“நைட்நீங்கஹாஸ்பிட்டல்லஇருந்துவந்ததேலேட்ன்னுதெரியும்மா..” அவரின்தூக்கபற்றாக்குறையைசுட்டிகாட்ட, இது பழக்கம் தானே என்பது போல லேசான சிரிப்புடன்அதைகடந்தவர்,
முகம் மட்டும் தெரிய உடல் முழுதும் பெட்ஷீட்டில் மூடி படுத்திருந்தான். முகம் இப்போது நான் டீனேஜ் என்று காட்ட, மெலிதான மீசை முளைவிட்டு இருந்தது. ஆனாலும் இன்னும் சிறு பிள்ளை போல முகத்தில் விளையாட்டு தனம் கலந்த ஜொலிப்பு.
கனிவுடன் அவனை பார்த்தவர், குனிந்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தார். கூடவே எப்போதும் போல கண்கள் கலங்கியது. முயன்று தன்னை தானே கட்டு படுத்தி கொண்டவர், ஏசி அளவை குறைத்துவிட்டு, ரூம் கதவை மூடி தோட்டத்திற்கு வாக்கிங் செல்ல ஆரம்பித்தார்.
அரை மணி நேரம் நடைபயணம் முடிய உள்ளே வந்த துர்காவின் போன் ஒலித்தது. “டைம் பார்த்துட்டே இருப்பீங்களோ..? வேலை எதுவும் இருக்காதா ACP சக்ரவர்த்தி சாருக்கு..?” எடுத்ததும் துர்கா சிரிப்புடன் கேட்டார்.
“பொண்டாட்டிய விட்டு பிரிஞ்சிருக்கிற புருஷனுக்கு இதை விட வேறென்ன வேலை இருக்க போகுது டாக்டர் மேடம்..?” அவரும் சீண்டலான சிரிப்புடன் கேட்க, அதற்கு பிறகான பதினைந்து நிமிடங்கள் கணவன், மனைவிக்கான பேச்சாக சென்றது.
ACPயாக இருக்கும் சக்கரவர்த்தியின் நேர்மைக்கு கிடைக்கும் பரிசு அவரின் அதிகபட்ச டிரான்ஸ்பர் தான். அதனாலே குடும்பத்தை சென்னையில் விட்டு தான் மட்டும் ஊர் ஊராக சுத்தி கொண்டிருப்பார். அதன்படி இப்போது அவரின் இருப்பிடம் மதுரை.
அவரின் மனைவி துர்கா, கைனகாலஜிஸ்ட். சென்னையில் சொந்தமான மருத்துவமனை வைத்துள்ளார். இரு மகன்கள். பெரியவன் விஷ்ணு. அவனும் MD படித்து கொண்டிருக்கிறான். சிறியவன் துருவ். அந்த வீட்டின் கடைக்குட்டி.
விஷ்ணுவிற்கும் அவனுக்கும் கிட்டத்தட்ட ஏழெட்டு வருட வித்தியாசம். அதனாலே எல்லோருக்கும் மிகவும் செல்லம். அதனுடன் அவன் நிலையும் குடும்பத்தினர்க்கு அவன் மேல் மிகவும் பலவீனத்தை கொடுத்தது. அவன் என்றாலே எல்லோருக்கும் சம்திங் ஸ்பெஷல்.
“ம்ம்.. எங்க உன் பெரிய மகன் எப்போவும் போல பீச்சுக்கு காவல் காக்க கிளம்பியாச்சு போல..” சக்ரவர்த்தி கேட்க,
“அஞ்சு மணிக்கே, அப்படியே ஜிம் போய்ட்டு வருவான்..” என்றார் துர்கா சோர்வான பெருமூச்சுடன்.
“அப்பா மாதிரி காவல் காக்க தான் பிடிச்சிருக்கு போல, அப்பறம் எதுக்கு MBBS எடுக்கணும்..?” சக்ரவர்த்தி கிண்டலாக கேட்டார்.
“ம்ப்ச்.. காலையிலே ஆரம்பிக்காதீங்க, அப்பறம் நான் தான் நாள் முழுதுக்கும் ப்ரெஷர் ஏறி சுத்தணும்..” என்றார் துர்கா.
“ஏன் பிரஷர் ஏறணும்..? அதுக்கு அவனை உட்காரவைச்சு பேசலாம் இல்லை, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி உருண்டை இழுத்திட்டு திரிவான்..?”
“என்ன பேச..? நாம பேசுறதை எல்லாம் காது கொடுத்து கேட்கிற முதிர்ச்சியை அவன் கடந்துட்டான்..”
“அப்படியென்ன நூத்து கிழவன் உன் மகன்..?”
“விடுங்க..”
“என்ன விட, அடுத்த வருஷம் அவனும் ஒரு MD டாக்டர், இன்னும் அப்படியே இருந்தா எப்படி..? ஒரு வாரம் சஸ்பென்க்ஷன்ல இருந்து இன்னிக்கு தான் மறுபடியும் காலேஜ் போறான், இதுதான் சஸ்பெண்ட் ஆகிறது கடைசின்னு அவன்கிட்ட சொல்லி வை, யார் என்ன பண்ணா இவனுக்கென்ன..? எல்லார்கிட்டயும் மல்லு கட்டிக்கிட்டு இருக்கான், அப்புறம் இன்னார் மகன்னு என் பேர் தான் அடிபடும்..” சக்ரவர்த்தி பொரிந்து தள்ள,
“நான் அவன்கிட்ட பேசுறேன், இனி இப்படி நடந்துக்க மாட்டான், விடுங்க..” துர்கா அவரின் பேச்சை இடையிட்டு முடித்து வைத்தார்.
“நீ பேசும் போது எனக்கு கால் பண்ணிட்டு பேசு..” என்றார் அப்போதும் சக்ரவர்த்தி.
“சரிங்க..” துர்கா சொல்ல,
“சின்னு எழுந்ததும் எனக்கு கால் பண்ண சொல்லு.. அவன் ஏதோ வேணும்ன்னு கேட்டுட்டு இருந்தான், நாளைக்கு நான் வரும் போது வாங்கிட்டு வரேன்..” மேலும் பேசி வைத்துவிட, துர்கா ஹாஸ்பிடலுக்கு கிளம்ப சென்றார்.