கல்வடியும் பூக்கள் 1 2 5245 “அத்தையும் அம்மாவும் உன்கிட்ட சொல்லிருப்பாங்களே ம்மா தெரியாத மாதிரி கேட்கிற. நல்ல இடம் குணமான பையன் சென்னையில காலேஜ்ல வேலை பாக்கிறான் வர்ற வெள்ளிக்கிழமை வறேன்னு சொல்றாங்க நீ என்னமா சொல்ற?” என்று கேட்டு, மகளின் முகத்தை ஆவலோடு பார்த்தார் சிவநேசன். பேச்சை முடித்து கொள்ளும் விதமாக உண்டு முடித்தவள் கை கழுவி எழுந்திட, “உன்கிட்ட தான் கேட்டேன் பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்“,வார்த்தைகள் கட்டமாய் வந்து விழுந்தன. “சொல்றதுக்கு எதுவுமில்லைன்னு அர்த்தம் ப்பா. என்னோட முடிவை ஏற்கனவே சொல்லிட்டேன் அதுல எந்த மாற்றமும் இல்லை, நீங்க வேணா நடந்த நிகழ்வுகளை மறந்துருக்கலாம் ஆனா நா எதையும் மறக்கல மறக்கவும் விரும்பலை. அத்தை கிட்ட சொன்ன அதே பதில் தான், கொஞ்ச நாள் போகட்டும் நானே சொல்றேன்” என்றாள் அழுத்தம் பொதிந்த குரலில். “இன்னும் எத்தனை கொஞ்ச நாள். இப்டி சொல்லி சொல்லியே ரெண்டு வருஷம் ஓடி போயிருச்சு நடந்து முடிஞ்சு போனதையே நினைச்சிட்டு இருந்தா போனவன் திரும்பி வந்துருவானா?, நாங்க உயிரோட தான் இருக்கோம் எங்களுக்கும் மனசு இருக்கு. பெத்த பொண்ணை மணக்கோலத்துல பாக்கணும்னு ஆசை இருக்காதா? உனக்கடுத்து இளையவ இருக்கா, அவளுக்கு கலகாலத்துல ஒரு நல்ல இடமா பாத்து முடிச்சு கொடுக்க வேணாமா?, எப்பவும் உன்னை பத்தி மட்டுமே யோசிக்கிறயே கொஞ்சம் எங்களை பத்தியும் யோசிம்மா” என்று வேகமாக பேச்சை ஆரம்பித்தவர் இறுதியில் ஆதங்கத்தோடு முடித்தார் சிவநேசன். “திவிம்மா பிடிவாதம் பண்ணாதடா சரின்னு சொல்லு பொண்ணு பாக்க தானே வர்றாங்க நிச்சயம் பண்ண வரலையே சம்பரதாயம்னு ஒன்னு இருக்குல்ல வந்து பாத்துட்டு போகட்டும்” என்று நேசமணியும் தன் பங்கிற்கு எடுத்துரைக்க, “நீங்க தான் மாமா பிடிவாதம் பிடிக்கிறீங்க பிடிக்காத ஒன்னை என்மேல திணிக்க பாக்குறீங்க விட்டுருங்களேன் நா இப்டியே இருந்துட்டு போறேன்” என்று தொண்டையில் அடைத்த வலியை விழுங்கி கொண்டு பேசினாள் திவ்யபாரதி. “பாப்பா கொஞ்சம் யோசிடா இவ்ளோ தூரம் சொல்றோமே அது உன்னோட நல்லத்துக்குதான்னு உனக்கு புரியலையா“. “உங்களுக்கு தான் ம்மா புரியலை இதே வார்த்தைகளை கொஞ்சம் மாத்தி பேசி பார்த்திய சம்மதிக்க வச்சிங்க, புடவை கட்டி பூ வச்சு அலங்காரம் பண்ணி கல்யாண கணவுகளோட எவ்ளோ ஆசையா இதே கூடத்துல தானே வந்து நின்னேன்.இப்போ, அதே மாதிரி வேற ஒருத்தர் முன்னாடி வந்து நிக்க சொல்றிங்க எப்டிம்மா?”,வேதனை இழையோட பேசியவள், “கல்யாணம் பண்ணிக்க சொல்லி எனக்கு கருமாதி பண்ணி பாக்க ஆசைப்படுறீங்க” என்றதும் தீ சுட்டார் போல மூவரும் துடித்து போயினர். “திவி என்ன பேச்சு பேசுற“, நேசமணி கண்டிப்பை காட்ட, அம்பிகா பேச வார்த்தை இருந்தும் பேச முடியாமல் கண்கள் கலங்கி நின்றார்.மகளின் பேச்சில் சிவநேசனின் மொத்தமாய் உடைந்து போனார் சிவநேசன். “ப்ளீஸ் மாமா அவங்களுக்கு தான் புரியலை உங்களுக்குமா புரியலை, மேலும் மேலும் இந்த விஷயத்தை பத்தி பேசி என்னோட மனசை காயப்படுத்தாதீங்க” என்று கை கூப்பி இறைஞ்ச, “அவ முடிவுல தெளிவா தான் இருக்கா விட்டுருங்க“என்று அறையில் இருந்து வெளிப்பட்டவரின் குரல் கேட்டு அங்கிருந்த அனைவரும் திரும்பி பார்த்தனர். திவ்யாவை நோக்கி வேகமாக வந்தவர் “நீங்க ஆகுற வேலைய பாருங்க ண்ணா நடக்க வேண்டியது தானா நடக்கும். நீ போ திவிம்மா நாளைக்கு காலேஜ் போகணும்னு சொன்னியே போய் தூங்கு, நேரத்துக்கு எந்திரிக்கணும் இல்லையா“,சாதாரணமாய் பேசியவரின் முகத்தில் பிடிவாதம் மறைந்திருந்தது. “ஏய் நீ என்னடி வாயை பாத்துட்டு இருக்க கூட்டிட்டு போ அக்காவை” என்று கவிபாரதியை பார்த்து கூற, “வாங்க க்கா” என்றவள் கைபிடித்து அழைத்து சென்றாள். அதுவரை உறுதியாய் பேசியவளின் மனம் கலக்கம் கொண்டது. ஜெயசித்ராவின் பேச்சு பயத்தை ஏற்படுத்த, அவரின் மன எண்ணம் என்னவென்று தெரியமால் குழம்பம் தாங்கிய முகத்துடன் திரும்பி பார்த்தபடி சென்றாள் திவ்யபாரதி. “நீங்க சாப்டுங்க ண்ணா திவிய பத்தின கவலை உங்களுக்கு வேண்டாம். மாப்பிள்ளை வீட்டுல வெள்ளிக்கிழமை வர சொல்லி தகவல் அனுப்பிடுங்க“. “என்ன சொல்ற ஜெயா என்ன பண்ண போற எனக்கு புரியலை” என்று நேசமணி கேட்க, “உங்களுக்கு என்னைக்கு தான் சொன்னதும் புரிஞ்சிருக்கு“. “புரியிற மாதிரி சொன்னா புரியும்“என்று பதில் கொடுத்தவரை முறைத்து பார்த்தார் ஜெயசித்ரா. “நா என்ன பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்னு உங்களுக்கே தெரியும். இப்ப என்னால எதுவும் சொல்ல முடியாது நடக்கும் போது பாருங்க” என்று உரைத்துவிட்டு விறுவிறுவென அறைக்குள் சென்று மறைந்து கொண்டார். மகளின் பிடிமானமில்லா பேச்சில் உணவை போலவே வயிறும் ஆறி அடங்கி போனது சிவநேசனுக்கு. தட்டை நகர்த்தி வைத்தவர் சாப்பிடாமலேயே எழுந்து கொள்ள, “சாப்பிடாம போறீங்க“. “அவ பேசுன பேச்சுல மனசு நிறைஞ்சு இருக்கு அம்பிகா” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் சிவநேசன். ஒற்றை ஆளாய் அமர்ந்து உணவை விழுங்க துளியும் மனமில்லாமல் நேசமணியும் எழுந்து கொள்ள, “நீங்களாவது சாப்டலாமே ண்ணா இப்டி ஆளாளுக்கு வயித்தை காய போட்டா கவலை தீர்ந்து போகுமா?” கண்ணீர் வடிய அம்பிகா கேட்க, “மனசில்லை ம்மா பசியிருந்தா தானே சாப்ட மனசிருக்கும்” என கூறிவிட்டு தரையில் கிடந்த துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு நேசமணியும் சென்று விட, அவசரமாய் சமைத்த உணவுகள் அனைத்தும் அனாதையாய் காற்று வாங்கி கொண்டிருந்தது. ஒவ்வொரு பாத்திரமாய் எடுத்து சென்று சமையல் அறையில் வைத்தவர் சாதத்தில் தயிரை ஊற்றி தண்ணீர் கலந்து மூடி வைத்து, மற்றவைகளை சூடு படுத்தி வைத்தவர் பின் பக்கமிருந்த அறைக்கு சென்றார். பலமாய் யோசனை செய்தபடி உறங்காமல் சிவநேசன் விட்டத்தை பார்த்து படுத்திருக்க, அருகில் சென்று அமர்ந்தவர் காலை பிடித்து விட்டவாறே, “எனக்கென்னமோ அவசரப்படுறோமோன்னு தோணுது எதுக்கும் ஒரு தடவை யோசிக்கலாமே” என்றார் அம்பிகா தயக்கம் இழையோட. பதில் பேசாமல் சிவநேசன் அமைதியாய் இருக்க அதுவே அவரை மேலும் பேச தூண்டியது. “திவியோட விருப்பம் முக்கியம் இல்லையா? அவளுக்கு விருப்பமில்லாத ஒன்னை செய்துகோன்னு வற்புறுத்துறது சரியாப்படலைங்க அவ சொல்ற மாதிரி கொஞ்ச நாள் போகட்டுமே” என்றதும், விசுக்கென எழுந்து அமர்ந்தவர் “திவி இடத்துல கவி இருந்தாலும் இப்டி தான் சொல்லுவியா அம்பிகா” என்று வேகமாக கேட்க, “என்னங்க இப்டி பேசுறீங்க திவியும் என்னோட பொண்ணு தான் ஒரு நாள் கூட அவளை தூரமா நிறுத்தி பாத்ததில்லையே, இப்டி ஒரு எண்ணம் எனக்கிருக்கும்ன்னு எப்டி உங்களால நினைக்க முடிஞ்சது” என்று வார்த்தை பொறுக்கமால் வேகமாக பேச, வேகத்தின் கோபம் மேலும் வலுவாகமல் இருக்க “நாளைக்கு ஈரோடு வரைக்கும் போக வேண்டி இருக்கு சீக்கிரமா எழுப்பி விடு” என்று பேச்சை திசை திருப்பியவர் கண்களை மூடி முதுகு காட்டி படுத்து கொண்டார். சற்று நேரம் கலங்கிய விழிகளுடன் கணவனை பார்த்த அம்பிகா எதுவும் பேசாமல் அழுது கொண்டே அறையில் இருந்து வெளியேறினார். உறங்குவது போல பாவனை செய்து கொண்டிருந்தவளின் கையை சுரண்டி “அக்கா” என மெல்லிய குரலில் கவிபாரதி அழைக்க, “என்னடி“,கண்களை திறக்காமலேயே கேள்வி கேட்டாள். “நா ஒரு யோசனை சொல்லவா அத்தை சொல்ற மாதிரி அவங்க வந்துட்டு போகட்டுமே பிடிக்கலைன்னு இவங்க கிட்ட சொல்றதை விட மாப்பிள்ளைகிட்ட நேரடியா மனசுல உள்ளதை பேசிட்டா ப்ராப்ளம் சால்வ் ஆகிரும். அடுத்து மாப்பிள்ளை தேட எப்டியும் ஒரு ரெண்டு மாசமாவது டைம் எடுத்துப்பாங்க சோ அந்த கேப்ல நீ அப்லே பண்ண ஃபாரின் ஜாப் கிடைச்சிருச்சுன்னா சல்லுன்னு பறந்து போயிரு யாரும் உன்னை கட்டி வைக்க போறதில்லையே“,மேதவியாய் யோசனை சொல்ல, “அதெல்லாம் சரிப்பட்டு வராது கவி” என்ற வரியில் உத்வேகம் மொத்தமும் வடிந்து போனது கவிபாரதிக்கு. “ஏன் க்கா சரி வராது“. “அவரும் மனுஷன் தானே அவருக்குன்னு சில எதிர்பார்ப்புகள் ஆசைகள் இருக்காத என்ன? வரவழைச்சு பிடிக்கலைன்னு சொல்றது அவமானபடுத்துன மாதிரி ஆகிடாது. பாக்காம வேணாம்னு சொல்றது வேற பாத்துட்டு வேணாம்னு சொல்றதை வேற, உனக்கு புரியாது நிராகரிப்போட வலி என்னனு! யாருன்னே தெரியாத ஒருத்தருக்கு அந்த வலியை கொடுக்க விரும்பலை அவங்க பண்றதை பண்ணட்டும் என்னோட பார்த்தி என்கூடவே இருக்குறப்போ எனக்கு என்ன கவலை வருத்தம்” என்று நியாயவதியாய் பேசினாள் திவ்யா.மேலோருவன் ஆட்டு விக்க போகும் ஆட்டத்தின் ஆரம்பம் தெரியாமல். “இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு என்ன க்கா பண்ண போற” என்று சிறு பயத்தோடு கேட்டாள் கவிபாரதி. “ரெண்டு நாள், நாற்பத்து எட்டு மணி நேரம் இருக்கு என்னவேனாலும் நடக்கலாம் அதை பத்தி இப்போ பேச வேணாம், நாளைக்கு விஷயத்தை நாளைக்கு பாக்கலாம் இப்போ நல்லா தூங்கலாம் எனக்கு தூக்கம் வருதுடி” என்றவள் தலை முதல் கால்வரை போர்வையை போர்த்தி கொண்டு திரும்பி படுத்து கொள்ள, வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை எண்ணி கவியின் உறக்கம் மொத்தமும் கலைந்து காணாமல் போனது. “பாவம் பாத்ததுக்கு பரிசா? நைட்டுக்கு நாய் மாதிரி காவல் காக்க வச்சுட்டாளே, இவளுக்கு யோசனை சொல்லி மொத்த தூக்கமும் போயிருச்சு” என்று நொந்து கொண்டவள் குப்புற படுத்து உறங்க முற்பட்டாள் கவிபாரதி. வாசம் வீசும்….