அத்தியாயம் 3

எண்ணங்களின் வசம் சிக்கித் தன்னைத் தொலைத்திருந்த  நீலாயதாட்சியை அலைபேசி கிணுகிணுத்து அழைத்தது.

(கதை முழுவதும் ஜெர்மன் உரையாடல்கள் தமிழில் கொடுக்கப்படும்)

“சொல்லு வின்னி”

“நீலு டியர்…எழுந்துட்டியா?”

“ம்ம்ம்…யாருன்னு தெரிஞ்சுதா?”

“இல்ல டியர்! பிடிபட்டவங்க அடுத்த நிமிஷமே கையில இருந்த சயனைட் சாப்பிட்டு இறந்துட்டாங்க…எதுக்கும் துணிஞ்சவங்க…அதோட டெட் எண்ட் ஆகிடுச்சு… மேற்கொண்டு லீட் கிடைக்கலைன்னு சொல்றாங்க”

“ஓகே வின்னி…அப்ப நான் ப்ளான் பண்ணினது போல இந்தியா கிளம்புறதுதான் சரி!”

அந்தப் பக்கம் சில வினாடிகள் மௌனம்…பின்

“இன்னும் கொஞ்ச நாள் பார்க்கலாமே…யாருன்னு கண்டுபிடிச்சுட்டா அப்புறம் போகத் தேவை இல்லைல்ல”

“இல்ல வின்னி! எனக்கு என் குழந்தைகளோட உயிர் முக்கியம்…என்னிக்கு வீட்டுக்குள்ளயே வந்து சாப்பாட்டில விஷம் வைக்கிற அளவுக்கு வந்துருக்காங்களோ…இனி என் குழந்தைகளை இந்த நாட்டில் நான் வச்சுக்கிறதா இல்ல”

“அங்க போனா மட்டும் பாதுகாப்பா…உன் மாமியாரும் உயிரோட இல்லாத நிலைல யார் இருக்கா உனக்கு அங்க”

“யாரும் இல்லதான்…ஆனா இங்கதான் எனக்குத் தொழில்முறை எதிரிகள் அதிகம்…அங்க என்னை விரும்புறவங்களும் இல்ல… அதே நேரம் விரோதிகளும் இல்ல…போய்க் கொஞ்ச நாள் கவனமா இருந்து பார்த்தாத் தெரிஞ்சிடும்…ப்ரச்சனை இங்கயா அங்கயான்னு…”

ஒரு நீண்ட பெருமூச்சு வெளிபட்டது அவனிடமிருந்து…

“சரி உன் விருப்பம்…ஆனாக் கவனமா இருக்கணும்”

“ம்ம்ம்…சரி வின்னி…நான் வைக்கிறேன்”

அலைபேசித் தொடர்பைத் துண்டித்தவள் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.

‘யாராக இருக்கக் கூடும்…’

ஆறு மாதங்களுக்கு முன்புவரை எல்லா விஷயங்களும் எண்ணையிட்ட சக்கரமாய் சிறு முணுக்கல் கூட இல்லாமல் தடையற்று நிகழ்ந்து கொண்டிருந்தன…

அவள் பிள்ளைகள் இருவரும் வழக்கமாக வீட்டில் இருந்து பள்ளிக்குக் காரில்தான் செல்வார்கள். அன்றும் அது போலக் கிளம்பினார்கள்…இருபது நிமிட நேரப் பயணத்தில் வந்து விடும் பள்ளி…அன்று வண்டி கிளம்பிப் பத்து நிமிடங்களில் வண்டிக்கு விபத்து என அவளுக்கு அலைபேசியில் செய்தி வரவும் வின்னியையும் வரச் சொல்லி விட்டு விழுந்தடித்துக் கொண்டு அந்த இடத்துக்கு ஓடினாள்.

நல்லவேளை…பிள்ளைகள் இருவரும் கொஞ்சம் சிராய்ப்புக்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டு இருந்தனர். சென்றதும் அவர்களைக் கட்டிக் கொண்டு அணைத்து முத்தமிட்டு ஆசுவாசப்படுத்தி அதன் மூலம் தன்னையும் ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் ஓட்டுனரிடம் விவரம் கேட்டாள்.

“சாலையில் எந்த வண்டியும் வரலங்க…திடீர்னு ஐம்பது அடி தூரத்துல கிளைச்சாலைல இருந்து இந்த லாரி வந்துச்சு… எங்களைக் கடந்து போய்டுவான்னு நினைச்சா நேரா எங்களைப் பார்த்தே வர ஆரம்பிச்சான்… நான் பதறிப் போய் வண்டியை ஓரம்கட்ட முயற்சி பண்ணினேன்…அதுல சாலைல இருந்து விலகி ஓரத்துல இருந்த மரத்துல போய் மோதிட்டேன்… ரொம்ப சின்ன இடைவெளிதான் இல்லைன்னா அந்த லாரி எங்க மேல நேருக்கு நேராக மோதியிருக்கும். நான் மரத்துல மோதினதைப் பின்னால கொஞ்ச தூரத்துல வந்துட்டு இருந்த வண்டியில இருந்தவங்க பார்த்துட்டு எங்களுக்கு உதவிக்கு வந்ததைப் பார்த்துட்டு அந்த லாரி நிக்காமப் போயிருக்கணும்னு நினைக்கிறேன்”

ஓட்டுனருக்கும் கை காலிலெல்லாம் அடிதான்.

காவல்துறையினர் வர அவர்களிடம் விசாரித்த போது அந்த லாரியைப் பிடிக்க முடியவில்லை…அதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்றார்கள்…அதன் எண்ணையோ வண்ணத்தையோ மாடலையோ எதைப் பற்றி விசாரித்தாலும் அந்த எண்ணில் லாரியே இல்லை என்றோ அந்த நிறத்தில், மாடலில் ஐநூறுக்கும் மேற்பட்ட வண்டிகள் இருக்கின்றன என்றோ தெரிய வந்ததில் மேற்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது போய் விட்டது.

அதன் பின் குழந்தைகளை அனுப்பும் காரில் அவளும் உடன் சென்று திரும்ப ஆரம்பித்தாள். மேலும் முன்னும் பின்னும் இரு வண்டிகளைப் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்தாள். பள்ளி நிர்வாகத்திடமும் நடந்ததை எடுத்துக் கூறிப் பிள்ளைகளுக்குப் பள்ளியில் எந்த ஆபத்தும் வராமலிருக்குமாறு பார்த்துக் கொண்டாள்.

அவளின் செல்வ நிலைக்கு, பணத்தினால் எல்லா வசதிகளையும் செய்து கொள்ள முடிந்தது. அதன் பின் சில நாட்கள் எந்த ப்ரச்சனையும் இல்லாமல்தான் கழிந்தன.

ஆனால் வீட்டுக்குள்ளேயே தோட்ட வேலை செய்பவனின் வடிவில் ஆபத்து வந்ததும், குழந்தைகளுக்காகத் தயார் செய்து வைத்திருந்த உணவில் அவன் விஷம் கலந்ததும், பள்ளி செல்லும் முன் தன்னிடம் வந்து கொஞ்சிய தன் நாய்க்குப் பெரியவள் ப்ரியநந்தினி தன் தட்டில் பரிமாறப்பட்டிருந்த உணவைக் கொஞ்சம் போட்டு விட்டுத் தலை வாரிக் கொண்டிருந்த நேரத்தில் நாய் துடிதுடித்துக் குருதியைக் கக்கியவாறு இறந்து போனதுமாக கொஞ்சமும் அவள் எதிர்பாராத விதத்தில் நடந்த விடயங்களில் அவள் ஸ்தம்பித்துப் போனாள்.

அந்தத் தோட்டக்காரனைப் பிடிக்க முயற்சிக்க அவன் அடுத்த நாள் எங்கோ ஒரு வயல்வெளியில் சடலமாகக் கிடைக்க அவனை வைத்துத் துப்புத் துலக்கும் வழியும் அடைபட்டுப் போனது.

ஜெர்மனியில் இருக்கவே அவளுக்கு பயமாக இருந்தது. விஷயத்தை விளக்கிக் காவல்துறையின் இருபத்து நாலு மணி நேரக் காவலைப் பெற்றுக் கொண்டாள். பிள்ளைகளுக்குத் தானே சமைத்தாள். சமைக்காத பொருட்களையோ ஆயத்த உணவுகளையோ அவர்களுக்குக் கொடுப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டாள்.

ஆனால் யார் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவளுக்கு அங்கிருந்து கிளம்பி விடுவதே உசிதமாகப் பட்டது.

ஒருவேளை இந்தியாவிலும் இது தொடரலாம்…ஆனால் அது தன் தாய் மண்…அங்கே அவளால் சமாளிக்க முடியும். தன் கணவனின் வீடு ஷெனாய் நகரில் இருக்கிறது. விசுவாசமான வேலையாட்கள் இன்னும் இருக்கிறார்கள். அங்கும் பாதுகாப்புப் பெற்றுக் கொண்டால் ஒன்றும் பயமில்லை என்று தோன்ற உடனடியாக அதற்கான காரியங்களில் இறங்கினாள்.

இந்தியாவுக்குச் சென்று என்ன செய்வது என்ற கேள்வி எழுந்த போதுதான் அங்கும் தன் கணவனின் டெக்ஸ்டைல் தொழிலையே தொடரலாம் என்ற முடிவுக்கு வந்தவள் அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிக்காமல் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களில் ஏதாவது ஒன்றை வாங்கியோ அல்லது அவர்களுடன் இணைந்தோ செய்யலாம் என நினைத்துத் தேடிய போதுதான் மதன் டெக்ஸ்டைல்ஸ் பற்றிய விவரங்கள் தெரியவர பேச்சுவார்த்தைக்குத் தயாரானாள்.

இப்போது வின்னியிடம் பேசி முடித்தவள் மனதில் எழுந்த மற்ற உறுத்தல்களையும் விலக்கி இந்தியா செல்வது என உறுதியாக முடிவு செய்து கொண்டு அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

………………………………………………………………………………………………………….

அன்று காலையில் குளித்து விட்டு வெளியே வந்த விக்னேஷ் ஏற்கனவே அழகான ஃபைவ் ஓ க்ளாக் ஷேடோ எனச் சொல்லப்படும் வகையில் அமைந்திருந்த மெல்லிய தாடியில் ட்ரிம்மரை ஓட்டிச் சீராக்கினான்.

குளித்து விட்டு வந்து தன்னை அறியாமலே உடைகளையும் கவனமாகத் தேர்வு செய்தவன் க்ரே நிற ஸ்லிம் ஃபிட் சட்டையும் கறுப்பு நிறக் கால்சராயும் அணிந்து கொண்டு கண்ணாடி பார்த்துத் திருப்தியானதும் அலுவலகத்துக்குக் கிளம்பினான்.

அன்று கொஞ்சம் முன்னதாகவே வந்து விட்டவன் காலை உணவை விரைவில் முடித்து, தன் வழக்கமான மேற்பார்வையிடலையும் கொஞ்சம் சுருக்கமாக முடித்துக் கொண்ட பின்பே வந்து தன் அறையில் அமர்ந்தான்.

மீண்டும் அந்த ஜெர்மனி நிறுவனக் கோப்புக்களில் பார்வையை ஓட்டியவன் மனம் ஏன் பரபரப்புற்றிருக்கிறது என அவனுக்கே தெரியவில்லை.

சந்திப்புக்கான நேரமும் நெருங்க அந்த நீல விழிகளைச் சந்திக்க ஆவலோடு காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆம்! அன்று அந்தப் பெண் முதல் நாளைப் போல் திரையின் முன் அமராமல் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தாள்.அவளது தலை முதல் கால் வரை திரையில் தெரிந்தது.

பவுடர் ப்ளூ நிறத்தில் ஒவர்கோட், அதே நிற ஸ்கர்ட், ஓவர்கோட்டினுள் வட்டக்கழுத்தைக் கொண்ட தூய வெண்ணிறச் சட்டை, கழுத்தை ஒட்டினாற் போல் முத்துக்களால் ஆன மாலை, காதுகளிலும் முத்துக்கள், தலையை அள்ளி உச்சியில் கொண்டையும் அல்லாமல் குதிரைவாலுமல்லாமல் ஒரு மாதிரி வித்யாசமாக அணிந்திருந்தாள்.

கால்களை ஒன்றின் மேலொன்று போட்டிருக்க உடையின் நீல நிறத்தில் பளபளவென மின்னிய காலணியும் தெரிந்தது. ஆனால் அவன் பார்க்க எண்ணிய விழிகள் இரண்டும் அவளது குளிர் கண்ணாடியின் பின் மறைந்திருந்தன.

வெயிலுக்காக அணியும் குளிர் கண்ணாடியைப் போலல்லாமல் சாதாரண கண்ணாடியில் கொஞ்சம் நீல நிற டின்ட் செய்யப்பட்டிருக்க அவள் விழிகளைக் காண முடியாதது அவனுக்கு ஏமாற்றமே!

அதைப் பிறரறியாமல் மறைத்தவன் உரையாடலைத் துவக்கும் முகமாக

“குட்மார்னிங் மிஸஸ் சுப்ரமணியன்” என்றான்.

அவனை நேராகப் பார்த்தவள் ஒரு மெல்லிய தலையசைப்பை மட்டும் பதிலாகக் கொடுக்க திமிர் பிடித்தவளாக இருப்பாளோ என்ற எண்ணம் அவனுள் உருக்கொண்டது.

சில வினாடிகள் பொறுத்து “குட்மார்னிங்க் மிஸ்டர் விக்னேஷ்” என்ற அவளின் கம்பீரமான கணீரென்ற குரல் அவன் செவிப்பறைகளில் மோதியது.

“ஷால் வீ ப்ரொசீட்?”

அவன் கேட்க இதற்கும் தலையசைப்புத்தான்.

“இந்தக் கம்பனி இருபத்தி ஐந்து வருஷங்கள் முன்பு எங்க பாஸ் மதன கோபால்னால ஆரம்பிக்கப்பட்டது. நான் இங்க சேர்ந்து ஆறு வருஷம் ஆகுது…நல்ல நிலையில் இருந்த கம்பனிதான்…சில புல்லுருவிகளால கொஞ்சம் ப்ரச்சனைகள் வந்து இப்ப அதுல இருந்து மீண்டுட்டோம். ஆனால் இப்போ பணத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுப் போச்சு… அதுனாலதான் மற்ற நிறுவனங்களுக்கு ஷேர்ஸ் விக்கணும்னு யோசித்தது. இப்ப தேர்ட்டி ஃபைவ் ஷேர்ஸ் உங்ககிட்ட இருக்கிறனால எனக்கு அடுத்த படியா இந்தக் கம்பனில நீங்க பார்ட்னரா வர்றீங்க…சோ வீ வெல்கம் யூ ஹோல் ஹார்ட்டட்லி”

அடுத்து அவள் பேசுவாள் என அவன் காத்திருக்க சில வினாடிகள் இடைவெளி விட்டவள்,

“நான் இந்தியால பிசினெஸ் ஸ்டார்ட் பண்ணணும்னு நினைச்சப்போ நிறைய பெரிய கம்பனீஸ் என் கூடக் கைகோர்க்கத் தயாரா இருந்தாங்க… ஆனா எனக்கு அவங்க கூட பிஸினெஸ் பண்ண இஷ்டம் இல்ல. சின்னக் கம்பனியா இருந்தாலும் எனக்கு என்னிஷ்டத்துக்கு செயல்படக் கூடிய நிறுவனமா இருக்கணும். அதுனாலதான் உங்களைத் தேர்ந்தெடுத்தது…

சில வினாடிகள் அவள் இடைவெளி விட அவன் மனதுள் ‘இவள் என்ன சொல்ல வருகிறாள்…உன்னிடம் ஷேர்ஸ் அதிகம் இருந்தாலும் நான் என்னிஷ்டத்துக்குதான் செயல்படுவேன் என்று சொல்கிறாளா’ என மனம் முரண்ட அவள் மொத்தமாகச் சொல்லி முடிக்கட்டும்’ என நினைத்து அமைதியாக இருக்க அவள் தொடர்ந்தாள்.

“உங்க கம்பனி டீடைல்ஸ் எல்லாம் பார்த்தேன். ஒரு வருஷம் முன்ன வரை உங்க கம்பனி நல்ல நிலைமைல இருந்துருக்கு…ஆனா இப்ப கேபிடல் மனில கையை வைக்கிற அளவுக்கு லாபம் குறைஞ்சுருக்கு… அதுக்குக் காரணம் என்னன்னு எனக்குத் தெரியணும்…அது வெறும் பணத்தால மட்டும் தீர்க்க முடியுற விஷயமா…இல்லை பணம் போட்டாலும் உள்ள வேற ப்ரச்சனைகள் இருந்து நான் போடுற பணத்தையும் சேர்த்து விழுங்கிடுமான்னு தெரியாம ஐ கேன்னாட் இன்வெஸ்ட் இன் திஸ்…சோ ஐ வான்ட் சம் எக்ஸ்ப்ளனேஷன்ஸ் ரிகார்டிங் திஸ்”

“நீங்க சொன்ன மாதிரி ஒரு வருஷத்துக்கு முன்ன வரை அதாவது எங்க பாஸ் உயிரோட இருந்தவரை கம்பனி லாபத்துலதான் செயல்பட்டுட்டு இருந்துச்சு…அதுக்கப்புறம்…” கொஞ்சம் தயங்கியவன்… “அதுக்கப்புறம் கம்பனில சில ப்ரச்சனைகள் வர்றதுக்கு என்னோட கவனக் குறைவு மட்டுமே காரணம்” என்று நிறுத்தினான்.

கால் மேல் கால் போட்டு இடக்கை பெருவிரலைத் தாடையிலும், ஆட்காட்டி விரலைக் கன்னத்திலும் வைத்து இரண்டு விரல்களால் மட்டும் முகத்தைத் தாங்கி முழங்கையை இருக்கையில் பதித்துக் கொஞ்சம் முன்னுக்கு சாய்ந்து அமர்ந்திருந்தவள் அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது தவிர மறுமொழி ஏதும் சொல்லாததால் அவன் தொடர்ந்தான்.

“என் பக்கமிருந்து மறுபடி அது போல் தவறு நிச்சயமா நடக்காது. சோ பணம் மட்டும் கிடைச்சிட்டாக் கண்டிப்பா ஒரு வருஷம் முன்னால இருந்த நிலைக்குக் கம்பனியை என்னால திரும்பக் கொண்டு வர முடியும்.”

அவள் பேசாமலே இருக்கவும் “நீங்க கம்பனில இன்வெஸ்ட் பண்ணி உங்க இஷ்டத்துக்கு செயல்படுறது பத்தி எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்ல… நீங்களும் கம்பனியை முன்னேற்றத்தானே உழைக்கப் போறீங்க… ஆனா எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு…அதை நான் சொல்லலாமா?”

‘சொல்’ என்பது போல் தலையசைப்பு மட்டுமே அவளிடமிருந்து… சொல்லுங்கன்னு வாயைத் திறந்து சொன்னா முத்து உதிர்ந்திடும் போல என மனதுக்குள் அவளை வறுத்தெடுத்தவன் வெளியே சாதாரணமாகவே தொடர்ந்தான்.

“எந்த நிலைலயும் இந்தக் கம்பனி ஆட்களைப் பதவி நீக்கம் செய்ய மட்டும் நான் சம்மதிக்க மாட்டேன். இது என்னோட விருப்பம்னு சொல்றதை விட இந்த நிறுவனத்தை உருவாக்கிய மதனகோபால் சாரோட விருப்பம்… இதுவரை இங்க தவறு செய்தவங்களைக் கண்டிச்சுருக்கேன்… தண்டிச்சது கிடையாது…இங்க உள்ள எம்ப்ளாயீஸ் எல்லாம் ஒரு குடும்பம் மாதிரி… அவங்களா ரிடையர் ஆகிப் போற வரை ஆட்குறைப்புக்காகவோ இல்லை தண்டனையாகவோ அவங்களை வேலையை விட்டு நீக்கக் கூடாது… மத்தபடி உங்க செயல்பாடுகளுக்கு எத்தனை தூரம் ஹெல்ப்ஃபுலா இருக்க முடியுமோ அவ்வளவு இருப்பேன்” என்று முடித்தான்.

அவள் பதிலேதும் சொல்லாமல் அவனைக் கூர்ந்து பார்த்த வண்ணம் சில வினாடிகள் இருந்தாள்.

பின் கையைத் தாடையிலிருந்து விலக்கி நாற்காலியின் கைப்பிடியில் பதித்தவள் கொஞ்சம் சாய்ந்து அமர்ந்தாள்.

“வெல் மிஸ்டர் விக்னேஷ்! எனக்கு யாரையும் வேலையை விட்டுத் தூக்கியே ஆகணும்னெல்லாம் வேண்டுதல் எதுவும் இல்ல…ஆனாக் கொஞ்சம் முன்னால நீங்க சொன்னீங்களே அந்த மாதிரிப் புல்லுருவித்தனம் பண்றவங்களுக்கு இங்க இடமில்லை…மத்தபடி ஒழுக்கமா இருக்கிறவங்களோட சின்னச் சின்னத் தவறுகளை எச்சரிக்கை செய்து மன்னிக்கலாம்”

“யெஸ்…மிஸஸ் சுப்ரமணியன். தட்ஸ் ஆல் ஐ வான்ட். தேங்க்ஸ் ஃபார் கன்சிடெரிங்” ( எனக்கும் அவ்வளவுதான் வேணும்… ஒத்துக் கொண்டதற்கு நன்றி)

“ஓகே மிஸ்டர் விக்னேஷ்! லெட் அஸ் எண்ட் த மீட்டிங்க். நான் அடுத்த வாரம் இந்தியா வந்துடுவேன். அதற்குள் உங்க கம்பனில தேவையான அரேஞ்ச்மென்ட்ஸ் பண்ணிடுங்க… டீடைல்ஸ் என் செகரட்டரிகிட்டக் கேட்டுக்கச் சொல்லுங்க. எனி அதர் இஸ்ஸ்யூஸ்…கான்டக்ட் மீ பை மெயில்”

“ஃபைன் மிஸஸ் சுப்ரமணியன். குட்டே டூ யூ”

ஒரு மெல்லிய தலையசைப்புடன் அவள் எழுந்திரிக்க அவளது செயலாளர் வந்து இணையத் தொடர்பைத் துண்டித்தாள்.

தொடர்ந்து வந்த வாரத்தில் ப்ரதீபா நீலாயதாட்சியின் செயலாளர் தட்சணாவைத் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்று அவளது தனிப் பயன்பாட்டிற்கென அலுவலகத்திலேயே ஒரு அறையைத் தயார் செய்ய ஆரம்பித்தாள்.

ஒரு வாரமும் கடந்து விட ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்து விட்ட நீலாயதாட்சி அன்றுதான் அலுவலகம் வருவதாக இருந்தது.

கார்த்திக்குக்கு அவளது நீல விழிகளைக் காணும் ஆவல் இருந்தாலும் அதை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்தவன் சந்திப்பு அன்று போலவே தன்னையும் அறியாது கவனமாக ஒரு கருநீல நிற சட்டையும் ஆஃப்வைட் நிறக் கால்சராயையும் தேர்வு செய்து அணிந்து தயாரானான்.

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா