“இருக்கு.. நாளைக்கு பார்க்காலம், இன்னிக்கு என்ன படிச்ச அதை முதல்ல சொல்லு..” அவனின் பேக்கை எடுத்தான்.
“படிச்சேன்..” சலிப்பாக சொன்ன துருவ் முகம் சுருங்கியது. அவன் மிகவும் வெறுக்கும் நேரங்கள். சில நொடிகள் அப்படியே அமர்ந்தான்.
முடியவில்லை. போகவும் பிடிக்கவில்லை. மற்ற நேரங்களில் சமாளிக்க கூடியவனுக்கு இந்த நிமிடங்களில் எரிச்சல், கோவம், ஏன் அழுகை கூட கொந்தளிக்கும். சிறு வயதில் என்றால் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. வளர்ந்து டீனேஜில் நிற்பவனுக்கு இந்த நிமிடங்கள் சகிக்கவில்லை. அண்ணனே என்றாலும் சங்கடம்.
இயலாமையுடன் எட்டி வீல் சேரை இழுத்தான். “ம்ப்ச்.. என்கிட்ட சொல்றதுக்கு என்னடா..?” விஷ்ணு தம்பியை தன் கையில் தூக்கி சென்று பாத்ரூமில் விட்டு வெளியே வந்தான்.
பெட்டிற்கு பக்கத்தில் இருந்த வீல் சேர் அவன் பார்வை வட்டத்திற்கு விழுக, சின்னு நிற்காமல் ஓடிய நாட்கள் நினைவிற்கு வந்தது. உள்ளே தண்ணி விழுகும் சத்தம் நிற்கவும் விஷ்ணு தம்பிய தூக்கி வந்து பெட்டில் உட்கார வைத்தவன், அவனின் பாடபுத்தகத்தை எடுத்தான்.
“மேத்ஸ் சார் வந்தாரா..?” அன்றைக்கான நோட்ஸ் எடுக்க,
“வரல..” என்றான் சின்னு.
“ஏன் வரல..? நான் காலையிலே சொல்லிட்டேனே..” விஷ்ணு கேட்க,
“தெரியலண்ணா..”
“நீயும் போன் பண்ணி கேட்கல, ஜாலியா இருந்திட்ட..”
“ண்ணா.. நான் படிச்சு என்ன பண்ண போறேன், விடேன்..”
“சின்னு இன்னொரு முறை இப்படி பேசின கண்டிப்பா அடி வாங்குவ, நீ படிக்காம ஏமாத்த இது சாக்கு உனக்கு..” விஷ்ணு கடிந்து கொண்டிருக்க, சின்னு போன் ஒலித்தது.
“இந்த ஆப் பாயிலை..” விஷ்ணு பல்லை கடித்து போன் எடுக்க,
“ஓய் முறை பையா..” என்றாள் மகா மறுபக்கம் உற்சாகமாக.
“எதுக்கு போன் பண்ண..?” விஷ்ணு கேட்க,
“ஐயே இது முறைக்கிற பையா..” என்றாள் கேலியாக.
“இப்போ எதுக்கு சின்னுக்கு போன் பண்ண..? உனக்கு தான் ஒரு வேலையும் இல்லை, உன் அடிமை அந்த இஷான் எல்லா நோட்ஸ் கொடுத்துடுறான், மத்தவங்களும் அப்படியா..? அவன் இந்த வருஷம் ப்ளஸ் டூ, சும்மா சும்மா அவனை தொல்லை பண்ணாத..”
“அதை நீங்க சொல்லாதீங்க, நானாச்சு, என் சின்னுவாச்சு, நீங்க போனை அவன்கிட்ட கொடுங்க..”
“அடிங்க.. நான் என்ன சொல்லிட்டிருக்கேன், அவன் படிக்கணும், வைடி..” கட் செய்து தூக்கி போட்டவன் உர்ரென்று தன்னை பார்த்த தம்பியின் தலையில் கொட்டினான்.
“ண்ணா..” தலையை தேய்த்து கொண்டு சிணுங்கியவன், விஷ்ணு விட மாட்டான் என்று தெரிந்த படிக்க செய்தான்.
“ஓகே இது போதும், மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம்.. பால் கொண்டு வரேன் இரு..” வெளியே சென்று பால் எடுத்து வந்து தம்பிக்கு கொடுத்தான். சின்னு குடித்து முடிக்க, திரும்பவும் பாத்ரூம் கூட்டிக்கொண்டு வந்தவன், படுக்க வைத்தான்.
“ண்ணா.. நான் ப்ளஸ் டூ முடிச்சு ஆர்ட்ஸ் படிக்கட்டுமா..? எனக்கு நல்லா படம் வரைய வருது இல்லை..” சின்னு உற்சாகத்துடன் கேட்டான்.
“க்கும் ஆரம்பிச்சிட்டியா..? உனக்கு தினம் தினம் ஒரு சாய்ஸ்..” விஷ்ணு சலித்து கொள்ள,
“ண்ணா..” என்ற சின்னு விஷ்ணு பக்கம் திரும்ப முதலில் முதுகை திருப்பியவன், கை எடுத்து அசையாத தன் இரு கால்களை திருப்பி விட்டான். பார்த்திருந்த விஷ்ணு தொண்டை குழி ஏறி இறங்கியது.
சின்னு முகம் பார்க்கவும் சாதாரணமாக வைத்தவன், “என்ன திடீர் ஆர்ட்ஸ்..?” கேட்டான்.
“மகா தான் சொன்னா நான் சூப்பரா டிராயிங் பண்றேன்னு..”
“அவ சொன்னான்னா கண்டிப்பா தப்பா தான் இருக்கும், அவளே ஒரு அரை வேக்காடு, அவ உனக்கு ஐடியா கொடுக்கிறாளா..?”
“ண்ணா.. நீ சும்மா சும்மா மகாவை பேசாத, அவளும் உங்களை போல டாக்டர்..”
“க்கும்.. அவ படிக்கிற லட்சணம் எனக்கு தான் தெரியும், சரியான மக்கப்டா அவ..” விஷ்ணு எப்போதும் போல மகாவை ஓட்ட, சின்னு எப்போதும் போல அவளுக்கு முட்டு கொடுக்க என்று அப்படியே தூங்கி போயினர்.
இடையிடையே விஷ்ணு எழுந்து தம்பியை பார்த்து தூங்கினான். மறுநாள் காலை எப்போதும் போல விஷ்ணுவிற்கு நேரமே விழிப்பு வந்துவிட, திரும்பி சின்னு முகத்தை பார்த்தான்.
அவன் சுவாசம் ஏறி இறங்க, நிம்மதியுடன் பார்த்த அன்ணனுக்கு திரும்ப தொண்டை குழி ஏறி இறங்க, தம்பி தலையை வருடியவன், பெட் சீட் போர்த்தி, கதவு மூடி சென்றான்.
“ருக்கு கிரீன் டீ..” சக்ரவர்த்தி சத்தம் கேட்க, விஷ்ணு நின்று தந்தையை பார்த்தான். அவரும் அவனை பார்க்க, தலை அசைப்புடன் ரூம் சென்றவன், ஜாக்கிங்கிற்கு கிளம்பி வந்தான்.