அடங்காத நாடோடி காற்றல்லவோ FINAL அண்ட் எபிலாக் 18470 அடங்காத நாடோடி காற்றல்லவோ FINAL அண்ட் எபிலாக் “கந்தா கடம்பா முருகா நீயே சரணம்.. எல்லாம் நல்ல படியா நடக்கணும்ப்பா..” துர்கா அவரின் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டி மணமேடையில் வைத்திருந்த விளக்கை ஏற்ற, திருமணத்திற்கான சடங்குகள் வேகமாக தொடங்கின. “ஈஷ்வர்.. பந்தி ரெடியான்னு பாரு.. பல்லவி மகாவை கொஞ்சம் வர சொல்லும்மா..” விஷ்ணு அவசரமாக சொல்லி மணமகன் அறைக்கு ஓடினான். “சின்னு என்னடா இது..? இன்னும் கிளம்பாம போன் பேசிட்டு இருக்க..? கொடு இங்க..” போனை வாங்கியவன், “காவ்யா கிளம்பாம இன்னும் போன் பேசினா மணமேடைக்கு எப்படி வர..?” அவளையும் கிளப்பி, தம்பியை குளிக்க சொன்னான். “என்னங்க..” மகா வர, “இவனை பார்க்காம என்ன பண்ணிட்டு இருக்க நீ..? பாரு கிளம்பாம போன் பேசிட்டு இருக்கான்..” அவளை பேச, மகா நின்று நிதானமாக கணவனை பார்த்தவள், இல்லை முறைத்தவள், “இந்த தடிமாடு போன் பேசினா அவனை தான் நீங்க கேட்கணும், என்னை இல்லை.. கல்யாணம் அவனுக்கு தான் எனக்கு இல்லை..” சின்னுவை கை காட்டி கணவனிடம் எகிறினாள். “அண்ணி.. அடிக்கடி நான் உன் மச்சினன்னு மறந்துடுற..” சின்னு பந்தாவாய் சொல்ல, அவன் தலையில் கொட்டியவள், “பெரிய இந்த போஸ்ட் தான்.. குளிக்க போடா, உன்னால பாய்லர் காலையிலே கொதிக்குது..” கணவனை வாரி அவனை குளிக்க துரத்தினாள். விஷ்ணுவோ மனைவியை கண் சுருக்கி முறைக்க, “இப்படி அவனை கொட்டி துரத்த முடியல, என்கிட்ட ஓவர் சத்தம்..” அவன் முறைப்பை கண்டு கொள்ளாமல், சின்னுக்கு உடை எடுத்து வைத்தாள். “மகாம்மா.. தம்பி எங்க..?” துர்கா பரபரப்பாக வர, “இப்போ தான் குளிக்க போயிருக்கான்த்தை.. வந்துடுவான்..” என்றவள், “அப்புறம்த்தை.. ரூம்க்கு போனா அம்மாவை மேடைக்கு வந்துட சொல்லுங்க, அவங்க எனக்காக காத்திருப்பாங்க.. நான் கிளம்பிக்கிறேன் சொல்லுங்க..” என்றாள். “சரிடா.. நீ இங்க பார்த்துக்கோ, நான் அண்ணிகிட்ட சொல்லிட்டு மணமேடைக்கு போறேன்.. விஷ்ணு இங்க நின்னு என்ன செய்ற..? அங்க அப்பா கூப்பிடுறார் பாரு..” என்றார் மகனிடம். “ஈஷ்வரை வர சொல்றேன்ம்மா..” என்றான் மகன். “என்னடா..?” துர்கா ஏதோ சொல்ல வர, “அத்தை.. அவர் அவரோட செல்ல தம்பியை கிளப்ப காத்திருக்கார்..” மகா சொல்ல, துர்கா நெகிழ்ந்த மனதுடன் மேடைக்கு ஓடினார். இங்கு சின்னவும் குளித்து வர, விஷ்ணு தம்பிக்காக காத்திருந்தான். அவன் தலையை துவட்டியபடி நடந்து வர, விஷ்ணு கண்கள் என்ன முயன்றும் அவன் காலில் தான் நிலைத்தது. நடக்கிறான் அவன் தம்பி நடக்கிறான்.. அதுவும் எத்தனை வருடங்கள் சென்று நடக்கிறான்.. மனதில் அவ்வளவு சந்தோஷ ஊற்று. எப்போது அவனை நடக்க பார்த்தாலும் உள்ளே பொங்கும். எவ்வளவு கஷ்டங்களை கடந்தாலும் எல்லாம் நலமாக மாறியதன் பலன் கண் முன்னே. அவன் தம்பி கேரளா கூட்டி சென்ற போதும் முழு உத்திரவாதம் இல்லை, நம்பிக்கை மட்டுமே. அவனின் அந்த நம்பிக்கை நிறைவேறவும் செய்தது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கேரளாவிலே தங்கி சின்னு காலை கீழே ஊனவைத்தனர். மெல்ல மெல்ல அடி எடுத்து வைக்கவும் செய்தனர். அதன் பிறகான முழு இரு வருடங்கள் தொடர் கவனிப்பில் ஓரளவு நன்றாகவே நடக்கிறான். சில நேரங்களில் தடுமாற்றம் இருக்கும், வேகநடை இல்லை தான். ஆனால் அவன் நடப்பதே அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்க வேறென்ன வேண்டும்..? “பார்த்தது போதும்.. அவனுக்கு ட்ரெஸ் எடுத்து கொடுங்க..” மகா சின்னு உடைய கையில் கொடுக்க, தம்பி கையில் கொடுத்தான் அண்ணன். “தேங்க்ஸ்ண்ணா..” சின்னு உடை மாற்ற செல்ல, “நான் போய் கிளம்பிட்டு வரேன்..” மகா வெளியே செல்ல போனாள். “எங்க போற இரு..” என்று அவள் கை பிடித்து நிறுத்தினான் கணவன். “அப்போ நான் கிளம்ப வேண்டாமா..? பாருங்க குளிச்சிட்டுபுடவை கட்டினேன் அவ்வளவு தான்..” மகா அவள் முடியை ப்ரீயாக விட்டிருக்க, அதை காதோரம் ஒதுக்கியவன், “இதே போதும்.. சின்னுவை கிளப்பனும், நேரமாச்சு..” அவளை நிறுத்திவிட்டான். “எல்லாம் உன்னால தாண்டா..” சின்னு வரவும் திரும்ப தலையில் கொட்டினாள். “மகா.. இன்னைக்கு நான் மாப்பிள்ளை..” அவன் இடுப்பில் கை வைத்து போஸ் கொடுக்க, “பேசாம கிளம்பு, இல்லை..” அவள் விரல் நீட்டி மிரட்ட, அழகு காட்டி தயாராக ஆரம்பித்தான். மகா எல்லாம் எடுத்து கொடுக்க, விஷ்ணு தம்பியை கிளப்பினான். “பைனல் டச்..” சின்னு பெர்பியூம் அடிக்க, “ஓவரா பண்ணாதடா..” மகா பல்லை கடித்தாள். “உங்களுக்கு வேணும்ன்னா நீங்களும் அடிச்சுக்கோங்க அண்ணி , நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்..” என்றான் பெரிய மனதாய். “ மச்சினரே.. ரொம்ப போயிட்டிருக்கு, பிரேக் போடுங்க இல்லை..” விரல் நீட்டி மிரட்ட, “ம்ப்ச்.. போதும், மகா போய் பெரியவர்களை வர சொல்லு..” விஷ்ணு சொல்ல, மகா உதட்டை சுளித்து சென்று கூட்டி வந்தாள். எல்லோரும் வந்தவர்கள், சின்னுவை பார்த்தும் நெகிழ்ந்து உணர்ச்சி வசப்பட, சில நொடிகள் அதிலே சென்றது. “சின்னு..” விஷ்ணு கண் காட்ட, அவன் அப்பா, அம்மா காலில் விழுந்தான். அவர்கள் மகனை தூக்கி உச்சி முகர, அடுத்து நரசிம்மன், கங்கா காலில் விழுந்தான். அவர் தாய்மாமனாக அவனுக்கு மணமாலை அணிவித்தார். “ம்ம்.. அடுத்து ஆகட்டும், எங்க கால்லயும் விழுங்க மச்சினரே..” மகா கெத்தாய் நிற்க, “மகா போதும் விளையாட்டு, அவன் மணமேடைக்கு போகணும்..” என்றான் விஷ்ணு. க்கும்.. மகா உதட்டை சுளிக்க, சின்னுவோ, அவர்கள் காலில் சாஷ்டங்கமாக விழுந்தான். “டேய்..” விஷ்ணு வேகமாக தம்பியை தூக்க போக, “விஷ்ணு ஆசீர்வாதம் பண்ணிட்டு தூக்கு..” என்றார் நரசிம்மன். அவனுக்கு கண்கள் கலங்கி போக, திரும்பி மனைவியை பார்க்க, அவளும் திகைத்து தான் போய் நின்றிருந்தாள். “நீங்க இல்லைன்னா நான் இன்னைக்கு இப்படி இல்லை.. ஆசீர்வாதம் பண்ணுங்க..” என்றான் சின்னு கமறிய குரலுடன். இருவரும் அவனின் ஆரோக்கியமான நல் வாழ்விற்கு வாழ்த்தி ஆசீர்வாதம் செய்து அவனை தூக்கினர். எழுந்தவன் இருவரையும் கட்டி கொண்டான். மூவரின் கண்களும் கண்ணீர் தளும்பி நின்றது. “விஷ்ணு..” ஈஷ்வர் அவன் தோளில் தட்ட, இன்றய நாள் உணர்ந்தவன், அவனை பிரித்து கண் துடைத்து திருநீறு வைத்தான். மகா அவன் மாலையை சரி செய்ய, துருவ் அடுத்து பல்லவி, ஈஷ்வர் காலில் விழுந்தான். இருவரும் ஆசீர்வாதம் செய்து தூக்க, “மாமா பண்ணதுலே ரொம்ப நல்ல விஷயம் உங்களை என் அக்காவா கொண்டு வந்ததும், அனு டார்லிங்கை, ஹர்ஷத்தை எங்களுக்கு கொடுத்ததும் தான்..” என்றவன், ஈஷ்வர், பல்லவி இரண்டு வயது மகன் ஹர்ஷத்தை தூக்கி கொண்டான். “மணமேடைக்கு கிளம்பலாமா..?” நரசிம்மன் தாய்மாமனாக அவன் கை பிடித்து கூட்டி வர, விஷ்ணு, மகா அவன் பின் சென்றனர். அவன் மணமேடையை சுத்தி அமரவும், “கொஞ்சம் கையை விடுங்க, ஓடி போய் கிளம்பி வந்துடுறேன்..” மகா கணவனிடம் கிசுகிசுப்பாக கேட்டாள். “வேண்டாம்.. என்கூடவே நில்லு..” விஷ்ணு தம்பியை பார்க்கும் படி ஓரமாக நின்றவன் சொல்ல, மகா உர்ரென்று பார்த்தவள், “நான் நெத்தில பொட்டு கூட வைக்கல, என் ஒரே மச்சினன் கல்யாணம், வீட்ல மூத்த மருமக இப்படி தான் நிக்கிறதா..?” என்றாள் முகம் சுருக்கி. “அத்தை..” கங்காவை கூப்பிட்டவன், “மகாக்கு ஸ்டிக்கர் எடுத்து வாங்க..” என, அவருக்கு தெரிந்து போனது அவன் விடமாட்டான் என்று, ரூம் சென்று வந்தவர், மகளுக்கு ஸ்டிக்கர் கொடுத்தவர், பின்னால் நின்று முடிய அப்படியே கிளிப் போட்டு பூ வைத்து, ஒன்னிரண்டு நகை மட்டும் அணிவித்தார். இங்கு துருவ் சடங்கு முடியவும், காவ்யாவை மணமேடைக்கு அழைத்து வந்தனர். அவள் முகத்தில் அவ்வளவு பூரிப்பு, மகிழ்ச்சி. உடன் வந்த அவள் அக்காவிற்கும் இப்போது நிறைவு தான். சித்ரா மட்டும் கொஞ்சம் அமைதியாகவே அவர் வேலையை செய்ய, துர்கா அவரை சரிக்கட்டி எல்லாம் எடுத்து செய்தார். காவ்யா வந்தவள் மகாவை பார்த்து சிரிக்க, அவளும் சிரித்தபடி அவள் மணமேடையில் அமர உதவினாள். துருவ் திரும்பி காவ்யாவை பார்த்து அழகாக சிரிக்க, அவளுக்கு அப்படி ஒரு நிறைவு. மாங்கல்யம் துருவ் கைக்கு வர, ஈஷ்வர் செய்யும் வேலைகளை விட்டு விஷ்ணு பக்கத்தில் வந்து நின்றான். அவன் பிள்ளைக்கு கூட விஷ்ணு இப்படி செய்வான் என்று ஈஷ்வருக்கு தோன்றவில்லை. சின்னு மீதான அவன் பாசம் புரிந்து ஆதரவாக அவன் இன்னொரு பக்கம் நின்றான். விஷ்ணு மகாவின் கையை இறுக்கமாக பிடித்து நிற்க, மகா தன் கையால் அவன் கையை தட்டி கொடுத்து நின்றாள். “கெட்டிமேளம் கெட்டிமேளம்..” சொல்ல, துருவ் மாங்கல்யத்தை கையில் வாங்கி, முதலில் அண்ணனை தான் பார்த்தான். எந்த ஜென்மத்து பந்தமோ இது என்று தான் தோன்றியது. பல்லவி அக்காவாக விளக்கு பிடிக்க, துருவ் காவ்யா கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் சரிபாதியாக்கினான். அடுத்து குங்குமம் வைத்தவன், அவள் கைகளை வலுவாக பிணைத்து கொண்டான். “தேங்க்ஸ் காவ்யா..” அவள் பக்கம் திரும்பி சொல்ல, காவ்யா கண்களும் கலங்கி தான் இருந்தது. அடுத்து பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்ய, விஷ்ணு தம்பியை வாரியணைத்து கொண்டான். காவ்யா மகாவை அணைத்து கொண்டாள். அதை தொடர்ந்து அடுத்தடுத்த சடங்குகள் வேகமாக நடக்க, மணமகள் உணவிற்கு வந்தனர். ஈஷ்வர் முன் நின்று கவனிக்க, எப்போதும் போல அந்த நேரத்து கலாட்டாக்கள் சென்றது. விஷ்ணு எல்லாம் ரசித்தபடி மனைவியுடன் சாப்பிட அமர, “ண்ணா..” என்றான் சின்னு எதிர்பக்க டேபிளில் இருந்து. விஷ்ணு கேள்வியாக பார்க்க, “மகாக்கு ஊட்டிவிடுங்க.. உங்க கல்யாணத்துல அது மிஸ்ஸிங்..” என்றான் சத்தமாக. விஷ்ணு, மகா இருவரும் மறுப்புடன் பார்க்க, “என் விஷ் ப்ளீஸ்..” என்றான் தம்பி. “இந்தாங்க ஸ்வீட்..” ஈஷ்வர் அவர்கள் இலையில் வைத்து நிற்க, மொத்த குடும்பமும் அங்கங்கு நின்று பார்த்தது. விஷ்ணு திரும்பி மனைவியை பார்க்க, அவள் புருவம் தூக்கினாள் சிரிப்புடன். எப்போதும் போல இப்போதும் அப்படியே அவளை அள்ளிக்கொள்ள கைகள் பரபரக்க, ஸ்வீட் எடுத்து ஊட்டினான். மகா வாங்கி கொண்டவள், தானும் கணவனுக்கு ஊட்ட, விஷ்ணு அவள் விரல் படவே வாங்கி கொண்டான். அதில் மகா வெட்க சிவப்புடன் முறைக்க, விஷ்ணு குறும்பாக சிரிக்க, கேமராவுடன் எல்லோர் கண்களும் நிறைந்தது. “வீட்டுக்கு போனதும் திருஷ்டி சுத்தி போடணும்..” துர்கா, கங்கா ஒரே நேரத்தில் சொல்லி சிரித்தனர். அடுத்து தம்பதிகள் முதலில் துருவ் வீட்டிற்கு கிளம்ப, காவ்யா வலது கால் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். “அன்னைக்கு காவ்யாவை போ போன்னு துரத்திட்டு இன்னைக்கு என்ன ஒரே சந்தோசம்..” மகா கணவனின் காதை கடித்தாள். “நீயே போதும்டி எனக்கு..” விஷ்ணு அவள் இடையில் யாருக்கும் தெரியாமல் கிள்ளி வைத்தான். “ஸ்ஸ்.. உங்களை..” மகா தேய்க்க, விஷ்ணு அவள் கையை எடுத்துவிட்டு தான் தேய்த்தான். “என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?” மகா சிவந்துவிட்ட முகத்துடன் கணவனை முறைக்க, குனிந்து பார்த்தால் மெதுவாக தடவி கொண்டிருந்தான். “நான் என்ன செய்யட்டும் உன் இடுப்பு மிஸ்டேக் இது..” விஷ்ணு அழுத்தமாக தடவி கையை எடுக்க, ஈஸ்வர அவனிடம் வந்தான் எதோ கேட்பதற்கு. மகா எழுந்து கிட்சனுக்கு செல்ல, “எப்படியோ உன்னை விட்டுட்டானா..?” கங்கா மகளை பார்த்ததும் சொல்ல, “அண்ணி.. நீங்க வேற அவனுக்கு அடிச்சாலும் பிடிச்சாலும் மகா வேணும், அப்படி கத்திட்டு போவான், அடுத்த அஞ்சு நிமிஷத்துலே மகா டிபன் வைன்னு வந்து நிற்பான்..” மாமியாரும் சிரிக்க, நான் ரூமுக்கு போறேன்.. என்று ஓடிவிட்டாள் மகா.