய்துக்க மாட்டா. நல்லவேளை நீங்க கால் செய்தீங்க”

“ஓகே விக்னேஷ். நைஸ் மீட்டிங் யூ”

அவர் விடைபெற்றுக் கிளம்பி விட்டார்

மீண்டும் வீட்டினுள் வந்தவன் நீலாவின் அறைக்குச் சென்றான்.

காய்ச்சலின் வேகத்தில் சாய்ந்து படுத்துக் கண் மூடி இருந்தவளின் அருகில் சென்று நின்றவன் கை மெல்ல உயர அதே நேரம் அவன் அண்மையை உணர்ந்து விழிகளை மலர்த்தியவள் கண்களில் கேள்வியுடன் அவனை நோக்க கையை இழுத்துக் கொண்டவன் நாற்காலியை நகர்த்தி அவளருகே போட்டு அமர்ந்தான்.

மென்மையாக “எதுக்கு இந்த வேலை? இப்ப யார் கஷ்டப்படுறா? என் மேல கோபம்னா என்கிட்டயே காட்ட வேண்டியதுதானே? மழைல போய் எதுக்கு நனைஞ்சே?” 

“ஹலோ! உங்க மேல கோபத்துல நனைஞ்சதா யார் சொன்னா? எனக்கு மழைல நனையப் பிடிக்கும்… அதுனால நனைஞ்சேன்”

“ஆஹான்!” குரலிலேயே நம்பாமையைக் காட்டியவன் “சரி நான் போய் மெடிசின் வாங்கிட்டு வந்துடறேன்”

“தேவை இல்லை. போன்ல சொன்னாக் கொண்டு வந்து கொடுத்துடுவாங்க” என்றவள் சீட்டுக்காகக் கையை நீட்ட மறுத்துப் பேசாமல் அவள் கையில் சீட்டை வைத்தவன் அவள் தன் அலைபேசியை எடுத்துப் பேச ஆரம்பிக்க கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்

ஹலோ சிவசக்தி ஃபார்மசிதானே?”

…………………

“நான் நீலாயதாட்சி பேசுறேன்…நான் சொல்லுற மெடிசின்ஸ் வழக்கமா வர்ற பையன்கிட்டக் கொடுத்து அனுப்புங்க…வேற யாரையும் அனுப்ப வேண்டாம்…மெடிசின்ஸ் ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் செக் பண்ணி அனுப்புங்க”

………………………………………………..

மருந்துகளின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசி முடித்தவள் அலைபேசியை அணைத்து விட்டு,

“இனி நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க”

“எப்பிடி இந்த ரெண்டு நாளாப் பார்த்துக்கிட்ட மாதிரியா?”

“அது…அது சாதாரண ஃபீவர்… தானே சரி ஆகிடும்னு நினைச்சேன்”

“முழுசா நாலு வார்த்தை பேசுறதுக்குள்ள சோர்ந்து போறே… இதுல உன்னை நீயே பார்த்துப்பே”

நக்கலாக மொழிந்தவாறு அவளை முறைத்துப் பார்த்தவன் வெளியே சென்று சில நிமிடங்கள் பொறுத்துத் திரும்பி வந்தான்.

அவனைத் தடுக்க முயற்சித்தவள் காய்ச்சலும், இரண்டு நாட்களாக சரியாக உணவு உண்ணாததும் என எழக் கூட முடியாமல் ஆற்றாமையுடன் மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள்.

ஐந்து நிமிடங்களில் கையில் கிண்ணத்துடன் பொன்னம்மா வந்தார்.

“சூடா மிளகு ரசம்… குழைய வடிச்ச சாதத்துல கலந்துருக்கேன்…ஒரு பருக்கை சாதம் கூட கண்ணுக்குத் தெரியல. அப்படியே குடுச்சுருவீங்களாம்…சளிப் பிடிச்சு இருக்குறதுக்குத் தொண்டைக்கும் இதமா இருக்கும்”

“வேண்டாம் பொன்னம்மா! வாயெல்லாம் கசந்து கிடக்கு… வாமிட் பண்ணிருவேன்”

பொன்னம்மா பதில் சொல்லும் முன், “நீங்க வச்சுட்டுப் போங்க பொன்னம்மா! நான் பார்த்துக்கிறேன்”

ஒரு கணம் நீலாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவர் அவள் மறுப்பேதும் சொல்லாதது கண்டு அங்கிருந்த சிறிய வட்ட மேஜையில் கிண்ணத்தை வைத்து விட்டு நகர,

“பொன்னம்மா! மருந்துக் கடையில இருந்து வழக்கமா வர்ற பையன் வந்து மருந்து கொடுப்பான். வாங்கிக்கோங்க!”

“சரிங்கம்மா!”

அவர் கிளம்பியதும் அங்கிருந்த சிறிய தம்ப்ளரை எடுத்தவன் கஞ்சியை அரை தம்ளர் அளவுக்கு நிரப்பிக் கொண்டு அவளருகே சென்றான்.

“ம்ம்ஹூம் வேண்டாம்”

“இப்ப நீ குடிக்கலைன்னா உன்னை அமுக்கிப் பிடிச்சு வாயில ஊத்தி விட்டுடுவேன். நான் தொட்டுக் கட்டிப் பிடிச்சுக் குடுக்கணும்னு ஆசை இருந்தா வேண்டாம்னு சொல்லு”

அவனை முறைத்தவள் கை நீட்டிக் கஞ்சியை வாங்கிக் கொண்டாள்.

ஒரு மிடறு குடித்தவளுக்கு அந்தப் பதமான சூடும் மிளகின் காரமும் தொண்டையை இதமாகத் தடவிக் கொடுப்பது போல் இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக மொத்தத்தையும் குடித்து முடித்தாள்

அவன் மேலும் அரை தம்ளர் ஊற்ற “வேணாம் போதும்” என்றவளைக் கண்களாலேயே மிரட்டிக் குடிக்க வைத்தான்.

அதற்குள் மருந்துக் கடை ஆள் வந்து கொடுத்துச் சென்றதாக மருந்துகளைப் பொன்னம்மா கொண்டு வந்து கொடுக்க அந்த வேளைக்கான மருந்துகளைக் கொடுத்து சாப்பிட வைத்தான்.

பொன்னம்மா எல்லாவற்றையும் சுத்தம் செய்து போன பின் சாய்ந்து வசதியாகப் படுத்துக் கொண்டவள் அவன் இன்னும் சட்டமாகக் கால் மேல் கால் போட்டு நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டு “நீங்க கிளம்புங்க நான் தூங்கப் போறேன்” எனவும் அவளையே ஆழ்ந்து பார்த்தான்.

பின் மெல்ல எழுந்து அவளை நோக்கி நடந்து வர என்ன செய்யப் போகிறானோ என்ற எண்ணத்தில் அவள் முகம் மருண்டது.

அவளருகில் வந்து நின்றவன் மெல்லிய குரலில் “நான் இங்கேயே உன் கூடவே எப்பவும் இருக்க முடியாதா நீலா?”

“ஹான்!” அதிர்ந்து போய் அவள் அவனைப் பார்க்க, 

“எதுக்கு இத்தனை அதிர்ச்சி…கொஞ்ச நாளாவே நான் பழகுற விதத்துல உனக்கே இது புரிஞ்சுருக்குமே! என்னிக்கா இருந்தாலும் என்கிட்ட இருந்து இந்தக் கோரிக்கை வரும்னு யோசிக்க முடியாத அளவு சின்ன குழந்தையில்ல நீலா நீ”

அவனையே கூர்ந்து பார்த்தவள்,

“உங்க கோரிக்கை என்ன?”

“எனக்கு உன் கூடவே இருக்கணும்”

“எதுக்கு?”

“எதுக்குன்னா நான்…நான் உன்னை லவ் பண்றேன்”

“ஓ!”

அந்த ‘ஓ’ பெரியதாக, கொஞ்சம் நக்கலுடன் வர அவன் முகம் சிவந்தது.

“இதுக்கு என்ன அர்த்தம்?”

“இந்த லவ், பியார், பிரேமம்லாம் சுத்த ஹம்பக், எனக்குப் பிடிக்காதுன்னு அர்த்தம். எல்லாமே கடைசில இந்த உடம்புகிற ஒரு விஷயத்துலதான் வந்து முடியுதுன்னு நான் நினைக்கிறேன்னு அர்த்தம்… சோ இனி இந்த மாதிரி லவ் மண்ணாங்கட்டின்னு என்கிட்டப் பேசிட்டு வந்து நிக்காதீங்கன்னு அர்த்தம். இப்ப கிளம்புங்கன்னு அர்த்தம்”

“நீலா! நான் உன்னைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறேன்”

“ஓ!”

இப்போது இன்னும் அதிக நக்கல் தொனியுடன் வந்தது அந்த ‘ஓ’

“ஆமா! கல்யாணம் பண்ணிக்கிட்டாதானே காலத்துக்கும் அடிமை சாசனம் எழுதி வாங்கிடலாம்…நினைச்ச நேரமெல்லாம் தேவையைத் தீர்த்துக்கலாம் பாருங்க”

“நீலா!” அழுத்தமாக அழைத்தவன் பின் நிதானித்து, தன் சிகையை ஒரு முறை கோதிக் கொண்டான்.

“நீலா! இப்ப உனக்கு உடம்பு சரியில்லை…நான் இப்ப இந்த பேச்சை எடுத்தது தப்பு”

“நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் இதுதான். உங்களுக்குக் கல்யாணம் செய்துக்கிற ஆசை இருந்தா அதற்கு தகுந்தாற் போல் ஒருத்தியப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க. ஐயம் நாட் தி ரைட் பெர்சன் ஃபார் யு.( நான் உங்களுக்கு சரியான ஆள் இல்லை) ஏன் உங்க செக்ரட்டரி தீபா இருக்காளே… நீங்க எள்ளுன்னா எண்ணையா நிக்கிறாளே… நல்ல பொண்ணாவும் தெரியுறா…அவளையே கல்யாணம் பண்ணிக்கோங்களேன்… யூ போத் வில் மேக் அ நைஸ் பேர்( உங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கும்)”

“வாய மூடறியா! உனக்குப் பிடிக்கலைன்னு சொல்ற உரிமை உனக்கு இருக்கு…நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு அட்வைஸ் பண்ற வேலைல்லாம் வேணாம்…அதுவும் அந்தப் பொண்ணைப் போய்…ஷீ இஸ் அ வெரி நைஸ் அண்ட் குட் ஃப்ரெண்ட் டூ மீ.( அவ எனக்கு ஒரு நல்ல தோழி) அதுக்கு மேல அவளைப் பத்தி எந்த ஐடியாவும் எனக்கில்ல…ஏன் கடந்து போன ஆறு வருஷமா யாரைப் பத்தியுமே எந்த ஐடியாவும் இல்லாமத்தான் இருந்தேன்”

“அப்படி எல்லாம் இருக்கக் கூடாதே மிஸ்டர் விக்னேஷ்… உடம்புக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துடணுமே…    இல்லைன்னா யாரையாவது பார்த்தா இப்படித் தறிகெட்டுப் போய் அலையும்”

வினாடி நேரத்தில் அவளை நெருங்கி இருந்தவன் அவள் குரல்வளையை நெரித்திருந்தான்.

இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ..
விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ.
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்