நந்தனின் அப்பாவிடம் “அது உங்க மேல தான் தப்பு அங்கிள்., நீங்க தான் ஆன்ட்டிய கல்யாணம் பண்ணும் போது சொல்லியிருப்பீங்க.., கண்ணு கலங்காம பார்த்துக்கிறேன் ன்னு., அதனால தான் ஆன்ட்டி வெங்காயம் உரிக்க விடுறாங்க”., என்று சொல்லவும்.,
அவரும் சிரித்துக் கொண்டு “ஆமா ஆமா சொல்லி இருக்கேன்., சொல்லி இருக்கேன்., அதனாலதான் உங்க ஆன்ட்டி என்ன கண் கலங்க வைக்கிறா” என்று சொன்னார்.
“இல்ல அங்கிள் ஆன்ட்டி உங்க அம்மாக்கு., ப்ராமிஸ் பண்ணி இருக்க மாட்டாங்களா இருக்கும்.., உங்க பையன கண்ணு கலங்காம பாத்துக்கிறேன்னு”., என்று சொல்லி விட்டு “அம்மா இனி அப்பாவிற்கு வெங்காயம் உரிக்க கொடுத்து இருங்க”., என்று சொன்னாள்…….
நிவேதாவின் அம்மாவோ., “சரி நீ உள்ள வா”., என்று அழைக்க
நந்தன் அம்மாவோ., “சும்மா இருக்கட்டுமே”.., என்று சொன்னார்.
வாயாடி என்று நிவி அம்மா முணுமுணுக்க அதை கண்டுகொள்ளாத நந்தன் அம்மா “புள்ளைங்க இப்படித்தான் கலகலன்னு எப்பவும் சிரிச்ச முகமா இருக்கணும்.., அதுதான் ரொம்ப நல்லா இருக்கு”., என்று சொல்லி நிவேதாவின் கையை பிடித்து தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டார்..,
அதன் பிறகு அவள் எதுவும் பேசாமல் இருக்க அவர்கள் மற்ற விஷயங்கள் பேச தொடங்கினர்., அதற்குள் ஸ்வேதா எழுந்துவர ஸ்வேதாவோடு எழுந்து உள்ளே சென்று அவளோடு பேசிக்கொண்டிருந்தாள்.
இங்கு அதற்குள் பேசி முடிவு செய்து பொங்கல் முடிந்தவுடன் 10 நாள்களில் திருமணம் எண்ணும் அளவிற்கு பேச்சு தொடங்கியிருந்தது.,
“எதுக்கும் ஊருக்கு போயிட்டு நாங்களும் நாள் பார்க்கிறோம்., நீங்களும் ஜோசியர் பாருங்க”., என்று பேசி அவர்கள் கிளம்ப தொடங்கினர்.
அவளிடம் சொல்லி விட்டு சென்றனர்.
“சீக்கிரம் அங்க நம்ம வீட்டுக்கு வந்து சேர்ந்துரு ம்மா”., என்றார்.
நந்தனின் அம்மாவோ ஒரு படி மேலே போய் நிவேதாவின் நெற்றியில் முத்தமிட்டு “சீக்கிரம் வந்துவிடு” என்று சொல்லிவிட்டு சென்றார்…
அவர்கள் கிளம்பி செல்லவும்.,
நிவேதாவின் அம்மாவோ “பேசியே விரட்டிறலாம் ன்னு பார்த்த.., அவங்க பாரு நீ பேசினது பிடிச்சு போய் சரின்னு சொல்லிட்டு போய்ட்டாங்க”.., என்று சொன்னார்.
இவளோ ‘எல்லா முயற்சியும் வீணா போயிருச்சே’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
மாலைநேரம் வீட்டின் மொட்டை மாடியில் தரையில் அமர்ந்து சுவற்றோடு சாய்ந்து கொண்டிருக்கும் போது., கீழே பக்கத்துவீட்டு ஆன்ட்டியோட அம்மா பேசுவது தெளிவாகவே கேட்டது.,
“நல்ல இடம் பாருங்க., கவர்மெண்ட் ஜாப் வந்தாங்க, அவங்களுக்கும் பிடிச்சிருச்சு., எங்களுக்கும் பிடிச்சிருச்சு, ஜாதகமும் பொருந்தி இருக்கு அதனாலதான் பேசி முடிக்கலாம் பார்க்கிறோம்.., நிவேதா அப்பாக்கு ரொம்ப சந்தோஷம்.., இப்ப தான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு.., விஷ்ணு சின்ன பையன் பாத்திங்களா இவளைக் கல்யாணம் பண்ணி குடுத்துட்டாங்க அதுக்கப்புறம் பாத்துக்கலாம்., நிம்மதியா இருக்கலாம்”.., என்று கல்யாண விஷயத்தை பேசிக்கொண்டிருந்தார்.
அம்மாவின் சந்தோஷம் அவரது வார்த்தைகளிலேயே தெரிந்தது அப்பாவும் பகலில் “வாயாடி நீ அரட்டை அடிச்சு விரட்டலாம் ன்னு பார்த்த.., அவங்க சம்மதிச்சு போய்ட்டாங்க.., இப்ப அப்பாக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா”., என்று சொல்லி கன்னம் தொட்டு கொஞ்சி விட்டுப் போனது நினைவு வந்தது…
வீட்டினரின் மகிழ்ச்சியை பார்த்த பிறகு அவளால் அதற்கு மேல் திருமணத்திற்கு மறுப்பு சொல்ல தோன்றவில்லை.,
அப்பாவின் முகத்தில் பார்த்த சந்தோஷம் தனக்கு நல்ல கல்லூரியில் சீட் கிடைக்கும் போதோ., இல்லை வேலை கிடைத்ததை பற்றி சொல்லும் போது கூட இத்தனை சந்தோஷம் படவில்லை என்றே தோன்றியது..,
நந்தனின் வீட்டிலோ எந்தவித எதிர்பார்ப்பும் வைக்கவில்லை உங்கள் பெண்ணுக்கு நீங்கள் செய்வதை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர்.
வேறு எந்த கொடுக்கல் வாங்கல் எதைப்பற்றியும் பேசாமல் சென்றதே அம்மாவும் அப்பாவும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தனர்., அதற்கு மேல் வாயை திறக்காமல் அமைதியாக இருக்க முக்கிய காரணமாகிவிட்டது..
மாலை தன் அலுவலக வேலை முடிந்து வந்த நண்பனை ஹாலிலே காத்திருந்து பிடித்தனர்., பெண் பார்த்து வந்த ஆட்கள் அனைவரும்.
ஆளாளுக்கு அவளது பேச்சும்., அவளது துரு துருப்பையும் ஷியாம் சொல்லிக்கொண்டிருந்தான்.,
அப்போதுதான் வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியும்., அவள் சுவர் ஏறி குதித்து பின்பக்கமாக வந்தது., அனைவருக்குமே மிகவும் பிடித்தது என்றனர்.
அவளது ஒவ்வொரு பேச்சும் சொல்ல நந்தன் மனதிற்குள் ‘எப்படி இருக்க போறேன்னு தெரியலையே’ என்று யோசித்துக் கொண்டான்., ‘இவள சமாளிக்கவே எக்ஸ்ட்ரா சாப்பிடனும் போல’ என்று நினைத்துக்கொண்டான்.
அதன் பிறகு இரு வீட்டினரும் சேர்ந்து திருமண வேலைகள் வேகவேகமாக நடந்தது., நந்தனுக்கும் நிவிக்கும் போன் நம்பர் கொடுக்கப்பட்டிருந்தாலும்., இருவரும் செல்லில் சேவ் செய்து வைத்திருந்தனர்.,
ஆனால் இருவரும் பேசவில்லை இவளோ அவன் ஏன் பேசவில்லை என்று நினைக்க.., அவனோ இவள் ஏன் ஒரு மெசேஜ் கூட செய்யவில்லை என்று நினைத்துக்கொண்டான்.
ஆனால் இருவருக்கும் பேசிக் கொள்ள தோன்றவில்லை., ஆனால் நந்தனின் அம்மாவோ தினமும் போன் செய்து பேசுவார்.
அவர் பேசும் போது ஸ்வேதா இருந்தாலும் பேசுவாள்., ஷியாம் இருந்தாலும் ஓரிரு வார்த்தை பேசுவான்., நந்தனின் அப்பா எப்போதும் பேசுவார்.,
குடும்பத்தோடு அவளால் பேசி கலந்து கொள்ள முடிந்தது., ஆனால் அவன் மட்டும் இதுவரை அழைத்து பேசவில்லை…
கல்லூரி திறந்து அவளது கல்லூரி வாழ்க்கையும் தொடங்க.., அங்கு தோழிகளோ கல்யாண பொண்ணே என்று கிண்டல் செய்ய தொடங்கியிருந்தனர்.,
இவனால் எதுவும் சொல்ல முடியவில்லை., பொங்கலுக்கு ஊர் சென்று திரும்பிய பிறகு பரீட்சை இருக்கிறது என்றாள்., அதன் பிறகு வரமுடியாது என்று சொல்லி சென்றிருந்தாள்.
இன்னும் 10 நாட்களில் திருமணம் என்னும் நிலையில் அனைவரும் திருச்சிக்கு வந்திருந்தனர்., கல்யாணத்திற்காக மற்ற சடங்கு சம்பிரதாயங்கள் செய்துவிட்டு கோயிலுக்கு சென்றுவிட்டு பட்டு., தாலி எடுப்பதற்காக வந்திருந்தனர்.,
நிவேதாவின் வீடு திண்டுக்கல்லில் இருந்தது…
அன்று காலையே நிவேதாவின் அம்மா போன் செய்து கேட்டார்.
” இல்லம்மா என்னால வர முடியாது., நீங்களே செலக்ட் பண்ணிருங்க., எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை”., என்று சொல்லிவிட்டாள்.
“உனக்கு பிடிக்கனும்”., என்று சொன்னதற்கு “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல மா., எனக்கு எது நல்லா இருக்கும் ன்னு., உங்களுக்கே தெரியும் நீங்களே எடுத்துருங்க”., என்று சொன்னவள் வைத்துவிட்டாள்.
அவள் வரவில்லை என்று நந்தனின் வீட்டிற்கு தெரியப்படுத்தவும்., நந்தனின் அம்மா போன் செய்து விட்டார்., அதே நேரம் நந்தன் சாப்பிட்டு கொண்டிருக்க.,
ஸ்பீக்கரில் போட்டு போனை வைத்து பேசிக்கொண்டிருந்தார்., “நிவேதா” என்று கூப்பிட.,
“ஆன்ட்டி சொல்லுங்க ஆன்ட்டி”., என்று மெதுவான குரலில் கேட்டாள்.,
“இன்னும் என்ன ஆன்ட்டி., அத்தை சொல்லு”., என்று சொல்லவும்.
“சரி அத்தை சொல்லுங்க”., என்றாள்.
” ஏன்மா பட்டு எடுக்க வரலைன்னு சொன்னியாமே”., என்றார்.
“அத்தை எக்ஸாம் நடக்குது இன்டர்நெல் எழுதலைனா., மார்க் போயிடும்., அதனால நான் வரல நீங்களே எடுத்திருங்க”., என்றாள்.,
“உனக்கு பிடிச்சது எடுக்க வேண்டாமா., நீயே வா”., என்று சொன்னார்.
“இல்ல அத்த., நீங்க எடுங்க கட்டப் போறது நானா இருந்தாலும்.., எனக்கு நல்லா இருக்கா நல்லா இல்லைன்னு பார்க்க போறது நீங்கதானே.., அதனால நீங்களே எடுங்க”., என்று சொன்னாள்.
“சரிமா நான் எடுத்துட்டு உனக்கு போட்டோ எடுத்து வாட்சப்ல அனுப்புறேன்”., என்று சொல்லவும்.
“சரி அத்த” என்று பேசியபடி போனை வைத்தாள்.,
“டேய் நீ வரல”., என்றார்.
“நான் வர்றேன் மா.., நீங்க கடைக்கு போய்ட்டு போன் பண்ணுங்க., நான் ஆபிஸ் போயிட்டு வேலைய முடிச்சிட்டு வர்றேன்”.., என்று சொன்னான்..
அதுபோல அலுவலகத்திலிருந்து பட்டு எடுக்க கடைக்கு சென்றவுடன் அங்கு பெண் வீட்டினர் நெருங்கிய உறவினர்களுக்கு அன்று ஒருவர்க்கு ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டது..,
அனைவருக்கும் அத்தனை சந்தோஷம் நிவேதா வரவில்லை என்ற குறையை தவிர எந்த குறையும் இல்லாமல் அவனுக்குப் பிடித்த கலராக பார்த்து தேர்ந்தெடுத்தனர்..
ஹாஸ்டலில் இருந்து கிளம்பும் முன்னே தோழிகளே அவளுக்கு பார்லர் ஆள்களை வர வைத்து தயார் படுத்தினர்.
தெரிந்த மற்றொரு தோழி மூலம் மாலை வேளையில் அவரை வர வைத்து கல்லூரி விடுதியில் வைத்து ஃபேசியல் மற்ற எல்லா வேலைகளையும் செய்து அனுப்பியிருந்தனர்.,
திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு கிளம்பி வீட்டிற்கு சென்றாள் நிவேதா..,
“நீ மகிழ்ச்சியாய் இல்லாதபோது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது..,
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது..,
ஆனால் நீ அடுத்தவரை மகிழ்ச்சிப் படுத்தும் போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது”..,