ஏன் தொடர்ந்து டியூட்டி, அப்படி கொடுக்க மாட்டாங்களே..?” ஈஷ்வர் யோசித்தபடி திரும்ப திரும்ப  அழைக்க

இப்போ  எதுக்கு விடாம கூப்பிடுற..?” காய்ந்தாள் மகா போன் எடுத்து

கிளம்பிட்டியா கேட்க தான் கூப்பிட்டேன்..”   ஈஷ்வர் தங்கையின் கோவத்தில் புருவம் சுருக்கி  கேட்டான்

என்ன புது அக்கறை.. வை போனை..” என்றாள் தயவு தாட்சணை இல்லாமல்

மகா என்ன ஆச்சு உனக்கு..? ஏன் இவ்வளவு கோவம்..? உனக்கு ரொம்ப டையர்ட்டா இருந்தா சொல்லு நான் வரேன் உன்னை கூப்பிட..”   ஈஷ்வர் புரியாமல் கேட்டான்

எனக்கு வர தெரியும், நீ உன் வேலையை பாரு..”   என்று மகா போனை வைத்தே விட்டாள்

என்ன சொன்னா ஈஷ்வர்..?” கங்கா கேட்க

கிளம்பிட்டா போலாம்மா..?” என்றான் ஈஷ்வர். அவன் முகம் வாடிதான் போனது. நேரே விஷ்ணுவை தேடி சென்றுவிட்டான். அவன் சின்னுவை பார்த்து கொண்டிருந்தவன், இவன் வரவும் திரும்பி பார்த்தான்

வித்தியாசம் தெரிய, “என்னடா..?”  என்றான் கேள்வியாக

ஒன்னும் இல்லை.. நீ பாரு..” என்றவன் சோபாவில் கண் மூடி அமர்ந்துவிட்டான். அவன் மீதான மகாவின் கோவம், வருத்தம், ஆதங்கம் எதுவும் இதுவரை  அவனுக்கு தெரியவில்லை

இப்போது அவளின் நேரடி கோவம் அண்ணனை பாதித்தது. அவள் வரவும் கண்டிப்பாக பேச வேண்டும், ஏதோ வேலை டென்சன் போல.. என்று நினைத்தாலும் எதோ ஒரு உறுத்தல். விஷ்ணு அவன் சுருங்கிய புருவம் பார்த்தாலும் அவனே சொல்லட்டும் என்றுவிட்டான்

அடுத்த சில நிமிடங்களில் மகா வர, அவளின் பேச்சு சத்தம் கேட்டு ஈஷ்வர் ஹாலுக்கு வந்தான். “எதாவது சாப்பிடுறியா மகா..?”  ருக்கு அவளிடம் கேட்டு கொண்டிருக்க அவள் வேண்டாம் என்றவள் நேரே அனுவிடம் சென்றாள்

ஹாய் அண்ணி..”  பல்லவிக்கு சொன்னபடி அனுவை தூக்க, அவளோ வரமாட்டேன் என்று பல்லவியை கட்டி கொண்டாள். மகாவிற்கு அதுவே கண்கள் கலங்கும் போலாகிவிட்டது

அளவுக்கு அதிகமான கோவம்அதை ஒடுக்க நினைத்து அனுவை தூக்கினால் அவள் வராதது அழுகையை கொடுத்தது அத்தைக்கு. ஈஷ்வர் தங்கையிடம் வந்தவன்

என்ன ஆச்சு மகா..? ஏன் உனக்கு கன்டினியூஸ் டியூட்டி கொடுக்கிறாங்க, பாரு ரொம்ப டையர்டா தெரியற..” என்றான்மகாவிற்கோ அவன் கரிசனம் கோவத்தை கொடுத்தது. பதில் ஏதும் சொல்லாமல், அனுவை பார்த்து நின்றாள்

மகா உன்னை தான் கேட்கிறேன், ஏன் இப்படி கொடுக்கிறாங்க, நான் வேணா வந்து பேசவா..?” ஈஷ்வர் மீண்டும் கேட்க, நீரஜா டிஸ்பி அண்ணன் என்றது நினைவிற்கு வர

ஒன்னும் தேவையில்லை…”   என்றாள் பட்டென

பக்கத்தில் பார்த்து நின்ற பல்லவிக்கு மகா கோவமாகா இருக்கிறாள் என்று புரியஈஷ்வர் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் என்று தோன்றியது. ஆனால் சொல்ல தயங்கினாள். அவளும் இப்போது தான் அவர்கள் குடும்பத்தில் இணைத்திருக்கிறாள்

இருந்தாலும் ஈஷ்வரை பார்த்து மறுப்பாக கண் அசைக்க, அவன் பார்வையோ தங்கை மேலே இருக்க, “என்ன தேவையில்லை..  நான் வந்து கேட்கிறேன்..” என்றான்  மீண்டும், அவ்வளவு தான் மகாவின் கட்டுப்பாடு உடைந்தது போல

என்ன திடீர்ன்னு என்மேல பாசம்..?”  நேராக கேட்டுவிட்டாள். அவளின் இக்கேள்வி   ஈஷ்வர் வருத்தத்தை கொடுத்தது. முன்னமே போனில் இப்படி தானே கேட்டாள்

என்ன பேசுற நீ..?”  கேட்டான்

உண்மையை தான் பேசுறேன்..”   மகா அழுத்தமாக சொன்னாள்

“என்ன உண்மை எனக்கு உன்மேல பாசம் இல்லைங்கிறதா..?”   ஈஷ்வரும் லேசான கோபத்துடன் கேட்டான்

ஆமாம்.. உனக்கு எப்போவும் நீ  தானே முக்கியம்..”

அப்படி என்ன  இருந்துட்டேன் நான்..?”

என்ன இல்லை..? உனக்கு எப்போவும் நீ, நீ மட்டும் தானே முக்கியம், உன் காதல், உன் கல்யாணம், உன் ஐபிஸ், உன் வாழ்க்கை, உன் விஷ்ணு இது தானே, இதுல நானும் என் அம்மாவும் எங்க இருந்தோம்..?”  அவளின் குரல் உயர்ந்தே ஒலிக்க, எல்லோருக்கும் கூடி விட்டனர்

விஷ்ணு தவிர, அவன் சின்னு ரூமில்  போன் பேசி கொண்டிருக்க, மற்றவர் எல்லாம் ஹாலில். ஈஷ்வருக்கோ தங்கையின் பேச்சை மறுக்கவும் முடியவில்லை, உண்மை என்று ஒப்பு கொள்ளவும் முடியவில்லை. பல்லவிக்கோ மகாவின் மனநிலை கொஞ்சம் புரிவதாய்

மகா என்னடி இது..? ஏன் இப்படி எல்லாம் பேசுற..?” கங்கா மகளின் கை பிடித்து கேட்க, அவளுக்குமே இது இப்போது கேட்க தேவையில்லை என்று தெரிகிறது தான்

எல்லாம் சரியாகி, ஒரு குடும்பமாக கூடும் நேரத்தில் இது நிச்சயம் வேண்டாம் தான். இதனால் எல்லோருக்கும் மன வருத்தம் மட்டுமே மிஞ்சும் என்று  புரிகிறது தான். அதிலும் பல்லவியை இது எங்கேனும் ஒரு இடத்தில் பாதிக்கும் தான், ஆனாலும் அவளால் அவளை கட்டுப்படுத்த முடியவில்லை

இத்தனை வருடம் அழுத்தி அழுத்தி வைக்க பட்ட வருத்தம், ஆதங்கம், கோவம் எல்லாம் இனியும் முடியாது என்று அணையை உடைத்து  வெளியேறி கொண்டிருந்தது. மகா நினைத்தாலும் அதை கட்டு படுத்த முடியாது எனும் நிலை தான் இப்போது, அதுக்கு தூண்டு கோலாக நீரஜாவின் பேச்சு, ஈஷ்வரின் கரிசனம் எல்லாம் அமைத்துவிட்டது

அவளின் மனம் அவளின் முகத்தில் தெரிய, புரிந்த  ஈஷ்வரின் முகம் கசங்கி போனது.  “மகா  நீ, என் அம்மான்னு ஏன் பிரிச்சு பேசுற, நான் அப்படி இல்லைடா, எதோ அப்போ என் நிலைமை, நான் அப்படி..”  ஈஷ்வர் வருத்தத்துடன் சொல்ல

கைகளை இறுக்கமாக கட்டி நின்ற மகாவோ,    “பேசாத மகா, பேசாத மகா, கண்ட்ரோல், இவன் உன் அண்ணன், இவனை  காயப்படுத்தாத.. விடு..” என்று உள்ளே ஒரு குரல் ஓடி கொண்டே இருக்க, அவளின் உடைந்த அணை எங்கே நிற்கும்..? 

எப்படி எப்படி..? அப்போ உன் நிலைமை அப்படியா..? சரி இருக்கட்டும், அதுக்காக சொந்த அம்மா, தங்கச்சியையே மறந்துடுவியா..?”  கொஞ்சம் ஆவேசத்துடனே கேட்டாள்

மகா போதும் விடுடி, இப்போ ஏன் இந்த பேச்சு..? அப்போ ஈஷ்வரோட நிலைமையும் சரியில்லை தானே..” கங்கா மகளை அமைதி படுத்த முனைந்தார்

என்ன சரியில்லை, இவன் அப்படி ஆக்கி கிட்டான், இதுல தண்டனை உங்களுக்குபுருஷனுக்கும், மகனுக்கும் இடையில மாட்டிகிட்டு நீங்க அழணும், என் அப்பா, அண்ணா இப்படி தான்னு நானும் என்னை சமாதானம் செஞ்சுக்கணும்.. ஒரு மகளா, தங்கச்சியா இவங்களை நானும் எங்கேயும் எதிர்பார்க்க கூடாது, புருஷனா, மகனா நீங்களும் இவங்களை எங்கேயும் எதிர்பார்க்க கூடாது, அப்படி தானேப்பா..?”   நரசிம்மனை பார்த்து கேட்டாள்

அவரால் என்ன சொல்ல முடியும்..? மகன் பின்னால் ஓடி, மனைவி, மகளை கவனிக்க மறந்து விட்டோம் என்று காலம் கடந்தல்லவா புரிகிறது தந்தைக்கு

மகா நீ கொஞ்சம் தைரியமா பொண்ணுன்னு அவங்க உன்னை விட்டிருக்கலாம் விடுடா.. இப்போ எதுக்கு இதெல்லாம்..”  துர்கா அவளை சமாதானம் செய்தார்

என்ன அத்தை பேசுறீங்க..? தைரியமான பொண்ணுன்னா அவளுக்கு யாரும் வேண்டாமா..?  அப்போ எதுக்கு இந்த உறவு எல்லாம்..”

மகா போதும், நிறுத்துடி, ஏன் இப்படி..?” கங்கா அழுதேவிட்டார். மகாவிற்கு அவர் கண்ணீர் உள்ளே குத்தியது. “இப்போ நீயும் தானே அவங்களை அழவைக்கிற மகா..” நேர்மையான மனது குட்டியது.  

நான் கேட்கணும்ன்னு கேக்கலம்மா, உண்மையை சொல்லணும்ன்னா இவங்ககிட்ட இது எல்லாம் கேட்கவும் கூடாதுன்னு தான் நினைச்சிருந்தேன், கேட்டு ஒருத்தருக்கு புரியவைக்கணும்ன்னு இல்லையே..?” மகா  பேச, விஷ்ணு போன் பேசி வெளியே வந்தவன், எல்லார் முகத்தையும் பார்த்து புருவம் சுருக்கினான்

மகா.. தப்பு தாண்டா, நான் அப்படி இருந்திருக்க கூடாது, சா..” ஈஷ்வர் சொல்ல வர,  

சொல்லாத, அந்த வார்த்தையை மட்டும் சொல்லாத, எல்லா தப்புக்கும் கேடையமா இருக்கிற அந்த  வார்த்தையை என் முன்னாடி சொல்லாத..” என்றாள் மகா கோவத்துடன்

அப்போது தான் விஷ்ணுவிற்கு நடப்பது புரிய, நேரே மகா பக்கத்தில் வந்தவன், “ஹாஸ்பிடல்ல இருந்து தானே வந்த, போய் குளி முதல்ல..” என்றான் அதட்டலாக.

ஏன் நான் உங்க ஈஷ்வரை பேசுறது உங்களுக்கு வலிக்குதா..?”  மகா அவனிடம் நக்கலாக கேட்க

விஷ்ணு,  “அவன் உன் அண்ணன் தானே.. விடு..” என்றான் ஈஷ்வரின் முகம் பார்த்து.  

“எனக்கும் புரியுது இப்போ இது தேவையில்லாத பேச்சுன்னு, ஆனாலும் என்னால நிறுத்த முடியல..”  என்றாள் உச்சகட்ட அழுத்தத்தில். 

விஷ்ணுவிற்கு அவள் நிலை புரிய,  “வா..”   என்று அவள் கை பிடித்து இழுத்து சென்றான்.  மகா அவன் பின்னே சென்றவள், என்ன நினைத்தாளோ கை விட்டு வேகமாக பல்லவியிடம் வந்தவள், 

“நான் உங்களை மீன் பண்ணி எதுவும் பேசல அண்ணி..” என்றாள். 

“எனக்கு உன் மனசு புரியுது மகா, எனக்கும் ஒரு அண்ணா இருக்காங்க தானே..?” என்றாள் பல்லவி அவள் கை பிடித்து ஆதரவாக. 

“மகா நீ உன்  அண்ணனை தானே கேட்ட, பல்லவிக்கு புரியும், நீ வா..”  விஷ்ணு மீண்டும் அவள் கை பிடித்து ரூமிற்கு   சென்றவன், “என்ன ஆச்சு உனக்கு..?” என்றான் நேராக நிறுத்தி. 

“தெரியல..” மகா சோர்வுடன்  சொன்னாள். 

“என்ன தெரியல..? ஈஷ்வர் முகம் வாடி போச்சு, அவனும் பாவம் தானே..?”  அவள் சண்டை போடுவாள் என்று தெரிந்தே கேட்டுவிட்டான். ஈஷ்வர் வருத்தம் அவனை பாதிக்காமல் இருக்குமா..? 

புரிந்த மகா அவனை நேராக பார்த்தவள், நெருங்கி அவனை கட்டி கொண்டாள். விஷ்ணுவிற்கு அதிர்ச்சி ஆச்சரியம் தான். 

“மகா..”  குரல் லேசாக வர, கைகள் அணைக்காமல் திணறின. 

மகா அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என் மேலயும் இப்படி பாசம் வைப்பீங்களா..?” அவ்வளவு எதிர்பார்ப்புடன் கேட்டாள். 

விஷ்ணுவிற்கு அவள் குரல், முகம் எதுவும் தாங்கவில்லை. தானும் அவளை அணைத்து கொண்டவன், 

“ஏன் பாசம்..? நான் என்னையே உனக்கு தரேன்.. வாங்கிக்கிறியா..?” என்றான்.